அதிகாரம்: அல் பய்யினா
அருளப்பெற்ற இடம்:
மக்கா | வசனங்கள்: 9
பிரிவுகள்: 1
- அளவற்ற அருளாளனும், மேன்மேலும் கருணைகாட்டுபவனுமாகிய அல்லாஹ்வின் பெயரால் (ஓதுகின்றேன்).
- வேதத்தையுடையவர்கள், இறைவனுக்கு இணை வைப்பவர்கள் ஆகியவர்களுள் நிராகரிப்பவர்களிடம் தெளிவான சான்று வரும் வரை, தங்கள் தீமைகளிலிருந்து தவிர்ந்து கொள்பவர்களைச் சேர்ந்தவர்களாக அவர்கள் இருந்ததில்லை1.
- (அதாவது) தூய்மையான வேதங்களை (அவர்களுக்கு) ப் படித்துக் காட்டக்கூடியவராகிய, அல்லாஹ்விடமிருந்து ஒரு தூதர் (அவர்களிடம் வரும் வரை, தங்கள் தீமைகளிலிருந்து தவிர்ந்து கொள்பவர்களாக அவர்கள் இருந்ததில்லை).
- இதில் நிலைத்து நிற்கும் கட்டளைகள் உள்ளன2.
- வேதம் வழங்கப்பட்டவர்களிடம் தெளிவான சான்று வந்ததன் பின்னரே, அவர்கள் (பல்வேறு பிரிவுகளாகப்) பிரிந்துள்ளனர்3.
- உளப்பூர்வமாக அவனுக்குக் கீழ்ப்படிபவராக, வணக்கத்தை முற்றிலும் அவனுக்கே ஆக்கியவாறு அல்லாஹ்வை மட்டும் வணங்க வேண்டுமென்றும், தொழுகையை நிலைநாட்ட வேண்டுமென்றும், மேலும் ஸக்காத்து கொடுக்க வேண்டுமென்றுமே அவர்களுக்குக் கட்டளையிடப்பட்டது. இது, (என்றும் உண்மையில்) நிலைத்திருக்கும் மார்க்கமாகும்.
- நிச்சயமாக வேதத்தையுடையவர்கள், இறைவனுக்கு இணை வைப்பவர்கள் ஆகியவர்களுள் நிராகரிப்பவர்கள், நரக நெருப்பில் (நுழைபவர்களாக) இருப்பர். (அவர்கள்) அதில் நெடுங்காலம் வாழ்ந்து வருவர். அவர்களே படைப்புகளுள் மிக மோசமானவர்களாவர்.
- நிச்சயமாக நம்பிக்கை கொண்டு, நற்செயல்கள் செய்கின்றவர்களே படைப்புகளுள் மிகச்சிறந்தவர்களாவர்.
- அவர்களின் இறைவனிடத்தில் அவர்களுக்குரிய வெகுமதி, என்றென்றும் நிலைத்திருக்கும் தோட்டங்களாகும். அவற்றிற்கிடையே ஆறுகள் ஓடும். அவர்கள் அவற்றில் என்றென்றும் வாழ்ந்து வருவர். அல்லாஹ் அவர்களைப் பற்றித் திருப்தி கொண்டுள்ளான்; அவர்கள் அவனைப் பற்றியும் திருப்தி கொண்டுள்ளனர். அது, தமது இறைவனுக்கு அஞ்சி நடக்கின்றவருக்குரியதாகும். ரு1