சூரா- அல்-பக்கரஹ்
அருளப் பெற்ற இடம் : மதீனா | வசனங்கள் : 287 (பிஸ்மில்லாஹ் உட்பட2)
பிரிவுகள் : 40 (ருகூவுகள்)
- அளவற்ற அருளாளனும், மேன்மேலும் கருணை காட்டுபவனுமாகிய அல்லாஹ்வின் பெயரால் (ஓதுகின்றேன்.)
- அலிஃப் லாம் மீம்1
- இதுவே2 முழுமையான வேத நூல். இதில் எவ்வித ஐயமும் இல்லை. இறையச்சம் உடையோருக்கு நேர்வழியினை வழங்கக்கூடியது.
- அவர்கள் மறைவானவற்றின் மீது நம்பிக்கை கொள்வர். தொழுகையினையும் நிலை நாட்டுவர். நாம் அவர்களுக்கு வழங்கியவற்றிலிருந்து செலவு செய்து கொண்டுமிருப்பர்.
- உமக்கு அருளப்பட்டதன் மீதும், உமக்கு முன்னர் அருளப்பட்டதன் மீதும் அவர்கள் நம்பிக்கை கொள்வர். இனிமேல் வரக்கூடிய (வாக்களிக்கப்பட்ட) வற்றின் மீதும் உறுதியாக நம்புவர். (மறுமையையும் உறுதியாக நம்புவர்.)
- இவர்களே தங்கள் இறைவனின் நேர்வழியில் இருப்பவர்கள். இவர்களே வெற்றிக்குரியவர்களும் ஆவர்.
- நிராகரித்தவர்களை நீர் எச்சரிக்கை செய்வதும் எச்சரிக்கை செய்யாதிருப்பதும் ஒன்றே. அவர்கள் (தம் நிலையை மாற்றிக் கொள்ளாதவரை) நம்பிக்கை கொள்ள மாட்டார்கள்.
- அல்லாஹ் அவர்களின் உள்ளங்களிலும், அவர்களின் காதுகளிலும் முத்திரை இட்டுள்ளான். அவர்களின் கண்களில் திரை உள்ளது. அவர்களுக்கு ஒரு மாபெரும் தண்டனையும் (விதிக்கப்பட்டு) உள்ளது. ரு1
- மேலும் மக்களுள் சிலர் அல்லாஹ்விடத்தும் இறுதி நாளிடத்தும் நாங்கள் நம்பிக்கை வைத்துள்ளோம் என்று கூறுகின்றனர். ஆனால், அவர்கள் ஒருபோதும் நம்பிக்கை கொண்டோர் அல்ல.
- அவர்கள் அல்லாஹ்வையும் நம்பிக்கை கொண்டவர்களையும் ஏமாற்ற விரும்புகின்றனர். ஆனால் (உண்மையில்) அவர்கள் தம்மையே ஏமாற்றுகின்றனர். அவர்கள் (இதனை) உணர்ந்து கொள்வதுமில்லை.
- அவர்களின் உள்ளங்களில் நோயொன்றிருந்தது. பின்னர் அல்லாஹ் அவர்களின் நோயை (மேலும்) அதிகப்படுத்தி விட்டான்.3 அவர்கள் பொய்யுரைத்துக் கொண்டிருந்த காரணத்தால் வேதனையைக் கொடுக்கக் கூடிய தண்டனை அவர்களுக்கு உண்டு.
- மேலும் பூமியில் குழப்பம் விளைவிக்காதீர்கள் என்று அவர்களிடம் கூறப்பட்டால், நாங்கள் சீர்திருத்தம் செய்பவர்களே என்று அவர்கள் கூறுகின்றனர்.
- கவனமாகக் கேளுங்கள்.4 நிச்சயமாக இவர்களே குழப்பம் விளைவிப்பவர்கள். ஆனால், இவர்கள் (இந்த உண்மையை) உணர்வதில்லை.
- மேலும் (ஏனைய) மக்கள் நம்பிக்கை கொண்டிருப்பது போன்று நீங்களும் நம்பிக்கை கொள்ளுங்கள் என்று அவர்களுக்குச் சொல்லப்பட்டால், மூடர்கள் நம்பிக்கை கொண்டிருப்பது போன்று நாங்களும் நம்பிக்கை கொள்ள வேண்டுமா? என்று அவர்கள் கூறுகின்றனர். ஞாபகத்தில் வைத்துக் கொள்ளுங்கள். இவர்களே மூடர்கள்; ஆனால், (இதனை) இவர்கள் அறிவதில்லை.
- மேலும் நம்பிக்கை கொண்டவர்களை அவர்கள் சந்தித்தால், நாங்கள் (இந்தத் தூதரின் மீது) நம்பிக்கை கொண்டுள்ளோம் என்று கூறுகின்றனர். தமது தலைவர்களைத்5 தனிமையில் சந்தித்தால், நிச்சயமாக நாங்கள் உங்களுடன் தாம் இருக்கின்றோம். நாங்கள் (நம்பிக்கை கொண்டவர்களை) ஏளனம் தான் செய்து கொண்டிருக்கின்றோம் என்று கூறுகின்றனர்.
- (அவர்களின்) ஏளனத்திற்குரிய தண்டனையை அல்லாஹ் அவர்களுக்கு வழங்குவான்.6 அவர்களுடைய வரம்பு மீறிய செயல்களில் தடுமாறித்திரிய7 அவன் அவர்களை விட்டு விடுவான்.
- இவர்கள்தாம் நேர்வழியினை விட்டுவிட்டு வழிகேட்டினைத் தேர்ந்தெடுத்துக் கொண்டவர்களாவர். இதனால் இவர்களுக்குப் பௌதீகமான எந்தப் பயனுமில்லை. இவர்கள் நேர்வழியினையும் பெறவில்லை.
- அவர்களின் நிலை நெருப்பை8 மூட்டிய ஒருவனின் நிலையைப் போன்றது. அ(ந்த நெருப்பான)து அவனைச் சுற்றியுள்ள (இடம் எல்லா)வற்றுக்கும் ஒளியூட்டிய போது, அல்லாஹ், அவர்களின் ஒளியை அகற்றி, (பல்வேறு) இருள்களில்9 (எந்த இரட்சிப்பின் வழியையும்) காணமுடியாத நிலையில் அவர்களை விட்டு விட்டான்.
- அவர்கள் செவிடர்கள், ஊமையர்கள், குருடர்கள். ஆகவே, அவர்கள் திரும்ப மாட்டார்கள்.
- அல்லது (அவர்களின் நிலை) காரிருளும், இடியும், மின்னலும் கொண்ட மேகத்திலிருந்து பொழியும் பெரு மழையைப் போன்றதாகும். அவர்கள் இடியோசையைக் கேட்டு மரணத்திற்கு அஞ்சி தம் விரல்களைக் காதுகளில் திணித்துக் கொள்கின்றனர்.10 அல்லாஹ்வோ நிராகரிப்பவர்களை அழித்து விடுபவனாவான்.
- அம்மின்னல் அவர்களின் கண்ணொளியைப் பறித்துக் கொள்ளப் பார்த்தது. அது அவர்களின் மீது மின்னும் போதெல்லாம், அவர்கள் அ(தன் வெளிச்சத்)தில் நடக்கின்றனர். அவர்களை இருள் சூழும் போது நின்று விடுகின்றனர். அல்லாஹ் நாடினால் நிச்சயமாக அவர்களின் கேள்விப் புலனையும் அவர்களின் பார்க்கும் சக்தியினையும் போக்கி விடுவான்.11 (தான் நாடுகின்ற) எல்லாவற்றின் மீதும் அல்லாஹ் நிச்சயமாக முழுமையான ஆற்றல் பெற்றவனாவான். ரு2
- மக்களே! நீங்கள் உங்களையும் உங்களுக்கு முன்னிருந்தோரையும் படைத்த உங்களுடைய இறைவனை மட்டும் வணங்குங்கள். அதனால் நீங்கள் (எல்லாவித ஆபத்துகளிலிருந்தும்) தப்பித்துக் கொள்ளலாம்.
- உங்களுக்கு பூமியை விரிப்பாகவும், வானத்தைக் கூரையாகவும் அமைத்தவன் (அவனே). மேகங்களிலிருந்து12 தண்ணீரையும் (அவன்) இறக்கினான். பின்னர் இதன் மூலம் (இத்தண்ணீர் மூலம்) பல கனி வகைகளை உணவாகவும் உங்களுக்கு வெளிப்படுத்தினான். ஆகவே, நீங்கள் தெரிந்து கொண்டே அல்லாஹ்வுக்கு இணைகளை ஏற்படுத்தாதீர்கள்.
- மேலும் நாம், நம் அடியாருக்கு இறக்கிய(வேதத்)தில் நீங்கள் (எவ்வித) ஐயம் கொண்டிருந்தாலும் நீங்கள் உண்மையாளர்களாயின், இது போன்ற ஓர் அதிகாரத்தைக் கொண்டு வாருங்கள். மேலும் அல்லாஹ் அல்லாத உங்களுடைய உதவியாளர்களையும் (உங்கள் உதவிக்காக) அழைத்துக் கொள்ளுங்கள்.
- நீங்கள் அவ்வாறு செய்யவில்லையாயின் - உங்களால் ஒரு போதும் அவ்வாறு செய்யவே இயலாது - மனிதர்களும் கற்களும்13 எரிபொருளாயிருக்கும் நெருப்பிலிருந்து தவிர்ந்து கொள்ளுங்கள். அது நிராகரிப்பவர்களுக்காக ஆயத்தம் செய்யப்பட்டுள்ளது.
- மேலும் நம்பிக்கைக் கொண்டு நற்செயல்கள் புரிகின்றவர்களுக்காகத் தோட்டங்கள் உள்ளன. அவற்றின் கீழே ஆறுகள் ஓடிக்கொண்டிருக்கும்14 என்ற நற்செய்தியினை நீர் (அவர்களுக்குக்) கூறுவீராக. (தோட்டங்களாகிய) அவற்றின் கனிகளிலிருந்து சிறிது அவர்களுக்கு வழங்கப்படும் போதெல்லாம் , இது எமக்கு இதற்கு முன் வழங்கப்பெற்ற அதே (உணவு)தானே என்பர். ஆனால் அவர்களுக்கு அ(ந்த உணவான)து ஒத்ததாகக் கொண்டு வரப்படும். மேலும் (தோட்டங்களாகிய) அவற்றில் அவர்களுக்குத் தூய துணைவர்களும்15 உண்டு. அவர்கள் (தோட்டங்களாகிய) அவற்றினுள்ளே (என்றென்றும்) வாழ்ந்து வருவர்.
- அல்லாஹ், ஒரு கொசுவையோ அல்லது அதைவிடச் சிறியதையோ உவமையாகக் கூறத் தயங்குவதில்லை.16 நம்பிக்கைக் கொண்டவர்கள் இது தம் இறைவனிடமிருந்து (வந்து)ள்ள உண்மை என்று தெரிந்து கொள்வர். நிராகரித்தவர்களோ அல்லாஹ் இவ்வுவமையினால் நாடுவது(தான்) என்ன? என்று கூறுவர். (உண்மையான விஷயம் என்னவென்றால்) அவன் (மக்களில்) பெரும்பாலானவர்களை வழிதவறியவர்கள்17 என்று இ(ந்)த(க் குர்ஆ)ன் மூலம் முடிவு செய்கின்றான். மேலும், (மக்களில்) பெரும்பாலானவர்களுக்கு இ(ந்)த(க் குர்ஆ)ன் மூலம் நேர்வழியினை வழங்குகின்றான். அவன், இதன் மூலமாகக் கட்டுப்படாதவர்களைத் தவிர வேறெவரையும் வழிதவறியவர்கள்18 என்று முடிவு செய்வதில்லை.
- அவர்கள் அல்லாஹ்வின் ஒப்பந்தத்தை அதனை உறுதிப்படுத்தியப் பின்னர் முறித்து விடுகின்றனர். மேலும் இணைத்து வைக்குமாறு அல்லாஹ் கட்டளையிட்டிருந்ததைத் துண்டித்து விடுகின்றனர். பூமியில் குழப்பமும் விளைவிக்கின்றனர். இவர்களே நஷ்டமடைபவர்கள்.
- (மக்களே!) நீங்கள் எவ்வாறு அல்லாஹ்வை நிராகரிக்கின்றீர்கள்? நீங்கள் உயிரற்றவர்களாக இருந்தீர்கள். அவன் உங்களுக்கு உயிர் கொடுத்தான். பிறகு (ஒரு நாளில்) அவன் உங்களுக்கு மரணத்தைக் கொடுப்பான். பின்னர் உங்களை உயிர்பிப்பான். இதன் பிறகு நீங்கள் அவனிடமே கொண்டு செல்லப்படுவீர்கள்.
- அ(ந்த இறை)வனே பூமியிலுள்ள எல்லாவற்றையும் உங்களு(டைய நலனு)க்காகப் படைத்தான். பின்னர் அவன் வானங்களின்19 பக்கம் கவனம் செலுத்தி, அவற்றை ஏழு வானங்களாக முழுமைப்படுத்தினான்.20 அவன் எல்லாவற்றையும் நன்கு அறிந்தவன். ரு3
- மேலும் உம் இறைவன் வானவர்களிடம், நிச்சயமாக நான் பூமியில் ஒரு பிரதிநிதியை ஏற்படுத்தப் போகிறேன் என்று கூறிய (அந்த நேரத்தை மனிதனே! நீ நினைத்துப் பார் அப்)போது, அதில் குழப்பம் செய்து இரத்தம் சிந்தக் கூடியவர்களையும் படைக்கப்போகிறாயா?21 நாங்கள் உன்னைப் புகழ்ந்து, உன் தூய்மையை(யும்) எடுத்துரைக்கிறோம். மேலும் உமது எல்லா மேன்மைகளையும் ஒப்புக் கொள்கிறோம் என்று அவர்கள் கூறினார்கள். (அதற்கு அல்லாஹ்வாகிய) அவன், நீங்கள் அறியாததை நிச்சயமாக நான் அறிவேன் என்று கூறினான்.
- மேலும் (அல்லாஹ்) ஆதமுக்கு எல்லாப் பெயர்களையும் கற்றுக் கொடுத்தான். பின்னர் அ(ப்பெயர்களுக்குரிய)வற்றை22 வானவர்களின் முன் எடுத்துக் காட்டி, நீங்கள் கூறிக்23 கொண்டிருப்பது சரி என்றால், இவற்றின் பெயர்களை என்னிடம் சொல்லுங்கள்24 என்றான்.
- நீ குறைகளற்ற (தூய)வன், நீ எங்களுக்குக் கற்பித்ததைத் தவிர வேறெதுவும் எங்களுக்குத் தெரியாது. நிச்சயமாக நீயே முழுமையான அறிவுடையவனும், (ஒவ்வொரு சொல்லிலும், செயலிலும்) ஞானத்தைக் கவனத்தில் கொள்பவனுமாவாய் என்று அவர்கள் கூறினர்.
- (இதற்கு அல்லாஹ்) ஆதமே! இ(ந்த வான)வர்களுக்கு இவற்றின் பெயர்களைக் கூறுங்கள் என்றான். பின்னர் அவர் (அதாவது ஆதம்) அவர்களுக்கு அவற்றின் பெயர்களைக்25 கூறிய போது நிச்சயமாக நான் வானங்கள், பூமி ஆகியவற்றின் மறைவானவற்றை அறிவேன். நீங்கள் வெளியிடுகிறதையும், மறைக்கிறதையும் அறிவேன் என்று நான் உங்களிடம் கூறவில்லையா என்றான்.
- மேலும் ஆதமுக்குக் கீழ்ப்படியுங்கள்26 என்று நாம் வானவர்களிடம் கூறிய நேரத்தையும் (நினைத்துப் பாருங்கள்). இதற்கு அவர்கள் கீழ்படிந்தார்கள். ஆனால்27 இப்லீஸ் (கீழ்ப்படியவில்லை) அவன் மறுப்பு தெரிவித்து இறுமாப்புடன் நடந்து கொண்டான். அவன் (ஏற்கனவே) நிராகரிப்பவர்களைச் சேர்ந்தவனாக இருந்தான்.
- மேலும் நாம் (ஆதமிடம்) ஆதமே! நீரும் உமது மனைவியும் இத்தோட்டத்தில் வாழுங்கள். இதில் எங்கிருந்து வேண்டுமாயினும் தாராளமாக உண்ணுங்கள். ஆனால் இந்த மரத்தினை நெருங்காதீர்கள். அவ்வாறு செய்தால் நீங்கள் அநீதி இழைத்தவர்களைச் சார்ந்தவர் ஆவீர்கள் என்று கூறினோம்.
- மேலும் ஷெய்த்தான் இதன் மூலம் (இம்மரத்தின் மூலம்) அவ்விருவரையும் (அவர்களின் அந்தஸ்திலிருந்து) விலக்கி விட்டான். (இவ்வாறு) அவன் அவர்கள் இருந்த நிலையிலிருந்து அவர்களை வெளியாக்கி விட்டான். எனவே நாம் (அவர்களிடம் இங்கிருந்து) வெளியேறி விடுங்கள் என்று கூறினோம். உங்களுள் சிலர் சிலருக்குப் பகைவர் ஆவீர்கள். (குறிப்பிட்ட) ஒரு காலம் வரை இதே பூமியில் உங்களுக்கு வாழுமிடமும், வாழ்க்கைக்குத் தேவையான பொருள்களும் (ஏற்படுத்தப்பட்டு) உள்ளன (என்பதை நினைவில் கொள்ளுங்கள்.)
- இதன் பின்னர் ஆதம் தமது இறைவனிடமிருந்து சில (பிரார்த்தனையைச்) சொற்களை கற்றுக் கொண்டார். (அவற்றிக்கேற்ப பிரார்த்தனையும் செய்தார். அப்போது) அவன்28 (மீண்டும் அருளுடன்) அவரைக் கவனித்தான். நிச்சயமாக அவனே (அடியாரின் இன்னல் நேரங்களை) மிகவும் கவனிப்பவனாகவும் மீண்டும் மீண்டும் அருள் புரியக் கூடியவனாகவும் விளங்குகின்றான்.
- (அப்போது) நீங்கள் எல்லாரும் இதிலிருந்து வெளியேறுங்கள் என்று நாம் கூறினோம். (மேலும் நினைவிற்கொள்ளுங்கள்) என்னிடமிருந்து உங்களிடம் ஏதாவது நேர்வழி வருமாயின் எனது நேர்வழியினைப் பின்பற்றி நடப்பவர்களுக்கு (எதிர்காலம் பற்றிய) எந்த அச்சமும் இருக்காது. (இறந்த காலம் பற்றி) அவர்கள் துயரமும் அடைய மாட்டார்கள்.
- மேலும், நிராகரித்து, எம்முடைய வசனங்களைப் பொய்ப்படுத்துபவர்கள் நரகத்திற்குரியவர்களேயாவர். மேலும் அவர்கள் அதில் நெடுங்காலம் தங்குவர். ரு4
- இஸ்ராயீலின் மக்களே! நான் உங்களுக்கு வழங்கிய எனது அருளை நினைத்துப் பாருங்கள். மேலும் நீங்கள் என்(னுடன் செய்த) ஒப்பந்தத்தை நிறைவேற்றுங்கள். அவ்வாறாயின் நான் உங்களுடன் செய்த ஒப்பந்தத்தை நிறைவேற்றுவேன். மேலும் எனக்கு (மட்டுமே) அஞ்சுங்கள். மீண்டும் (நான் கூறுகிறேன்) எனக்கு (மட்டுமே) அஞ்சுங்கள்.29
- மேலும் (இப்போது) நான் இறக்கிய (வேதமாகிய இ)தன் மீது நம்பிக்கை கொள்ளுங்கள். இது உங்களிடம் உள்ள (வேதத்)தை(யும்) உண்மைப்படுத்துகின்றது. இதனை மறுப்பவர்களுள் நீங்கள் முதல் ஆளாகி விடாதீர்கள். என் வசனங்களை அற்ப விலைக்கு30 விற்காதீர்கள். மேலும் எனக்கு (மட்டுமே) அஞ்சுங்கள். மீண்டும் (நான் கூறுகிறேன்) எனக்கு (மட்டுமே) அஞ்சுங்கள்.
- மேலும் நீங்கள் தெரிந்து கொண்டே மெய்யைப் பொய்யுடன் கலக்கவோ, உண்மையை மறைக்கவோ செய்யாதீர்கள்!
- மேலும் தொழுகையை நிலைநாட்டுங்கள், ஸக்காத்துக் கொடுங்கள். இறைவனைத் தூய மனதுடன் வணங்குபவர்களுடன் சேர்ந்து தூய மனதுடன் வணங்குங்கள்.
- நீங்கள் (தவ்ராத்) வேதத்தை ஓதிக் கொண்டே, (பிற) மக்களை நன்மை செய்யுமாறு ஏவி உங்களை மறந்து விடுகின்றீர்களா? நீங்கள் சிந்திக்க மாட்டீர்களா?
- மேலும் பொறுமை , தொழுகை ஆகியவை மூலம் (அல்லாஹ்விடம்) உதவி தேடுங்கள். நிச்சயமாக பணிவுடையவர்களைத் தவிர (மற்றவர்களுக்கு) இ(ந்த விஷயமான)து கடினமானதாகும்.
- அவர்கள் தங்களுடைய இறைவனைச் சந்திக்கக் கூடியவர்கள் என்றும், தாங்கள் அவனிடமே திரும்பச் செல்லக்கூடியவர்கள் என்றும் உறுதியாக அறிவார்கள்.31 ரு5
- இஸ்ராயீலின் மக்களே! நான் உங்களுக்கு வழங்கிய எனது அருட்கொடையையும் நான் உங்களை முழு உலகிலும் மேன்மைப் படுத்தியதையும் நினைத்துப் பாருங்கள்.
- மேலும் எவரும் மற்றெவருக்கும் எவ்வித பயனும் அளிக்க முடியாத, எவருடைய பரிந்துரையும் ஏற்றுக்கொள்ளப்படாத, எவரிடமிருந்தும் (எந்த) ஈடும் பெற்றுக் கொள்ளப்படாத (அந்த) நாளுக்கு அஞ்சுங்கள். (அந்நாளில்) அவர்கள் உதவி செய்யப்படவும் மாட்டார்கள்.
- மேலும் உங்கள் ஆண்மக்களைக் கொன்றும், பெண்களை உயிருடன் (வாழ) விட்டும், உங்களுக்குக் கொடிய துன்பத்தைக் கொடுத்தும் வந்த ஃபிர்அவ்னின் சமுதாயத்திடமிருந்தும் நாம் உங்களை விடுவித்த நேரத்தை (நினைத்துப் பாருங்கள்) மேலும் அதில் (உங்களுக்கு) உங்கள் இறைவனிடமிருந்து ஒரு பெரும் சோதனை இருந்தது.
- மேலும் நாம் உங்களுக்காக கடலைப் பிரித்து32 நாம் உங்களைக் காப்பாற்றியதையும், நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கும்போதே ஃபிர்அவ்னுடைய சமுதாயத்தை மூழ்கடித்த (நேரத்)தையும் நினைத்துப் பாருங்கள்.
- மேலும் நாம் மூஸாவிடம் நாற்பது இரவுகளுக்கான வாக்குரியதியளித்த நேரத்தையும் (எண்ணிப் பாருங்கள்) அவர் பிரிந்து சென்றதும் நீங்கள் அநீதி இழைத்தவர்களாய்க் காளைக் கன்றை (க் கடவுளாக) ஆக்கிக் கொண்டீர்கள்.
- இதன் பின்னரும் நீங்கள் நன்றியுடையவர்களாக இருப்பதற்காக, நாம் உங்களை மன்னித்தோம்.
- மேலும் நீங்கள் நேர்வழி பெறும் பொருட்டு, மூஸாவுக்கு நாம் (தவ்ராத் என்னும்) வேதத்தையும், ஃபுர்க்கானையும் (அற்புதங்களையும்) கொடுத்த நேரத்தை நினைத்துப் பாருங்கள்.
- மேலும் மூஸா தமது சமுதாயத்திடம், என சமுதாயத்தினரே! நீங்கள் காளைக் கன்றை (வணங்கத்தக்கதாக) ஆக்கி நிச்சயமாக உங்களுக்கு அநீதி இழைத்துக் கொண்டீர்கள். எனவே நீங்கள் உங்களைப் படைத்தவனுக்குப் பணியுங்கள். நீங்கள் உங்க(ள் தீய ஆசை)களையே கொன்று விடுங்கள்.33 இது உங்களைப் படைத்தவனிடம் உங்களுக்கு மிகவும் நன்மை பயப்பதாகும் என்று சொன்ன நேரத்தையும் (எண்ணிப் பாருங்கள்). (நீங்கள் அவ்வாறு செய்தபோது) அவன் உங்களின் பக்கம் அருளுடன் மீண்டும் கவனம் செலுத்தினான். நிச்சயமாக அவன் (தனது அடியார்களின் பக்கம்) மிகுந்த கவனம் செலுத்தக் கூடியவனும் மேன்மேலும் அருள் செய்யக் கூடியவனுமாவான்.
- மூஸாவே! நாங்கள் அல்லாஹ்வை நேருக்கு நேர் பார்க்காதவரை நாங்கள் உம்மிடத்து ஒரு போதும் நம்பிக்கை கொள்ள மாட்டோம் என்று நீங்கள் சொன்ன நேரத்தையும் (எண்ணிப் பாருங்கள்). அப்போது உங்களை ஓர் அழிவிற்குரிய தண்டனை பற்றி கொண்டது. மேலும் நீங்கள் (உங்களது கண்களாலேயே உங்களது செயலின் முடிவை) பார்த்துக் கொண்டிருந்தீர்கள்.
- பின்னர் நீங்கள் நன்றியுடையவர்களாய் விளங்குவதற்கு, உங்களுடைய அழிவிற்குப் பிறகு உங்களை நாம் எழுப்பினோம்.34
- மேலும் நாம் உங்கள் மீது மேகங்களை நிழலிடச் செய்தோம். உங்களுக்காக 'மன்னு' 'ஸல்வா'35 வை இறக்கினோம். நாம் உங்களுக்கு வழங்கிய தூய உணவுகளிலிருந்து உண்ணுங்கள் (என்றோம்.) (கட்டளையை மீறிய) அவர்கள் நமக்கு தீங்கிழைக்கவில்லை. மாறாக, அவர்கள் தங்களுக்கே தீங்கிழைத்துக் கொண்டனர்.
- மேலும் இந்த நகரத்தில்36 நுழையுங்கள். இதில் நீங்கள் விரும்பிய இடத்திலிருந்து தாராளமாக உண்ணுங்கள். (இதன்) வாயிலில் மிக்க பணிவுடன் நுழையுங்கள். (எங்கள்)37 சுமைகளை எளிதாக்குவாயாக என்று வேண்டிக் கொண்டிருங்கள். (அப்போது) நாம் உங்களுடைய குற்றங்களை முற்றிலும் மன்னித்து விடுவோம். மேலும் நாம் நன்மை செய்பவர்களுக்கு மிகுதியாக வழங்குவோம் என்று நாம் சொன்ன நேரத்தையும் (எண்ணிப் பாருங்கள்.)
- பிறகு (அவர்களின் விஷமத்தனத்தைப் பாருங்கள்!) அநீதியாளர்கள் அவர்களிடம் கூறப்பட்டதற்கு முரணாக வேறொரு விஷயத்தை மாற்றி38 (கூறத் தொடங்கி) விட்டனர். எனவே அநீதி இழைத்தோர் மீது அவர்கள் கட்டுப்படாததனால் நாம் ஒரு தண்டனையை வானத்திலிருந்து இறக்கி வைத்தோம். ரு6
- மேலும் மூஸா தமது சமுதாயத்திற்காகத் தண்ணீர் வேண்டிய நேரத்தையும் நினைத்துப் பாருங்கள். அப்போது நாம் (அவரிடம்) உமது கைத்தடியால் அக்கல்லின்39 மீது அடிப்பீராக என்றோம். இதனால் அதிலிருந்து பன்னிரண்டு நீர் ஊற்றுக்கள் பொங்கியெழுந்தன. ஒவ்வொரு கூட்டத்தினரும் தமது நீரருந்துமிடத்தைத் தெரிந்து கொண்டனர். (அப்போது அவர்களிடம்) அல்லாஹ் வழங்கிய உணவுகளிலிருந்து உண்ணுங்கள்; பருகுங்கள்; குழப்பம் செய்து பூமியில் கேடு விளைவிக்காதீர்கள் (என்று கூறினோம்).
- மேலும் மூஸாவே! நாங்கள் ஒரே (வகை) உணவினால் மனநிறைவு கொள்ளமாட்டோம். எனவே நீர் எங்களுக்காக உம்முடைய இறைவனிடத்தில், அவன் எங்களுக்காக பூமியில் விளையும் (சில பொருட்களான) காய்கறிகள், வெள்ளரிக்காய், கோதுமை, மசூர்ப் பருப்பு, வெங்காயம் ஆகியவற்றை முளைப்பிக்கும்படி வேண்டுதல் செய்வீராக! என்று நீங்கள் சொன்ன நேரத்தையும் (எண்ணிப் பாருங்கள். இதற்கு அல்லாஹ்) மிக உயர்ந்த பொருளுக்குப் பதிலாக மிக தாழ்ந்த பொருளைப் பெற நீங்கள் விரும்புகின்றீர்களா? ஏதாவது ஒரு நகரத்திற்குச் சென்று விடுங்கள். (அங்கு) நீங்கள் கேட்டவை கட்டாயம் உங்களுக்குக் கிடைக்கும் என்று கூறினான். (அப்போது) அவர்கள் நிலையாக நிரந்தரமான இழிவிற்கும் ஆதரவின்மைக்கும் உள்ளாக்கப்பட்டனர். அவர்கள் அல்லாஹ்வின் கோபத்திற்கும் ஆளாகிவிட்டனர். இதற்கு காரணம், அவர்கள் அல்லாஹ்வின் வசனங்களை நிராகரித்ததும், நபிமார்களை நியாயமின்றி கொலை செய்ய விரும்பியதுமே ஆகும். இ(ந்த பாவமான)து அவர்கள் கட்டுப்படாததாலும் வரம்பு மீறியதாலும்தான் (அவர்களுக்கு) ஏற்பட்டது. ரு7
- நம்பிக்கை கொண்டவர்கள், யூதர்கள், கிறித்தவர்கள் மற்றும் சாபிகள் ஆகியோருள் அல்லாஹ்வின் மீதும் இறுதிநாளின் மீதும் (முழுமையான) நம்பிக்கை கொண்டு அதற்கேற்ப நற்செயல் ஆற்றுபவர்களுக்கு நிச்சயமாக அவர்களின் இறைவனிடம் அவர்களுக்குரிய வெகுமதி உண்டு. அவர்களுக்கு (எதிர்காலம் பற்றிய) எந்த அச்சமும் இருக்காது. (இறந்த காலம் பற்றி) அவர்கள் துயரம் அடையமாட்டார்கள்.
- மேலும் நாம் உங்களிடம் உறுதியான வாக்குறுதி வாங்கி மலையை உங்களுக்கு மேலே40 உயர்த்திய நேரத்தையும் (எண்ணிப் பாருங்கள்). நாம் உங்களுக்கு கொடுத்ததை உறுதியாகப் பற்றிப் பிடித்துக் கொள்ளுங்கள். மேலும் நீங்கள் இறையச்சம் உள்ளவர்கள் ஆவதற்காக அதிலுள்ளவற்றை ஞாபகத்தில்41 வைத்துக் கொள்ளுங்கள் (என்றோம்.)
- பிறகு இ(வ்வளவு தெளிவான வழிகாட்டலைப் பெற்ற)தன் பின்னரும் நீங்கள் புறக்கணித்து விட்டீர்கள். அல்லாஹ்வின் அருளும் அவனது கருணையும் உங்கள் மீது இல்லாதிருந்திருப்பின் நிச்சயமாக நீங்கள் நஷ்டத்திற்குரியவராக ஆகியிருப்பீர்கள்.
- மேலும் உங்களுள் சப்த் விஷயத்தில் வரம்பை மீறியவர்(களின் முடிவு)களை42 நீங்கள் நன்றாக தெரிந்துள்ளீர்கள். இதனால் நாம் அவர்களிடம், இழிவடைந்த குரங்குகளாகிவிடுங்கள் என்றோம்.
- ஆகவே நாம் இதை அக்கால மக்களுக்கும், அதன் பிறகு வருபவர்களுக்கும், படிப்பினையாகவும் இறையச்சமுடையவர்களுக்கு அறிவுரையாகவும் ஆக்கி விட்டோம்.
- மேலும் மூஸா தமது சமுதாயத்திடம் அல்லாஹ் உங்களுக்கு ஒரு மாட்டை அறுக்குமாறு43 கட்டளையிடுகின்றான் என்று கூறியதை நினைவில் கொள்ளுங்கள். (அதற்கு) அவர்கள் நீர் எம்மை ஏளனம் செய்கின்றீரா என்று சொன்னார்கள். நான் (அவ்வாறு செய்து) அறிவீனர்களைச் சேர்ந்தவனாகி விடுவதிலிருந்து அல்லாஹ்விடம் பாதுகாப்பு தேடுகின்றேன் என்று (மூஸா) சொன்னார்.
- அ(ந்த மாடான)து எத்தகையது என்பதை உம்முடைய இறைவன் எங்களுக்கு தெளிவாக்குமாறு அவனிடம் எங்களுக்காக வேண்டுதல் செய்வீராக என்று அவர்கள் கேட்டுக் கொண்டனர். அவர், அது கிழடாகவோ இளங்கன்றாகவோ இல்லாத இவற்றிற்கிடையில் முழு வளர்ச்சி அடைந்த பசுவாகும் என்று அவன் கூறுகின்றான். எனவே உங்களுக்கிடப்பட்ட கட்டளையை நிறைவேற்றுங்கள் என்றார்.
- அதன் நிறம் என்னவென்று உம்முடைய இறைவன் எங்களுக்குத் தெளிவாக்குமாறு அவனிடம் எங்களுக்காக (மீண்டும்) வேண்டுதல் செய்வீராக என்று அவர்கள் கேட்டுக் கொண்டனர். அது மஞ்சள் நிறப் பசு. அதன் நிறம் மிகவும் கெட்டியானது. (மேலும்) காண்பவர்களுக்கு அது மகிழ்ச்சியளிக்கும் என்று அவன் கூறுகின்றான் என்றார்.
- அது எத்தகையதென்று உம்முடைய இறைவன் எங்களுக்குத் தெளிவாக்குமாறு அவனிடம் எங்களுக்காக (மீண்டும்) வேண்டுதல் செய்வீராக. இவ்வகை பசுக்கள் (எல்லாம்) ஒன்றுபோல் எங்களுக்குத் தோன்றுகின்றன. அல்லாஹ் நாடினால் நாங்கள் நிச்சயம் நேர்வழியினை ஒப்புக் கொள்வோம் என உறுதி கொள்ளுங்கள் என்று அவர்கள் கூறினர்.
- அவர், (மூஸா) அந்த மாடு நுகக்காலில் பூட்டப்படாததன் காரணமாக நிலத்தை உழுவதற்கோ, வயலுக்கு நீர் இறைப்பதற்கோ பயன்படுத்தப்படாதது. முற்றிலும் ஆரோக்கியமானது. வடுவில்லாதது; ஒரே சீரான நிறம் கொண்டது என்று அவன் கூறுகிறான் என்றார். அவர்கள், இப்போது தான் நீர் (எங்களுக்கு) உண்மையை விளக்கிச் சொன்னீர் என்று கூறி அதனை அறுத்தனர். ஆயினும், அவர்கள் அவ்வாறு செய்ய ஆயத்தமாக இருக்கவில்லை. ரு8
- மேலும் நீங்கள் ஒரு மனிதரைக் கொன்ற(தாக வாதித்து)44 பின்னர் அது குறித்துக் கருத்து வேறுபாடு கொண்ட நேரத்தை (எண்ணிப் பாருங்கள்.) ஆனால் அல்லாஹ்வோ நீங்கள் மறைத்து வைத்ததை வெளிப்படுத்தக் கூடியவனாவான்.
- அப்போது நாம் கூறினோம்: இ(ச் சம்பவத்)தை (அவ்வுயிர்க்கு நேர்ந்த இது போலும்) வேறு சில சம்பவங்களுடன் ஒப்பிட்டுப் பாருங்கள். (அப்போது உண்மை புரிந்து விடும்). இவ்வாறே அல்லாஹ் இறந்தவர்களுக்கு உயிர் கொடுக்கின்றான். நீங்கள் அறிந்து கொள்ளும் பொருட்டு, அவன் தனது அடையாளங்களை உங்களுக்குக் காட்டுகின்றான்.45
- இதன் பின்னர் உங்கள் உள்ளங்கள் கடினமடைந்து, அவை கற்களைப் போன்று அல்லது அவற்றை விடக் கடினமானவையாக ஆகி விட்டன. நிச்சயமாக சில கற்கள் உள்ளன. அவற்றிலிருந்து ஆறுகள் பொங்கி ஓடுகின்றன. இன்னும் சில (கற்கள்) உள்ளன. அவை உடைந்தால் அவற்றிலிருந்து நீர் ஓடும். அவ்வுள்ளங்களுள் சில உள்ளன. அவை இறையச்சத்தால் (மன்னிப்புக்கோரி) விழுந்து விடுகின்றன.46 நீங்கள் செய்து கொண்டிருப்பது பற்றி அல்லாஹ் ஒரு போதும் கவனமற்றவன் அல்லன்.
- (யூதர்களாகிய) அவர்களுள் ஒரு பிரிவினர் அல்லாஹ்வின் சொல்லைக் கேட்டு அதனை புரிந்த பின்னரும் அ(ந்)த(க் கருத்தி)னை புரட்டுபவர்களாய் இருக்க, (முஸ்லிம்களே!) அவர்கள் உங்க(ள் சொற்க)ளை நம்புவர் என எதிர்ப் பார்க்கிறீர்களா?. மேலும் அவர்கள் (தங்கள் செயலின் தீய முடிவுகளை நன்கு) அறிகின்றனர்.
- மேலும் அவர்கள் நம்பிக்கை கொண்டவர்களைச் சந்தித்தால், நாங்கள் நம்பிக்கை கொண்டவர்களே எனக் கூறுவர். அவர்கள் ஒருவரையொருவர் தனிமையில் சந்திக்கும் போது (ஒருவர் மற்றவர் மீது பழி சுமத்தியவாறு) அல்லாஹ் உங்களுக்கு தெளிவாக்கிய விஷயங்களை அவர்களுக்கு கூறுகிறீர்களா? அ(ந்)த (அறிவி)ன் மூலமாக அவர்கள் அல்லாஹ்வுக்கு முன்னால் உங்களுக்கெதிராக சான்றுகளை47 எடுத்து வைக்கும் நிலை ஏற்படுமே எனக் கேட்கின்றனர். எனவே, நீங்கள் சிந்திப்பதில்லையா?
- அவர்கள் மறைப்பவற்றையும் வெளிப்படுத்துபவற்றையும் அல்லாஹ் நன்கு அறிகின்றான் என்பது அவர்களுக்குத் தெரியவில்லையா?
- மேலும் அவர்களுள் சிலர், கல்வியறிவில்லாதவர்கள்; பொய்யான கருத்துக்களைத் தவிர வேதம் பற்றிய அறிவு அவர்களுக்கு இல்லை; அவர்கள் வெறும் யூகமே கொள்கின்றனர்.
- தமது கைகளால் நூலை எழுதி அதன் மூலம் அற்ப விலையைப் பெறுவதற்காக இ(ந்த வேதமான)து அல்லாஹ்விடமிருந்து (வந்து)ள்ளது எனக் கூறுபவர்களுக்கு (கடுமையான) ஆக்கினை உண்டு. அவர்களின் கைகள் எழுதியதற்காகவும் அவர்களுக்கு (கடுமையான) ஆக்கினை உண்டு. அவர்கள் ஈட்டும் பொருளுக்காகவும் அவர்களுக்கு ஆக்கினை உண்டு.
- மேலும் ஒரு சில நாள்களைத் தவிர (நரக) நெருப்பு எங்களை ஒரு போதும் தீண்டாது என்று அவர்கள் கூறுகிறார்கள். நீர் (அவர்களிடம்) நீங்கள் அல்லாஹ்விடமிருந்து ஏதாவது வாக்குறுதி பெற்றிருக்கிறீர்களா? அவ்வாறாயின் அவன் ஒரு போதும் தன்வாக்குறுதியை மீற மாட்டான். அல்லது நீங்கள் அல்லாஹ்வைப் பற்றி அறியாததைக் கூறுகின்றீர்களா? என்று கேட்பீராக.
- நிச்சயமாக எவர்கள் தீமையைச் செய்து, அவர்களின் பாவம் அவர்களைச் சூழ்ந்து கொள்கிறதோ, அவர்கள் நரகிற்கு உரியவர்கள். அவர்கள் அதிலே நீண்ட காலம் இருப்பர்.
- மேலும் நம்பிக்கை கொண்டு நற்செயல்கள் ஆற்றுபவர்கள் சொர்க்கத்திற்கு உரியோர் ஆவர். அவர்கள் அதில் (என்றென்றும்) வாழ்வர். ரு9
- மேலும் நாம் இஸ்ராயீலின் மக்களிடம், 'நீங்கள் அல்லாஹ்வைத் தவிர வேறெதையும் வணங்கக் கூடாது; மேலும் பெற்றோர்கள், உறவினர்கள், அநாதைகள், ஏழைகள் ஆகியோரிடத்து நன்முறையில் நடந்து கொள்ளுங்கள்; மக்களிடம் இனிமையாகப் பேசுங்கள்; தொழுகையை நிலைநாட்டுங்கள்; ஸக்காத்து கொடுங்கள்' என்று உறுதியான வாக்குறுதி வாங்கிய நேரத்தை நினைவு கூறுங்கள். பிறகு உங்களுள் சிலரை தவிர ஏனையோர் புறக்கணித்துத் திரும்பி விட்டீர்கள்.
- மேலும் நீங்கள் உங்க(ளு)ள் இரத்தத்தைச் சிந்த மாட்டீர்கள்48 என்றும் உங்களுடைய (சமுதாய) மக்களை உங்கள் இல்லங்களிலிருந்து வெளியேற்ற மாட்டீர்கள் என்றும் நாம் உங்களிடம் வாக்குறுதி வாங்கிய நேரத்தை எண்ணிப் பாருங்கள். நீங்கள் அதனை ஏற்றுக் கொண்டு (எப்பொழுதும்) அதற்குச் சாட்சியாக இருந்திருக்கின்றீர்கள்.49
- அவ்வாறிருந்தும், நீங்களே உங்களுக்கிடையில் ஒருவரையொருவர் கொலை செய்கிறீர்கள். உங்களுல் ஒரு பிரிவினருக்கு எதிராக பாவத்தாலும் அநீதியாலும் உங்களுக்குள் ஒருவருக்கொருவர் (அவர்களின் எதிரிகளுக்கு) உதவி செய்தவாறு அவர்களை அவர்களின் வீடுகளிலிருந்து வெளியேற்றுகிறீர்கள். அவர்களை (வீடுகளிலிருந்து) வெளியேற்றுவது உங்களுக்கு விலக்கப்பட்டிருந்தும் (அதைச் செய்து விட்டு) அவர்கள் உங்களிடம் கைதிகளாக (உதவியை நாடி உங்களிடம்) வரும் போது அவர்களுக்கு ஈட்டுத் தொகை கொடுத்து விடுதலை செய்கிறீர்கள். நீங்கள் வேதத்தின் ஒரு பகுதியில் நம்பிக்கை வைத்து, மற்றொரு பகுதியை மறுக்கிறீர்களா? எனவே உங்களுள் இவ்வாறு செய்பவர்களுக்கு இவ்வுலக வாழ்க்கையில் இழிவைத் தவிர வேறு என்ன கூலி உள்ளது? மறுமை நாளிலும் அவர்கள் மிகக் கடுமையான தண்டனைக்குத் திருப்பிக் கொண்டு செல்லப்படுவர். மேலும் நீங்கள் செய்வதைப் பற்றி அல்லாஹ் அறியாதவன் அல்லன்.
- இவர்களே, மறுமையை விட இவ்வுலக வாழ்க்கைக்கு முன்னுரிமை கொடுத்தவர்களாவர். எனவே அவர்களுக்குத் தண்டனை எளித்தாக்கப்பட மாட்டாது. அவர்களுக்கு (எவ்வகையிலும்) உதவியும் செய்யப்பட மாட்டாது. ரு10
- மேலும் நிச்சயமாக நாம் மூஸாவுக்கு வேதத்தை வழங்கினோம். மேலும் அவருக்குப் பிறகு (நீங்கள் அறிந்திருந்த அந்தத்) தூதர்களை50 (அவரது) அடிச்சுவட்டில் நாம் அனுப்பி வைத்தோம். மேலும் மர்யத்தின் மகன் ஈஸாவுக்கு(ம்) நாம் மிகத் தெளிவான அடையாளங்களைக் கொடுத்து, தூய ஆவியைக் கொண்டு அவருக்கு வலுவூட்டினோம். (ஆனால் நீங்கள் அனைவரும் எதிர்த்தீர்கள்.) உங்கள் உள்ளம் விரும்பாததை ஒரு தூதர் உங்களிடம் (போதனையாகக்) கொண்டு வந்த போதெல்லாம், நீங்கள் கர்வம் கொண்டீர்கள். எனவே, சிலரை பொய்யராக்கி சிலரைக் கொல்ல (முயல)வில்லையா?
- மேலும் எங்கள் உள்ளங்கள் திரையிட்டு மூடப்பட்டுள்ளன என்று அவர்கள் கூறுகின்றனர். அவ்வாறு அன்று (என்பதையும் நாம் அறிவோம்). அல்லாஹ் அவர்களை அவர்களின் நிராகரிப்பின் காரணமாக சபித்துள்ளான். எனவே அவர்கள் மிகக் குறைவாகவே நம்பிக்கை கொள்கின்றனர்.
- அவர்களிடமுள்ள (முன்னறிவிப்புகளைக் கொண்ட வேதத்)தை உண்மைப் படுத்தக் கூடிய ஒரு வேதம் அல்லாஹ்விடத்திலிருந்து அவர்களிடம் வந்த போது அவர்கள் இதற்கு முன்னர் (அல்லாஹ்விடம்) நிராகரிப்பவர்களின் மீது வெற்றியை வேண்டுபவர்களாய் இருந்தனர். அவ்வாறிருந்தும், அடையாளம் கண்டு கொண்ட அந்த விஷயம் வந்தபோது அவர்கள் அதை நிராகரித்து விட்டனர். எனவே அத்தகு நிராகரிப்பாளர்கள் மீது அல்லாஹ்வின் சாபம் உண்டு.
- அவர்கள் தங்கள் ஆன்மாக்களை விற்றுப் பெற்றுக் கொண்டது மிகத் தீயதாகும். அதாவது அல்லாஹ் தன் அருளை தன் அடியார்களில் தான் விரும்பியவர்களின் மீது இறக்கி வைத்தலில் காழ்ப்புணர்ச்சி கொண்டு, அல்லாஹ் அருளியதை மறுத்தனர். எனவே அவர்கள் மேன்மேலும் கோபத்திற்கு ஆளாகி விட்டனர். மேலும் இத்தகு நிராகரிப்பவர்களுக்கு இழிவைத் தரும் தண்டனை (விதிக்கப்பட்டு) உள்ளது.
- மேலும் அல்லாஹ் இறக்கியதன் மீது நம்பிக்கை கொள்ளுங்கள் என்று அவர்களுக்குச் கூறப்பட்டால் எங்களுக்கு இறக்கப்பட்டதன் மீது நாங்கள் நம்பிக்கை கொண்டுள்ளோம் என்று அவர்கள் கூறியவாறு அதன் பிறகு இறங்குவதை அவர்கள் மறுக்கின்றனர். ஆனால் அது அவர்களிடம் உள்ளதை மெய்ப்பிக்கக்கூடிய உண்மையாகும். நீங்கள் நம்பிக்கை கொண்டவர்களாயின் இதற்கு முன் அல்லாஹ்வின் நபிமார்களை ஏன் கொலை செய்ய முயன்றீர்கள் என்று நீர் (அவர்களிடம்) கூறுவீராக.
- நிச்சயமாக மூஸா உங்களிடம் தெளிவான அடையாளங்களுடன் வந்தார். அப்படியிருந்தும் அவருக்குப் பிறகு (அதாவது அவர் மலைக்குச் சென்ற பிறகு) நீங்கள் அநீதி இழைப்பவர்களாய் (இறைவனை விட்டுவிட்டு) ஒரு காளைக் கன்றை (வணங்குவதற்காக) எடுத்துக் கொண்டீர்கள்.
- உங்களிடம் உறுதியான உறுதி மொழி வாங்கியதையும், மலையை உங்களுக்கு மேலே51 உயர்த்திய நேரத்தையும் (எண்ணிப் பாருங்கள்.) நாம் உங்களுக்கு வழங்கியதை உறுதியுடன் பற்றிப் பிடியுங்கள். (அல்லாஹ்வுக்குக்) கீழ்படியுங்கள் என்று கூறினோம். 'நாங்கள் செவியேற்றோம்; ஆனால் கட்டுப்பட மாட்டோம்' என்று அவர்கள் கூறினார்கள். அவர்களின் நிராகரிப்பின் காரணமாக, அவர்களின் உள்ளங்களில் கன்றுக்குட்டி(யின் மீதுள்ள பற்று ஆழமாகப்) புகுந்து விட்டது. நீங்கள் நம்பிக்கை கொண்டவர்க(ள் என்று வாதம் செய்பவர்க)ளாயின், உங்கள் நம்பிக்கை உங்களுக்கு எதைக் கட்டளையிடுகிறதோ அது மிகவும் தீயது என (அவர்களுக்குக்) கூறுவீராக.
- அல்லாஹ்விடத்தில் மறுமை வீடு ஏனைய மக்களுக்கின்றி உங்களுக்கு மட்டுமே உரியது என்பதில் நீங்கள் உண்மையாளர்க(ள் என்று வாதம் செய்பவர்க)ளாயின் மரணத்தை52 நாடுங்கள் என்று நீர் (அவர்களிடம்) கூறுவீராக.
- அவர்களுடைய கைகள் முன்னர் அனுப்பியவற்றின் (தங்கள் சென்ற காலச் செயல்களின்) காரணமாக ஒரு போதும் அவர்கள் இ(து போன்ற மரணத்)தை நாடமாட்டார்கள். மேலும் அநீதியிழைப்பவர்களை அல்லாஹ் நன்கு அறிபவன் ஆவான்.
- நிச்சயமாக அவர்களையும், இணைவைப்பவர்களுள் சிலரையும் மற்றெல்லா மக்களையும் விட நீண்ட நாள் வாழும் பேராசையுள்ளவர்களாக நீர் காண்பீர். தனக்கு ஆயிர வருட வாழ்வு கிடைத்திட வேண்டுமென்று (தான்) அவர்களுள் ஒவ்வொருவனும் விரும்புகின்றான். ஆயினும் அவனுக்கு (நீண்ட) ஆயுள் கொடுக்கப்பட்டாலும் அது அவனை தண்டனையிலிருந்து காப்பாற்றாது. அவர்கள் செய்பவற்றை எல்லாம் அல்லாஹ் பார்த்துக் கொண்டிருக்கின்றான். ரு11
- நீர் (அவர்களிடம்) கூறுவீராக! இதற்கு முன்னுள்ளதை உண்மைப்படுத்தக் கூடியதும், நம்பிக்கை கொண்டவர்களுக்கு நேர்வழியாகவும் நற்செய்தியாகவும் திகழ்கின்றதுமான இ(வ்வேதத்)தை, அல்லாஹ்வின் கட்டளைப்படி உமது உள்ளத்தில் இறக்கியதன் காரணத்தால் ஜிப்ரீலுக்கு யார் பகைவராயிருக்கிறார்?
- அல்லாஹ்வுக்கும், அவனது வானவர்களுக்கும், அவனது தூதர்களுக்கும், ஜிப்ரீலுக்கும் மீக்காயிலுக்கும், எவர் பகைவராக உள்ளாரோ நிச்சயமாக அத்தகு நிராகரிப்பவர்களுக்கு அல்லாஹ்வும் பகைவனாவான். (என்பதை அவர் நினைவிற் கொள்ளட்டும்.)
- நிச்சயமாக நாம் உம்மீது மிகத் தெளிவான அடையாளங்களை இறக்கினோம். கட்டுப்படாதவர்களைத் தவிர வேறெவரும் அவற்றை நிராகரிப்பதில்லை.
- அவர்கள் ஒப்பந்தம் செய்யும் போதெல்லாம் அவர்களுள் ஒரு பிரிவினர் அதனைத் தூக்கி எறிந்தனர். அதுமட்டுமின்றி, அவர்களுள் பெரும்பாலார் நம்பிக்கையின் பக்கமே நெருங்குவதில்லை (என்பது தீய விஷயமில்லையா?).
- அவர்களிடமுள்ள (வேதத்)தை உண்மைப்படுத்தக் கூடிய ஒரு தூதர் அல்லாஹ்விடமிருந்து அவர்களிடம் வந்த போது, வேதம் கிடைக்கப் பெற்றவருள் ஒரு பிரிவினர் அல்லாஹ்வுடைய வேதத்தை எதுவுமே தெரியாதவர்கள் போன்று தமது முதுகுகளுக்குப் பின்னால் தூக்கி எறிந்து விட்டனர்.
- மேலும் (யூதர்களாகிய) அவர்கள் சுலைமானுடைய ஆட்சிக்கெதிராக கலகக்காரர்கள்53 பின்பற்றிய (வழி)தனைப் பின்பற்றுகின்றனர். சுலைமான் நிராகரிக்கவில்லை. ஆயினும் கலகக்காரர்கள் நிராகரித்தனர். அவர்கள் மக்களுக்கு ஏமாற்று வேலைகளைக் கற்று கொடுத்தனர். மேலும் பாபிலோனியாவிலுள்ள ஹாரூத், மாரூத்54 ஆகிய இரு மலக்குகளுக்கு இறக்கப்பட்டதை (பின்பற்றுவதாகவும் கூறுகின்றனர்). ஆனால் அவ்விருவரும் நாங்கள் (இறைவனிடமிருந்து வந்துள்ள) ஒரு சோதனையே. எனவே (எங்கள் கூற்றை) மறுக்காதீர் என்று கூறாமல் எவருக்கும் (எதையும்) கற்றுக் கொடுத்ததில்லை. எனவே அவர்கள் அவ்விருவரிடமிருந்து, ஒருவனுக்கும் அவனுடைய மனைவிக்குமிடையில், வேறுபாட்டை உண்டாக்கக்கூடியதைக் கற்றுக் கொண்டனர்.55 அவர்கள் அல்லாஹ்வின் கட்டளையினால் அன்றி எவருக்கும் அதன் மூலம் தீங்கு விளைவிக்கவில்லை. (ஆனால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் பகைவர்களாகிய) இவர்களோ தமக்கு தீங்கு தரக்கூடியவற்றையும் பலன் அளிக்காதவற்றையும் கற்றுக் கொண்டிருக்கின்றனர். இதனை மேற்கொண்டவனுக்கு மறுமையில் எப்பங்கும் கிடையாது என்பதை இம்மக்கள் திட்டவட்டமாக அறிந்துள்ளனர். எப்பொருளுக்கும் பதிலாகத் தம்மையே அவர்கள் விற்று விட்டனரோ அப்பொருள் மிகவும் தீயதே. (இதனை) அவர்கள் அறிந்திருந்தால்! (எவ்வளவு நன்றாக இருக்கும்)
- மேலும் இவர்கள் நம்பிக்கை கொண்டு இறையச்சத்துடன் செயல்பட்டிருந்தால் அல்லாஹ்விடமிருந்து கிடைக்கும் நற்கூலியே மிகச் சிறந்தது. (இதனை) அவர்கள் அறிந்திருந்தால்! (எவ்வளவு நன்றாக இருக்கும்). ரு12
- நம்பிக்கை கொண்டவர்களே! (தூதரை நோக்கி) 'ராயினா'56 என்று சொல்லாதீர்கள். 'உன்லுர்னா' என்று சொல்லுங்கள். மேலும், (அவர் கூறுவதைக் கவனமாகக்) கேளுங்கள். மேலும் நிராகரிப்பவர்களுக்கு வேதனை தரக்கூடிய தண்டனை உண்டு (என்பதை நினைவிற் கொள்ளுங்கள்).
- வேதமுடையவர்களிலிருந்தும், இணைவைப்பவர்களிலிருந்தும் (நம் தூதர்களை) நிராகரித்து விட்டவர்கள், உங்களுக்கு உங்கள் இறைவனிடமிருந்து எவ்வகை நன்மை(யும் வளமும்) இறக்கப்படுவதை விரும்புவதில்லை. அல்லாஹ் தான் விரும்புவோரைத் தனது அருளுக்கு (உரியவராகத்) தேர்ந்தெடுத்துக் கொள்கின்றான். மேலும் அல்லாஹ் மாபெரும் அருள் செய்பவனாவான் (என்பதையும் அவர்கள் மறந்துவிடுகின்றனர்).
- எந்தத் தூதுச் செய்தியினையும் நாம் நீக்கினால்57 அல்லது மறக்கடித்தால் அதை விடச் சிறந்ததை அல்லது அது போன்றதை (மீண்டும் உலகில்) நாம் கொண்டு வருகின்றோம். (தான் நாடுகின்ற) ஒவ்வொன்றின் மீதும் அல்லாஹ் முழுமையான ஆற்றல் பெற்றவனாவான் என்பது உமக்குத் தெரியாதா?
- வானங்கள், பூமியின் ஆட்சி அல்லாஹ்வுக்கே உரியது என்பது உமக்குத் தெரியாதா? அல்லாஹ்வைத் தவிர உங்களுக்கு நண்பனோ உதவி செய்பவனோ வேறு எவனுமில்லை.
- (இதற்கு) முன்னர் மூஸாவிடம் கேள்விகள் கேட்கப்பட்டது போன்று, நீங்களும் உங்களுடைய தூதரிடத்தில் கேள்வி கேட்க விரும்புகின்றீர்களா? நம்பிக்கைக்குப் பதிலாக நிராகரிப்பை எடுத்துக் கொள்பவன், நேரான வழியிலிருந்து தவறி சென்று விட்டான் (என்பதை மறந்துவிடுகிறீர்கள்).
- மேலும் வேதம் வழங்கபெற்றவர்களுள் பெரும்பாலார், தங்களுக்கு உண்மை தெளிவாகத் தெரிந்த பின்னர் தங்களிடமுள்ள பொறாமையினால், நீங்கள் நம்பிக்கை கொண்ட பிறகு உங்களை மீண்டும் நிராகரிப்பவர்களாக மாற்ற விரும்புகின்றனர். எனவே அல்லாஹ் தனது கட்டளையை இறக்கும் வரை நீங்கள் (அவர்களை) மன்னித்து, கண்டும் காணாதது போன்று நடந்து கொள்ளுங்கள். நிச்சயமாக அல்லாஹ் எல்லாவற்றின் மீதும் முழு ஆற்றல் பெற்றவன்.
- மேலும் தொழுகையை (நிபந்தனைகளுக்கேற்ப) நிலை நாட்டுங்கள். ஸக்காத்தையும் கொடுங்கள். நீங்கள் உங்களுக்காக முன்கூட்டியே அனுப்பும் நன்மையையே நீங்கள் அல்லாஹ்விடம் பெற்றுக் கொள்வீர்கள். நிச்சயமாக அல்லாஹ் உங்கள் செயல்களை பார்த்துக் கொண்டிருக்கின்றான்.
- யூதர்களாகவோ கிறித்துவர்களாகவோ இருப்பவர்களைத் தவிர வேறெவரும் சுவர்க்கத்தில் ஒருபோதும் புக மாட்டார் என்று அவர்கள் (யூதர்களும், கிறித்தவர்களும்) கூறுகின்றனர்.58 இவை அவர்களுடைய வீண் ஆசைகளேயாகும். நீங்கள் உண்மையாளர்களாயின் உங்களுடைய (வாதத்திற்குரிய) சான்றைக் கொண்டு வாருங்கள் என நீர் (அவர்களிடம்) கூறுவீராக.
- அவ்வாறான்று. எவர் தம்மை அல்லாஹ்விடம் முழுமையாக ஒப்படைத்து நற்செயல் செய்பவராகவும் விளங்குகிறாரோ அவருக்குரிய நற்கூலி அவருடைய இறைவனிடத்தில் உண்டு. அவர்களுக்கு (வருங்காலத்தைப் பற்றிய) எவ்வித அச்சமும் இருக்காது. (இறந்த காலம் பற்றி) அவர்கள் துயரமும் அடையமாட்டார்கள்.ரு13
- மேலும் கிறித்தவர்கள் (உண்மையான) எதிலும் நிலையாக இல்லை என யூதர்கள் கூறுகின்றனர். யூதர்கள் (உண்மையான) எதிலும் நிலையாக இல்லை எனக் கிறித்தவர்கள் கூறுகின்றனர். ஆயினும் அவ்விருவரும் (ஒரே) வேதத்தை (தவ்ராத்தை) படிக்கின்றனர். இவ்வாறே (ஏனைய) அறிவு இல்லாதவர்களும் அவர்கள் கூறுவது போன்றே கூறினர். எனவே இவர்கள் எதில் கருத்து வேறுபாடு கொண்டுள்ளனரோ, அது குறித்து இவர்களுக்கிடையில் மறுமை நாளில் அல்லாஹ் தீர்ப்பு வழங்குவான்.
- அல்லாஹ்வின் பள்ளிகளில் அவனுடைய பெயர் கூறப்படுவதைத் தடுத்து, அவற்றை பாழாக்க முயல்பவனை விட மிகப் பெரிய அநியாயக் காரன் எவன்? அவர்கள் அச்சத்துடனன்றி அவற்றில் நுழைவது முறையானதன்று. அவர்களுக்கு இவ்வுலகில் இழிவு உள்ளது. மறுமையிலும் அவர்களுக்குப் பெருந்தண்டனை உள்ளது.
- மேலும் கிழக்கும் மேற்கும் அல்லாஹ்விற்கே உரியன. எனவே நீங்கள் எத்திசையை நோக்கினாலும் அங்கே அல்லாஹ்வின் கவனமிருக்கும். நிச்சயமாக அல்லாஹ் வளமாக வழங்குபவனும் மிக்க அறிந்தவனுமாவான்.
- மேலும் அல்லாஹ் (தனக்கென்று) ஒரு மகனை59 உண்டாக்கி கொண்டான் என அவர்கள் கூறுகின்றனர். (அவர்களின் கூற்று சரியன்று.) அவன் தூயவன். இன்னும் கூறுவதாயின் வானங்களிலும், பூமியிலும் உள்ளவை அவனுக்கே உரியன. எல்லாம் அவனுக்கு கட்டுப்பட்டவை.
- அவன் வானங்களையும், பூமியையும் (எவ்வித முன்மாதிரியுமின்றி) படைப்பவனாவான். அவன் ஒன்றை (உலகில் தோற்று விக்க) முடிவெடுத்தால் அது குறித்து ஆகுக என்று மட்டுமே கூறுகின்றான். எனவே அது ஆ(கத் தொடங்கு)கிறது.
- அறியாதவர்கள், அல்லாஹ் எங்களிடம் ஏன் (நேரடியாகப்) பேசுவதில்லை, அல்லது (ஏன்) எங்களிடம் எந்த அடையாளமும் வருவதில்லை எனக் கூறுகின்றனர். இவ்வாறே இவர்களுக்கு முன்னிருந்தவர்களும் இவர்கள் கூறுவது போன்று கூறினர். இவர்களெல்லாரின் உள்ளங்களும் ஒன்றுபோல் ஆகிவிட்டன. நாம், உறுதியான நம்பிக்கை கொண்டுள்ள சமுதாயத்தினருக்கு60 எல்லாவிதமான அடையாளங்களைத் தெளிவாக விளக்கி விட்டோம் (ஆனால் இவர்கள் ஏற்றுக் கொள்வதில்லை).
- நிச்சயமாக நாம் உம்மை உண்மையுடன் நற்செய்தி கூறுபவராகவும் எச்சரிக்கை செய்பவராகவும் அனுப்பியுள்ளோம். நரகிற்கு உரியவர்களைப் பற்றி உம்மிடம் கேட்கப்படமாட்டாது.
- நீர் அவர்களின் மதத்தைப் பின்பற்றாதவரை உம்மைக் குறித்து யூதர்களும், கிறித்தவர்களும், ஒரு போதும் திருப்தி கொள்ள மாட்டார்கள். நிச்சயமாக அல்லாஹ்வின் வழியே நேர்வழி எனக் கூறுவீராக. (கேட்பவரே!) உம்மிடம் ஞானம் வந்த பின்னரும் நீர் அவர்களின் விருப்பங்களைப் பின்பற்றினால் அல்லாஹ்விடமிருந்து உமக்கு எந்த நண்பனும் உதவி செய்பவனும் இருக்க மாட்டான்.
- எவர்களுக்கு நாம் வேதம் வழங்கியுள்ளோமோ61 அவர்கள், அதனைப் பின்பற்ற வேண்டிய முறைப்படியே பின்பற்றுகின்றனர். அவர்கள் அதில் (உறுதியாக) நம்பிக்கை கொள்கின்றனர். அதனை மறுக்கின்றவர்களே நஷ்டவாளிகளாவர்.ரு14
- இஸ்ராயீலின் மக்களே! நான் உங்களுக்கு வழங்கிய எனது அருட்கொடையையும், எல்லா சமுதாயங்களை62 விட நான் உங்களுக்கு சிறப்பளித்ததையும் நினைத்துப் பாருங்கள்.
- எவரும் மற்றெவருக்கும் எவ்வித பயனும் அளிக்க முடியாத, எவரிடமிருந்தும் எந்த ஈடும் ஏற்றுக் கொள்ளப்படாத, எந்தப் பரிந்துரையும் எவருக்கும் பலனளிக்காத ஒரு நாளுக்கு அஞ்சுங்கள். (அந்நாளில்) அவர்கள் உதவி செய்யப்படவும் மாட்டார்கள்.
- மேலும் இப்ராஹீமை அவருடைய இறைவன் சில கட்டளைகளைக் கொண்டு சோதித்து, அவற்றை அவர் நிறைவேற்றிய நேரத்தையும் (எண்ணிப் பாருங்கள்). நிச்சயமாக நான் உம்மை மக்களுக்கு இமாமாக்குவேன் (தலைவராக்குவேன்) என்று அவன் கூறினான். என் சந்ததிகளிலிருந்தும் (தலைவர்களை உருவாக்குவாயாக) என்று (இப்ராஹீம்) கேட்டார். (அதற்கு அல்லாஹ் ஆம்! எனினும்) என் வாக்குறுதி அநீதியிழைப்பவர்களைச் சேராது என்று கூறினான்.63
- நாம் (கஅபாவாகிய) அந்த வீட்டை, மக்களுக்கு மீண்டும் மீண்டும் ஒன்று கூடும் இடமாகவும்64 பாதுகாப்பு(க்குரிய இடம்) ஆகவும் ஆக்கிய நேரத்தையும் (எண்ணிப் பாருங்கள்). அடுத்து இப்ராஹீம் நின்ற இடத்தைத் தொழுகைக்குரிய இடமாக ஆக்கிக் கொள்ளுங்கள் (என்றும் கட்டளையிட்டோம்). என் வீட்டை சுற்றி வருபவர்கள், அதில் தங்கியிருந்து வணங்குபவர்கள், குனிந்தும் சிரம் பணிந்தும் வணங்குபவர்கள் ஆகியவர்களுக்காகத் தூய்மையாக வைத்திருங்கள் என்று நாம் இப்ராஹீமுக்கும் இஸ்மாயீலுக்கும் வலியுறுத்தி கட்டளையிட்டோம்.65
- என் இறைவா! இதை அமைதி நிறைந்த நகரமாக விளங்கச் செய்வாயாக. இதில் வாழ்பவர்களுள் அல்லாஹ்விடத்தும், வரக்கூடிய நாளிடத்தும் நம்பிக்கை கொள்பவர்களுக்கு (எல்லா வகையான) கனிகளையும் வழங்குவாயாக என்று இப்ராஹீம் கூறிய நேரத்தையும் (எண்ணிப் பாருங்கள். இதற்கு அல்லாஹ்) நிராகரிப்பவனுக்கு(ம்) நான் சிறிது காலம் வரை பயன் அளிப்பேன். பின்னர் அவனை வலுக்கட்டாயமாக நரகத் தண்டனைக்கு கொண்டு செல்வேன். மேலும் இந்தச் சேருமிடம் மிகத் தீயது.
- இப்ராஹீமும், இஸ்மாயீலும் அந்த வீட்டின் அடித்தளங்களை உயர்த்திய நேரத்தையும் (எண்ணிப் பாருங்கள். அப்போது அவ்விருவரும்), எங்களுடைய இறைவா! எங்களிடமிருந்து (இப்பணியை) ஏற்றுக் கொள்வாயாக! நிச்சயமாக நீயே நன்கு கேட்கக் கூடியவனும், நன்கு அறியக்கூடியவனுமாவாய் (என்று வேண்டினர்).
- எங்களுடைய இறைவா! எங்கள் இருவரையும் உனக்கு கட்டுப்படக்கூடிய (அடிய)வர்களாக விளங்கச் செய்வாயாக! எங்களுடைய வழித் தோன்றல்களிலிருந்தும் உனக்கு கட்டுப்படக்கூடிய, ஒரு சமுதாயத்தை(த் தோற்றுவிப்பாயாக.) எங்களுக்கு (ஏற்ற)66 எங்களின் வணக்க வழிமுறைகளையும் எங்களுக்கு காட்டித் தருவாயாக! எங்களிடத்து (உனது) அருளுடன் கவனம் செலுத்துவாயாக! நிச்சயமாக நீயே மிகுந்த கவனம் செலுத்தக் கூடியவனும் பெருங்கருணைக் காட்டக் கூடியவனுமாவாய் (என்றும் நாங்கள் வேண்டிக் கொள்கின்றோம்).
- எங்களுடைய இறைவா! அவர்களுக்கு உனது அடையாளங்களை எடுத்தோதி, அவர்களுக்கு வேதத்தையும் ஞானத்தையும் கற்றுக் கொடுத்து, அவர்களைத் தூய்மைப் படுத்தும் ஒரு தூதரை அவர்களிலிருந்தே அவர்களிடம் தோற்றுவிப்பாயாக.67 நிச்சயமாக நீயே வல்லோனும், ஞானமிக்கோனுமாவாய் (என்றும் நாங்கள் வேண்டிக் கொள்கின்றோம்). ரு15
- மேலும், தன்னைத் தானே அழித்துக் கொள்பவனைத் தவிர, வேறெவன் இப்ராஹீமின் மார்க்கத்தைப் புறக்கணிப்பான்? நிச்சயமாக நாம் அவரை (இப்ராஹீமை) இவ்வுலகிலும் தேர்ந்தெடுத்தோம். நிச்சயமாக அவர் மறுமையிலும் நல்லவர்களைச் சேர்ந்தவராக இருப்பார்.
- அவருடைய இறைவன் அவரிடம் எமக்கு கட்டுப்படுவீராக என்று கூறிய போது, அவர் நான் (ஏற்கனவே) எல்லா உலகங்களின் இறைவனுக்குக் கட்டுப்பட்டவனாக இருக்கிறேன் என்றார்.
- மேலும் இப்ராஹீம் தமது மகன்களுக்கும், (இவ்வாறே) யஃகூப் (தமது மகன்களுக்கும்) எனது மகன்களே! நிச்சயமாக அல்லாஹ் இந்த மார்க்கத்தை உங்களுக்காகத் தேர்ந்தெடுத்துள்ளான். எனவே நீங்கள் (அல்லாஹ்வுக்கு) முற்றிலும் கட்டுப்பட்டு நடக்கின்ற நிலையிலேயே தவிர ஒரு போதும் மரணமடைய வேண்டாம்68 என்று வலியுறுத்தி(க் கூறி)னார்கள்.
- யஃகூபிற்கு மரணம் வந்த நேரத்தில் நீங்கள் இருந்தீர்களா? அவர் தமது மகன்களிடத்தில் எனக்குப் பின்னர் நீங்கள் எதனை வணங்குவீர்கள் என்று கேட்ட போது, அவர்கள் உம்முடைய இறைவனும் உம்முடைய மூதாதையர்களான இப்ராஹீம், இஸ்மாயீல், இஸ்ஹாக் ஆகியவர்களின் இறைவனுமாகிய வணக்கத்திற்குரிய அந்த ஒருவனையே நாங்கள் வணங்குவோம்; அவனுக்கே நாங்கள் கட்டுப்பட்டவர்களாக இருக்கிறோம் என்றனர்.
- அவர்கள் (தமது சகாப்தத்தை முழுமைப்படுத்தி) மரணமடைந்து விட்ட ஒரு சமுதாயத்தினர். அவர்கள் சம்பாதித்த(இலாபமும் நஷ்டமுமான)து அவர்களுக்கே. நீங்கள் சம்பாதித்த(இலாபமும் நஷ்டமுமான)து உங்களுக்கே. மேலும் அவர்கள் செய்தது பற்றி (எதுவும்) உங்களிடம் கேட்கப்படமாட்டாது.
- மேலும் நீங்கள் யூதர்களாகவோ கிறித்தவர்களாகவோ ஆகி விடுங்கள். அப்போதுதான் நீங்கள் நேர்வழியைப் பெறுவீர்கள் என்றும் அவர்கள் கூறுகின்றனர். (இதை நீர் கேட்பீரா?) அவ்வாறு அன்று. எப்பொழுதும் இறைவனைச் சார்ந்திருந்த இப்ராஹீமின் மார்க்கத்தை(ப் பின்பற்றுங்கள்). மேலும் அவர் இணை வைப்பவர்களைச் சேர்ந்தவராயிருந்ததில்லை என்று நீர் (அவர்களிடம்) கூறுவீராக.
- நாங்கள் அல்லாஹ்விடத்திலும், எங்களுக்கு இறக்கப்பட்டதிலும், இப்ராஹீம், இஸ்மாயீல், இஸ்ஹாக் ஆகியோருக்கும் யஃகூபுக்கும் (அவருடைய) மக்களுக்கும் இறக்கப்பட்டதிலும், மூஸாவுக்கும், ஈஸாவுக்கும் வழங்கப்பட்டதிலும், (இவ்வாறே ஏனைய) நபிமார்களுக்கு அவர்களின் இறைவனிடமிருந்து வழங்கப்பட்டதிலும் (அனைத்து வஹியிலும்) நம்பிக்கை கொண்டுள்ளோம். நாங்கள் அவர்களுள் எவருக்கிடையிலும் வேற்றுமை பாராட்டுவதில்லை. நாங்கள் அவனுக்கே கட்டுப்பட்டவர்களாவோம் என்றும் நீங்கள் கூறுங்கள்.
- எனவே நீங்கள் இதில் நம்பிக்கை கொண்டிருப்பது போன்று, அவர்களும் நம்பிக்கை கொண்டவர்களாயின் அவர்கள் நேர்வழி பெற்றவர்களே. அவர்கள் புறக்கணித்து விட்டால் அவர்கள் கருத்து வேறுபாட்டில் (அடம் பிடித்து) உள்ளனர். (இந்நிலையில்) அவர்களி(ன் தீங்கி)லிருந்து, அல்லாஹ் உம்மை நிச்சயமாகக் காப்பாற்றுவான். அவன் நன்கு கேட்பவனும் நன்கு அறிபவனுமாவான்.
- (முஸ்லிம்களே! நீங்கள் அவர்களிடம் கூறுவீர்களாக: நாங்கள்) அல்லாஹ்வின் மார்க்கத்தை69 ஏற்போம். அல்லாஹ்வை விட சிறந்த பண்பையுடையவன் எவன்? நாங்கள் அவனையே வணங்குகிறோம்.
- நீங்கள் எங்களுடன் அல்லாஹ்வைக் குறித்து வாதிடுகின்றீர்களா? எனக்கூறுவீராக. ஆனால், எங்கள் இறைவனும் உங்கள் இறைவனும் அவனே. எங்கள் செயல்கள் எங்களுக்கே; உங்கள் செயல்கள் உங்களுக்கே. நாங்கள் அவனுக்கே கலப்பற்ற (தொடர்பு வைத்த)வர்களாக இருக்கிறோம்.
- இப்ராஹீமும், இஸ்மாயீலும், இஸ்ஹாக்கும், யஃகூபும், (யஃகூபுடைய) மக்களும் யூதர்களாகவோ கிறித்தவர்களாகவோ இருந்தனர் என்று (வேதமுடையவர்களே) நீங்கள் கூறுகின்றீர்களா? நன்கறிந்தவர் நீங்களா, அல்லாஹ்வா?70 என்று நீர் (அவர்களிடம்) கூறுவீராக. அல்லாஹ்விடத்திலிருந்து தன்னிடம் வந்த சான்றை மறைக்கிறவனை விட மிக அநீதியிழைப்பவன் யார்? மேலும் நீங்கள் செய்கிறதை அல்லாஹ் (ஒருபோதும்) அறியாதவன் அல்லன்.
- அவர்கள் (தமது சகாப்தத்தை முழுமை படுத்தி) மரணமடைந்து விட்ட ஒரு சமுதாயத்தினர். அவர்கள் சம்பாதித்த(இலாபமும் நஷ்டமுமான)து அவர்களுக்கே. நீங்கள் சம்பாதித்த(இலாபமும் நஷ்டமுமான)து உங்களுக்கே. மேலும் அவர்கள் செய்தது பற்றி உங்களிடம் கேட்கப்பட மாட்டாது. ரு16
- (ஏற்கனவே) தாம் இருந்த கிப்லாவை விட்டு (முஸ்லிம்களாகிய) இவர்களைத் திருப்பியது71 எது என்று அறிவற்ற மக்களில் சிலர் கூறுவர். (அதற்கு) கிழக்கும் மேற்கும் அல்லாஹ்வுக்கே உரியவை; தான் நாடியவர்களுக்கு அவன் நேர்வழி காட்டுகின்றான் என்று நீர் கூறுவீராக.
- (முஸ்லிம்களே! நாம் உங்களுக்கு எவ்வாறு நேர்வழியினைக் காட்டியுள்ளோமோ) அவ்வாறே நீங்கள் (மற்ற) மக்களுக்கு மேற்பார்வையாளராக விளங்குவதற்காகவும், இத்தூதர் உங்களுக்கு மேற்பார்வையாளராக விளங்குவதற்காகவும் நாம் உங்களை மிக உயரிய ஒரு சமுதாயமாக ஆக்கியுள்ளோம். இதற்கு முன்பு நீர் (நிலைத்து)இருந்த கிப்லாவை நாம் ஏற்படுத்தியது, இத்தூதரைப் பின்பற்றுபவரை, தமது குதிக்கால்களில் திரும்பிவிடுபவரை விட்டும் (வேறுபடுத்தி) நாம் அறிந்து கொள்வதற்காகவே ஆகும். அல்லாஹ் நேர்வழி காட்டியவர்களைத் தவிர (மற்றவர்களுக்கு) நிச்சயமாக இது கடினமானதேயாகும். அல்லாஹ் உங்களுடைய நம்பிக்கையை வீணாக்க மாட்டான். நிச்சயமாக அல்லாஹ் எல்லா மக்களிடத்தும் மிக்க பரிவு காட்டுபவனும், பெருங்கருணையாளனும் ஆவான்.
- உமது முகம் அடிக்கடி வானம் நோக்கி திரும்புவதை நிச்சயமாக நாம் காண்கிறோம். எனவே, நீர் விரும்புகின்ற கிப்லாவின் பக்கம் நிச்சயமாக உம்மை நாம் திருப்பி விடுவோம். ஆகவே (இப்பொழுது) நீர் உமது முகத்தை (மஸ்ஜிது ஹராமின்) புனிதப் பள்ளியின் பக்கம் திருப்பிக் கொள்வீராக. (முஸ்லிமகளே!) நீங்கள் எங்கிருந்தாலும் உங்கள் முகங்களை அதன் பக்கம் திருப்பிக் கொள்ளுங்கள். (தௌராத்) வேதம் வழங்கப் பெற்றவர்கள் (கிப்லாவை மாற்றும் கட்டளையான) இது தம் இறைவனிடமிருந்து வந்துள்ள உண்மையாகும் என்பதை நிச்சயமாக அறிவர். மேலும் அவர்கள் செய்வதை அல்லாஹ் ஒரு போதும் கவனிக்காதவன் அல்லன்.
- (உமக்கு முன்னர்) வேதம் வழங்கப் பெற்றவர்களிடம் நீர் எல்லா (வகையான) அடையாளங்களையுங் கொண்டு வந்தாலும் அவர்கள் உமது கிப்லாவைப் பின்பற்ற மாட்டார்கள்; நீரும் அவர்களின் கிப்லாவை பின்பற்றுபவர் அல்லர். அவர்களுள் சிலர் மற்றவர்களின் கிப்லாவை பின்பற்ற மாட்டார்கள்.72 மேலும் (செவியேற்பவரே!) உம்மிடம் (இறை) ஞானம் வந்துவிட்ட பின்னரும் நீர் அவர்களின் விருப்பங்களைப் பின்பற்றினால், நிச்சயமாக, நீர் அநீதியிழைப்போரைச் சேர்ந்தவராவீர்.
- நாம் எவர்களுக்கு வேதத்தை வழங்கியுள்ளோமோ அவர்கள் தமது ஆண் மக்களைத் தெரிந்து கொள்வது போன்று (உண்மையாகிய) இதனைத் தெரிந்து கொள்கின்றனர். மேலும் நிச்சயமாக அவர்களுள் சிலர் தெரிந்துகொண்டே உண்மையை மறைக்கின்றனர்.
- இந்த உண்மை உமது இறைவனிடமிருந்து வந்துள்ளது. எனவே, நீர் ஒரு போதும் ஐயங்கொள்பவர்களைச் சேர்ந்தவராகி விட வேண்டாம்.ரு17
- ஒவ்வொருவருக்கும் ஒரு குறிக்கோள்73 உள்ளது. அவர் அதனிடத்தும் தமது முழுக் கவனத்தையும் செலுத்துகிறார். எனவே, நீங்கள் நல்லவற்றில் ஒருவரையொருவர் முந்திக் கொள்ள முயலுங்கள்.74 நீங்கள் எங்கிருந்தாலும், அல்லாஹ் உங்களை ஒன்று சேர்ப்பான். நிச்சயமாக, அல்லாஹ் எல்லாவற்றின் மீதும் முழுமையான ஆற்றல் பெற்றவனாவான்.
- நீர் எங்கிருந்து வெளியேறினாலும், உமது கவனத்தை மஸ்ஜிதுல் ஹராமின் (புனித பள்ளியின்) பக்கம் திருப்பிக் கொள்வீராக.75 ஏனென்றால், நிச்சயமாக இது உமது இறைவனிடமிருந்து (வந்துள்ள) உண்மையேயாகும். நீங்கள் செய்வதை அல்லாஹ் ஒரு போதும் அறியாதவன் அல்லன்.
- நீர் எங்கிருந்து வெளியேறினாலும் உமது கவனத்தை மஸ்ஜிதுல் ஹராமின் பக்கம் திருப்பிக் கொள்வீராக. நீங்கள் எங்கிருந்தாலும் அநீதியிழைத்தவர்களைத் தவிர, (ஏனைய) மக்களின் சார்பாக உங்கள் மீது குற்றச்சாட்டு இல்லாதிருக்கும் பொருட்டு76 உங்களுடைய முகங்களை அதன் பக்கம் திருப்பிக் கொள்ளுங்கள்77. எனவே, நீங்கள் அவர்களுக்கு அஞ்சாமல் எனக்கே அஞ்சுங்கள். மேலும், நான் என் அருட்கொடையை உங்களுக்கு முழுமையாக்குவதற்கும், நீங்கள் நேர்வழி பெறுவதற்குமே (நாம் இவ்வாறு கட்டளையிட்டோம்).
- எவ்வாறெனில், நம்முடைய வசனங்களை உங்களுக்கு ஓதிக்காட்டி, உங்களைத் தூய்மைப்படுத்தி, உங்களுக்கு வேதத்தையும் ஞானத்தையும் கற்பித்து, நீங்கள் அறியாதவற்றையெல்லாம் உங்களுக்குக் கற்பிக்கும் ஒரு தூதரை உங்களிலிருந்தே நாம் அனுப்பினோம்.
- எனவே, நீங்கள் என்னை நினைவு கூருங்கள். நானும் உங்களை நினைவு கூர்வேன். எனக்கு நன்றி செலுத்துங்கள். நன்றி கெட்டவராகி விடாதீர்கள். ரு18
- நம்பிக்கை கொண்டவர்களே! பொறுமை, பிரார்த்தனை இவற்றின் மூலம் (அல்லாஹ்விடம்) உதவி கோருங்கள். நிச்சயமாக அல்லாஹ் பொறுமையாளர்களுடன் இருக்கின்றான்.
- மேலும் அல்லாஹ்வின் வழியில் கொல்லப்படுகின்றவர்களை, இறந்தவர்கள் எனக் கூறாதீர்கள். மாறாக, அவர்கள் உயிருள்ளவர்களே. ஆனால், நீங்கள் உணர்ந்து கொள்வதில்லை.
- மேலும் ஓரளவு பயத்தாலும், பசியாலும், செல்வங்கள், உயிர்கள், கனி வகைகள் ஆகியவற்றின் இழப்பாலும் நிச்சயமாக நாம் உங்களைச் சோதிப்போம். மேலும் (தூதரே!) நீர் பொறுமையாளர்களுக்கு நற்செய்தியைக் கூறுவீராக.
- அவர்கள், தங்களுக்குத் துன்பம் ஏற்படும் போது, (பதற்றமடைவதில்லை; மாறாக) நிச்சயமாக நாம் அல்லாஹ்வுக்கே உரியவர்கள்; மேலும் நாம் அவனிடமே திரும்பிச் செல்பவர்கள் எனக் கூறுவார்கள்.
- இத்தகையோருக்குத் தங்களின் இறைவனிடமிருந்து, அருள்களும் கருணையும் இறங்குகின்றன. இவர்களே நேர்வழி பெற்றவர்கள்.
- நிச்சயமாக ஸஃபாவும், மர்வாவும்78 அல்லாஹ்வின் அடையாளங்களைச் சேர்ந்தவை. எனவே, (கஅபாவாகிய) அந்த வீட்டை ஹஜ் அல்லது உம்ரா செய்கின்றவருக்கு இவ்விரண்டிற்கிடையே விரைந்து செல்வது பாவமன்று79 . ஒருவர் சுயமாக விரும்பி ஏதாவது நன்மை செய்தால் அல்லாஹ் அதனை மதிக்கக் கூடியவனும் நன்கு அறிபவனுமாவான் (என்பதை அவர் புரிந்து கொள்வாராக).
- நாம் இறக்கிய தெளிவான அடையாளங்களையும், நேர்வழியினையும் கொண்ட இந்த வேதத்தை, அதில் நாம் மக்களுக்கு மிகவும் தெளிவாக விளக்கியதன் பின்னர், மறைக்கின்றவர்களை அல்லாஹ்வும் சபிக்கின்றான்; (ஏனைய) சபிக்கின்றவர்களும் சபிக்கின்றனர்.
- ஆயினும், எவர் பாவமன்னிப்புக் கோரி, (தம்மைச்) சீர்திருத்தி (இறைவனின் கட்டளைகளை)த் தெளிவாக விளக்குகின்றனரோ, அத்தகையோரை நான் அருளுடன் கவனம் செலுத்துகிறேன். நான் (எனது அடியார்களின் பக்கம்) மிகுந்த கவனம் செலுத்துபவனும், மேன்மேலும் கருணை காட்டுபவனுமாவேன்.
- எவர்கள் நிராகரித்துவிட்டு, நிராகரித்த நிலையிலேயே மரணமடைந்து விட்டார்களோ, அத்தகையவர்களின் மீது அல்லாஹ், வானவர்கள், மக்கள் ஆகிய எல்லாருடைய சாபமும் நிச்சயமாக உண்டாகின்றது.
- அவர்கள் அதிலேயே நெடுங்காலம் இருப்பார்கள். அவர்களுக்கு தண்டனையும் எளிதாக்கப்படமாட்டாது. அவர்களுக்குக் காலக்கெடுவும் கொடுக்கப்பட மாட்டாது.
- மேலும் வணக்கத்திற்குரிய உங்கள் இறைவன் ஒரே இறைவனாவான். அளவற்ற அருளாளனும் மேன்மேலும் கருணை காட்டுபவனுமாகிய அவனையன்றி வேறெந்த வணக்கத்திற்குரியவனும் இல்லை. ரு19
- வானங்களையும் பூமியையும் படைத்ததிலும், இரவு, பகல் மாறி மாறி வருவதிலும், மக்களுக்குப் பயனளிப்பவற்றுடன் கடலில் செல்லும் கப்பல்களிலும், மேகத்திலிருந்து அல்லாஹ் நீரை இறக்கியதன் மூலம் பூமியை அதன் இறப்பிற்கு பின்னர் உயிர்ப்பித்து, அதில் எல்லா வகையான உயிரினங்களையும் பரவச் செய்ததிலும், காற்றுகளை இங்குமங்குமாக வீசச் செய்ததிலும், விண்ணிற்கும் மண்ணிற்குமிடையில் பணிபுரிய ஏவப்பெற்ற மேகங்களிலும் நிச்சயமாக சிந்தித்து செயலாற்றும் மக்களுக்குப் பல அடையாளங்கள் உள்ளன.
- மேலும் மக்களுள் சிலர், அல்லாஹ் அல்லாதவற்றை அவனுக்கு இணையாக்கி, அல்லாஹ்வை நேசிப்பது போன்று அவற்றை நேசிக்கின்றனர். ஆனால், நம்பிக்கைக் கொண்டவர்கள் அல்லாஹ்வை(யே) மிகுதியாக நேசிக்கின்றனர். அநீதி இழைப்பவர்கள் தண்டனையை காணும் நேரத்தை (இப்பொழுதே) காண்பார்களாயின், எல்லா வல்லமைகளும் அல்லாஹ்வுக்கே உரியன(வென்றும்) அல்லாஹ் கடுமையான தண்டனையளிப்பவன் (என்றும் புரிந்து கொள்வார்கள்).
- பின்பற்றப்பட்டவர்கள் (அதாவது தலைவர்கள்), தண்டனையைக் கண்டு (அதிலிருந்து தப்பும்) எல்லா வழிவகைகளும் துண்டிக்கப்பட்டு (முற்றிலும் உதவியற்றோராய்) இருக்கும் அந்த நேரத்தில் (தங்களைப்) பின்பற்றியோரை விட்டு விலகி விடுவார்கள்.
- பின் பற்றியவர்கள், எங்களுக்கு (மீண்டும்) ஒரு முறை (உலகிற்குத்) திரும்பிச்செல்ல வாய்ப்புக் கிடைத்தால், இவர்கள் நம்மை விட்டு விலகி விட்டதைப் போன்று, நாமும், இவர்களை விட்டு விலகிக் கொள்வோம் என்று கூறுவர். இவ்வாறு அல்லாஹ் அவர்களுக்கு, அவர்களின் செயல்(களின் விளைவு)கள் அவர்களுக்கே வேதனைகளைத் தரக்கூடியவை என்று காட்டுவான். அவர்களால் (நரக) நெருப்பிலிருந்து வெளியேறவும் இயலாது. ரு20
- மக்களே! பூமியில் உள்ளவைகளுள் அனுமதிக்கப்பட்டதையும், தூய்மையானதையும் உண்ணுங்கள். மேலும் ஷய்த்தானின் அடிச்சுவடுகளைப் பின்பற்றாதீர்கள். நிச்சயமாக, அவன் உங்களுக்குப் பகிரங்கமான பகைவனாவான்.
- தீயதையும், மானக் கேடானதையும் , அல்லாஹ்வைப் பற்றி நீங்கள் அறியாததையும் இட்டுக்கட்டிக்80 கூறும்படியுமே அவன் (ஷய்த்தான்) உங்களை ஏவுகிறான்.
- மேலும், அல்லாஹ் இறக்கியதைப் பின்பற்றுங்கள் என்று அவர்களிடம் கூறப்பெற்றால், அவ்வாறு அன்று; எங்கள் மூதாதையர்கள் எவ்வழியில் இருக்கக் கண்டோமோ அவ்வழியைத் தான் நாங்கள் பின்பற்றுவோம் என அவர்கள் கூறுகின்றனர். அவர்களின் மூதாதையர்கள் எதையுமே அறியாதவர்களாயும், நேரான வழியில் செல்லாதவர்களாயும் இருந்தாலுமா? (அவர்கள் அவ்வாறு செய்வர்?)
- மேலும் நிராகரிப்பவர்களின் நிலை, கூச்சலையும் கூப்பாட்டையும் தவிர வேறெதையும் செவியுறாத ஒன்றை அழைக்கும் ஒருவரின் நிலை போன்றதாகும்.81 (இவர்கள்) செவிடர்கள், ஊமையர்கள், குருடர்கள்.82 எனவே இவர்கள் புரிந்து கொள்ள மாட்டார்கள்.
- நம்பிக்கை கொண்டவர்களே! நாம் உங்களுக்கு வழங்கிய தூய்மையான பொருள்களிலிருந்து உண்ணுங்கள். மேலும், நீங்கள் (உண்மையில்) அல்லாஹ்வைத்தான் வணங்குகின்றீர்களென்றால், அவனுக்கு நன்றி பாராட்டுங்கள்.
- (தானாகச்) செத்ததையும், இரத்தத்தையும், பன்றியிறைச்சியையும், அல்லாஹ் அல்லாத வேறு பெயர்83 கூறப்பட்டதையும் அவன் உங்களுக்கு விலக்கியுள்ளான். ஆனால் சட்டத்தை முறிக்காமலும், எல்லைகளை மீறாமலும் இருக்கும் நிலையில் (அவற்றை உண்ணும்) கட்டாயத் தேவைக்கு உள்ளாகுபவருக்கு எந்தப் பாவமுமில்லை. நிச்சயமாக, அல்லாஹ் மிக மன்னிப்பவனும், மேன்மேலும் கருணை கட்டுபவனுமாவான்.
- அல்லாஹ் வேதத்தில் இறக்கியதை மறைத்து, அதற்குப் பதிலாக அற்ப விலை84 யைப் பெறுகின்றவர்கள், நிச்சயமாகத் தங்கள் வயிறுகளில் நெருப்பைத் தான் நிரப்பிக் கொள்கின்றனர். மறுமை நாளில் அல்லாஹ் அவர்களுடன் பேசவுமாட்டான்; அவர்களைத் தூய்மைப் படுத்தவுமாட்டான். அவர்களுக்கு வேதனையளிக்கும் ஆக்கினை (விதிக்கப்பட்டு) உள்ளது.
- இவர்களே நேர்வழிக்குப் பதிலாக வழிகேட்டினையும், மன்னிப்புக்குப் பதிலாக ஆக்கினையையும் வாங்கிக் கொண்டவர்கள். நெருப்புத் தண்டனையை இவர்கள் பொறுத்துக் கொள்வது மிகவும் வியப்பே!
- இதற்குக் காரணம், அல்லாஹ் இவ்வேதத்தை உண்மையுடன் இறக்கி வைத்ததனாலேயேயாகும். இவ்வேதம் குறித்துக் கருத்து வேறுபாடு கொண்டுள்ளவர்கள், நிச்சயமாக மிகவும் இழிவான பகைமையில் உள்ளனர். ரு21
- கிழக்கு, மேற்கு ஆகியவற்றின் பக்கமாக உங்கள் முகங்களைத் திருப்புதல் (பெரிய) நன்மையன்று. ஆயினும் அல்லாஹ்விடத்தும், இறுதி நாளிடத்தும், வானவர்களிடத்தும், இறைவேதத்திடத்தும், எல்லா நபிமார்களிடத்தும் எவர் நம்பிக்கை கொண்டு (அல்லாஹ்வாகிய) அவன் மீது கொண்டுள்ள நேசத்தால் உறவினர்களுக்கும், அநாதைகளுக்கும், ஏழைகளுக்கும், வழிப்போக்கர்களுக்கும், பிச்சை எடுப்பவர்களுக்கும், அடிமைகளுக்கு (விடுதலை அளிப்பதற்கு)ம் தமது பொருளை செலவு செய்து தொழுகையை நிலைநாட்டி, ஸக்காத் கொடுக்கின்றாரோ அவரே முழுமையான நல்லவர் ஆவார்.85 மேலும் வாக்குறுதி அளித்தால், தாங்கள் அளித்த வாக்குறுதியினை நிறைவேற்றுபவர்களும், வறுமையிலும், நோயிலும், போர் வேளையிலும், பொறுமையுடன் இருப்பவர்களும் (முழுமையான நல்லவர்கள்) ஆவர். இவர்களே உண்மையாளர்கள். மேலும், இவர்களே இறையச்சம் உடையோர்கள்.
- நம்பிக்கை கொண்டவர்களே! கொலையுண்டோருக்காகப் பழிவாங்குதல் உங்களுக்குக் கடமையாகும். (கொலை செய்த) சுதந்திரமானவனுக்கு86 (அதே) சுதந்திரமானவனும், (கொலை செய்த) அடிமைக்கு (அதே) அடிமையும், (கொலை செய்த) பெண்ணுக்கு (அதே) பெண்ணும் தான் ஈடு (ஆவர்.) ஆயினும் (கொலை செய்த) அவனுக்கு அ(க்கொலையுண்ட)வனுடைய சகோதரன் (ஈட்டுத் தொகையில்) ஏதாவது மன்னித்துவிட்டால், (கொலை செய்யப்பட்டவனின் உறவினர் எஞ்சிய ஈட்டுத் தொகையை மட்டும்) பொருத்தமான முறையில் பெற்றுக் கொள்ளலாம். மிகவும் நல்ல முறையில் (எஞ்சிய அந்த ஈட்டுத் தொகையை) அவனுக்கு கொடுத்து விடுதல் (கொலையாளிக்குக் கடமையாக) உள்ளது. இது உங்களின் இறைவனிடமிருந்து(ள்ள) சலுகையும் அருளுமாகும். எனவே, இதற்குப் பின்னரும் வரம்பை மீறுகின்றவனுக்கு வேதனையளிக்கும் தண்டனை (விதிக்கப்பட்டு) உள்ளது.
- அறிவாளிகளே! (இந்தப்) பழிக்குப் பழி வாங்குவதில் உங்களுக்கு வாழ்வு இருக்கின்றது.87 நீங்கள் உங்களைக் காத்துக் கொள்வதற்கே (இக்கட்டளையுள்ளது)
- உங்களுள் ஒருவருக்கு மரண(நேர)ம் வரும்போது, அவர் பெருஞ் செல்வத்தை88 விட்டுச் சென்றால், பெற்றோர்களிடமும், நெருங்கிய உறவினர்களிடமும்,89 நியாயமான முறையில் நடக்குமாறு வஸிய்யத் (இறுதி விருப்பம்) கூறிச் செல்லுதல் உங்களுக்குக் கடமையாக்கப் பெற்றுள்ளது. (இது) இறையச்சமுடையோருக்கு கடமையாகும்.
- ஆனால் ஒருவன் அ(ந்)த (வஸிய்யத்தி)னைக் கேட்ட பின்னர் அதை மாற்றிவிட்டால்,90 அதன் பாவம் அதனை மாற்றியவர்களையே சாரும். நிச்சயமாக, அல்லாஹ் நன்கு செவியேற்பவனும், நன்கு அறிபவனுமாவான்.
- பின்னர் வஸிய்யத் செய்தவரால் (ஏற்படும்) ஓரவஞ்சனைக்கு அல்லது பாவத்திற்கு அஞ்சி, அவர்களுக்கிடையில் சமாதானத்தை ஏற்படுத்துகின்ற91 வருக்கு எந்தப் பாவமுமில்லை. நிச்சயமாக, அல்லாஹ் மிக்க மன்னிப்பவனும், மேன்மேலும் கருணை காட்டுப்பவனுமாவான்.ரு22
- நம்பிக்கை கொண்டவர்களே! உங்கள் முன்னோருக்கு நோன்பு கடமையாக்கப்பட்டது போன்று, உங்களுக்கும் அது கடமையாக்கப்பட்டுள்ளது. இதனால் நீங்கள் (ஆன்மீக, நல்லொழுக்க பலவீனங்களிலிருந்து) தவிர்ந்து கொள்ளலாம்.
- (எனவே) கணிக்கப்பட்ட நாள்களில் (நோன்பு நோற்றுக் கொள்ளுங்கள்.) உங்களுள் நோயாளியாகவோ, பயணத்திலோ இருப்பவருக்கு மற்ற நாட்களில் எண்ணிக்கை(யை நிறைவு செய்ய வேண்டியது) இருக்கும். மேலும் இதற்குரிய ஆற்றலை பெறாதவர்கள்92 பரிகாரமாக ஓர் ஏழைக்கு உணவளிப்பது கடமை ஆகும். ஒருவர் முழுமையாகக் கட்டுப்பட்டு ஒரு நற்செயல் செய்வார் எனில், அது அவருக்கு நன்றே. நீங்கள் அறிவுடையவர் என்றால், நோன்பு நோற்பது உங்களுக்குச் சிறந்தது.
- ரமலான் மாதம் குறித்து திருக்குர்ஆன் இறக்கப்பட்டுள்ளது. (அந்த குர்ஆன்) எல்லா மனிதர்களுக்கும் நேர்வழி காட்டக் கூடியதாக (அனுப்பப்பட்டு) உள்ளது. அது தெளிவான சான்றுகளை தன்னகத்தே கொண்டுள்ளது. அந்த சான்றுகள் நேர்வழியினை உருவாக்குகின்றன. மேலும் அத்துடன் (திருக்குர்ஆனில்) இறை அடையாளங்களும் உள்ளன.93 எனவே உங்களுள் அம்மாதத்தைக் காண்பவர் அதில் நோன்பு நோற்க வேண்டும். ஆனால் நோயாளியாகவோ94 பயணத்திலோ95 இருப்பவர் (விட்டுப்போன நோன்பை) மற்ற நாள்களில் கணக்கிட்டு (நோற்று)க் கொள்ள வேண்டும். அல்லாஹ் உங்களுக்கு எளிதை விரும்புகிறான். உங்களுக்குக் கடினத்தை விரும்புவதில்லை. நீங்கள் எண்ணிக்கையை முழுமை செய்வதற்காகவும், அல்லாஹ் உங்களுக்கு நேர்வழி காட்டியதற்காக நீங்கள் அவனின் பெருமையை எடுத்துரைப்பதற்க்காகவும், நீங்கள் அவனுக்கு நன்றி செலுத்துவதற்காகவுமே (இந்த கட்டளையை அவன் பிறப்பித்துள்ளான்.)
- (தூதரே!) என் அடியார்கள் உம்மிடம் என்னைப் பற்றிக் கேட்டால், நான் (அவர்களுக்கு) அருகில் இருக்கின்றேன்; பிரார்த்தனை செய்கிறவர் என்னை அழைக்கின்றபோது, நான் அவருடைய பிரார்த்தனையை ஏற்றுக் கொள்கிறேன். எனவே, அவர்களும் எனது கட்டளையினை ஏற்றுக் கொண்டு என்னிடம் நம்பிக்கை கொள்ள வேண்டும். இதனால் அவர்கள் நேர்வழி பெறுவார்கள் (என்று பதில் அளிப்பீராக).
- நோன்புகளின் இரவுகளில் உங்கள் மனைவியர்களிடம்96 செல்ல உங்களுக்குக் அனுமதிக்கப்பட்டுள்ளது. அவர்கள் உங்களுக்கு ஒரு(வித) ஆடையாகவும்,97 நீங்கள் அவர்களுக்கு ஒரு(வித) ஆடையாகவும் இருக்கின்றீர்கள். உங்கள் உரிமையை நீங்களே பறித்துக் கொண்டிருந்ததை98 அல்லாஹ் அறிவான். ஆகவே அவன் உங்களிடத்து கருணைகாட்டி உங்களை (அந்நிலையிலிருந்து) சீர்திருத்தி99 விட்டான். எனவே இப்பொழுது நீங்கள் (தயக்கமின்றி) அவர்களிடம் சென்று அல்லாஹ் உங்களுக்கு விதித்திருப்பதை தேடிக் கொள்ளுங்கள். இருள் விலகி, விடியலின் வெண் கதிர்கள் உங்களுக்குத் தெரியும் வரை நீங்கள் உண்ணுங்கள்; குடியுங்கள். பின்னர் இரவு வரை நோன்புகளை முழுமையாக்குங்கள். நீங்கள் பள்ளி வாயில்களில் தங்கி (இஃதிகாஃப்பில்) தனித்திருக்கும்போது (மனைவியர்களாகிய) அவர்களிடம் செல்லாதீர்கள். இவை அல்லாஹ் விதித்த வரம்புகளாகும். எனவே, நீங்கள் அவற்றினை நெருங்கவும் வேண்டாம். மக்கள் தீங்கிலிருந்து தங்களை காத்துக் கொள்வதற்காக, அல்லாஹ் தனது கட்டளைகளை இவ்வாறு அவர்களுக்கு விளக்குகிறான்.
- மேலும் நீங்கள் உங்களுடைய (சகோதரர்களின்) செல்வங்களை100 ஒருவருக்கொருவர் (இணைந்து கொண்டு) பொய்யின் மூலமாக(வும் ஏமாற்றுவதன் மூலமாகவும்) புசித்திட வேண்டாம். நீங்கள் தெரிந்து கொண்டே மக்களுடைய செல்வங்களின் ஒரு பகுதியினைப் பாவமான வழியில் விழுங்கிட வேண்டாமென்பதற்காக(ச் செல்வங்களாகிய) அவற்றை அதிகாரிகளிடமும் ஈர்த்துக் கொண்டு செல்ல வேண்டாம். ரு23
- பிறைகளைப் பற்றி அவர்கள் உம்மிடம் கேட்கின்றனர். இவை மக்க(ளுடைய பொதுவான பணிக)ளுக்காவும் ஹஜ்ஜுக்கான நேரத்தை அளவிடுவதற்காகவும் என்று நீர் கூறுவீராக. நீங்கள் வீடுகளில் அவற்றின் பின்புற வழியாக101 நுழைவது உயர்ந்த நன்மையன்று. மாறாக இறைவனுக்கு அஞ்சி நடப்பவரே (உண்மையில்) நல்லவர். (நீங்கள்) வீடுகளில், அவற்றின் முன் வாயில்கள் வழியாகவே நுழையுங்கள். நீங்கள் வெற்றி பெற அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள்.
- மேலும் உங்களிடம் போர் செய்வோருடன் நீங்களும் அல்லாஹ்வின் பாதையில் போர் செய்யுங்கள். ஆனால் வரம்பு மீறாதீர்கள். வரம்பு மீறுபவர்களை அல்லாஹ் ஒரு போதும் நேசிப்பதில்லை.
- மேலும் (வலிய வந்து போர் செய்கின்ற) அவர்களை எங்கு கண்டாலும் கொன்று விடுங்கள். அவர்கள் உங்களை எங்கிருந்து வெளியேற்றினார்களோ அங்கிருந்து நீங்களும் அவர்களை வெளியேற்றி விடுங்கள். கலகம், கொலையை விட மிகக் கடுமையான (நஷ்டத்தை ஏற்படுத்தக் கூடிய)து ஆகும். புனிதப்பள்ளியின் பக்கத்தில் அவர்கள் உங்களுடன் போர் செய்ய(த் துவங்கா)த வரை நீங்கள் அவர்களுடன் அங்கு போர் செய்யாதீர்கள். (அங்கு) அவர்கள் உங்களுடன் போர் செய்தால், நீங்கள் அவர்களை கொன்று விடுங்கள். இந்த நிராகரிப்பாளர்களுக்கு இதுவே தண்டனையாகும்.
- பின்னர் அவர்கள் விலகிக் கொண்டால், அல்லாஹ் நிச்சயமாக மிக்க மன்னிப்பவனும், மேன்மேலும் கருணை காட்டுபவனுமாவான்.
- மேலும் கலகம் இல்லாதொழிந்து மார்க்கம் என்பது அல்லாஹ்விற்குரியதாகவே ஆகும் வரையிலும், நீங்கள் அவர்களுடன் போர் செய்யுங்கள். பின்னர் அவர்கள் விலகிக் கொண்டால், அநீதியிழைப்பவர்களைத் தவிர வேறெவரையும் தன் பிடியின் கீழ்102 கொண்டு வருவது ஆகுமானதன்று (என்பதை நினைவில் கொள்ளுங்கள்).
- சிறப்புக்குரிய மாதத்திற்கு அச்சிறப்புக்குரிய மாதமே ஈடாகும். தூய்மையான எல்லாவற்றிற்கு(ம் செய்யப்படும் கலங்கத்திற்கு)ம் பழிக்குப்பழி வாங்கலாம். எனவே, உங்களுக்கு எதிராக வரம்பு மீறுபவனுக்கு, அவன் வரம்பு மீறும் அளவுக்கு தண்டனை வழங்குங்கள். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக, அல்லாஹ் இறையச்சமுடையோருடன் இருக்கின்றான் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
- அல்லாஹ்வின் பாதையிலே (பொருளையும், உயிரையும்) செலவு செய்யுங்கள். நீங்கள் உங்கள் கைகளாலேயே (உங்களை) அழிவிற்காளாக்கிக் கொள்ளாதீர்கள். மேலும் நன்மை செய்யுங்கள். அல்லாஹ் நிச்சயமாக நன்மை செய்பவர்களை நேசிக்கின்றான்.
- மேலும் ஹஜ்ஜையும், உம்ராவையும் அல்லாஹு(வின் திருப்தி)க்காக நிறைவேற்றுங்கள். பின்னர் (ஏதாவதொரு காரணத்தால் ஹஜ், உம்ராவிலிருந்து) நீங்கள் தடுக்கப்பட்டால் எளிதில் கிடைத்திடும் குர்பானியை (கொடுத்து விடுங்கள்). அந்த குர்பானி தனக்குரிய இடத்தை அடையும் வரை உங்கள் தலைகளைச் சிரைத்துக் கொள்ளாதீர்கள்103 உங்களுள் எவர் நோயாளியாக இருக்கின்றாரோ அல்லது எவருக்கு தனது தலையில் (உள்ள நோயின் காரணத்தால்) வலி (ஏற்பட்டு) உள்ளதோ (அவர் தலையினை சிரைத்துக் கொண்டால், இதன் காரணமாக) அவர் நோன்போ, தர்மமோ, குர்பானியோ பரிகாரம் (கட்டாயம்) ஆகும்.104 பின்னர் நீங்கள் பாதுகாப்புடன் இருக்கும்போது, ஹஜ்ஜுடன் உம்ராவையும் சேர்த்துச் செய்யும் வாய்ப்பைப் பெறுபவர் எளிதில் கிடைக்கும் குர்பானியைக் கொடுக்கட்டும். (எந்தக் குர்பானியையும் செய்வதற்கான நல்வாய்ப்பைப்) பெறாதவர் ஹஜ்ஜில் மூன்று நாட்கள் நோன்பு நோற்க வேண்டும். (முஸ்லிம்களே! உங்கள் இல்லங்களுக்கு) நீங்கள் திரும்பியதும் மேலும் ஏழு (நோன்புகள் நோற்கவும்). இவ்வாறு பத்து முழுமையாகும். இது புனித பள்ளிக்கு அருகில் வாழாதவர்களுக்கு உரியது. நீங்கள் அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ்வின் தண்டனை கடுமையானது என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்.ரு24
- ஹஜ்ஜின் மாதங்கள் நன்கு தெரிந்தவையே. ஆகவே, அம்மாதங்களில் ஹஜ்ஜு செய்ய உறுதி எடுத்துக் கொள்பவர் ஹஜ்ஜில் பாலுணர்வு பற்றிய பேச்சும், எவ்வித வரம்பு மீறுதலும், எவ்வித சண்டை செய்தலும் கூடாது. நீங்கள் எத்தகு நன்மையினைச் செய்தாலும் அதனை அல்லாஹ் அறிந்து கொள்கிறான். பயணத்திற்கு தேவையான உணவை எடுத்துக் கொள்ளுங்கள். நிச்சயமாக மிகச் சிறந்த பயண உணவு இறையச்சமேயாகும். அறிவாளிகளே! எனக்கு மட்டுமே அஞ்சுங்கள் (என்பதை நினைவில் கொள்ளுங்கள்).
- (ஹஜ்ஜிற்குரிய நாட்களில்) நீங்கள் உங்கள் இறைவனின் அருளைத்105 தேடிக் கொள்வது உங்களுக்கு பாவமன்று. பின்னர் நீங்கள் அரஃபாத்திலிருந்து திரும்பும்பொழுது மஷ்அரே ஹராமுக்கு106 அருகில் அல்லாஹ்வை நினைவுக் கூருங்கள். அவன் உங்களுக்கு வழிகாட்டியது போன்று அவனை நினைவுக் கூருங்கள். அதற்கு முன்னர் நீங்கள் நிச்சயமாக வழிதவறியவர்களைச் சார்ந்தவர்களாக இருந்தீர்கள்.
- பிறகு, மக்கள் எங்கிருந்து திரும்புகின்றனரோ, அங்கிருந்தே நீங்களும் திரும்புங்கள்.107 அல்லாஹ்விடம் பாவமன்னிப்பு கோருங்கள். அல்லாஹ் நிச்சயமாக மன்னிப்பவனும் மேன்மேலும் கருணை காட்டுபவனுமாவான்.
- பின்னர் நீங்கள் உங்களுடைய வணக்க முறைகளை முழுமையாக்கியதும் (கடந்த காலங்களில்) உங்களுடைய மூதாதையர்களை நினைவு கூருவது போன்று அல்லது அதைவிடவும் அதிகமாய் அல்லாஹ்வை நினைவு கூருங்கள். எங்கள் இறைவா! எங்களுக்கு இவ்வுலகில் (சுகங்களை) வழங்குவாயாக என்று மக்களுள் சிலர் கூறுகின்றனர். இவர்களுக்கு மறுமையில் எவ்வித பங்கும் இல்லை.
- மேலும் அவர்களுள் சிலர், எங்கள் இறைவா! எங்களுக்கு இந்த உலகிலும் வெற்றியினை108 வழங்குவாயாக; மறுமையிலும் வெற்றியினை (வழங்குவாயாக.) எங்களை நெருப்பின் தண்டனையிலிருந்தும் காப்பாற்றுவாயாக என்று வேண்டுகின்றனர்.
- இவர்கள் சம்பாதித்ததின் காரணமாக (நற்கூலியின்) ஒரு பெரும் பங்கு (விதிக்கப்பட்டு) உள்ளது. அல்லாஹ் மிக விரைவில் கணக்கு தீர்ப்பவன்109 ஆவான்.
- மேலும் குறிப்பிட்ட நாட்களில் அல்லாஹ்வை நினைவுக் கூருங்கள். பின்னர், இரண்டு நாட்களிலே(யே)110 திரும்பிச் செல்ல அவசரப்படுகிறவர் மீது எவ்விதப் பாவமுமில்லை. பின்தங்கி விடுகின்றவர் மீதும் எவ்விதப் பாவமுமில்லை. இறையச்சமுடையவருக்கே இது உரியது. நீங்கள் அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். மேலும், நீங்கள் எல்லாரும் ஒன்று சேர்க்கப்பட்டு அவனிடம் கொண்டு செல்லப்படுவீர்கள் என்பதை அறிந்து கொள்ளுங்கள்.
- மேலும் (இந்த) உலக வாழ்க்கையைப் பற்றிய பேச்சில் உம்மை வியப்படையச் செய்பவர் மக்களுள் சிலர் உள்ளனர். அவர்கள், அல்லாஹ்வை தங்கள் உள்ளத்திலுள்ளதற்குச் சாட்சியாக ஆக்குகின்றனர். ஆனால், அவர்களோ மிக அதிகமாக வாய்ச்சண்டை செய்பவர் ஆவர்.
- மேலும் அவர்கள் அதிகாரிகளாகி விட்டால், பூமியில் (முழுவதும்) குழப்பத்தை விளைவிப்பதற்காகவும், விளை நிலத்தையும், படைப்பினத்தையும் அழித்து விடுவதற்காகவும் அதில் விரிவாக சுற்றித் திரிவர். ஆனால் அல்லாஹ் குழப்பத்தினை விரும்புவதில்லை.
- அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள் என்று அவர்களிடம் சொல்லப் பெற்றால், தற்பெருமை அவர்களை (மேலும்) பாவம் செய்யத் தூண்டி விடுகின்றது. ஆகவே, இத்தகையவர்களுக்கு நரகமே போதுமானது. மேலும் அது உண்மையிலேயே மிகவும் கேட்ட தங்குமிடமாகும்.
- மேலும் அல்லாஹ்வின் திருப்திகளைப் பெறுவதற்காகத் தமது உயிரையே விற்றுவிடுபவர்களும் மக்களுள் சிலர்111 உள்ளனர். (இத்தகு தூய) அடியார்களிடம் அல்லாஹ் மிகுந்த பரிவு காட்ட கூடியவனாவான்.
- நம்பிக்கை கொண்டவர்களே! நீங்கள் எல்லாரும் முழுமையான கீழ்ப்படிதலுக்குள் வந்து விடுங்கள். மேலும் ஷய்த்தானின் அடிச்சுவடுகளை பின்பற்றிச் செல்லாதீர்கள். அவன் உண்மையிலேயே உங்களுக்கு (மிகவும்) பகிரங்கமான பகைவனாவான்.
- உங்களிடம் (மிகத்) தெளிவான அடையாளங்கள் வந்த பின்னரும் நீங்கள் தடுமாறி விட்டால், நிச்சயமாக அல்லாஹ் வல்லோனும் நுண்ணறிவுடையோனுமாவான் என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள்.
- அல்லாஹ்வும், வானவர்களும், மேகங்களின் நிழல்களில் தம்மிடம் வருவதையும், பிரச்சினைக்குத் தீர்ப்புச் செய்யப்படுவதையும் தவிர, வேறெதனை அவர்கள் எதிர்பார்க்கின்றனர்? மேலும் எல்லா பிரச்சினைகளும் அல்லாஹ்விடமே (தீர்ப்புக்காகத்) திரும்புகின்றன.ரு25
- இஸ்ராயீலின் மக்களிடம் கேட்டுப் பாருங்கள்! நாம் அவர்களுக்கு மிகத் தெளிவான எத்தனையோ அடையாளங்களை வழங்கினோம். அல்லாஹ்வின் அருள் தனக்குக் கிடைத்ததன் பின்னர் அதனை மாற்றி விடுபவன், அல்லாஹ் கடினமான தண்டனை112 வழங்கக் கூடியவனாவான் (என்பதை ஞாபகம் வைத்துக் கொள்ளட்டும்).
- நிராகரிப்பவர்களுக்கு இவ்வுலக வாழ்க்கை அழகு வாய்ந்ததாகக் காட்டப்பட்டுள்ளது. அவர்கள் நம்பிக்கை கொண்டவர்களை எள்ளி நகையாடுகின்றனர். ஆனால் இறையச்சமுடையவர்கள், மறுமை நாளில் அவர்களை விட மேலானவர்களாக இருப்பர். அல்லாஹ், தான் விரும்புபவர்களுக்குக் கணக்கின்றி வழங்குகிறான்.
- எல்லா மக்களும் ஒன்றுபட்ட (எண்ணங்கொண்ட)வர்களாகவே இருந்தனர்.113 பின்னர் மக்கள் கருத்து வேறுபாடு கொண்டிருந்தவற்றில், அவர்களுக்கிடையில் தீர்ப்பு வழங்குவதற்காக, அல்லாஹ் நபிமார்களை நற்செய்தி வழங்குபவர்களாயும் எச்சரிக்கை விடுப்பவர்களாயும் அனுப்பி, உண்மையினைக் கொண்டுள்ள வேதத்தையும் அவர்களுடன் இறக்கினான். வேதம் வழங்கப்பட்டவர்களே தம்மிடம் (மிகத்) தெளிவான அடையாளங்கள் வந்துவிட்டதன் பின்னர், தமக்கிடையிலுள்ள உட்பூசல் (மற்றும் குழப்பம்) காரணமாக அ(வ்வேதத்)தைக் குறித்து கருத்து வேற்றுமை கொண்டனர்.114 ஆகவே, அல்லாஹ் தனது கட்டளையினால் நம்பிக்கை கொண்டவர்களை, மற்றவர்கள் கருத்து வேறுபாடு கொண்டுள்ளது பற்றிய உண்மையின் பக்கம் அழைத்துச் சென்றான். அல்லாஹ், தான் விரும்புபவருக்கு நேர்வழி காட்டுகிறான்.
- உங்களுக்கு முன்னர் சென்ற மக்களுடைய நிலைமை உங்களுக்கு வராமலிருக்கின்ற வரையில், நீங்கள் சுவர்க்கத்தில் நுழைந்து விடலாமென நினைக்கின்றீர்களா? அவர்களுக்கு வறுமையும் இன்னல்களும் ஏற்பட்டன. (அப்போதைய) தூதரும் அவருடன் (உள்ள) நம்பிக்கை கொண்டிருந்தவர்களும், அல்லாஹ்வின் உதவி எப்போது வரும் என்று கேட்கும் வரை, அவர்கள் மிகவும் ஆட்டிப்படைக்கப் பட்டார்கள்.115 நிச்சயமாகவே அல்லாஹ்வின் உதவி அண்மையில் உள்ளது. (என்பதை ஞாபகம் வைத்துக் கொள்ளுங்கள்)
- எதனைச் செலவு செய்வது என்று அவர்கள் உம்மிடம் கேட்கின்றனர். நீங்கள் எந்த நல்ல பெருஞ்செல்வத்தை செலவு செய்தாலும்116 அது (உங்களுடைய) பெற்றோர், நெருங்கிய உறவினர், அநாதையர், வறியவர், வழிப்போக்கர் ஆகியவருக்கு (முதற்கண்) உரியதாகும் என்று நீர் கூறுவீராக. மேலும் நீங்கள் எந்த நற்செயலை செய்தாலும், நிச்சயமாக அல்லாஹ் அதனை நன்கு அறிகின்றான்.
- போர் செய்தல் உங்களுக்கு வெறுப்பாக இருப்பினும் அது உங்களுக்குக் கடமையாக்கப்பட்டுள்ளது. நீங்கள் வெறுக்கக்கூடிய ஒன்று, உங்களுக்கு நல்லதாக இருக்கலாம். நீங்கள் விரும்பும் ஒன்று, உங்களுக்கு தீயதாக இருக்கலாம். மேலும் அல்லாஹ் (எல்லாவற்றையும்) அறிகின்றான். நீங்கள் அறிவதில்லை. ரு26
- அவர்கள் புனித மாதத்தில் போர் செய்வது குறித்து உம்மிடம் வினவுகின்றனர். அதில் போர் செய்தல் (வரம்பு மீறும்) பெரும் செயலாகும். அல்லாஹ்வின் வழியிலிருந்து (மனிதர்களைத்) தடுப்பதும், அவனை நிராகரிப்பதும், புனித பள்ளியை நிராகரிப்பதும்117 அதிலிருந்து அதற்குரியவர்களை வெளியேற்றுவதும் அல்லாஹ்விடத்தில் மாபெரும் (பாவச்) செயலாகும். மேலும் குழப்பம் கொலையைவிடக் பெரிய (பாவமான)தாகும் என்று நீர் கூறுவீராக. அவர்களால் முடியுமாயின், அவர்கள் உங்களை உங்களுடைய மார்க்கத்திலிருந்து திரும்பும் வரை உங்களுடன் போர் செய்து கொண்டேயிருப்பர். உங்களுள் எவராவது தனது மார்க்கத்தில் இருந்து திரும்பி, நிராகரித்த நிலையிலேயே மரணமடைந்து(ம்) விட்டால், அவர்களின் செயல்கள் இவ்வுலகிலும் மறு உலகிலும் வீணாகி விடும். அத்தகையோர் நரகத்திற்குரியவர்களாவர். அவர்கள் அதிலேயே நெடுங்காலம் இருப்பர்.118
- நம்பிக்கை கொண்டவர்களும், (தம் வீட்டைத்) துறந்து சென்று அல்லாஹ்வின் வழியில் அறப்போர் புரிபவர்களும் ஆகிய இவர்களே, நிச்சயமாக அல்லாஹ்வின் அருளை எதிர்ப்பார்க்கின்றனர். மேலும் அல்லாஹ் மிக்க மன்னிப்பவனும் மேன்மேலும் கருணை காட்டுபவனும் ஆவான்.
- அவர்கள் உம்மிடம் மதுவைப் பற்றியும், சூதாட்டத்தைப் பற்றியும் வினவுகின்றனர். இவ்விரண்டிலும் மக்களுக்குப் பெரும் பாவமும் (பாதிப்பும்)119 சில பயன்களும் உள்ளன. இவற்றின் பாவம் இவற்றிலுள்ள பயனை விட மிகவும் பெரிதாகும் என்று நீர் கூறுவீராக. அவர்கள் உம்மிடம், தாங்கள் எதனைச் செலவு செய்ய வேண்டுமென்றும் வினவுகின்றனர். சிரமத்திற்கு ஆளாகாத அளவு120 என்று நீர் கூறுவீராக. நீங்கள் சிந்தித்துச் செயலாற்ற அல்லாஹ் தன் கட்டளை இவ்வாறு உங்களுக்கு விளக்குகின்றான்.
- இம்மை மறுமை பற்றியும் (சிந்தித்து செயல்பட வேண்டும்). அவர்கள் உம்மிடம், அநாதைகளைக் குறித்தும் வினவுகின்றனர். நீர் கூறுவீராக அவர்களின் நலத்தை மேம்படுத்துவது பெரும் நற்செயலாகும். நீங்கள் அவர்களுடன் இணைந்து வாழ்வீர்களாயின், (அதில் எந்த குற்றமுமில்லை. ஏனென்றால்) அவர்கள் உங்கள் சகோதரர்களேயாவர். நன்மை செய்வோரிலிருந்து குழப்பம் செய்பவனை அல்லாஹ் நன்கறிகின்றான். அல்லாஹ் நாடியிருந்தால், உங்களை துயரத்திற்கு ஆளாக்கியிருப்பான். நிச்சயமாக அல்லாஹ் வல்லவனும் நுண்ணறிவுடையோனுமாவான்.
- மேலும் இணைவைக்கின்ற பெண்கள் நம்பிக்கைக் கொள்ளாதவரை, நீங்கள் அவர்களை மணந்து கொள்ளாதீர்கள். இணை வைக்கின்ற ஒரு பெண் உங்களுக்கு (மிக) விருப்பமானவளாயிருப்பினும், அவளை விடவும் நம்பிக்கைக் கொண்ட ஓர் அடிமைப் பெண் நிச்சயமாக சிறந்தவளாவாள்.121 இணை வைக்கின்ற ஆண்கள் நம்பிக்கைக் கொள்ளாதவரை, அவர்களுக்கு நீங்கள் (முஸ்லிம் பெண்களை) மணமுடித்துக் கொடுக்காதீர்கள். இணை வைக்கின்ற ஆண் உங்களுக்கு (மிகவும்) விருப்பமுள்ளவனாயிருப்பினும், (சுதந்திரமான) அவனை விடவும் நம்பிக்கைக் கொண்ட ஓர் ஆண் அடிமை நிச்சயமாக சிறந்தவன் ஆவான்.122 இவர்கள் நெருப்பிற்கு அழைக்கின்றனர். அல்லாஹ் தனது கட்டளையின் மூலம் சுவர்க்கத்திற்கும், மன்னிப்பிற்கும் அழைக்கின்றான். மக்கள் அறிவுரையினைப் பெறுவதற்குத் தனது அடையாளங்களை அவர்களுக்கு தெளிவாக விளக்குகின்றான். ரு27
- மேலும் அவர்கள் உம்மிடம் மாதவிடாய் (நாட்களில் மனைவியிடத்து செல்வது) குறித்து வினவுகின்றனர். நீர் கூறுவீராக. அது ஒரு நோய் நிலையாகும். எனவே மாதவிடாயி(ன் நாட்களி)ல் மனைவியர்களை விட்டு நீங்கள் விலகியிருங்கள். அவர்கள் தூய்மை அடையும் வரை அவர்களிடம் செல்லாதீர்கள். பின்னர், அவர்கள் குளித்துத் தூய்மை123 அடைந்து விட்டால் அல்லாஹ் உங்களுக்கு கட்டளையிட்டபடி அவர்களிடத்துச் செல்லுங்கள். தன் பக்கம் திரும்புபவர்களை நிச்சயமாக அல்லாஹ் நேசிக்கின்றான்; மேலும் (உள்ளும் புறமும்) தூய்மையாக இருப்பவர்களையும் நேசிக்கின்றான்.
- உங்கள் மனைவிகள் உங்களுக்கு (ஒருவகை) விளைநிலமாய் விளங்குகின்றனர். எனவே நீங்கள் விரும்புகின்றபடி உங்கள் விளைநிலத்திற்குச் செல்லுங்கள். உங்களுக்காக (சிலவற்றை) முன்னே அனுப்பி வையுங்கள்.124 மேலும் அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். மேலும் நீங்கள் அவனை சந்திப்பீர்கள் என்பதை தெரிந்து கொள்ளுங்கள். மேலும் நம்பிக்கை கொண்டவர்களுக்கு (அந்த நாளைக் குறித்து) நீர் நற்செய்தி கூறுவீராக.
- மேலும் நீங்கள் நன்மை செய்தல், இறையச்சத்தை மேற்கொள்ளுதல், மக்களுக்கிடையில் சமாதானம் செய்து வைத்தல் ஆகியவற்றிலிருந்து விலகிக் கொள்வதற்காக, அல்லாஹ்வை உங்களுடைய சத்தியங்களுக்கு இலக்காக ஆக்கிக் கொள்ளாதீர்கள். அல்லாஹ் நன்கு கேட்பவனும், நன்கு அறிபவனுமாவான்.
- உங்களுடைய சத்தியங்களுள் வீணானவை125 களுக்காக அல்லாஹ் உங்களை தண்டிக்க மாட்டான். ஆனால் உங்களின் உள்ளங்கள் (விரும்பி) எ(ந்தப் பாவத்)தை சம்பாதித்ததோ அதற்காக உங்களை தண்டிப்பான். அல்லாஹ் மிக்க மன்னிப்பவனும் சகித்துக் கொள்பவனுமாவான்.
- தங்கள் மனைவியர்களிடம் (அவர்களை விட்டு விலகியிருக்க) சத்தியம் செய்கின்றவர்,126 நான்கு மாதங்கள் (மட்டும்) எதிர் பார்க்கலாம். பின்னர் (இக்கால அளவிற்குள் சமாதானத்தின் பக்கம்) அவர்கள் திரும்பி வந்தால்,127 நிச்சயமாக அல்லாஹ் மிக்க மன்னிப்பவனும் மேன்மேலும் கருணை காட்டுபவனுமாவான்.
- மேலும் அவர்கள் மணவிலக்கு (தலாக்கு)க் கொடுக்க முடிவெடுத்து விட்டால், நிச்சயமாக அல்லாஹ் நன்கு கேட்பவனும் நன்கு அறிபவனுமாவான்.
- மேலும் மணவிலக்கு கொடுக்கப்பெற்ற பெண்கள், மூன்று மாதவிடாய்128 வரைத் தம்மை தாமே தடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். அவர்கள் அல்லாஹ்விடத்தும், மறுமைநாளிடத்தும் நம்பிக்கை கொண்டவர்களாயின், அல்லாஹ் அவர்களின் கருப்பைகளில் உருவாக்கியுள்ளதை மறைப்பது அவர்களுக்கு ஆகுமானதன்று. அவர்கள் கணவர்கள் தமக்கிடையில் இணக்கத்தை விரும்பினால் அவர்கள் (குறிப்பிடப்பெற்ற காலமாகிய) அதற்குள் அவர்களை (இல்லற வாழ்க்கைக்கு)த் திருப்பி அழைத்துக் கொள்ள அதிக உரிமை பெற்றவர்களாவர். (பெண்களாகிய) அவர்கள் மீது சில பொறுப்புகள் உள்ளது போன்று, நியாய முறைப்படி129 அவர்களுக்கு (சில உரிமைகளும்) உள்ளன. ஆயினும் அவர்களை விட ஆடவர்களுக்கு ஒருவித உயர்வு உள்ளது.130 மேலும் அல்லாஹ் வல்லோனும் நுண்ணறிவுடையோனும் ஆவான்.ரு28
- (மீண்டும் இணையத்தக்க) மணவிலக்கு இருமுறைகளே.131 பின்னர் தக்க முறையில் (மணவிலக்குப் பெற்ற பெண்களைத்) தடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். அல்லது நன்முறையில் அனுப்பி வைக்க வேண்டும். அல்லாஹ்வினால் (வரையறுக்கப்பட்ட) வரம்புகளை, அவ்விருவராலும் நிலைநிறுத்த முடியாதென அவர்கள் அஞ்சினாலன்றி, நீங்கள் ஏற்கனவே அவர்களுக்கு வழங்கியதிலிருந்து எப்பொருளையும் (திரும்ப) பெறுதல் உங்களுக்கு ஆகுமானதன்று. அவ்விருவராலும் அல்லாஹ்வின் (வரையறுக்கப்பட்ட) வரம்புகளை நிலை நிறுத்த முடியாதென்ற அச்சம்132 உங்களுக்கு133 இருக்குமாயின், அவள் தன்னை விடுவிக்க ஈடாக கொடுப்பதில், அவ்விருவ(ருள் எவ)ரின் மீதும் எந்தக் குற்றமுமில்லை. இவை அல்லாஹ்வின் (வரையறுக்கப்பட்ட) வரம்புகளாகும். எனவே நீங்கள் அவற்றை மீறாதீர்கள். மேலும் அல்லாஹ்வின் வரம்புகளை மீறுபவர் அநீதியிழைத்தவராவார்கள்.
- பிறகு (மேற்கூறப்பெற்ற இரு தலாக்குகள் நிகழ்ந்த பின்னரும் மூன்றாவதாக) அவன் அவளுக்கு மணவிலக்குக் கொடுத்துவிட்டால், அவள் அவனல்லாத மற்றொரு கணவனிடம் செல்லும் வரை, அவள் அவனுக்கு ஆகுமானவளாக மாட்டாள். ஆனால் அவனும் அவளுக்கு மணவிலக்குக் கொடுத்துவிட்டால், அவ்விருவருக்கும் அல்லாஹ்வின் வரம்புகளை தங்களால் நிலைநிறுத்த முடியும் என்ற உறுதி இருந்தால், ஒருவர் மற்றொருவரிடம் (திருமணம் மூலம்) சேர்ந்து கொள்வதில், அவர்கள் இருவர் மீது எந்தக் குற்றமுமில்லை. மேலும் இவை அல்லாஹ்வின் வரம்புகளாகும். இவற்றை அவன் அறிவுடைய மக்களுக்கு விளக்கிக் கூறுகின்றான்.
- மேலும் நீங்கள் பெண்களுக்கு தலாக்குக் கொடுத்து, அவர்கள் தம்முடைய தவணையி(ன் இறுதி எல்லையி)னை அடைந்து விட்டார்களாயின்,134 நீங்கள் அவர்களை தக்க முறையில் தங்க வைத்துக் கொள்ளுங்கள்135 அல்லது நன்முறையில் அவர்களை அனுப்பி வைய்யுங்கள். அநீதியிழைப்பதற்காக அவர்களை துன்புறுத்தித் தடுத்து வைத்துக் கொள்ளாதீர்கள். அவ்வாறு செய்பவன் தனக்கே அநீதியிழைத்துக் கொள்கிறான். நீங்கள் அல்லாஹ்வின் கட்டளைகளை, ஏளனத்திற்குரியதாக ஆக்கிக் கொள்ளாதீர்கள். மேலும் அல்லாஹ் உங்களுக்கு வழங்கிய அருட்கொடையையும், அவன் உங்களுக்கு இறக்கிய வேதத்தையும் ஞானத்தையும் நினைத்துப் பாருங்கள். இதன் மூலம் அவன் உங்களுக்கு அறிவுரை கூறுகின்றான். மேலும் அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். அல்லாஹ் எல்லாவற்றையும் நன்கறிவான் என்பதையும் தெரிந்து கொள்ளுங்கள். ரு29
- நீங்கள் பெண்களுக்கு மணவிலக்குக் கொடுத்து, அவர்கள் தங்கள் தவணையை136 முழுமை செய்து விட்டால், அவர்கள் நல்லமுறையில் ஒருவரையொருவர் விரும்பினால், தம்முடைய கணவர்களை மணந்து கொள்வதிலிருந்து நீங்கள்137 அவர்களைத் தடை செய்யாதீர்கள். உங்களுள் அல்லாஹ்விடத்தும் இறுதிநாளிடத்தும் நம்பிக்கைக் கொள்பவருக்கு இது அறிவுரையாகும். இது உங்களுக்கு மிக்க அருளையும் மிக்க தூய்மையையும்138 வழங்கக் கூடியதாகும் (என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்). மேலும் அல்லாஹ் அறிவான்; நீங்கள் அறியமாட்டீர்கள்.
- மேலும் தாய்மார்கள் தம் குழந்தைகளுக்கு இரண்டு வருடங்கள் முழுவதும் பாலூட்ட வேண்டும். (இது) பாலூட்டுவதை முழுமைப் படுத்த விரும்புகின்றவருக்கு (உரியதாகும்). (தாய்மார்களுக்கு) அவர்களுக்குரிய நியாயமான139 உணவு, உடை140 ஆகியவற்றிற்கான பொறுப்பு (குழந்தையின்) தந்தையைச் சாரும். எந்த மனிதன் மீதும்141 அவனுடைய தகுதிக்கு அப்பாற்பட்ட பொறுப்பு சுமத்தப் பட மாட்டாது. எந்தத் தாயையும் தன் குழந்தையின் காரணமாகத் (தந்தை) துன்புறுத்தக் கூடாது. எந்தத் தந்தையையும் தன் குழந்தையினால் (தாய்) துன்புறுத்தக் கூடாது.142 அவ்வாறே (செய்வது) வாரிசுக்கும் (கடமையாக) உள்ளது. அவ்விருவரும் தம்முள் உடன்பட்டு கலந்து ஆலோசனை143 செய்து பாலூட்டுவதை நிறுத்திக் கொள்ள விரும்பினால் (அதனால்) அவர்களுக்கு எந்த குற்றமுமில்லை. நீங்கள் உங்கள் குழந்தைகளுக்குச் செவிலித்தாய் மூலம் பாலூட்ட விரும்பி, நீங்கள் வழங்க ஒப்புக் கொண்டதனை நியாயமான முறையில் நிறைவேற்றினால், உங்கள் மீது எந்தக் குற்றமுமில்லை. அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நீங்கள் செய்வதை, நிச்சயமாக அல்லாஹ் பார்க்கின்றான் என்பதையும் தெரிந்து கொள்ளுங்கள்.
- மேலும் உங்களுள் எவர் மரணமடைந்து (தமக்கு பின்னால்) மனைவியர்களை விட்டு செல்கின்றனரோ அவர்(களுடைய மனைவியர்)கள், தம்மைத் தாமே நான்கு மாதங்களும் பத்து (நாட்களும்) வரையிலும் காத்திருக்க வேண்டும். பின்னர் அவர்கள் தம்முடைய குறிப்பிட்டத் தவணையை நிறைவு செய்துவிட்டால், அவர்கள் தம் பொருட்டு நல்லமுறையில் எதைச் செய்தாலும் ,அதனால் உங்கள் மீது எக்குற்றமுமில்லை. நீங்கள் செய்வதை அல்லாஹ் தெரிந்து கொள்ளக் கூடியவனேயாவான்.
- மேலும் (இத்தகு) பெண்களை மணந்து கொள்வதற்கான விண்ணப்பம் சம்பந்தமான எந்தச் செய்தியினையும், சைகை மூலம் நீங்கள் (அவர்களிடம்) கூறுவதிலோ, உங்கள் உள்ளங்களில் வைத்துக் கொள்வதிலோ உங்கள் மீது எக்குற்றமுமில்லை. நீங்கள் கட்டாயம் அவர்களை நினைப்பீர்கள் என்பதை அல்லாஹ் அறிவான். எனினும் நீங்கள் அவர்களிடம் ஏதாவது நல்லதைக் கூறிக் கொள்ளலாமே தவிர, நீங்கள் அவர்களுடன் இரகசியமாக (எந்த) உடன்படிக்கையும் செய்து கொள்ளக் கூடாது.144 (இத்தாவிற்கான) குறிப்பிடப்பட்ட காலம் முடிவதற்கு முன்னால், நீங்கள் திருமணப் பந்தத்திற்காக முடிவு எடுக்காதீர்கள். மேலும் உங்கள் உள்ளங்களிலுள்ளதை அல்லாஹ் அறிவான் என்பதை தெரிந்து கொள்ளுங்கள். எனவே, நீங்கள் அதற்கு (அவ்விஷயத்திற்கு)ப் பயந்து கொள்ளுங்கள். அல்லாஹ் மிக்க மன்னிப்பவனும் சகித்துக் கொள்பவனுமாவான் என்பதையும் தெரிந்து கொள்ளுங்கள்.ரு30
- நீங்கள் பெண்களைத் தொடாமலோ145 அவர்களுக்கு மஹரை முடிவு செய்யாமலோ146 இருக்கும்பொழுது, நீங்கள் அவர்களுக்கு மணவிலக்கு (தலாக்கு)க் கொடுத்தால், (அதனால்) உங்கள் மீது குற்றமில்லை. நீங்கள் நன்முறையில் அவர்களின் வாழ்க்கைக்கு வேண்டியவற்றுள் சிறிது வழங்குங்கள்.147 செல்வன் தன் தகுதிக்கு ஏற்பவும், ஏழை தன் தகுதிக்கு ஏற்பவும் வழங்க வேண்டும். நல்லவர்களுக்கு இது கடமையாகும்.
- மேலும் நீங்கள் அவர்களுக்கு மஹரை முடிவு செய்து விட்டு, அவர்களை தொடுவதற்கு முன்னரே அவர்களுக்கு மணவிலக்கு கொடுத்து விட்டால், (பெண்ணாகிய) அவர்கள் மன்னித்தால் அன்றி அல்லது எவருடைய கையில் திருமணம் பந்தம் உள்ளதோ அவர்148 மன்னித்தாலன்றி, நீங்கள் முடிவு செய்த மஹரில் சரிபாதியை கொடுக்க வேண்டும். மேலும் நீங்கள் மன்னித்து விடுவதே, இறையச்சத்திற்கு மிகவும் நெருங்கியதாகும். நீங்கள் (இவ்விவகாரங்களில்) ஒருவருக்கொருவர் நன்மை செய்ய மறந்து விட வேண்டாம். நிச்சயமாக நீங்கள் செய்வதை அல்லாஹ் பார்க்கின்றான் (என்பதை நினைவில் கொள்ளுங்கள்).
- நீங்கள் (எல்லாத்) தொழுகைகளிலும் (சிறப்பாக) நடுத்தொழுகையிலும் (அவற்றை நிலை நாட்ட) முழுக் கவனம் செலுத்துங்கள்.149 அல்லாஹ்வின் முன்னிலையில் பணிவுடன் நில்லுங்கள்.
- நீங்கள் (ஆபத்து வரும் என) அஞ்சினால், நடந்து கொண்டோ, (வாகனத்தில்) சவாரி செய்து கொண்டோ (தொழுது கொள்ளுங்கள்.) பின்னர் உங்களுக்கு அச்சம் தீர்ந்து விட்டால், அல்லாஹ்வை நினைவுக் கூருங்கள். ஏனென்றால், நீங்கள் இதற்கு முன் அறியாமலிருந்தவற்றை(யெல்லாம்) அவன் உங்களுக்கு கற்பித்துள்ளான்.
- மேலும் உங்களுள் எவர்கள் மரணம் அடைந்து மனைவியர்களை விட்டு செல்கின்றனரோ அவர்கள், தங்கள் மனைவியர்களுக்கு ஓராண்டு வரை பயனளிப்பதற்காக, அதாவது அவர்களை (இல்லங்களிலிருந்து) வெளியேற்றாமல் இருப்பதற்காக வஸிய்யத்150 (என்னும் இறுதி விருப்பம்) செய்ய வேண்டும். ஆனால் அப்பெண்கள் (தாமாகவே) சென்று விடுவார்களாயின், அவர்கள் தமக்காக விரும்பத்தக்கதைச்151 செய்வதில் உங்கள் பேரில் குற்றமுமில்லை. மேலும் அல்லாஹ் வல்லவனும் நுண்ணறிவுடையோனுமாவான்.
- மேலும் (தனது) சூழ்நிலைக்கேற்ப152 மணவிலக்கு கொடுக்கப்பட்ட பெண்களுக்கு வாழ்க்கைக்குரிய சிலப் பொருட்களை153 கொடுப்பது அவசியமாகும். இறையச்சமுடையவர்களுக்கு இது கட்டாயமாகும்.
- நீங்கள் விளங்கிக் கொள்வதற்காக அல்லாஹ் தன் கட்டளைகளை154 இவ்வாறு உங்களுக்கு விளக்குகிறான். ரு31
- மரணத்திற்கு அஞ்சி தமது இல்லங்களிலிருந்து வெளியேறிய155 ஆயிரக்கணக்கானவர்களைப் பற்றிய செய்தி உமக்கு கிடைக்கவில்லையா? அப்போது அல்லாஹ் அவர்களிடம் நீங்கள் மரணமடைந்து விடுங்கள்156 என்றான். இதற்குப் பின்னர் அவன் அவர்களுக்கு உயிர் கொடுத்தான். நிச்சயமாக அல்லாஹ், மக்களுக்கு அருள் செய்பவனாவான். ஆனால் , பெரும்பாலார் நன்றி செலுத்துவதில்லை.
- மேலும் நீங்கள் அல்லாஹ்வின் வழியில் போரிடுங்கள். மேலும் அல்லாஹ், நன்கு கேட்பவனும் நன்கு அறிபவனுமாவான் என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள்.
- அல்லாஹ்விற்கு தனது செல்வத்திலிருந்து ஒரு நல்ல பகுதியை பிரித்துக் கொடுப்பவர் எவர்?157 அதன் காரணமாக, அவன் அதனை அவருக்குப் பெருமளவில் பன்மடங்காகப் பெருக்குவான் (என்பது அல்லாஹ்வின் நடைமுறையாகும்). மேலும் அல்லாஹ் (அடியாரின் பொருளைப்) பெற்றுக் கொண்டு, பெருகச் செய்கிறான். (இறுதியாக) நீங்கள் அவனிடமே திரும்பவும் கொண்டு செல்லப்படுவீர்கள்.
- மூஸாவிற்கு பின்னர் தோன்றிய இஸ்ராயீல் மக்களின் தலைவர்களைப் பற்றி நீர் கேள்விப்படவில்லையா? அவர்கள் தங்களுடைய ஒரு நபியிடத்தில்158 நாங்கள் அல்லாஹ்வின் வழியில் போர் புரிவதற்காக எங்களுக்கு மன்னர் ஒருவரை ஏற்படுத்துவீராக என்று கேட்டார்கள். அப்போது அவர், உங்களுக்கு போர் கடமையாக்கப்பட்டால் நீங்கள் போர் புரிய மாட்டீர்கள் அல்லவா? என்றார். இதற்கு அவர்கள், நாங்கள் எம்முடைய இல்லங்களிலிருந்து வெளியேற்றப்பட்டோம். எம்முடைய ஆண்மக்களிலிருந்து (பிரிக்கப்பட்டோம்). இவ்வாறான நிலையில் நாங்கள் அல்லாஹ்வின் பாதையில் போர் புரியாமல் இருப்பதற்கு, எங்களுக்கு என்ன நேர்ந்து விட்டது? என்றார்கள். ஆனால் அவர்களுக்கு போர் கடமையாக்கப்பட்ட போது, அவர்களுல் சிலரைத் தவிர (ஏனைய) எல்லோரும் திரும்பி விட்டனர். மேலும் அல்லாஹ் அநீதியிழைப்பவர்களை நன்றாக அறிகின்றான்.
- மேலும் அவர்களின் நபி அவர்களிடம், அல்லாஹ் உங்களுக்கு தாலூத்தை159 (கிதியோனை) மன்னராக்கியுள்ளான் என்றார். இதற்கு அவர்கள், அவரைவிட நாங்களே ஆட்சிக்கு மிகவும் உரியவர்களாய் விளங்கும்போது, அவர் எங்களை எவ்வாறு ஆள முடியும்? அவருக்குப் பெரும் பொருள் வளமும் வழங்கப்படவில்லையே என்றனர். நிச்சயமாக அல்லாஹ், அவருக்கு உங்களை விடவும் சிறப்பினை வழங்கி, அவருக்கு பெரும் ஞானத்தையும், உடல் வலிமையையும் மிகுதியாக வழங்கியுள்ளான் என்று அவர் கூறினார். மேலும் அல்லாஹ், தான் விரும்புகின்றவருக்குத் தன் ஆட்சியினை வழங்குகின்றான். மேலும் அல்லாஹ் தாராளமாக வழங்கக் கூடியவனும், நன்கு அறியக் கூடியவனும் ஆவான்.
- மேலும் அவர்களின் நபி அவர்களிடம், அவரது ஆட்சிக்கு, உங்களுக்குக் ஒரு தாபூத்160 கிடைப்பதே அடையாளமாகும். அதில் உங்கள் இறைவனிடமிருந்து அமைதியும், மூஸாவின் குடும்பத்தினர், ஹாரூனின் குடும்பத்தினர் ஆகியோர் விட்டுச் சென்றவற்றுள் எஞ்சியவையும் இருக்கும். அதனை வானவர்கள் சுமந்து கொண்டிருப்பர் என்றார். நீங்கள் நம்பிக்கை கொண்டவர்களாயின், இதில் உங்களுக்கு நிச்சயமாக ஓர் அடையாளம் உள்ளது. ரு32
- பின்னர் தாலூத் தமது படைகளுடன் புறப்பட்டபோது, அவர் ஒரு நதியின்161 மூலம் நிச்சயமாக அல்லாஹ் உங்களைச் சோதிப்பான். எனவே எவன் அ(ந்த ந)தி(யி)லிருந்து வயிறு நிரம்பத் தண்ணீர் அருந்துவானோ அவன் என்னைச் சார்ந்தவன் அல்லன். தன் கையினால் ஒரு கையளவு தண்ணீர் தவிர (அதிகமாக) நீர் அருந்தாதவன், நிச்சயமாக என்னைச் சார்ந்தவன் என்று கூறினார். ஆனால் அவர்களுள் ஒரு சிலரைத் தவிர (மற்றெல்லாரும்) அதிலிருந்து (நீரை) அருந்திவிட்டனர். பிறகு அவரும் அவருடன் நம்பிக்கைக் கொண்டவர்களும் அந்த நதியினை கடந்து சென்ற போது ஜாலூத்தையும் அவனுடைய படைகளையும் இன்று எதிர்ப்பதற்கான சக்தி எங்களுக்கு இல்லை என்று அவர்கள் கூறினார்கள். (ஆனால்) அல்லாஹ்வை (ஒருநாள்) சந்திப்போம் என உறுதி கொண்டோர், எத்தனையோ சிறிய கூட்டத்தினர்கள், அல்லாஹ்வின் கட்டளையினால் பெருங்கூட்டத்தினரை வென்றுள்ளனர்; அல்லாஹ் பொறுமையாளர்களுடன் இருக்கின்றான் என்று கூறினர். (எனவே அஞ்சத் தேவையில்லை).
- அவர்கள் ஜாலூத்திடமும் அவனுடைய படைகளிடமும் (போரிடச்) சென்ற போது அவர்கள்: எங்கள் இறைவா! எங்களுக்குச் சகிப்புத்தன்மையைத் தந்தருள்வாயாக, மேலும் (போர்க்களத்தில்) எங்கள் பாதங்களை உறுதிப்படுத்துவாயாக; மேலும் நிராகரிப்பவர்களுக்கு எதிராக எங்களுக்கு உதவி செய்வாயாக என்று கூறினர்.
- (அவர்கள் போரில் குதித்து) பின்னர் அல்லாஹ்வின் கட்டளையினால், அவர்கள் அவர்களைத் தோற்கடித்தனர். தாவூத், ஜாலூத்தை கொன்றார்.162 மேலும் அல்லாஹ் அவருக்கு ஆட்சியையும் நுட்ப ஞானத்தையும் வழங்கினான். தான் நாடியவற்றை எல்லாம் அவன் அவருக்குக் கற்றுக் கொடுத்தான். அல்லாஹ் மக்களுள் சிலரை சிலரைக் கொண்டு (தீமையிலிருந்து) விலக்கி வைக்காமல் இருந்தால், பூமி குழப்பத்திற்குள்ளாகியிருக்கும். ஆனால், அல்லாஹ் எல்லா இன மக்களுக்கும் மிகுந்த அருள் செய்பவன்.
- இவை அல்லாஹ்வின் வசனங்கள். நீர் உண்மையில் (நிலைத்து) இருக்கும் நிலையில், நாம் இவற்றை உமக்குப் படித்துக் காட்டுகிறோம். நிச்சயமாக, நீரும் தூதர்களுள் ஒருவர்.
- இவர்களே அத்தூதர்கள். நாம் இவர்களுள் சிலருக்கு, மற்றவர்களை விட மேன்மையை வழங்கியுள்ளோம். இவர்களுள் சிலருடன் அல்லாஹ் சிறப்பாகப் பேசியுள்ளான்.163 இவர்களுள் சிலரின் பதவியை உயர்த்தியுள்ளான். நாம் மர்யமின் மகன் ஈஸாவுக்கு மிகத் தெளிவான சான்றுகளை வழங்கி, தூய ஆவியின் மூலம் அவருக்கு வலிமையையும் அளித்துள்ளோம். அல்லாஹ் விரும்பியிருந்தால், அவர்களுக்குப் பின்னுள்ளவர்கள் தங்களிடம் தெளிவான அடையாளங்கள் வந்த பின்னரும், தங்களுக்குள் சண்டையிட்டிருக்க மாட்டார்கள். ஆனால் அவர்கள் கருத்து வேறுபாடு கொண்டனர். அவர்களுல் சிலர் நம்பிக்கைக் கொண்டனர். மற்றும் சிலர் நிராகரித்தனர். அல்லாஹ் விரும்பியிருந்தால், அவர்கள் தங்களுக்குள் சண்டையிட்டிருக்க மாட்டார்கள். ஆனால் அல்லாஹ், தான் நாடியதையே செய்கின்றான். ரு33
- நம்பிக்கை கொண்டவர்களே! எவ்வித கொடுக்கல் வாங்கலும், நட்பும் பரிந்துரையும் இல்லாத அந்நாள் வருவதற்கு முன்னர், நாம் உங்களுக்கு வழங்கியதிலிருந்து செலவு செய்யுங்கள். மேலும் நிராகரிப்பவர்கள் (தங்களுக்கே) அநீதியிழைப்பவர்களாவர்.
- அல்லாஹ்-அவனைத் தவிர வணக்கதிற்குரியவர் (வேறு) எவரும் இலர். (அவன்) என்றென்றும் உயிருடன் இருப்பவன். (தானாகவே) நிலைத்திருப்பவன்.164 (மற்றெல்லாவற்றையும்) நிலைத்திருக்கச் செய்பவன், சிற்றுறக்கமும், உறக்கமும் அவனைப் பற்றுவதில்லை. வானங்களிலும், பூமியிலும் உள்ளவை (அனைத்தும்) அவனுக்கே உரியன. அவனது அனுமதியின்றி அவனிடத்தில் பரிந்துரை செய்பவர் எவர்? அவர்களுக்கு முன்னுள்ளவை, அவர்களுக்குப் பின்னுள்ளவை (எல்லாவற்றையுமே) அவன் அறிகின்றான். அவனுடைய விருப்பமின்றி அவனுடைய ஞானத்திலிருந்து எதனையும் அவர்களால் பெற இயலாது. அவனுடைய ஞானம்165 வானங்களிலும், பூமியிலும் பரவியிருக்கின்றது. அவற்றைப் பாதுகாப்பது, அவனைச் சோர்வுக்குள்ளாக்குவதில்லை. அவன் உயர்தகுதியுடையோனும்,166 மகத்துவமிக்கோனுமாவான்.
- மார்க்கத்தில் எவ்வித கட்டாயாமும் (ஆகுமானதும்) இல்லை. (ஏனென்றால்) நிச்சயமாக நேர்வழிக்கும் தவறான வழிக்கும் இடையிலுள்ள வேறுபாடு, மிகத் தெளிவாகி விட்டது. எனவே நன்மையைச் செய்ய விடாது தடுக்கக் கூடியவனை167 நிராகரித்து, அல்லாஹ்வின் மீது நம்பிக்கைக் கொள்கிறவர் அறுந்துவிடாத மிகவும் உறுதியுள்ள நம்பத் தகுந்த168 ஒன்றை வலுவாகப் பற்றிக் கொண்டார். மேலும் அல்லாஹ், நன்கு செவியேற்பவனும் நன்கு அறிபவனுமாவான்.
- அல்லாஹ் நம்பிக்கை கொண்டவர்களுக்கு நண்பனாவான். அவன் அவர்களை இருள்களிலிருந்து வெளியேற்றி ஒளியிடத்து கொண்டு செல்கின்றான். நிராகரிப்பவர்களின் நண்பர்கள், நன்மையைச் செய்ய விடாது தடுப்பவர்கள் ஆவர். இவர்கள் அவர்களை ஒளியிலிருந்து வெளியேற்றி இருள்களிடத்துக் கொண்டு செல்வார்கள். அவர்கள் நெருப்பிற்குரியவர்கள். அவர்கள் அதிலேயே நெடுங்காலம் இருப்பார்கள்.ரு34
- அல்லாஹ் இப்ராஹீமுக்கு ஆட்சியினை வழங்கினான் என்பதனால், அவருடன் அவருடைய இறைவனைக் குறித்து விவாதம்169 செய்தவனைப் பற்றி நீர் கேள்விப்பட்டதில்லையா? இப்ராஹீம் (அவனிடம்): எனது இறைவன் உயிர்கொடுப்பவனும் மரணத்தைக் கொடுப்பவனுமாவான் என்று சொன்ன போது அவன்: நா(னும்தா)ன் உயிர் கொடுக்கின்றேன்; மரணத்தையும் கொடுக்கின்றேன் என்றான். (அவ்வாறாயின்) அல்லாஹ் சூரியனை கிழக்கிலிருந்து கொண்டு வருகின்றான், நீ அதனை மேற்கிலிருந்து கொண்டு வா என்று இப்ராஹீம் கூறினார். இதனால் நிராகரித்தவன் வாயடைத்து போனான். மேலும் அல்லாஹ் அநீதியிழைக்கும் மக்களுக்கு நேர்வழி காட்டமாட்டான்.
- அல்லது கூரை கீழே விழுந்து கிடந்த170 ஒரு நகரத்தின்171 வழியாகச் சென்றவரைப் போல்; (ஆன ஒருவரைப் பற்றி நீர் கேள்விப்பட்டதில்லையா?) அவர் இதன் அழிவிற்குப் பின்னர், இதனை அல்லாஹ் எப்போது உயிர்ப்பிப்பான் என்று கூறினார். பிறகு அல்லாஹ் அவரை நூறு ஆண்டுகளுக்கு (கனவில்) மரணித்தவராக ஆக்கினான். பின்னர் அவரை எழுப்பி, நீர் எவ்வளவு காலம் (இந்நிலையில்) இருந்தீர் எனக் கேட்டான். இதற்கு அவர், ஒரு நாள் அல்லது ஒரு நாளின் சிறு பகுதி, நான் (இந்நிலையில்) இருந்தேன் என்றார். அதற்கு அவன், (இதுவும் சரிதான்). ஆனால், நீர் (இந்நிலையில்) நூறு ஆண்டுகள் இருந்தீர். எனவே நீர் உமது உணவையும், உமது குடி நீரையும் பாரும். அது கெட்டுப் போகவில்லை. மேலும் உமது கழுதையைப் பாரும். (மேலும் இவை இரண்டும் சீராக இருப்பதைக் கண்டு, உமது கருத்தும் சரியானதுதான் என்பதைப் புரிந்து கொள்வீராக.) நாம் உம்மை மக்களுக்கு ஓர் அடையாளமாக ஆக்குவதற்காக (இவ்வாறு செய்துள்ளோம்). மேலும், எலும்புகளைச் சீராக இணைத்த பின்னர் அவற்றின் மீது தசையைப் போர்த்தியுள்ளோம் என்பதையும் பாரும் என்றான். எனவே, அவருக்கு இது தெளிவாகிய போது, அவர் அல்லாஹ் எல்லாவற்றிற்கும் ஆற்றல் பெற்றவன் என்பதை நான் அறிகிறேன் என்றார்.
- மேலும் இப்ராஹீம், என் இறைவா! நீ மரணமடைந்தவர்களுக்கு எவ்வாறு உயிர் கொடுக்கின்றாய் என்பதை எனக்குக் காட்டுவாயாக என்று சொன்ன நேரத்தையும் (நினைத்துப் பாருங்கள்) (அதற்கு இறைவன்) நீர் நம்பவில்லையா? என்று கேட்டான். (இதற்கு இப்ராஹீம்) ஏனில்லை? ஆயினும், என் மன நிறைவுக்காக (இக்கேள்வியைக் கேட்டேன்) என்றார். (அப்போது இறைவன்) நீர் நான்கு பறவைகளைப் பிடித்து அவற்றைப் பழக்கிக் கொள்ளும்.172 பின்னர் அவற்றுள் ஒ(வ்வொ)ரு பகுதியை173(யும்) ஒவ்வொரு மலையின் மீது வைத்து விட்டு அவற்றை அழையும். அவை விரைவாக174 உம்மிடம் வந்து சேரும். மேலும் அல்லாஹ் வல்லமையுள்ளவனும், நுட்பமான ஞானமுள்ளவனுமாவான் என்பதை நீர் அறிந்து கொள்வீராக என்று கூறினான்.ரு35
- தங்கள் செல்வங்களை அல்லாஹ்வின் வழியில் செலவிடுகின்றவர்களுக்கு ஒரு தானியம் உதாரணமாகும். அது ஏழு கதிர்களை முளைப்பிக்கும். ஒவ்வொரு கதிரிலும், நூறு தானியங்கள் இருக்கும். மேலும் அல்லாஹ், தான் நாடியவருக்கு அதிக(மதிக)மாகக் கொடுக்கின்றான். மேலும் அல்லாஹ் தாராளமாகக் கொடுப்பவனும், மிக்க அறிபவனுமாவான்.
- தங்கள் செல்வங்களை அல்லாஹ்வின் வழியில் செலவிட்டுப், பின்னர் தாம் செலவு செய்தது குறித்து எவ்வகையிலும் உபகாரத்தை நினைவூட்டாமலும், எவ்விதத்திலும் துன்பத்தைக் கொடுக்காமலும் இருப்போருக்கு, அவர்களின் கூலி அவர்களின் இறைவனிடம் உண்டு. மேலும் அவர்களுக்கு எவ்வித அச்சமும் ஏற்படாது; மேலும் அவர்கள் கவலையடையவும் மாட்டார்கள்.
- எந்த தருமத்தை கொடுத்து விட்டு துன்பம் பின் தொடருமோ அதை விட இன்சொல்லும், மன்னித்தலும் சிறந்தவையாகும். மேலும் அல்லாஹ், தன்னிறைவு பெற்றவனும், சகித்துக் கொள்பவனுமாவான்.
- நம்பிக்கைக் கொண்டவர்களே! மக்களுக்குக் காட்டுவதற்காகத் தனது செல்வங்களை செலவு செய்கின்றவரையும், அல்லாஹ்விடத்தும், மறுமை நாளிடத்தும், நம்பிக்கை கொள்ளாதவரையும் போன்று நீங்கள் உபகாரத்தை நினைவூட்டியும், துன்பங் கொடுத்தும் உங்கள் தருமங்களை வீணாக்காதீர்கள். ஏனெனில், அவனது உதாரணம் ஒரு கல்லுக்கு ஒப்பானது. அதன் மீது சிறிது மண் படிந்திருக்க, பெரும் மழை பெய்து அதை வழுவழுப்பான வெறுங்கல்லாக ஆக்கி விட்டது. இ(த்தகைய)வர்கள் சம்பாதிப்பதில் ஒரு சிறிதும் அவர்களின் கைக்கு எட்டுவதில்லை. மேலும் அல்லாஹ் இத்தகு நிராகரிப்பவர்களுக்கு (வெற்றிற்குரிய) வழியை காட்டுவதில்லை.
- தங்களுடைய செல்வங்களை அல்லாஹ்வின் திருப்திககளைப் பெறவும், தங்களைத் தாங்களே உறுதிப்படுத்திக் கொள்ளவும் செலவு செய்பவர்களின் உதாரணம், உயரமான இடத்திலுள்ள ஒரு தோட்டத்திற்கு ஒப்பானது. அதன் மீது பெருமழை பொழிகின்ற போது, அது தனது கனியை இரு மடங்காகத் தருகின்றது. மேலும் அதன்மீது பெருமழை பெய்யவில்லையாயினும், மிகவும் குறைவான மழையே (அதற்குப் போதுமானது). நீங்கள் செய்து கொண்டிருப்பதை அல்லாஹ் பார்த்துக் கொண்டிருக்கின்றான்.
- தனக்குக் கீழே ஆறுகள் ஓடுகின்ற, பேரீச்சைகளையும் திராட்சைகளையுங்கொண்ட ஒரு தோட்டம் உங்களுள் ஒருவனுக்கு இருந்து, அதிலிருந்து அவனுக்கு எல்லா வகையான கனிகளும் கிடைத்து, முதுமையும் அவனை வந்தடைந்து, அவனுக்குச் (சின்னஞ்) சிறு குழந்தைகளும் இருந்து பின்னர் அத்தோட்டத்தில் நெருப்புக் காற்று வீசி அது எரிந்து விடுவதை அவன் விரும்புவானா? நீங்கள் சிந்தித்துச் செயல்பட அல்லாஹ் உங்களுக்காக கட்டளைகளை இவ்வாறு விளக்குகின்றான். ரு36
- நம்பிக்கை கொண்டவர்களே! நீங்கள் சம்பாதித்ததிலிருந்தும், நாம் உங்களுக்காக பூமியிலிருந்து வெளியாக்கியவற்றிலிருந்தும் தூய்மையானவற்றை செலவு செய்யுங்கள். பயனற்றதும், நீங்கள் செலவிடுகின்றதும், ஆனால் நீங்களே கண்மூடியவர்களாக அல்லாமல் பெற்றுக் கொள்ள விரும்பாததுமான பொருட்களை (தருமத்திற்காக) நாடாதீர்கள். அல்லாஹ், (முற்றிலும்) தன்னிறைவு பெற்றவனும் பெரும் புகழுக்குரியோனுமாவான் என்பதையும் தெரிந்துக் கொள்ளுங்கள்.
- ஷய்த்தான் உங்களை வறுமைக்கு அஞ்சுமாறும், வெட்கக் கேடானதை உங்களுக்கு தூண்டவும் செய்கிறான். மேலும் அல்லாஹ்வோ தன்னிடமிருந்து ஒரு பெரும் மன்னிப்பையும், பேரருளையும் உங்களுக்கு வாக்களிக்கின்றான். மேலும் அல்லாஹ் தாராளமாகக் கொடுப்பவனும், நன்கு அறிபவனுமாவான்.
- தான் விரும்புவோருக்கு அவன் ஞானத்தை வழங்குகின்றான். ஞானம் வழங்கப்பட்டோருக்கு, நிச்சயமாக மிக அதிக அளவில் நன்மை வழங்கப்பட்டு விட்டது. அறிவுடையோரைத் தவிர வேறு எவரும் அறிவுரை பெறுவதில்லை.
- நீங்கள் (இறைவனுக்காக) செலவு செய்வதையும், அல்லது நீங்கள் நேர்ந்து கொள்வதையும் நிச்சயமாக அல்லாஹ் அறிகின்றான். (அவன் அதற்கான நற்கூலியை நிச்சயம் வழங்குவான்). மேலும் அநீதி இழைப்பவர்களுக்கு உதவி செய்பவர் எவரும் இலர்.
- நீங்கள் தருமங்களை வெளிப்படையாக செய்தால், அது(வும்) மிகச் சிறந்ததேயாகும். நீங்கள் அவற்றை மறைவாக ஏழைகளுக்கு வழங்கினால், அது உங்களுக்கு மிக்க நன்றேயாகும். (இதனால்) அவன் உங்களுடைய (பல) தீமைகளை உங்களை விட்டும் நீக்கி விடுவான். மேலும் அல்லாஹ் நீங்கள் செய்வதை நன்கு அறிபவனாவான்.
- அவர்களை நேர்வழிக்குக் கொண்டு வருவது உமது பொறுப்பன்று. மாறாக, அல்லாஹ், தான் விரும்புவோருக்கு நேர்வழி காட்டுகின்றான். உங்கள் நல்ல175 செல்வத்திலிருந்து எதைச் செலவு செய்தாலும் அது உங்களுக்கே (நன்மை தரும்). நீங்கள் அல்லாஹ்வின் விருப்பத்தை நாடியல்லாமல் செலவு செய்வதில்லை. செல்வத்திலிருந்து நீங்கள் எதை செலவு செய்தாலும் அது முழுமையாக உங்களுக்குத் திருப்பித் தரப்படும். மேலும் உங்களுக்கு அநீதி இழைக்கப்பட மாட்டாது.
- அல்லாஹ்வின் வழியில் (பிற பணிகளின்றும்) தடை செய்யபட்டுள்ள176 பூமியில் சுற்றித் திரிய தகுதி அற்ற ஏழைகளுக்கே (அத்தருமங்கள் உரியவை). அவர்கள் (பிறரிடம்) யாசிக்காததால், அவர்களைத் தேவையற்றவர்களென அறிவீனர்கள் கருதுகின்றனர். அவர்களின் தோற்றத்திலிருந்து அவர்களை நீர் அறிந்து கொள்ளலாம். அவர்கள் மக்களிடம் கெஞ்சி கேட்கமாட்டார்கள். நீங்கள் செல்வத்திலிருந்து எதை செலவு செய்தாலும் நிச்சயமாக அல்லாஹ் அதனை நன்கறிகிறான். ரு37
- தங்களுடைய செல்வங்களை இரவிலும், பகலிலும், மறைமுகமாகவும், வெளிப்படையாகவும் (அல்லாஹ்வின் வழியில்) செலவு செய்பவர்களுக்கு, அவர்களின் இறைவனிடம் அவர்களுக்குரிய கூலி (பாதுகாக்கப்பட்டு) உள்ளது. அவர்களுக்கு எவ்வித அச்சமும் இல்லை. அவர்கள் கவலையடையவும் மாட்டார்கள்.
- வட்டியை விழுங்குகின்றவர்கள் ஷய்த்தானால் (அதாவது மன நோயால்) கடினமாக தாக்கப்பட்டவன் நிற்பது போலன்றி, நிற்கமாட்டார்கள். வணிகமும் முற்றிலும் வட்டியைப் போன்றதே அல்லாஹ் வணிகத்தை ஆகுமானதும், வட்டியை ஆகாததுமாக ஆக்கியிருக்கிறான் என அவர்கள் கூறுவதே இதற்குக் காரணம். தனது இறைவனிடமிருந்து ஏதாவது ஓர் அறிவுரை வந்த பின்னர் அதிலிருந்து தவிர்ந்து கொண்டால், அவர் முன்னர் செய்தது அவருக்கேயுரியது. அவருடைய பிரச்சினை அல்லாஹ்விடம்தான். மீண்டும் (அதே காரியத்தைத்) தொடர்ந்து செய்பவர்கள் நிச்சயமாக நெருப்பிற்கு உரியவர்கள் ஆவர். அவர்கள் அதிலேயே (நீண்ட காலம்) இருந்து கொண்டிருப்பர்.
- அல்லாஹ் வட்டியை அழிக்கின்றான். மேலும்177 தருமங்களை பெருகச் செய்கின்றான். மேலும் ஒவ்வொரு வன்மையாக மறுப்போரையும், பெரும் பாவிகளையும் அல்லாஹ் நேசிப்பதில்லை.
- நம்பிக்கைக் கொண்டு (பொருத்தமான) நற்செயல்களை செய்து, தொழுகையை நிலைநாட்டி, ஸகாத் கொடுத்தும் வருகின்றவர்களுக்கு நிச்சயமாக அவர்களுடைய இறைவனிடம் அவர்களுக்குரிய கூலி உண்டு. அவர்களுக்கு எவ்வித அச்சமும் இல்லை; மேலும் அவர்கள் கவலை அடையவும் மாட்டார்கள்.
- நம்பிக்கை கொண்டவர்களே! அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நீங்கள் நம்பிக்கை கொண்டவர்களாயின், வட்டியி(ன் கணக்கி)ல் எஞ்சியிருப்பதை விட்டு விடுங்கள்.
- நீங்கள் அவ்வாறு செய்யவில்லையாயின், அல்லாஹ்விடமிருந்தும் அவனது தூதரிடமிருந்தும் போரை உறுதி செய்து கொள்ளுங்கள். நீங்கள் (வட்டியை விட்டும்) பாவமன்னிப்புக் கோரினால் (அது அவ்வளவு இழப்புக்குரிய தன்று. ஏனெனில்) உங்களுடைய அசல் தொகைகளை நீங்கள் வசூலித்துக் கொள்ளலாம். (இவ்வகையில்) நீங்கள் (எவருக்கும்) அநீதி இழைக்க மாட்டீர்கள். உங்களுக்கும் அநீதி இழைக்கப்பட மாட்டாது.
- மேலும் கடன் பட்டவன் கஷ்டத்திலிருந்தால், பொருள் வசதி (கிடைக்கும்) வரை (அவனுக்குக்) காலக்கெடு அளிக்க வேண்டும். நீங்கள் அறிவுடையோராயின் (அசல் தொகையினைக் கூட அவனுக்கு) தருமமாகக் கொடுத்து விடுவது உங்களுக்கு மிகச் சிறந்ததாகும்.
- மேலும் நீங்கள் அல்லாஹ்விடம் திரும்பவும் கொண்டு செல்லப்படுகின்ற நாளுக்கு அஞ்சுங்கள். அப்பொழுது ஒவ்வொருவருக்கும் அவர் சம்பாதித்தது, முழுமையாக கொடுக்கப்படும். அவர்களுக்கு அநீதி இழைக்கப்பட மாட்டாது.ரு38
- நம்பிக்கை கொண்டவர்களே! உங்களுள் ஒருவர் மற்றவரிடம் ஒரு காலக் கெடுவைக் குறிப்பிட்டுக் கடன் வாங்கினால், அதனை எழுதிக் கொள்ளுங்கள். எழுதக் கூடியவர், உங்களுக்கிடையில் (தீர்மானிக்கப்பட்ட ஒப்பந்தத்தை) நீதத்துடன் எழுத வேண்டும். எழுதபவர், எழுதுவதற்கு மறுக்கக் கூடாது. ஏனென்றால் அல்லாஹ் அவருக்கு (எழுத)க் கற்றுக் கொடுத்துள்ளான். ஆகவே அவர் எழுத வேண்டும். எவர் மீது பொறுப்பு உள்ளதோ அவர் எழுதச் சொல்ல வேண்டும். அவர் (எழுதச் சொல்லும் போது) தன் இறைவனாகிய அல்லாஹ்வுக்கு அஞ்சி அதிலிருந்து எதையும் குறைக்காமல் இருக்க வேண்டும். எவர் மீது பொறுப்பு உள்ளதோ அவர், குறை மதி உடையவராகவோ, பலவீனராகவோ தாமாகவே எழுதச் சொல்ல இயலாதவராகவோ இருப்பின் , (அவருக்கு பதிலாக) அவருடைய பாதுகாவலர் நீதத்துடன் எழுதச் சொல்ல வேண்டும். நீங்கள் (இச்சந்தர்பத்தில்) உங்களுடைய ஆண்களில் இருவரைச் சாட்சிகளாக ஏற்படுத்திக் கொள்ளுங்கள். (சாட்சிக்கு) ஆண்கள் இருவர் இல்லாவிட்டால், சாட்சிகளாக இருப்பதற்கு நீங்கள் விரும்புவர்களுள் ஓர் ஆணையும், இரு பெண்களையும் (சாட்சிகளாக ஆக்கிக் கொள்ளுங்கள்). ஏனெனில் இருவருள் ஒருத்தி மறந்து விட்டால் மற்றொருத்தி நினைவூட்டுவாள். சாட்சிகள் அழைக்கப்பட்டால், அவர்கள் மறுக்கக்கூடாது. (தொகை) சிறிதோ, பெரிதோ அதற்குரிய தவணையுடன் அதனை எழுதிக் கொள்வதில் நீங்கள் சோம்பி இருந்து விடாதீர்கள். இது அல்லாஹ்விடத்து மிக்க நீதமுள்ளதாகவும், சாட்சியத்தை உறுதியாக வைத்துக் கொள்வதற்காகவும், நீங்கள் ஐயங்கொள்ளாதிருப்பதற்குப் பக்கபலமாகவும் உள்ளது. (எனவே எழுதிக் கொள்வது இன்றியமையாதது). ஆனால் உங்களுக்கிடையே நடப்பது ரொக்க வணிகமாக இருந்தால், அதனை எழுதிக் கொள்ளாமல் இருப்பது உங்கள் மீது குற்றமில்லை.178 மேலும் உங்களுக்கிடையே கொடுக்கல் வாங்கல்179 செய்து கொண்டால், சாட்சிகளை ஏற்படுத்திக் கொள்ளுங்கள். எழுதுபவருக்கும், சாட்சிக்கும் தீங்கு செய்தல் கூடாது. மேலும் நீங்கள் (அவ்வாறு) செய்தால், அது உங்களின் கட்டுப்படாமை(யின் அறிகுறி) ஆகும். மேலும் நீங்கள் அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். மேலும் அல்லாஹ் உங்களுக்கு ஞானத்தை வழங்குவான். மேலும் அல்லாஹ் எல்லாவற்றையும் நன்கு அறிபவனாவான்.
- மேலும், நீங்கள் பயணம் செய்து கொண்டிருக்கும்போது, உங்களுக்கு எழுதுபவர் கிடைக்கவில்லையென்றால், (அச்சமயம்) அடமானமாகப் பொருளை பெற்றுக் கொள்ள வேண்டும். எனவே உங்களுள் ஒருவர், மற்றொருவரிடம் ஒரு பொருளை நம்பி ஒப்படைத்தால், அப்பொருளை (கொடுத்தவர் கேட்கும்போது) பெற்றுக் கொண்டவர் திருப்பிக் கொடுக்க வேண்டும். தன் இறைவனாகிய அல்லாஹ்வுக்கு அஞ்ச வேண்டும். மேலும் நீங்கள் சாட்சியத்தை (ஒருபோதும்) மறைக்கக் கூடாது. அதை மறைப்பவரின் உள்ளம் நிச்சயமாக பாவத்திற்குள்ளாகிறது. மேலும் நீங்கள் செய்வதை அல்லாஹ் நன்கு அறிபவனாவான். ரு39
- வானங்களிலும் பூமியிலும் உள்ளவை(யாவும்), அல்லாஹ்விற்கே உரியன. உங்கள் உள்ளங்களிலுள்ளதை நீங்கள் வெளிப்படுத்தினாலும் அல்லது அதனை மறைத்து வைத்தாலும் அதைப்பற்றி அல்லாஹ் உங்களிடம் கணக்குக் கேட்பான். பின்னர், தான் நாடுபவனை மன்னித்து விடுவான். தான் நாடுபவனுக்குத் தண்டனை கொடுப்பான். மேலும் அல்லாஹ் எல்லாவற்றிற்கும் பேராற்றல் உடையவனாவான்.
- இத்தூதர் தம்முடைய இறைவனிடமிருந்து தனக்கு இறக்கப்பட்டதில் நம்பிக்கை கொண்டுள்ளார். (ஏனைய) நம்பிக்கையாளர்களும் (நம்பிக்கை கொண்டுள்ளனர்). இவர்களெல்லாரும் அல்லாஹ், அவனுடைய வானவர்கள், அவனது வேதங்கள் மற்றும் அவனுடைய தூதர்கள் மீதும் நம்பிக்கைக் கொண்டு, நாங்கள் அவனுடைய தூதர்களுள் எவருக்கிடையிலும் (எந்த) வேற்றுமை(யும்) பாராட்டுவதில்லை (எனக் கூறுகின்றனர்). மேலும், நாங்கள் அல்லாஹ்வின் கட்டளையை) செவியேற்றோம்; கட்டுப்பட்டோம். எங்கள் இறைவா! நாங்கள் உன் மன்னிப்பைக் கோருகின்றோம். உன்னிடமே (நாங்கள்) திரும்பி வர வேண்டியதுமிருக்கிறது என்றும் இவர்கள் கூறுகின்றனர்.
- அல்லாஹ் எவனுக்கும், அவனுடைய சக்திக்கு அப்பாற்பட்ட பொறுப்பைச் சுமத்துவதில்லை. அவன் சம்பாதித்த (நன்மையான)து அவனுக்கே; அவன் சம்பாதித்த (தீமையான)து அவனுக்கே. எங்கள் இறைவா! நாங்கள் மறந்து விட்டாலோ, தவறிழைத்தாலோ நீ எங்களைத் தண்டிக்காதிருப்பாயாக.180 எங்கள் இறைவா! எங்களுக்கு முன்னுள்ளவர்கள் மீது நீ பாரத்தைச்181 சுமத்தியது போன்று எங்கள் மீதும் நீ அதனைச் சுமத்தாதிருப்பாயாக. எங்கள் இறைவா! எங்களால் (சுமக்க) இயலாத (பாரத்)தை எங்கள் மீது சுமத்தாதிருப்பாயாக.182 எங்கள் (குற்றங்க)ளை மன்னிப்பாயாக; எங்களைப் பொறுத்தருள்வாயாக; எங்கள் மீது கருணை காட்டுவாயாக; நீயே எங்கள் எஜமானன்; ஆகவே, நிராகரிக்கும் கூட்டத்தினருக்கு எதிராக நீ எங்களுக்கு உதவி புரிவாயாக என்றும் அவர்கள் கூறுகின்றனர். ரு40