98- அல் பய்யினா

அதிகாரம்: அல் பய்யினா
அருளப்பெற்ற இடம்: மக்கா | வசனங்கள்: 9
பிரிவுகள்: 1

  1. அளவற்ற அருளாளனும், மேன்மேலும் கருணைகாட்டுபவனுமாகிய அல்லாஹ்வின் பெயரால் (ஓதுகின்றேன்).
  2. வேதத்தையுடையவர்கள், இறைவனுக்கு இணை வைப்பவர்கள் ஆகியவர்களுள் நிராகரிப்பவர்களிடம் தெளிவான சான்று வரும் வரை, தங்கள் தீமைகளிலிருந்து தவிர்ந்து கொள்பவர்களைச் சேர்ந்தவர்களாக அவர்கள் இருந்ததில்லை1.
  3. (அதாவது) தூய்மையான வேதங்களை (அவர்களுக்கு) ப் படித்துக் காட்டக்கூடியவராகிய, அல்லாஹ்விடமிருந்து ஒரு தூதர் (அவர்களிடம் வரும் வரை, தங்கள் தீமைகளிலிருந்து தவிர்ந்து கொள்பவர்களாக அவர்கள் இருந்ததில்லை).
  4. இதில் நிலைத்து நிற்கும் கட்டளைகள் உள்ளன2.
  5. வேதம் வழங்கப்பட்டவர்களிடம் தெளிவான சான்று வந்ததன் பின்னரே, அவர்கள் (பல்வேறு பிரிவுகளாகப்) பிரிந்துள்ளனர்3.
  6. உளப்பூர்வமாக அவனுக்குக் கீழ்ப்படிபவராக, வணக்கத்தை முற்றிலும் அவனுக்கே ஆக்கியவாறு அல்லாஹ்வை மட்டும் வணங்க வேண்டுமென்றும், தொழுகையை நிலைநாட்ட வேண்டுமென்றும், மேலும் ஸக்காத்து கொடுக்க வேண்டுமென்றுமே அவர்களுக்குக் கட்டளையிடப்பட்டது. இது, (என்றும் உண்மையில்) நிலைத்திருக்கும் மார்க்கமாகும்.
  7. நிச்சயமாக வேதத்தையுடையவர்கள், இறைவனுக்கு இணை வைப்பவர்கள் ஆகியவர்களுள் நிராகரிப்பவர்கள், நரக நெருப்பில் (நுழைபவர்களாக) இருப்பர். (அவர்கள்) அதில் நெடுங்காலம் வாழ்ந்து வருவர். அவர்களே படைப்புகளுள் மிக மோசமானவர்களாவர்.
  8. நிச்சயமாக நம்பிக்கை கொண்டு, நற்செயல்கள் செய்கின்றவர்களே படைப்புகளுள் மிகச்சிறந்தவர்களாவர்.
  9. அவர்களின் இறைவனிடத்தில் அவர்களுக்குரிய வெகுமதி, என்றென்றும் நிலைத்திருக்கும் தோட்டங்களாகும். அவற்றிற்கிடையே ஆறுகள் ஓடும். அவர்கள் அவற்றில் என்றென்றும் வாழ்ந்து வருவர். அல்லாஹ் அவர்களைப் பற்றித் திருப்தி கொண்டுள்ளான்; அவர்கள் அவனைப் பற்றியும் திருப்தி கொண்டுள்ளனர். அது, தமது இறைவனுக்கு அஞ்சி நடக்கின்றவருக்குரியதாகும். ரு1
Powered by Blogger.