5- அல்-மாயிதா

அதிகாரம் : அல்-மாயிதா
அருளப்பட்ட இடம் : மதீனா1 
வசனங்கள் : 121 | பிரிவுகள்: 16


  1. அளவற்ற அருளாளனும் மேன் மேலும் கருணை காட்டுபவனுமாகிய அல்லாஹ்வின் பெயரால் ( நான் ஓதுகின்றேன்.)
  2. நம்பிக்கையாளர்களே! (நீங்கள்) உடன்படிக்கைகளை நிறைவேற்றுங்கள். உங்களுக்கு(க் குர்ஆனில்) அறிவிக்கப்படுபவை நீங்கலாக, நாற்கால் விலங்குகள் உங்களுக்கு அனுமதிக்கப்பட்டிருக்கின்றன. ஆனால் நீங்கள் (இந்த அனுமதியின் காரணத்தால்) இஹ்ராம் (ஹஜ்ஜு செய்வதற்காக) உடையணிந்திருக்கும் நிலையில் வேட்டையாட அனுமதிக்கப்படவில்லை. நிச்சயமாக அல்லாஹ், தான் நாடுவதையே தீர்ப்பளிக்கின்றான்.
  3. நம்பிக்கையாளர்களே! அல்லாஹ்வினால் புனிதமாக்கப்பட்ட அடையாளங்களையும், தூய மாதத்தையும், (கஅபா ஆலயத்திற்கு) நேர்த்திக் கடனாக கொண்டு செல்லப்படும் விலங்குகளையும் அவ்வாலயத்தில் அறுப்பதற்கு அடையாளமாகக் கழுத்துப் பட்டை அணிவிக்கப்பட்டவைகளையும், தங்களின் இறைவனின் அருள் மற்றும் அவனுடைய விருப்பம் ஆகியவற்றைத் தேடி தூய ஆலயத்தினை நாடிச் செல்பவர்களையும் நீங்கள் இழிவுப்படுத்தாதீர்கள். நீங்கள் இஹ்ராமை (ஹஜ்ஜிற்குரிய உடையை) கலைந்து விட்டால் (தயக்கமின்றி) வேட்டையாடுங்கள். ஒரு சமுதாயத்தினர் உங்களை தூய பள்ளிக்குச் செல்ல விடாது தடுத்தார்கள் என்ற பகைமையினால் வரம்பு மீறாதீர்கள். நேர்மையிலும் இறையச்சதிலும் நீங்கள் ஒருவருக்கொருவர் உதவுங்கள். பாவம், வரம்பு மீறுதல் ஆகியவற்றில் ஒருவருக்கொருவர் உதவாதீர்கள். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ்வின் தண்டனை கடினமானது.
  4. தானாகச் செத்ததும், இரத்தமும், பன்றி இறைச்சியும், அல்லாஹ் அல்லாத (வேறொருவரின் அல்லது வேறொன்றின்) பெயர் கூறப்பட்டதும், கழுத்து நெருங்கி செத்ததும், அடிபட்டுச் செத்ததும், (உயரத்திலிருந்து) விழுந்து செத்ததும், கொம்பால் குத்தப்பட்டு செத்ததும், காட்டு விலங்கு தின்றவற்றில் (சாவதற்கு முன்னர்) நீங்கள் முறைப்படி அறுத்து விட்டதைத் தவிர உள்ளதும், (சிலையின்) பலிபீடத்தில் அறுக்கப்பட்டதும் உங்களுக்கு விலக்கப்பட்டுள்ளன. அம்பு எய்து பங்கை தெரிந்து கொள்வதும் (விலக்கப்பட்டுள்ளது). இது கட்டுப்படாமையாகும். நிராகரிப்போர் இன்று உங்கள் மார்க்கத்தி(ற்கு தீங்கு செய்வதி)ல் நம்பிக்கை இழந்து விட்டனர். எனவே நீங்கள் அவர்களுக்கு எஞ்ச வேண்டாம். எனக்க அஞ்சுங்கள். இன்று நான் உங்களுக்காக உங்கள் மார்க்கத்தை முழுமையாக்கியுள்ளேன். மேலும் உங்களுக்கு என் அருளை நிறைவு செய்துள்ளேன். மேலும் உங்களுக்கு மார்க்கமாக, இஸ்லாத்தைத் தேர்ந்தெடுத்துள்ளேன். ஆனால் பசியால் வாடியும், பாவத்தின் பக்கம் சாயாமலும் இருப்பவன் (விலக்கப்பட்டவற்றை) தின்றுவிட்டால்) நிச்சயமாக அல்லாஹ் மிக்க மன்னிப்பவனும், மேன்மேலும் கருணை காட்டுபவனுமாவான் (என்பதை நினைவில் கொள்ளுங்கள்).
  5. தங்களுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது யாது என்று (முஸ்லிம்கள்) உம்மிடம் வினவுகின்றனர். நீர் கூறுவீராக. தூய்மையான பொருள்கள்2 எல்லாம் உங்களுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளன. மேலும் வேட்டை பிராணிகளுக்கு நீங்கள், அல்லாஹ் உங்களுக்கு கற்றுத் தந்ததிலிருந்தே, கற்றுக் கொடுத்து பழக்கியுள்ளீர்கள்.3 எனவே அவை உங்களுக்காகத் தடுத்து வைப்பவற்றிலிருந்து, அதற்கு அல்லாஹ்வின் பெயரை நினைவு கூர்ந்து உண்ணுங்கள். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் விரைவாகக் கணக்கெடுப்பவனாவான்.
  6. இன்று தூய்மையான எல்லாப் பொருள்களும் உங்களுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளன. வேதம் வழங்கப்பட்டவர்களின் உணவும், உங்களுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. உங்கள் உணவு அவர்களுக்கும் அனுமதிக்கப்பட்டுள்ளது. நம்பிக்கை கொண்டவர்களுள் கற்புள்ள பெண்களும் உங்களுக்கு அனுமதிக்கப்பட்டோராவர். அவர்களை நீங்கள் விலைமகளாகவோ, கள்ளக் காதலியாகவோ கொள்ளாமல் அவர்களுக்குரிய மஹர் கொடுத்து, முறைப்படி மணந்து கொள்ள வேண்டும். நம்பிக்கை கொண்ட பின் நிராகரிப்பவர்கள் அவர்களின் செயல் வீணானது (என்றும்) அவர் மறுமையில் இழப்பிற்குரியோராவர் (என்றும் அறிந்து கொள்ளுங்கள்). ரு1 
  7. நம்பிக்கை கொண்டவர்களே! நீங்கள் தொழுகைக்காக எழுந்தால் உங்கள் முகங்களையும், முழங்கை முட்டுகள் வரை உங்கள் கைகளையும் கழுவிக் கொள்ளுங்கள். மேலும் (ஈரக்கையால்) உங்கள் தலைகளை தடவிக் கொள்ளுங்கள். மேலும் கணுக்கால் முட்டுகள் வரை உங்கள் கால்களையும் (கழுவிக் கொள்ளுங்கள்) நீங்கள் குளிக்க வேண்டியவர்களாக இருந்தால், குளித்துக் கொள்ளுங்கள். நீங்கள் நோயாளியாகவோ, பயணத்திலோ (இருந்து நீங்கள் குளிக்க வேண்டியவர்களாக) இருந்தால் அல்லது உங்களில் ஒருவர் கழிப்பிடத்திலிருந்து வெளியே வந்தால், அல்லது நீங்கள் பெண்களைத் தீண்டியிருந்து தண்ணீர் கிடைக்கவில்லையென்றால், தூய்மையான மண்ணை (நாடி அதனைக்) கொண்டு உங்கள் முகங்களையும், உங்கள் கைகளையும் தடவிக் கொள்ளுங்கள். அல்லாஹ் உங்களுக்கு ஏத்துன்பத்தையும் கொடுக்க விரும்பவில்லை. மாறாக, நீங்கள் நன்றி செலுத்தும் பொருட்டு அவன் உங்களைத் தூய்மையாகவும், உங்களுக்குத் தன்னுடைய அருளை முழுமையாக்கவும் விரும்புகின்றான்.
  8. மேலும் உங்களுக்கு அல்லாஹ் செய்த அருளையும், அவனது உடன்படிக்கையையும் நினைத்துப் பாருங்கள். உங்களுடன் அவன் செய்த அந்த உடன்படிக்கையின் போது, 'நாங்கள் செவியேற்றோம்; கட்டுப்பட்டோம்' என்று நீங்கள் கூறினீர்கள். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக உள்ளங்களில்லுள்ளவற்றை அல்லாஹ் நன்கு அறிகின்றான்.
  9. நம்பிக்கை கொண்டவர்களே! அல்லாஹ்வுக்காக நீங்கள் நேர்மையான சாட்சி கூறுபவர்களாக நிலைத்து நில்லுங்கள். ஒரு சமுதாயத்தின் பகைமை, உ ங்களை நீதியுடன் நடக்காதவாறு தூண்ட வேண்டாம். நீங்கள் நீதியுடன் நடந்து கொள்ளுங்கள். இது தான் இறையச்சத்திற்கு மிக நெருங்கியது. அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் , நீங்கள் செய்பவற்றை நன்கறிகின்றான்.
  10. நம்பிக்கை கொண்டு நற்செயல்கள் செய்கின்றவர்களுக்கு, மன்னிப்பும் மகத்தான நற்பலனும் (விதிக்கப்பட்டு) உள்ளனவென்று அல்லாஹ் அவர்களிடம் வாக்களித்துள்ளான்.
  11. நம் வசனங்களை மறுத்துப் பொய்யாக்குபவர்கள் நரகத்திற்குரியவர்களே ஆவர்.
  12. நம்பிக்கை கொண்டவர்களே! அல்லாஹ் உங்களுக்கு செய்த பேருதவியை நினைத்துப் பாருங்கள். அதாவது ஒரு சமுதாயத்தினர் தங்களுடைய கைகளை உங்களுக்கு எதிராக நீட்ட நாடிய போது , அவன் அவர்களுடைய கைகளை உங்களுக்காகத் தடுத்தான். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நம்பிக்கை கொண்டோர், அல்லாஹ்விடத்திலேயே நம்பிக்கை வைக்க வேண்டும். ரு2
  13. மேலும் நிச்சயமாக அல்லாஹ் இஸ்ராயீல் மக்களிடம் ஓர் உறுதியான உடன்படிக்கை செய்து கொண்டான். அவர்களிலிருந்து நாம் பன்னிரண்டு தலைவர்களை ஏற்படுத்தியிருந்தோம். அல்லாஹ் (அவர்களிடம் இவ்வாறு) கூறினான். நிச்சயமாக நான் உங்களுடன் இருக்கிறேன். நீங்கள் தொழுகையினை சரியாக நிறைவேற்றி, ஸகாத்துக் கொடுத்து, எனது தூதர்களிடத்து நம்பிக்கைக் கொண்டு, அவர்களுக்கு ஆதரவு கொடுத்து, (அல்லாஹ்வுக்கு உங்கள் பொருளின்) ஒரு நல்ல பகுதியினைக் கடனாக கொடுப்பீர்களாயின், கட்டாயமாக நான் உங்களிடமிருந்து உங்கள் தீமைகளை அழித்து விடுவேன். மேலும் நிச்சயமாக நான் கீழே ஆறுகள் ஓடுகின்ற தோட்டங்களில் உங்களை நுழையச் செய்வேன். ஆனால் உங்களுக்கு இதற்குப் பின்னரும் நிராகரிக்கின்றவர், நேரான பாதையிலிருந்து தவறிவிட்டார் (என்பதை அவர் புரிந்து கொள்ளட்டும்).
  14. அவர்கள் தங்களின் உடன்படிக்கையினை முறித்துவிட்ட காரணத்தினால், நாம் அவர்களை சபித்து, அவர்களின் உள்ளங்களை கடினமாக்கி விட்டோம். அவர்கள் (வேதத்தின்) சொற்களை அவற்றிற்குரிய இடங்களிலிருந்து புரட்டுகின்றனர். மேலும் அவர்களுக்கு கூறப்பட்ட அறிவுரையின் ஒரு பகுதியினை மறந்து விட்டனர். மேலும் அவர்களுள் ஒரு சிலரைத் தவிர அவர்களிலிருந்து நம்பிக்கைத் துரோகத்தைத் தவறாமல் கண்டுணர்வீர். எனவே நீர் அவர்களை மன்னித்துப் பொறுத்துக் கொள்வீராக. நிச்சயமாக அல்லாஹ் நன்மை செய்பவர்களை நேசிக்கின்றான்.
  15. நாங்கள் கிறித்தவர்கள் என்று சொல்கிறவர்களிடமும், உடன்படிக்கையை நாம் மீண்டும் உறுதிப்படுத்தினோம். ஆனால் அவர்களுக்கு கூறப்பட்ட அறிவுரையின் ஒரு பகுதியினை அவர்கள் மறந்துவிட்டனர். எனவே நாம் அவர்களுக்கிடையில் மறுமை நாள் வரை பகைமையையும் வெறுப்பையும் தூண்டினோம்5.அவர்கள் செய்து வருவதைப் பற்றி அல்லாஹ் அவர்களுக்கு விரையில் அறிந்து கொள்ளச் செய்வான்.
  16. வேதத்தையுடையவர்களே! நம்முடைய தூதர் உங்களிடம் வந்துவிட்டார். வேதத்திலிருந்து நீங்கள் மறைத்தவற்றுள் பெரும்பாலானவற்றை அவர் உங்களுக்கு விளக்குகிறார். பெரும்பாலான குற்றங்களையும் மன்னிக்கின்றார். நிச்சயமாக உங்களுக்கு அல்லாஹ்விடமிருந்து ஓர் ஒளியும், மிகத் தெளிவான ஒரு வேதமும் வந்துள்ளன.
  17. அவனது விருப்பத்தை தேடுகின்றவர்களை அல்லாஹ் இதன்மூலம் சமாதான வழியில் நடத்துகிறான். மேலும் அவன் தனது கட்டளையினால், அவர்களை இருள்களிலிருந்து ஒளியினிடத்துக் கொண்டு வருகின்றான். மேளும் நேரான வழியில் அவர்களைச் செலுத்துகிறான்.
  18. நிச்சயமாக மர்யமின் மகன் மஸீஹ் தான் அல்லாஹ் எனக் கூறுகிறவர்கள் உறுதியாக நிராகரிப்பவர்களாகிவிட்டனர். நீர் (அவர்களிடம்) கூறுவீராக! மர்யமின் மகன் மஸீஹையும், அவருடைய தாயாரையும் பூமியிலுள்ள எல்லாரையும் அல்லாஹ் அழித்து விட நாடினால்6 அவனுக்கு எதிராக ஆற்றல் பெற்றவன் எவன்? வானங்கள், பூமி ஆகிய (எல்லா)வற்றின் ஆட்சி அல்லாஹ்வுக்கே உரியது. அவன் விரும்புவதைப் படைக்கின்றான். மேலும் அல்லாஹ் எல்லாவற்றிற்கும் ஆற்றல் பெற்றவன் ஆவான்.  
  19. யூதர்களும், கிறித்தவர்களும், "நாங்கள் அல்லாஹ்வின் குமாரர்களும் அவனுடைய அன்பிற்குரியவர்களும் ஆவோம்" எனக் கூறுகின்றனர். நீர் கூறுவீராக! அவ்வாறாயின், அவன் உங்களை உங்கள் குற்றங்களுக்காக ஏன் தண்டிக்கின்றான்? மாறாக நீங்களும் அவனது படைப்பைச் சேர்ந்த மனிதர்களே. அவன், தான் நாடுபவரை மன்னித்துவிடுகின்றான். மேலும் தான் நாடுபவருக்குத் தண்டனை வழங்குகின்றான். வானங்கள், பூமி மற்றும் அவ்விரண்டிற்கிடையிலுள்ளவை ஆகிய(எல்லா)வற்றின்  ஆட்சி அல்லாஹ்வுக்கே உரியது. மேலும் அவனிடமே (எல்லாரும்) திரும்பிச் செல்ல வேண்டியதும் இருக்கின்றது.
  20. வேதத்தையுடையவர்களே! உங்களிடம் நம் தூதர் வந்துள்ளார். தூதரின் வருகைத் தொடரில் ஏற்பட்ட இடைவெளிக்குப்பின் வந்த அவர், நீங்கள் எங்களிடம் நற்செய்தி கூறுபவரோ அச்சமூட்டி எச்சரிப்பவரோ வரவில்லை என்று கூறாதிருக்கும் பொருட்டு (நம் செய்திகளை) விளக்குகிறார். எனவே நற்செய்தி கூறுபவரும், அச்சமூட்டி எச்சரிப்பவருமாகிய ஒருவர் உங்களிடம் வந்துவிட்டார். அல்லாஹ் எல்லாவற்றிற்கும் ஆற்றல் பெற்றவனாவான். ரு3
  21. மூஸா தமது சமுதாயத்தினரிடம் இவ்வாறு கூறிய நேரத்தை (நீங்கள் நினைத்துப் பாருங்கள்: ) என்னுடைய சமுதாயத்தினாரே, அல்லாஹ் உங்களிடையே தூதர்களை நியமித்தும், உங்களை அரசர்களாக ஆக்கியும்7 அவன் உங்களுக்கு செய்த பேரரருளை நினைத்துப் பாருங்கள். மேலும் அவன் (உலகில் அப்போது) அறியப்பட்ட சமுதாயங்களுக்கு8 வழங்கிடாததை உங்களுக்கு வழங்கினான்.
  22. என் சமுதாயத்தினரே! அல்லாஹ் உங்களுக்கு விதித்துள்ள புனித பூமியில் நுழையுங்கள். மேலும் புறமுதுகு காட்டாதீர்கள். அவ்வாறாயின், நீங்கள் இழப்பிருக்குறியோராக திரும்புவீர்கள்.
  23. அவர்கள், 'மூஸாவே அதில் (அந்த நாட்டில்) கொடிய ஆற்றல் வாய்ந்த மக்கள்9 (வாழ்ந்து கொண்டு) இருக்கின்றனர். அவர்கள் அதிலிருந்து வெளியேறாத வரை நாங்கள் அதில் நுழைய மாட்டோம். ஆனால் அவர்கள் அதிலிருந்து வெளியேறினால், நிச்சயமாக நாங்கள் நுழைவோம்' என்று (பதில்) கூறினார்கள்.
  24. அப்போது (அல்லாஹ்வுக்கு) அஞ்சியவர்களுள் அல்லாஹ் அருள் புரிந்த இருவர்10 (அவர்களிடம்) 'நீங்கள் அவர்களை எதிர்த்து (முன்னேறி) அந்த வாயிலில் நுழையுங்கள். நீங்கள் அதில் நுழைந்து விட்டால், நிச்சயமாக நீங்கள் வெற்றிப்பெற்றவர்களாவீர்கள். நீங்கள் நம்பிக்கை கொண்டோராயின், அல்லாஹ்விடமே நம்பிக்கை வைத்தல் வேண்டும் என்று (அவ்விருவர்) கூறினர்.
  25. இதற்கு அவர்கள் மூஸாவே! அவர்கள் அதில் இருக்கின்ற வரை நாங்கள் அதில் நுழையவே மாட்டோம். எனவே நீரும் உமது இறைவனும் சென்று (அவர்களுடன்) போரிடுங்கள். நாங்கள் இங்கேயே உட்கார்ந்து இருக்கிறோம் என்று கூறினார்கள்.
  26. என் இறைவா! என்னிடத்தும் என சகோதரரிடத்துமேயன்றி வேறொருவரிடத்தும் எனக்கு அதிகாரம் இல்லை. எனவே நீ எங்களுக்கும் கிளர்ச்சியாளர்களுக்குமிடையில் வேறுபாட்டை உண்டாக்குவாயாக' என்று (மூஸா) கூறினார்.
  27. நிச்சயமாக அது (அந்த பூமி) அவர்களுக்கு நாற்பது வருடங்கள் (வரை) தடுக்கப்பட்டு விடும். அவர்கள் பூமியில் மனங்கலங்கி அலைவர். எனவே நீர் கிளர்ச்சி செய்யும் மக்களுக்காக வருந்த வேண்டாம் என்று (அல்லாஹ்) கூறினான். ரு4
  28. நீர் (அதாவது முஹம்மது (ஸல்)) ஆதமுடைய இரு ஆண்மக்களின் உண்மை வரலாற்றினை11 அவர்களுக்குக் கூறுவீராக. அவ்விருவருள் ஒருவருடைய பலி ஏற்றுக் கொள்ளப்பட்டது. மற்றொருவருடையது ஏற்றுக் கொள்ளப்படவில்லை. (இதனால்) பின்னவர் (தமது சகோதரரிடம்) நான் உன்னை நிச்சயமாக கொன்று விடுவேன் என்றார். இதற்கு முன்னவர் 'நல்லடியார்களிடமிருந்தே அல்லாஹ் ஏற்றுக் கொள்கிறான்' என்று கூறினார்.
  29. நீ என்னைக் கொள்வதற்கு உன் கையை எனக்கு எதிராக நீட்டினால் (கூட) நான் உன்னை கொல்வதற்கு என கையை உனக்கு எதிராக நீட்ட மாட்டேன்12. நிச்சயமாக நான் எல்லா உலகங்களுக்கும் இறைவனாகிய அல்லாஹ்வுக்கே அஞ்சுகிறேன்.
  30. நீ உன் பாவத்துடன் என் பாவத்தையும் சுமக்கலாம். அதனால் நீ நரகத்திற்குரியவர்களைச் சேர்ந்தவனாகி விடலாம் என நான் விரும்புகிறேன்13. இது அநீதியிழைப்பவர்களுக்குரிய கூலியாகும்.
  31. ஆனால் தன் சகோதரரைக் கொல்வதை அவரது உள்ளம் அவரை ஏற்றுக் கொள்ள செய்தது. எனவே, அவர் அவரைக் கொலை செய்தார். அதனால் அவர் இழப்பிற்குரியவர்களைச் சேர்ந்து விட்டார்.
  32. அப்போது தம் சகோதரரின் பிணத்தை எவ்வாறு மறைப்பது என்பதை அவருக்குக் காட்ட, அல்லாஹ் ஒரு காக்கையை அனுப்பினான். அது பூமியைத் தோண்டிற்று. (இதனைக் கண்ட) அவர் அந்தோ! இக்காக்கையைப் போன்று இருப்பதற்குக் கூட என்னால் முடியவில்லையே14. அவ்வாறிருந்தால், என் சகோதரரின் பிணத்தை நான் மறைத்திருப்பேனே என்று கூறினார். அதன் பின்னர் அவர் மிகவும் வருந்துபவராகி விட்டார்.
  33. இக்காரணத்தால் நாம் இஸ்ராயீல் மக்களுக்கு கொலைக்குப் பதிலாகவோ, நாட்டில் குழப்பத்தைப் பரப்பினாலோ அன்றி கொலை செய்கின்றவர் எல்லா மக்களையும் கொலை செய்தவர் போன்றவராவார் என்று விதித்துள்ளோம்15. ஒருவருக்கு உயிர் கொடுக்கின்றவர்16 எல்லா மக்களுக்கும் உயிர் கொடுப்பவரைப் போன்றவராவார். நமது தூதர்கள் அவர்களிடம் தெளிவான அடையாளங்களுடன் வந்தார்கள். இதற்குப் பின்னரும் அவர்களுள் பெரும்பாலோர் நாட்டில் வரம்பு மீறிக் கொண்டேயிருக்கின்றனர்.
  34. அல்லாஹ்வுடனும், அவனது தூதருடனும் போரிட்டு மேலும் நாட்டில் குழப்பத்தை உண்டாக்கக் கடுமையாக முயல்பவர்களுக்கு, உரிய தண்டனை17 அவர்கள் கொல்லப்பட வேண்டும். அல்லது அவர்களின் எதிருப்பு காரணமாக அவர்களின் கைகளும் அவர்களின் கால்களும் துண்டிக்கப்பட வேண்டும். அல்லது அவர்கள் நாடு கடத்தப்பட வேண்டும் என்பதே. இது இவ்வுலகில் அவர்களுக்குக் கிடைக்கும் இழிவாகும். மறுமையிலும் அவர்களுக்குப் பெரும் ஆக்கினை உள்ளது.
  35. நீங்கள் அவர்களை உங்களின் அதிகாரத்தின் கீழ்18 கொண்டு வரும் முன்னர், மனந்திருந்திக் கொள்வோரைத் தவிர (உள்ளவர்களுக்கே மேற்குறித்த தண்டனை)19. நிச்சயமாக அல்லாஹ் மிக்க மன்னிப்பவனும், மேன்மேலும் கருணை காட்டுபவனுமாவான் என்பதை அறிந்து கொள்ளுங்கள். ரு5  
  36. நம்பிக்கை கொண்டவர்களே! அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள், அவனை அணுகும் வழியினைத் தேடுங்கள். நீங்கள் வெற்றி பெறுவதற்கு அவனுடைய வழியில் முயலுங்கள்.
  37. நிராகரிப்பவர்களிடம் பூமியிலுள்ள எல்லாம் இருந்து, அதைப் போல் இன்னொரு பங்கும் அவர்களிடம் இருந்து, அவற்றை அவர்கள் மறுமை நாளின் தண்டனைக்கு ஈடாகக் கொடுதாலும் அவர்களிடமிருந்து அவை நிச்சயமாக ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது. மேலும் அவர்களுக்கு வேதனையளிக்கக் கூடிய தண்டனை உள்ளது.
  38. அவர்கள் நெருப்பிலிருந்து வெளியேற விரும்புவார்கள். ஆனால் அவர்களால் அதிலிருந்து வெளியேறவே முடியாது20. மேலும் அவர்களுக்கு நிலையான ஒரு தண்டனை (விதிக்கப்பட்டு) உள்ளது.
  39. திருடும் ஆண்கள், திருடும் பெண்கள் ஆகிய இருவரின் கைகளையும் துண்டித்து விடுங்கள். இது அல்லாஹ்விடமிருந்து (கிடைக்கும்) படிப்பினை (த் தண்டனை) யாகும். மேலும் அல்லாஹ் வல்லோனும் நுண்ணறிவுள்ளோனுமாவான்.
  40. ஒருவன் அநீதியிழைத்தப்பின் வருந்தி, திருத்திக் கொண்டால் நிச்சயமாக அல்லாஹ் அவனுக்கு மன்னித்து அருள் புரிவான். நிச்சயமாக அல்லாஹ் மிக்க மன்னிப்பவனும் மேன்மேலும் கருணை காட்டுபவனுமாவான்.
  41. வானங்கள் பூமி ஆகியவற்றின் ஆட்சி அல்லாஹ்வுக்கே உரியது என்று உமக்குது தெரியாதா? அவன் விரும்புவருக்குத் தண்டனை கொடுக்கின்றான். விரும்புவரை மன்னித்தும் விடுகின்றான். மேலும் அல்லாஹ் எல்லாவற்றிற்கும் முழுமையான ஆற்றல் பெற்றவனாவான்.
  42. தூதரே, தம் உள்ளங்கள் நம்பிக்கைக் கொள்ளாமல், நாங்கள் நம்பிக்கை கொண்டுள்ளோம் என்று தம் வாய்களால் கூறுபவர்களுள் நிராகரிப்பில் (விழ) விரைந்து செல்வோர் உம்மைக் கவலைக்குள்ளாக்க வேண்டாம். யூதர்களில் சிலர் உள்ளனர். அவர்கள் பொய்களை ஆவலுடன் கேட்கின்றனர். (அவர்கள் அதனை) உம்மிடம் வராத பிற மக்களுக்கு எடுத்துக் கூறுவதற்காகக் கூர்ந்து கேட்கின்றனர். அவர்கள் (இறைவனின்) சொற்களை  அவற்றிற்குரிய (சரியான) இடங்களில் வைக்கப்பட பின்னர் மாற்றி விடுகின்றனர்21. அவர்கள் இது உங்களுக்குக் கொடுக்கப்பட்டால், இதனை ஏற்றுக் கொள்ளுங்கள்; உங்களுக்கு இது கொடுக்கப்படவில்லையாயின் விட்டு விடுங்கள் என்று கூறுகின்றனர். அல்லாஹ் சோதிக்க விரும்பும் ஒருவருக்கு அல்லாஹ்விற்கு எதிராய் உம்மால் எதுவும் உதவி செய்ய இயலாது. அல்லாஹ் இத்தகையோரின் உள்ளங்களைத் தூய்மைப்படுத்த விரும்புவதில்லை. இவர்களுக்கு இவ்வுலகில் இழிவு உள்ளது. மேலும் இவர்களுக்கு மறுமையிலும் பெருந்தண்டனை உள்ளது.
  43. அவர்கள் பொய்யான விஷயங்களை கூருந்து கேட்கின்றனர். ஆகாத சம்பாத்தியத்தை விரும்பி அனுபவிக்கின்றனர். எனவே அவர்கள் உம்மிடம் தீர்ப்புக் கேட்டு) வந்தால், நீர் அவர்களுக்கிடையில் தீர்ப்பு வழங்கும். அல்லது அவர்களை விட்டு விலகிவிடும். நீர் அவர்களை விட்டு விலகினால் அவர்களால் உமக்கு எந்த தீங்கும் செய்ய இயலாது. நீர் அவர்களுக்கிடையில் தீர்ப்பு வழங்கினால் நேர்மையான தீர்ப்பு வழங்குவீராக. நிச்சயமாக அல்லாஹ் நேர்மையாளர்களை நேசிக்கின்றான்.
  44. அவர்களிடம் அல்லாஹ்வின் கட்டளைகளைக் கொண்ட தவ்ராத் இருக்கின்ற போது22 அவர்கள் உம்மை எவ்வாறு நடுவராக ஏற்றுக் கொள்வார்கள்? இதன் பிறகும் அவர்கள் புறக்கணித்து விடுகின்றனர்; மேலும் அவர்கள் ஒருபோதும் நம்பிக்கைக் கொள்ள மாட்டார்கள். ரு6
  45. நிச்சயமாக நேர்வழியும் ஒளியும் பெற்றிருந்த தவ்ராத்தை நாம் இறக்கினோம். (நமக்கு) கட்டுப்பட்டு நடந்த நபிமார்கள் அதனைக் கொண்டு யூதர்களுக்கு தீர்ப்பு வழங்கினர். இவ்வாறே இறை (த் தொடர்புடைய) மக்களும் (வேத) ஞானிகளும் செய்தனர். ஏனென்றால் இவர்களே அல்லாஹ்வின் வேதத்தைப் பாதுகாக்க வேண்டியவர்களும், அதன் கண்காணிப்பாளர்களும் ஆவர். எனவே நீங்கள் மக்களுக்கு அஞ்சாதீர்கள். எனக்கே அஞ்சுங்கள். நீங்கள் என் வசனங்களை அற்ப விலைக்கு விற்காதீர்கள். அல்லாஹ் இறக்கியதனைக் கொண்டு தீர்ப்பு வழங்காதவர்களே, நிராகரிப்பவர்கள் ஆவர்.
  46. நாம் அ (ந்தத் தவ்ராத்) தில் அவர்களுக்கு உயிருக்கு உயிர், கண்ணுக் கண், மூக்குக்கு மூக்கு, காத்துக்குக் காது, பல்லுக்குப் பல் ஈடாகும் என்றும் காயங்களுக்கும் பழிக்குப் பழி வாங்குதல் உண்டு என்றும் விதித்திருந்தோம்23. ஆனால் இ (ந்) த (உரிமையி) னை விட்டு விடுபவர்க்கு, அது அவரின் பாவத்திற்கு பரிகாரமாகிவிடும். அல்லாஹ் இறக்கியதனைக் கொண்டு தீர்ப்பு வழங்காதவர்களே அநீதி இழைப்பவர்களாவர்.
  47. தமக்கு முன்னுள்ள தவ்ராத்தை நிறைவேற்றக் கூடிய மர்யமின் மகன் ஈஸாவை, நாம் அவர்களின் அடிச்சுவட்டில் நடத்தினோம். நேர்வழியும், ஒளியும் கொண்டிருந்த நற்செய்தியை நாம் அவருக்கு வழங்கினோம். மேலும் அது தனக்கு முன்னிருந்த தவ்ராத்தை நிறைவேற்றக் கூடியதாகவும்24, இறையச்சமுடையவருக்கு நேர்வழியும் காட்டக் கூடியதாகவும், அறிவுரையாகவும் இருந்தது.
  48. நற்செய்தியுடையவர்கள் அல்லாஹ் அதில் இறக்கியதற்கேற்ப தீர்ப்பளிக்க வேண்டும். அல்லாஹ் இறக்கியதற்கேற்ப தீர்ப்பளிக்காதவர்களே தீயவர்கள்.
  49. நாம் உமக்கு உண்மையினைக் கொண்டுள்ள இந்த வேதத்தை இறக்கியுள்ளோம். இது தனக்கு முன்னுள்ள வேதத்தை நிறைவேற்றக் கூடியதாயும் அதனைப் பாதுகாக்கூடியதாயுமுள்ளது. எனவே அல்லாஹ் (உமக்கு) இறக்கியதைக் கொண்டு, அவர்களுக்கிடையே நீர் தீர்ப்பு வழங்குவீராக. உமக்கு வந்த உண்மையினை விட்டுவிட்டு அவர்களின் ஆசைகளை பின்பற்ற வேண்டாம். உங்கள் எல்லாருக்கும் சட்டத்தையும், வழியையும் நாம் ஏற்படுத்தியுள்ளோம்.25 அல்லாஹ் விரும்பியிருந்தால் உங்களை ஒரே (இன) மக்களாக ஆக்கியிருப்பான். ஆனால் அவன் உங்களுக்கு வழங்கியதனைக் கொண்டு உங்களை சோதிக்க விரும்புகிறான். எனவே நீங்கள் நல்லவற்றில் ஒருவரையொருவர் முந்திக் கொள்ள போட்டியிடுங்கள். அல்லாஹ்விடமே நீங்கள் எல்லாரும் திரும்பிச் செல்ல வேண்டியதுள்ளது. அப்போது நீங்கள் கொண்டுள்ள கருத்து வேற்றுமைகளைப் பற்றி அவன் உங்களுக்கு அறிவிப்பான்.
  50. அல்லாஹ் (உமக்கு) இறக்கியதைக் கொண்டு நீர் அவர்களுக்கிடையில் தீர்ப்பு வழங்குவீராக. நீர் அவர்களின் ஆசைகளைப் பின்பற்றாதீர். அவர்கள் உம்மைக் குழப்பத்தில் ஆழ்த்தி அல்லாஹ் உமக்கு இறக்கிய இறை வசனத்திலிருந்து விலக்கி விடாதிருப்பதற்காக நீர் அவர்களிடம் விழிப்போடிருப்பீராக. பின்னர் அவர்கள் புறக்கணித்துவிட்டால், அவர்களின் சில பாவங்களின் காரணமாக அல்லாஹ்  அவர்களைத் தண்டிக்க நாடுகின்றான் என்று தெரிந்து கொள்வீராக. மக்களுள் பெரும்பாலார் கீழ்ப்படியாதவர்களாக இருக்கின்றனர்.
  51. (இஸ்லாத்துக்கு முற்பட்ட) அறியாமை (காலத்துத்) தீர்ப்பை அவர்கள் விரும்புகின்றனரா? உறுதியான நம்பிக்கையாளர்களுக்கு தீர்ப்பு வழங்குவதில் அல்லாஹ்வை விட சிறந்தவன் எவன்? ரு7
  52. நம்பிக்கை கொண்டவர்களே! யூதர்களையும் கிறித்தவர்களையும் நண்பர்களாக்கிக் கொள்ளாதீர்கள். (ஏனென்றால்) அவர்கள் ஒருவருக்கொருவர் நண்பராவர். உங்களுள் அவர்களை நண்பராக்கிக் கொள்பவர்கள், நிச்சயமாக அவர்களை சேர்ந்தவர்களே. அல்லாஹ் அநீதி இழைப்பவருக்கு ஒரு போதும் வழிகாட்டுவதில்லை.
  53. எவர்களின் உள்ளங்களில் நோய் உள்ளதோ அவர்கள், (நிராகரிக்கும்) அவர்களிடம் விரைந்து செல்வதை நீர் காண்பீர். தங்களுக்கு ஏதேனும் துன்பம் ஏற்படுமோ என்று நாம் அஞ்சுவதாக அவர்கள் கூறுகின்றனர். எனவே அல்லாஹ் (உங்களுக்கு) தன்னிடமிருந்து வெற்றியையோ, ஏதாவது நிகழ்ச்சியையோ விரைவில் ஏற்படுத்தலாம். இதனால் அவர்கள் தங்கள் உள்ளங்களில் மறைத்து வைத்திருந்தது பற்றி வெட்கப்படுகின்றவராவார்.
  54. நிச்சயமாகத் தாங்கள் உங்களுடனேயே இருப்பதாக அல்லாஹ்வின் மீது உறுதியான சத்தியம் செய்து கொண்டிருந்தவர்கள் இவர்களா என்று நம்பிக்கை கொண்டவர்கள் கூறுவர். இவர்களின் செயல்கள் வீணாகி விட்டன. எனவே இவர்கள் நஷ்டமடைந்தவர்களாகி விட்டனர்.
  55. நம்பிக்கையாளர்களே! உங்களுள் தமது மார்க்கத்திலிருந்து திரும்பி விடுகின்றவர், அல்லாஹ் விரைவிலே (அவர்களுக்கு பதிலாக) ஒரு சமுதாயத்தினரைக் கொண்டு வருவான்; அவன் அவர்களை நேசிப்பான்; அவர்களும் அவனை நேசிப்பார்கள். நம்பிக்கை கொண்டவர்களிடம் பணிவு காட்டக் கூடியவர்களாகவும் நிராகரிப்பவர்களிடம் கடினமானவர்களாகவும் இருப்பார்கள். அவர்கள் அல்லாஹ்வின் வழியில் பெரும் முயற்சி செய்வார்கள். குறை கூறுவோரின் பழிப்பிற்கும் அவர்கள் அஞ்சமாட்டார்கள். இது அல்லாஹ்வின் அருளாகும். இ(ந்)த (அருளி)னை அவன் விரும்புபவருக்கு வழங்குகிறான். மேலும் அல்லாஹ் வளமிக்கோனும் நன்கு அறிபவனுமாவான். (என்பதை நினைவில் கொள்ளட்டும்).
  56. உங்கள் நண்பர் அல்லாஹ்வும் அவனது தூதரும், மேலும் தொழுகையினை நிலை நாட்டியும், ஸக்காத்துக் கொடுத்தும் வரும் நம்பிக்கையாளர்களுமாவர். அவர்கள் இறைவனிடம் குனிந்தவராயும் இருப்பர்.
  57. அல்லாஹ்வையும் அவனது தூதரையும், நம்பிக்கை கொண்டவர்களையும் தங்கள் நண்பர்களாக்கிக் கொள்கின்றவர்கள், நிச்சயமாக அல்லாஹ்வின் கூட்டத்தினரே. அவர்களே நிச்சயமாக வெற்றி பெறுவர். ரு8
  58. நம்பிக்கை கொண்டவர்களே! உங்களுக்கு முன்னர் வேதம் வழங்கப்பட்டவர்களுள் உங்கள் மார்க்கத்தை ஏளனமாகவும், விளையாட்டாகவும் ஆக்கிக் கொண்டவர்களையும், நிராகரிப்பவர்களையும் (உங்கள்) நண்பர்களாக ஆக்கிக் கொள்ளாதீர்கள். நீங்கள் நம்பிக்கை கொண்டவர்களாயின், அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள்.
  59. மேலும் நீங்கள் தொழுகைக்காக (மக்களை) அழைக்கும்போது, அவர்கள் அதனை ஏளனமாகவும், விளையாட்டாகவும் ஆக்கிக் கொள்கின்றனர். அவர்கள் சிந்தித்துச் செயல்படாத மக்களாக இருப்பதே இதற்குக் காரணமாகும்.
  60. நீர் (அவர்களிடம்) கூறுவீராக: வேதத்தையுடையவர்களே! நாங்கள் அல்லாஹ்விடத்தும், எங்களுக்கு இறக்கப்பட்டதிலும், (இதற்கு) முன்னர் இறக்கப்பட்டதிலும் நம்பிக்கைக் கொண்டுள்ளோம் என்பதற்காகவா எம்மிடம் குறை காண்கின்றீர்கள்? அல்லது உங்களுள் பெரும்பாலார் (அல்லாஹ்வுக்கு) மாறு செய்பவர்களாக இருப்பதனால் (நீங்கள் குற்றம் காண்கின்றீர்களா?)
  61. நீர் (அவர்களிடம் கூறுவீராக. (நீங்கள் வெறுக்கின்றவரை விட) அல்லாஹ்விடத்தில் மிகவும் கேட்ட கூலி உடையவர்களைப் பற்றி நான் உங்களுக்கு அறிவிக்கட்டுமா? அவர்களை அல்லாஹ் சபித்து விட்டான். அவர்கள் அவனுடைய கோபத்திற்கு ஆளாகி விட்டனர். அவர்களுள் சிலரை அவன் குரங்குகளாகவும், பன்றிகளாகவும் ஆக்கினான். மேலும் அவர்கள் ஷைத்தானை வணங்கினார்கள். இத்தகையோர்26 நிச்சயமாக மிகக் கெட்ட நிலையில் இருக்கின்றனர். மேலும் நேரான வழியை விட்டு மிகத் தவறான வழியில் செல்பவர்களாவர்.
  62. அவர்கள் உங்களிடம் வரும்போது, நாங்கள் நம்பிக்கை கொண்டுள்ளோம் எனக் கூறுகின்றனர். ஆனால் அவர்களோ நிராகரிப்புடனே(யே) நுழைந்து, அவர்கள் அத்துடனே (அக்கொள்கையுடனேயே) வெளியேறினர். மேலும் அவர்கள் மறைப்பதனை அல்லாஹ் நன்கு அறிகின்றான்.
  63. அவர்களுள் பெரும்பாலார் பாபத்திற்கும், வரம்பு மீறுதலுக்கும் ஆகாத சம்பாத்தியத்தை விரும்பி உண்பதற்கும், விரைந்து செல்வதை நீர் காண்கின்றீர். நிச்சயமாக அவர்கள் செய்து கொண்டிருப்பது மிகவும் தீயதேயாகும்.
  64. அவர்கள் பொய்யுரைக்கிறார்கள்; ஆகாத சம்பாத்தியத்தை விரும்பி விலக்கப்பட்டவற்றை அனுபவிக்கிறார்கள். இறை ஞானிகளும், மார்க்க அறிஞர்களும், அவர்களை ஏன் தடுப்பதில்லை? நிச்சயமாக அவர்கள் செய்வது மிகவும் தீயதேயாகும்.
  65. அல்லாஹ்வின் கை கட்டப்பட்டுள்ளது என்று யூதர்கள் கூறுகின்றனர். அவர்கள் இவ்வாறு சொன்னதன் காரணத்தால், கட்டப்பட்டுள்ளவை அவர்களின் கைகளே, அவர்கள் சபிக்கவும்படுவார்கள். ஆனால் உண்மையில் அவனது இரு கைகளும் விரிந்துள்ளன. அவன் விரும்பியவாறு செலவு செய்கின்றான். உம்முடைய இறைவனிடமிருந்து உமக்கு இறக்கப்பட்டது, நிச்சயமாக அவர்களுள் பெரும்பாலாரிடத்து கட்டுப்படாமையையும், நிராகரிப்பையும் வளர்த்து விடும். நாம் இறுதி நாள் வரை அவர்களுக்கிடையே பகைமையையும், வெறுப்பையும் ஏற்படுத்தி விட்டோம்.அவர்கள் போருக்காக நெருப்பை மூட்டும் போதெல்லாம் அல்லாஹ் அதனை அனைத்து விடுகிறான். அவர்கள் நாட்டில் குழப்பம் உண்டாக்கவே பாடுபடுகின்றனர். மேலும் அல்லாஹ், குழப்பம் விளைவிப்பவர்களை நேசிப்பதில்லை.  
  66. வேதத்தையுடையவர்கள், நம்பிக்கை கொண்டும் இறையச்சம் கொண்டும் இருப்பார்களாயின் நிச்சயமாக நாம் அவர்களின் தீமைகளை அவர்களை விட்டு அகற்றி நிச்சயமாக அவர்களை அருட்கொடைகளைக் கொண்ட தோட்டங்களில் நுழைய செய்திருப்போம்.
  67. அவர்கள் தவ்ராத்தையும், நற்செய்தியையும் (இஞ்சீலையும்), அவர்களுடைய இறைவனிடமிருந்து (இப்போது) அவர்களுக்கு இறக்கப்பட்டதையும், பின்பற்றியிருப்பார்களாயின், அவர்கள் நிச்சயமாகத் தங்களுக்கு மேலிருந்தும், தங்கள் கால்களுக்குக் கீழிருந்தும் புசித்திருப்பார்கள். (நிச்சயமாக) அவர்களுள் நடுநிலை கொண்ட ஒரு மக்கள் கூட்டமும் உள்ளது. ஆனால் அவர்களுள் பெரும்பாலார் செய்து கொண்டிருப்பது மிகக் கெட்டதேயாகும். ரு9
  68. தூதரே உம்முடைய இறைவனிடமிருந்து உமக்கு இறக்கப்பட்டதை (மக்களுக்கு) எட்ட வைப்பீராக. நீர் (அவ்வாறு) செய்யவில்லையாயின், நீர் அவனுடைய தூதை (அறவே) எட்ட வைக்கவில்லை. மேலும் அல்லாஹ் உம்மை மனிதர்களிடமிருந்து காப்பாற்றுவான். நிச்சயமாக அல்லாஹ் நிராகரிப்போருக்கு ஒரு போதும் வழி காட்ட மாட்டான்.
  69. வேதத்தையுடையவர்களே! தவ்ராத்தையும், நற்செய்தியையும், உங்கள் இறைவனிடமிருந்து உங்களுக்கு இறக்கப்பட்டதையும் பின்பற்றாத வரை நீங்கள் எந்த (நல்ல) நிலையிலும் (நிலைத்து நிற்பவர்கள்) இல்லை என்று நீர் கூறுவீராக. உம்முடைய இறைவனிடமிருந்து உமக்கு இறக்கப்பட்டது நிச்சயமாகவே அவர்களுள் பெரும்பாலாருக்குக் கட்டுப்படாமையையும், நிராகரிப்பையும் பெருக்கி விடும். எனவே நிராகரிப்போருக்காக நீர் வருந்த வேண்டாம்.
  70. நம்பிக்கை கொண்டவர்கள், யூதர்கள், ஸாபிகள்27, கிறித்தவர்கள் ஆகியவர்களுள் அல்லாஹ்விடத்தும் இறுதி நாளிடத்தும் உண்மையாகவே நம்பிக்கைக் கொண்டு, நற்செயல்கள் செய்கின்றவர்களுக்கு (வருங்காலத்தைப் பற்றிய) எந்தப் பயமும் ஏற்பாடாது28. அவர்கள் (சென்ற காலத்தைப் பற்றி) கவலையடையவுமாட்டார்கள்.
  71. நிச்சயமாக நாம் இஸ்ராயீல் மக்களிடம் உடன்படிக்கை வாங்கினோம். மேலும் அவர்களிடம் தூதர்களை அனுப்பினோம். அவர்கள் உள்ளங்கள் விரும்பாததை ஒரு தூதர் அவர்களிடம் வந்த போதெல்லாம், (அத்தூதர்களுள்) சிலரை அவர்கள் பொய்ப்படுத்தினர். மாற்றுஞ்சிலரை அவர்கள் கொன்று விட நாடினார்கள்.
  72. (இதனால்) எத்தீங்கும் ஏற்பாடாது என்று அவர்கள் எண்ணினர். எனவே அவர்கள் குருடர்களாகவும், செவிடர்களாகவும் ஆகிவிட்டனர். பின்னர் அல்லாஹ் அன்புடன் அவர்களின்பால் கவனம் செலுத்தினான். ஆயினும் அவர்களில் பெரும்பாலோர் வேண்டுமென்றே குருடர்களாகவும், செவிடர்களாகவும் இருந்தனர். மேலும் அல்லாஹ் அவர்கள் செய்து கொண்டிருப்பதனை கூர்ந்து கவனிக்கின்றான்.
  73. நிச்சயமாக மர்யமின் மகன் மஸீஹ் அல்லாஹ்தான் எனக் கூறுகிறவர்கள், திட்டவட்டமாக நிராகரிப்பவர்களாவர். ஆனால் இஸ்ராயீல் மக்களே! என்னுடைய இறைவனும் உங்களுடைய இறைவனுமாகிய அல்லாஹ்வை நீங்கள் வணங்குங்கள் என்றே மஸீஹ் கூறினார். அல்லாஹ்வுக்கு இணை வைக்கின்றவருக்கு அல்லாஹ் சுவர்க்கத்தை விலக்கி விட்டான் (என்றும்)  அவருடைய தங்குமிடம் நரகமாகும் (என்றும் புரிந்து கொள்ளுங்கள்). அநீதி இழைப்பவர்களுக்கு உதவியாளர் எவரும் இல்லை.
  74. நிச்சயமாக, அல்லாஹ் மூவருள் ஒருவன் என்று கூறியவர்கள், நிராகரித்து விட்டனர். வணக்கித்திற்குரியவன் ஒருவனைத்தவிர்த்து வேறு வணக்கித்திற்குரியவன் இல்லை. அவர்கள் கூறும் கூற்றிலிருந்து அவர்கள் விலகிக் கொள்ளவில்லையாயின், அவர்களுள் நிராகரிப்பவர்களுக்குக் கட்டாயமாக வேதனை அளிக்கக் கூடிய தண்டனை கிடைக்கும்.
  75. இதன் பின்னர் அவர்கள் அல்லாஹ்விடம் திரும்பி அவனிடம் (தங்கள் பாவங்களுக்காக) மன்னிப்புக் கோர மாட்டார்களா? அல்லாஹ்வோ மிக்க மன்னிப்பவனும் மேன்மேலும் கருணை காட்டுபவனுமாவான்.
  76. மர்யமின் மகன் மிஸீஹ் ஒரு தூதரே அன்றி வேறில்லை. நிச்சயமாக அவருக்கு முன்னுள்ள தூதர்கள் மரணமடைந்து விட்டனர்29. அவருடைய தாயார் நேர்மையான பெண்ணாக இருந்தார். அவர்கள் இருவரும் உணவு உண்டு வந்தனர்30. அவர்களுடைய நன்மைக்காக அடையாளங்களை எவ்வாறு நாம் விளக்கிக் கூறுகின்றோம் என்பதையும், அவர்கள் எவ்வாறு திருப்படுகின்றனர் என்பதையும் பார்ப்பீராக31.  
  77. நீர் கூறுவீராக! அல்லாஹ்வை விட்டுவிட்டு உங்களுக்கு தீமையோ, நண்மையோ செய்யும் ஆற்றல் இல்லாதவற்றையா நீங்கள் வணங்குகின்றீர்கள்? அல்லாஹ்வோ நன்கு கேட்பவனும் நன்கு அறிபவனுமாவான்.
  78. நீர் கூறுவீராக: வேதத்தையுடையவர்களே! நீங்கள் உங்கள் மார்க்கத்தில் நேர்மைக் கேடாக எல்லை மீறி மிகைப்படுத்தாதீர்கள்32. மேலும் இதற்கு முன்னர் (தாங்களும்) வழி தவறி பெரும்பாலானவர்களை(யும்) வழி தவறச் செய்து நேரான பாதையிலிருந்து தவறி விட்டவர்களின் விருப்பங்களைப் பின்பற்றாதீர்கள். ரு10    
  79. இஸ்ராயீல் மக்களுள் நிராகரித்தவர்கள், தாவூது மற்றும் மர்யமின் மகன் ஈஸா ஆகியோரின் நாவால் சபிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் கீழ்படியாததும், வரம்பு மீறியதுமே இதற்கு காரணம் ஆகும்.
  80. நாங்கள் செய்த தீமைகளிலிருந்து அவர்கள் ஒருவரையொருவர் தடுத்ததில்லை. அவர்கள் செய்து கொண்டிருந்தது மிகக் கெட்டது.
  81. அவர்களுள் பெரும்பாலானவர்கள், நிராகரிப்பவர்களை(த் தங்கள்) நண்பர்களாக ஆக்கிக் கொள்வதை நீர் காண்பீர். அவர்கள் தங்களுக்காக தங்களுக்கு முன்பே அனுப்பியிருப்பது மிகக் கெட்டதேயாகும். (இதன் விளைவாக) அல்லாஹ் அவர்களிடம் வெருப்படைந்தான். மேலும் அவர்கள் (நீண்ட காலம் வரை) தண்டனை பெருவார்கள்.
  82. அவர்கள் அல்லாஹ்விடத்தும் இத்தூதரிடத்தும், அவருக்கு இறக்கியதிடத்தும் நம்பிக்கைக் கொண்டிருந்தால் அவர்களைத் தங்கள் உதவியாளர்களாக ஆக்கியிருக்க மாட்டார்கள். ஆனால் அவர்களில் பெரும்பான்மையினரும் கட்டுப்படாதவர்களே.
  83. நம்பிக்கையாளர்களுடன் பகைமை பாராட்டுவதில் யூதர்களையும், இணை வைப்பவர்களையும், மக்களுள் கடினமானவர்களாக நிச்சயம் நீர் பார்ப்பீர். மேலும் நம்பிக்கையாளர்களிடம் அன்பு காட்டுவதில் நாங்கள் கிறித்தவர்கள் என்று கூறுவோரை மிகவும் நெருங்கியவராய்க் காண்பீர். ஏனெனில் அவர்களுள் அறிஞர்களும், வணங்குபவர்களும் உள்ளனர். மேலும் அவர்கள் பெருமை கொள்ளாமல் இருப்பதும் இதற்குக் காரணமாகும்.
  84. இத்தூதருக்கு இறக்கப்பட்ட (இறை வசனத்)தை அவர்கள் செவியேற்கும்போது, அவர்கள் உண்மையினைத் தெரிந்து கொண்டதன் காரணமாக, அவர்களின் கண்களிலிருந்து கண்ணீர் பொங்கி வழிவதை நீ காண்கின்றாய். எங்கள் இறைவா நாங்கள் நம்பிக்கை கொண்டுள்ளோம். எனவே எங்களை(யும்) சாட்சி கூறுபவர்களுடன் எழுதிக் கொள்வாயாக என்று அவர்கள் கூறுகின்றனர்.
  85. எங்கள் இறைவன் எங்களுடன் சேர்த்து விட வேண்டுமென்று நாங்கள் விரும்பிக் கொண்டிருக்கும் வேலையில் அல்லாஹ்விடத்தும், எங்களிடம் வந்த உண்மையிடத்தும், நாங்கள் நம்பிக்கை கொள்ளாதிருக்க எங்களுக்கு என்ன (நேர்ந்தது என்றும் கூறுகின்றனர்.) 
  86. எனவே அவர்கள் (அவ்வாறு) கூறியதற்குக் கூலியாகக் கீழே ஆறுகள் ஓடுகின்ற சுவர்க்கங்களை அல்லாஹ் அவர்களுக்கு வழங்குவான். (அவர்கள்) அவற்றில் என்றென்றும் வாழ்ந்து கொண்டேயிருப்பார்கள். இதுவே நன்மை செய்வோருக்கு நற்பலன்களாகும்.
  87. மேலும் நிராகரித்து நம்முடைய வசனங்களைப் பொய்யாக்கியோர் நரகத்திற்குரியவர்களாவர். ரு11
  88. நம்பிக்கை கொண்டவர்களே! அல்லாஹ் உங்களுக்கு அனுமதித்துள்ள நல்லவற்றை ஆகாதவையாக ஆக்கிக் கொள்ளாதீர்கள். மேலும் (இறைவனால் ஏற்படுத்தப்பட்ட) வரம்பை மீறாதீர்கள். வரம்பு மீறுவோரை நிச்சயமாக அல்லாஹ் நேசிப்பதில்லை.
  89. அல்லாஹ் உங்களுக்கு வழங்கிய, அனுமதிக்கப்பட்டுள்ளதும் நல்லதும் ஆகியவற்றை உண்ணுங்கள். நீங்கள் நம்பிக்கை கொண்டுள்ள அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள்.
  90. உங்களுடைய சத்தியங்களுள் வீணானவற்றுக்காக அல்லாஹ் உங்களை தண்டிக்க மாட்டான். ஆனால் நீங்கள் உறுதியான சத்தியங்கள் செய்து (பின்னர் முறித்துக்) கொண்டால் அவன் உங்களை தண்டிப்பான். எனவே அத(னை முறித்தத) ற்கான ஈடு , நீங்கள் உங்கள் குடும்பத்தினர்க்கு அளிக்கும் நடுத்தர உணவை பத்து ஏழைகளுக்கு அளிப்பதோ, ஓர் அடிமையை விடுதலை செய்வதோ ஆகும். ஆனால் (இத்தகு) வசதியினைப் பெறாதவர் மூன்று நாட்கள் நோன்பு நோற்க வேண்டும். நீங்கள் சத்தியங்கள் செய்து அவற்றை முறித்து விட்டால், இதுவே உங்கள் சத்தியங்களுக்குரிய ஈடாகும். நீங்கள் உங்கள் சத்தியங்களை பாதுகாத்துக் கொள்ளுங்கள். நீங்கள் நன்றி பாராட்ட, அல்லாஹ் தனது வசனங்களை உங்களுக்கு இவ்வாறு விளக்கிக் காட்டுகின்றான்.
  91. நம்பிக்கை கொண்டவர்களே! போதை பொருள்கள், சூதாட்டம், சிலை (வழிபாடு)கள், குறி பார்க்கும் அம்புகள் ஆகியன அருவருக்கத்தக்க(தும்) ஷைத்தானின் செயலுமேயாகும். எனவே நீங்கள் வெற்றி பெரும் பொருட்டு, அவற்றிலிருந்து (முற்றிலும்) விலகிக் கொள்ளுங்கள். 
  92. போதைப் பொருள்கள் சூதாட்டம் ஆகியவற்றால் உங்களுக்கிடையே பகையையும், வெறுப்பையும் உருவாக்கி அல்லாஹ்வை நினைவு கூர்வதிலிருந்தும் தொழுகையிலிருந்தும் உங்களை தடுத்து விடவே ஷைத்தான் விரும்புகின்றான். எனவே நீங்கள் (இவற்றிலிருந்து) தவிர்ந்து கொள்ள மாட்டீர்களா?
  93. நீங்கள் அல்லாஹ்வுக்கு கட்டுப்பட்டு நடவுங்கள். மேலும் இந்தத் தூதருக்கும் கட்டுப்பட்டு நடவுங்கள்; விழிப்பாக இருங்கள். நீங்கள் புறக்கணித்து விட்டால், தூதைத் தெளிவாக எடுத்துரைப்பதே நம் தூதரின் கடமை என்பதனைத் தெரிந்து கொள்ளுங்கள்.
  94. நம்பிக்கை கொண்டு நற்செயல்கள் செய்வோர் இறைவனுக்கு அஞ்சி நம்பிக்கை கொண்டு, நற்செயல்கள் செய்தும், மீண்டும் இறைவனுக்கு அஞ்சி நம்பிக்கை கொண்டும் இன்னும் இறைவனுக்கு அஞ்சி நன்மை செய்தால் அவர்கள் எதையும் உண்பதில் பாவமில்லை33. நன்மை செய்பவர்களை அல்லாஹ் நேசிக்கின்றான். ரு12
  95. நம்பிக்கை கொண்டவர்களே! தனிமையில் அல்லாஹ்வுக்கு அஞ்சுவோரை அவன் பிரித்தறியும் பொருட்டு உங்கள் கைகளுக்கும், உங்கள் ஈட்டிகளுக்கும் எட்டிய வேட்டைப் பொருள்களில் ஒன்றைக் கொண்டு, அல்லாஹ் நிச்சயம் உங்களை சோதிப்பான். எனவே இதற்கு பின்னரும் வரம்பு மீறுபவருக்கு வேதனையளிக்கக்கூடிய தண்டனையுள்ளது.
  96. நம்பிக்கை கொண்டவர்களே! நீங்கள் ஹஜ்ஜுக்குரிய (உடை அணிந்திருக்கும்) நிலையில், வேட்டைப் பொருள்களை கொல்லாதீர்கள். உங்களுள் அதனை வேண்டுமென்றே கொன்று விடுபவர்க்கு, அதன் இழப்பீடு தாம் கொன்றதைப் போன்ற ஒரு நாற்கால் பிராணியாகும். உங்களுள் இரண்டு நடுவர்கள் இதற்கான தீர்ப்பை வழங்குவார்கள். காணிக்கையாக அதனை கஅபாவுக்கு கொண்டு செல்ல வேண்டும். அல்லது அதற்கு ஈடாக சில ஏழைகளுக்கு உணவளிக்க வேண்டும். அல்லது இதற்குச் சமமாக நோன்புகள் நோற்க வேண்டும். (இவை) அவனது செயலுக்குரிய தண்டனையைச் சுவைப்பதற்கே. (எனினும்) ஏற்கனவே நிகழ்ந்தவற்றை அல்லாஹ் மன்னிகின்றான். அதையே மீண்டும் செய்பவருக்கு அல்லாஹ் (குற்றத்துக்குரிய) தண்டனையை கொடுப்பான். அல்லாஹ் வல்லோனும் தண்டனை வழங்குபவனுமாவான்.
  97. கடல் வேட்டை மற்றும் அதை உண்பது, உங்கள் பயனிற்காகவும், பயணிகளின் பயனிற்காகவும் அனுமதிக்கப்பட்டுள்ளது. ஆனால் நீங்கள் இஹ்ராமின் நிலையில் இருக்கும்  (ஹஜ்ஜுக்குரிய உடை அணிந்திருக்கும்) வரை தரையில் வேட்டையாடுவது உங்களுக்கு விலக்கப்பட்டுள்ளது. அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள்.  அவனிடமே நீங்கள் ஒன்று சேர்க்கப்படுவீர்கள்.
  98. அல்லாஹ் கஅபாவாகிய பாதுகாக்கப்பட்ட ஆலயத்தை மனித இனத்தின் மேம்பாட்டிற்கும், உதவிக்கும் உறுதுணையாக ஆக்கியுள்ளான். மேலும் சிறப்பிற்குரிய மாதத்தையும், காணிக்கைகளையும் கழுத்துப்பட்டை (யணிவிக்கப் பட்ட பிராணி) களையும் (அவ்வாறே ஆக்கியுள்ளான்). இது வானங்களிலும், பூமியிலும் உள்ள எல்லாவற்றையும் அல்லாஹ் நன்கு அறிகின்றான் என்பதையும், அல்லாஹ் ஒவ்வொன்றையும் நன்கறிகின்றவன் என்பதையும் நீங்கள் தெரிந்து கொள்வதற்கே.
  99. நிச்சயமாக அல்லாஹ் தண்டனை கொடுப்பதில் கடினமானவன் என்பதையும், மேலும் நிச்சயமாக அல்லாஹ் மிக்க மன்னிப்போனும் மேன்மேலும் கருணை காட்டுபவனுமாவான் என்பதையும் அறிந்து கொள்ளுங்கள்.
  100. (இறைத்தூதை) எட்ட வைப்பதே தூதரின் கடமை. நீங்கள் வெளிப்படுத்துவதையும் நீங்கள் மறைப்பதையும் அல்லாஹ் நன்கு அறிகிறான்.
  101. தீயவை மிகுதியாக இருப்பது உமக்கு வியப்பை ஊட்டிய போதிலும், தீயதும் நல்லதும் சமமாகாது என்று நீர் கூறுவீராக. ஆகவே அறிவுடையவர்களே! நீங்கள் வெற்றி பெரும் பொருட்டு அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். ரு13
  102. நம்பிக்கை கொண்டவர்களே! உங்களுக்கு வெளிப்படுத்தினால், உங்களுக்கு வருத்தம் தரும் விஷயங்கள் பெற்றிக் கேள்வி கேட்காதீர்கள். ஆனால் குர்ஆன் இறக்கப்பட்டுக் கொண்டிருக்கின்ற வேளையில் நீங்கள் அவைப் பற்றிக் கேள்வி கேட்டால், அவை உங்களுக்கு வெளியாக்கப்பட்டுவிடும். அல்லாஹ் (வேண்டுமென்றே) அவற்றை விளக்காமல் விட்டிருக்கின்றான். அல்லாஹ் மிக்க மன்னிப்பவனும் மிக்க பொறுமையானவனும் ஆவான்.
  103. உங்களுக்கு முன்னர் ஒரு சமுதாயாத்தினர் இது போன்றவை குறித்து கேள்வி கேட்டனர். பின்னர் (பதில் கிடைத்த போது) அவர்கள் அதனை (ஏற்றுக் கொள்ளாமல்) மறுத்து விட்டனர்.
  104. பஹீரா, ஸாயிபா, வஸீலா, ஹாம் இவற்றி(னை34 ஏற்படுத்திக் கொள்வத)ற்கு அல்லாஹ் கட்டளையிடவில்லை. ஆனால் நிராகரிப்பவர்கள் அல்லாஹ்வுக்கு எதிராக பொய்யை புனைந்து கூறுகின்றனர். அவர்களுள் பெரும்பாலார் தங்கள் அறிவாற்றலை பயன்படுத்துவதில்லை.
  105. அல்லாஹ் இறக்கிய (இறை வசனத்)தின்பாலும், (அவனுடைய) தூதரின் பாலும் வாருங்கள் என்று அவர்களிடம் கூறப்படும்போது எங்கள் மூதாதையர்கள் இருந்த (வழி எதுவோ) அதுவே எங்களுக்கு போதும் என்று அவர்கள் கூறுகின்றனர். (அவ்வாறாயின்) அவர்களின் மூதாதையர்கள் அறிவற்றவர்களாகவும் நேர்வழியினை அறியாதவர்களாகவும் இருந்தாலுமா? அவர்கள் தங்கள் பிடிவாதத்தில் நிலைத்திருப்பார்கள்.)
  106. நம்பிக்கை கொண்டவர்களே! நீங்கள் உங்களை (மன இச்சைகளிலிருந்து) காப்பாற்றிக் கொள்ளுங்கள். நீங்கள் நேர்வழியினைப் பெற்றுவிட்டால், வழி தவறிய எவனும் உங்களுக்கு தீங்கிழைக்க மாட்டான். நீங்கள் எல்லாருமே அல்லாஹ்விடம் திரும்பி செல்ல வேண்டியதுள்ளது. எனவே நீங்கள் செய்ததனை அப்போது அவன் உங்களுக்கு வெளிப்படுத்துவான்.
  107. நம்பிக்கை கொண்டவர்களே! உங்களுள் ஒருவருக்கு மரண (நேர)ம் வந்துவிட்டால் மரண சாஸனம் கூறும்போது உங்களுக்கிடையில் சாட்சி கூறுவதற்கு, உங்களுள் நேர்மையானவர் இருவர் சாட்சியாக இருக்க வேண்டும். அல்லது நீங்கள் பூமியில் பயணம் செய்து கொண்டிருக்கும்போது, உங்களுக்கு மரண விபத்து ஏற்படுமாயின் உங்களிலிருந்து அல்லாமல் மற்றவர்களிலிருந்து இருவர் சாட்சியகளாக இருக்க வேண்டும். நீங்கள் அவ்விருவரையும் தொழுகைக்குப் பின்னர்35 (சாட்சி கூறுவதற்கு) தடுத்து நிறுத்திக் கொள்ளுங்கள். (அவர்களின் சாட்சி குறித்து) உங்களுக்கு ஐயப்பாடு இருக்குமாயின், அவ்விருவரும் அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்து, அவர் எங்களுடைய நெருங்கிய உருவினராக இருப்பினும், நாங்கள் இதற்கு விலையாக எதுவும் பெறவில்லை; நாங்கள் அல்லாஹ்வின் சாட்சியத்தை மறைக்கவில்லை. நாங்கள் அவ்வாறு செய்வோமாயின் நாங்கள் பாவிகளாகிவிடுவோம் என்று கூற வேண்டும்.
  108. முதல் இருவர் பாவம் செய்து (பிறர்) உரிமையைக் கைப்பற்ற நாடியதாய்க் கண்டுபிடிக்கப்பட்டால், முதற் பிரிவினருள் உரிமையைப் பறிக்கொடுத்த இருவர் அவர்களின் இடத்தில் எழுந்து நின்று, இவர்களின் சாட்சியத்தை விட எங்களின் சாட்சியம் மிகவும் உண்மையானது என்றும், நாங்கள் வரம்பு மீறவில்லை என்றும் நாங்கள் அவ்வாறு செய்திருந்தால், நிச்சயமாக அநீதி இழைப்போரைச் சேர்ந்தவராவோம் என்றும் அல்லாஹ்வின் பெயரால் அவ்விருவரும் சத்தியம் செய்ய வேண்டும்.
  109. இது நேர்மையான சாட்சியம், உள்ளபடி கிடைப்பதற்கும் தமது சாட்சியத்திற்கு எதிரான சாட்சியம் வரலாமென்ற அச்சம் அவர்களின் (முதல் சாட்சிகளின்) உள்ளத்தில் ஏற்படுவதற்கும் தூண்டுதலாக இருக்கும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். (அவனுடைய கட்டளைகளுக்கு) செவிசாயுங்கள். கட்டுப்பட்டு நடக்காதவர்களுக்கு அலல்க் நேர்வழி காட்டுவதில்லை. ரு14
  110. அல்லாஹ் தூதர்களை ஒன்று சேர்த்து, உங்களுக்கு, என்ன பதில் தரப்பட்டது என்று வினவும் நாளை (நினைத்துப் பாருங்கள்). அப்போது அவர்கள் எங்களுக்கு (சரியான) ஞானமில்லை. மறைவானவற்றை பற்றிய முழுமையான ஞானம் உடையவன் நீயே என்று கூறுவார்கள்.
  111. அப்போது அல்லாஹ் கூறுவான்; "மர்யமின் மகன் ஈஸாவே! உமக்கும் உம்முடைய தாயாருக்கும் நான் இறக்கிய அருளை நினைத்துப் பார்ப்பீராக. (அதாவது) நான் தூய்மையான வஹியைக் கொண்டு உமக்கு உதவி செய்த போது, நீர் மக்களிடத்தில் சிறிய வயதிலும் முதிர்ந்த வயதிலும் பேசினீர். நான் உமக்கு வேதத்தையும், நுட்பமான ஞானத்தையும் (பற்றிய செய்திகளைக் கற்றுக் கொடுத்துத்) தவ்ராத்தையும், நற்செய்தியையும் கற்றுக் கொடுத்த நேரத்தையும் நீர் எனது கட்டளையினால் களிமண் தன்மையைக் கொண்டவர்களிலிருந்து36 பறவையைப் போன்ற படைப்பை37 உருவாக்கிப் பின்னர் நீர் அதில் (ஒரு புதிய உயிரை) ஊதிய போது, அவர்கள் எனது கட்டளையினால் உயரப்பறக்கிற ஆளாக மாறிய நேரத்தையும், நீர் குருடரையும் தொழு நோயாளியையும் எனது கட்டளையினால் குணப்படுத்திய நேரத்தையும்38, நீர் எனது கட்டளையினால் உயிரற்றவரை எழுப்பிய39 நேரத்தையும் (உம்மை கொல்ல விரும்பிய)40 இஸ்ராயீல் மக்களை நான் தடுத்து நிறுத்திய நேரத்தையும், நேர் அவர்களிடம் தெளிவான அடையாளங்களைக் கொண்டு வந்த போது அவர்களுள் நிராகரிப்பவர்கள், இவை மிகவும் தெளிவான சூனியம் என்று கூறிய நேரத்தையும் (நினைத்துப் பார்ப்பீராக).
  112. நான் (உமது அதாவது ஈஸா நபியின்) சீடர்களுக்கு என்னிடத்தும், என்னுடைய தூதரிடத்தும், நம்பிக்கை கொள்ளுங்கள் என்று இறையறிவிப்பு (வஹி) இறக்கிய போது, அவர்கள் நாங்கள் நம்பிக்கை கொண்டுள்ளோம். நாங்கள் கட்டுப்பட்டு நடப்பவர்களாவோம் என்பதற்கு நீர் சாட்சியாக இருப்பீராக என்று கூறிய நேரத்தையும் (நினைத்துப் பார்ப்பீராக).
  113. மர்யமின் மகன் ஈஸாவே! எங்களுக்கு விண்ணிலிருந்து உணவுகள் நிரம்பிய தட்டை இறக்கி வைக்க உமது இறைவனால் இயலுமா என்று சீடர்கள் கூறிய நேரத்தையும் (நினைத்துப் பார்ப்பீராக. அதற்கு) மஸீஹ், நீங்கள் (உண்மையான) நம்பிக்கையாளர்களாயின், அல்லாஹ்விற்கு அஞ்சுங்கள் என்றார்.
  114. (சீடர்களாகிய) அவர்கள் நாங்கள் அதிலிருந்து உண்பதற்கும் எங்கள் உள்ளங்கள் அமைதியினைப் பெறுவதற்கும், நீங்கள் என்னிடம் உண்மை கூறினீர் என்று நாங்கள் அறிந்து கொள்வதற்கும், அது குறித்து நாங்கள் சாட்சி பகர்வதற்கும் நாங்கள் விரும்புகின்றோம் என்றனர்.
  115. (இதற்கு) மர்யமின் மகன் ஈஸா, அல்லாஹ்வே! எங்கள் இறைவனே! எங்களுள் முன்னவர்க்கும், எங்களுள் பின்னவர்க்கும் பெருநாளாக (அமைவதற்காக)வும், உன்னிடமிருந்துள்ள ஓர் அடையாளமாகவும், இருக்கக் கூடிய (உணவுகள் நிரம்பிய) தட்டை வானிலிருந்து எங்களுக்கு இறக்கி வைப்பாயாக41. நீ உன்னிடமிருந்து) எங்களுக்கு உணவளிப்பாயாக. உணவளிப்பவர்களில் சிறந்தவன் நீயே என்று கூறினார்.
  116. அல்லாஹ் நிச்சயமாக; நான் அதனை உங்களுக்கு இறக்குவேன். ஆனால் இதற்குப் பின்னர் உங்களுள் நிராகரிக்கின்றவருக்கு உலகில் வேறெவருக்கும் கொடுத்திராத கடினமான ஆக்கினையைக் கொடுப்பேன்42 என்று கூறினான். ரு15
  117. மர்யமின் மகன் ஈஸாவே! நீர் மக்களிடம், அல்லாஹ்வையன்றி என்னையும் என் தாயாரையும் இரண்டு கடவுள்களாக ஆக்கிக் கொள்ளுங்கள் என்று கூறினீரா? என அல்லாஹ் கேட்ட போது,43 அவர் "நீ தூயவன் எனக்குத் தகாததை நான் கூறியதில்லை. நான் அவ்வாறு கூறியிருப்பின், நிச்சயமாக நீ அதனைத் தெரிந்திருப்பாய். என் உள்ளத்திலுள்ளதை நீ அறிவாய்; உன் உள்ளத்திலுள்ளதை நான் அறியேன். நிச்சயமாக நீ மறைவானவற்றை (யெல்லாம்) நான்கு அறிந்தவனாவாய்" என்று கூறினார்.
  118. நீ எனக்குக் கட்டளையிட்டபடி என்னுடைய இறைவனும், உங்களுடைய இறைவனுமாகிய அல்லாஹ்வை வணங்குங்கள் என்பதையே நான் அவர்களிடம் கூறினேன். நான் அவர்களுடன் இருந்த காலம் வரை, அவர்களுக்கு நான் சாட்சியாக இருந்தேன். ஆனால் நீ எனக்கு மரணத்தை தந்தபின், நீயே அவர்களைக் கண்காணித்தவனாக இருந்தாய்; மேலும் நீயே எல்லாவற்றிற்கும் சாட்சியாளனாக இருக்கிறாய்.
  119. நீ அவர்களுக்குத் தண்டனை வழங்கினால், அவர்கள் உனது அடியார்களே (அல்லவா?). நீ அவர்களை மன்னிக்க நினைத்தால் நீ மிக்க வல்லமையுள்ளவனும், மிகவும் நுட்பமான ஞானங்களைக் கொண்டவனுமாவாய்.
  120. அல்லாஹ் கூறுவான்; உண்மையாளர்கள் தம் உண்மையினால் பயன் பெறும் நாள் (இதுவே) கீழே ஆறுகள் ஓடுகின்ற தோட்டங்கள் அவர்களுக்கு உள்ளன. அவர்கள் அவற்றில் என்றென்றும் வாழ்ந்து வருவர். அல்லாஹ் அவர்களிடம் நன்கு திருப்தி கொண்டுள்ளான். அவர்களும் அவனிடம் நன்கு திருப்தி கொண்டுள்ளனர். இது உண்மையிலேயே மாபெரும் வெற்றியாகும்.
  121. வானங்கள், பூமி மற்றும் இவற்றிக்கிடையே உள்ளவை ஆகியவற்றின் ஆட்சி அல்லாஹ்வுக்கே உரியது. அவன் எல்லாவற்றிற்கும் முழு ஆற்றல் பெற்றவனாவான். ரு16
Powered by Blogger.