15- அல் ஹிஜ்ர்

அதிகாரம் : அல் ஹிஜ்ர்
அருளப்பட்ட இடம் : மக்கா | வசனங்கள் : 100
பிரிவுகள் : 6



  1. அளவற்ற அருளாளனும் மேன்மேலும் கருணைகாட்டுபவனுமாகிய அல்லாஹ்வின் பெயரால் (ஓதுகின்றேன்).
  2. அலிஃப் லாம் ரா1. இவை தெளிவான குர்ஆன் என்னும் (முழுமைபெற்ற) ஒரு வேதத்தின் வசனங்களாகும்.
  3. (இவ் வேதத்தை) நிராகரித்தவர்கள் தாங்களும் முஸ்லிம்களாக (கட்டுப்படுபவர்களாக) இருந்திருக்கலாமே என்று பல வேளைகளில் விரும்புகின்றனர்.
  4. அவர்கள் தின்று, குடித்து(தற்காலிக) பயன் பெறுவதில் ஈடுபட்டிருக்குமாறும், (அவர்களின்) வீணான நம்பிக்கைகள் அவர்களைக் கவனமற்றவர்களாக்குமாறும், நீர் அவர்களை விட்டு விடுவீராக. ஆனால் அவர்கள் விரைவில் (உண்மையினைத்) தெரிந்து கொள்வர்.
  5. நாம் ஒரு போதும் எந்த ஊரையும், அது குறித்து (முன்னரே) அறியத்தக்க தீர்ப்பொன்று ஏற்பட்டாலன்றி, அழித்ததில்லை.
  6. எந்தச் சமுதாயத்தினராலும் தங்கள் (அழிவிற்குரிய) காலக்கெடுவிலிருந்து விரைந்தோடி(த் தப்பி) விடவும் முடியாது. (அதிலிருந்து) பின் தங்கி(த் தப்பி) விடவும் முடியாது.
  7. அவர்கள் கூறினர்: இந்த அறிவுரை இறக்கப் பெற்றவரே! நிச்சயமாக நீர் ஒரு பைத்தியக்காரரே.
  8. நீர் உண்மையாளராயின், வானவர்களை எங்களிடம் ஏன் கொண்டு வருவதில்லை.
  9. வானவர்களை நாம் உண்மையுடனே இறக்குகின்றோம் (என்பது அவர்களுக்குத் தெரியாதா?) மேலும் அந்த நேரத்தில் (நிராகரிப்பவர்களாகிய) அவர்களுக்கு காலக்கெடு அளிக்கப்படுவதில்லை.
  10. இந்த (குர்ஆனாகிய) அறிவுரையை நாமே இறக்கினோம். நிச்சயமாக நாமே இதனைப் பாதுகாப்போம்.
  11. உமக்கு முன்னர், முந்தைய மக்கள் பிரிவுகளிட(மு)ம் நாம் (தூதர்களை) அனுப்பினோம்.
  12. அவர்களிடம் எந்தத் தூதர் வந்தாலும், அவர்கள் அவரை ஏளனமே செய்தனர்.
  13. இவ்வாறே இதனை (ஏளனம் செய்யும் பழக்கத்தை) நாம் குற்றவாளிகளின் உள்ளங்களில் நுழையச் செய்கின்றோம்.
  14. அவர்கள் இ(ந்)த(க்குர்ஆ)னிடத்து நம்பிக்கை கொள்வதில்லை. ஆனால், முன்னோர்கள் (பற்றிய அல்லாஹ்வின்) செயல்முறை சென்று விட்டது.
  15. நாம் அவர்களுக்(குத் தெரிவிப்பதற்)காக வானத்தின் வாயிலொன்றைத் திறந்து, அவர்கள் அதன் வழியே ஏறத் தொடங்கினாலும்,
  16. எங்கள் பார்வைகள் மங்கிவிட்டன; இல்லை! நாம் சூனியம் செய்யப்பட்டுள்ள மக்களாக இருக்கிறோம் என அவர்கள் நிச்சயமாக கூறுவார்கள். ரு1
  17. நிச்சயமாக நாம், வானத்தில் (நட்சத்திரங்களுக்கு) பல நிலைகளை அமைத்துள்ளோம். மேலும் நாம், அதனைப் பார்ப்பவர்களுக்கு அழகு வாய்ந்ததாக ஆக்கியுள்ளோம்.
  18. விரட்டப்பட்ட ஒவ்வொரு ஷைத்தானிலிருந்தும் நாம் அதனைப் பாதுகாத்துள்ளோம்.
  19. ஆனால் திருட்டுத்தனமாக (இறையறிவிப்பு) ஏதாவதொன்றினைச் செவியேற்(று அதனைச் சீர்குலைத்துப் பரப்பு)கின்றவனை ஒளிமிக்க ஒரு தீச்சுடர் பின்தொடர்கின்றது2.
  20. நாம் பூமியை விரிவுபடுத்தி அதில் மலைகளை உறுதியாக நாட்டினோம். மேலும் எல்லாவகைப் பொருள்களையும், பொருத்தமான அளவில் அதில் நாம் வளரச் செய்தோம்.
  21. நாம் அதில் உங்களுக்காகவும், (படைப்புகளுள்) நீங்கள் உணவளிக்காதவற்றிற்காகவும் வாழ்விற்குரிய பொருள்களை ஏற்படுத்தியுள்ளோம்.
  22. எல்லாப் பொருள்களின் (எல்லையற்ற) கருவூலங்களும் எம்மிடம் உள்ளன. ஆனால் அதனைக் குறிப்பிட்ட ஓர் அளவிலேயே நாம் இறக்குகின்றோம்.
  23. நாம் (நீராவியை) சுமக்கக் கூடிய காற்றுக்களை அனுப்பி, (அவற்றின் மூலம்) மேகங்களிலிருந்து (மழை)நீரை இறக்கினோம். பின்னர் அதனை உங்களுக்குக் குடிக்கக் கொடுத்தோம். உங்களால் அதனைப் (பத்திரமாக) சேர்த்து வைத்திருக்க முடியாது இருந்தது3.
  24. நிச்சயமாக நாமே உயிரை வழங்குகின்றோம்; மரணத்தையும் கொடுக்கின்றோம். மேலும் நாமே( எல்லாவற்றிற்கும்) வாரிசாகவும் இருக்கின்றோம்.
  25. உங்களுள் முன்னேறுபவர்களையும் நாம் அறிகின்றோம். (அவ்வாறே) உங்களுள் பின்தங்கி விடுபவர்களையும் நாம் அறிகின்றோம்.
  26. நிச்சயமாக, உம்முடைய இறைவனே அவர்களை ஒன்று திரட்டுவான். அவன் மிக நுட்பமான ஞானமுள்ளவனும், நன்கு அறிபவனுமாவான். ரு2
  27. மேலும் படிந்திருக்கும் சேற்றிலிருந்து உருவான, ஓசை தரும் காய்ந்த களி மண்ணிலிருந்து நிச்சயமாக நாம் மனிதனைப் படைத்தோம்.
  28. இதற்கு முன்னர் நாம் ஜின்களை நெருப்புக் காற்றிலிருந்து 4 படைத்தோம்.
  29. (செவியேற்பவரே!) படிந்திருக்கும் சேற்றிலிருந்து உருவாக்கப்பட்ட, ஓசை தரும் காய்ந்த களிமண்ணிலிருந்து நான் மனிதனைப் படைக்கப் போகிறேன் என உமது இறைவன் வானவர்களிடம் கூறிய நேரத்தை (யும் நினைத்துப் பாரும்).
  30. நான் அவனை முழுமையாக்கி, என் ஆவியை அவனுள் ஊதிய போது, நீங்களெல்லாரும் அவனுடன்5 சிரம்பணிந்து விடுங்கள்.
  31. எனவே, வானவர்கள் எல்லாரும் ஒன்றாக (இறைவனுக்கு) சிரம் பணிந்தனர்.
  32. இப்லீசைத் தவிர, அவன் சிரம் பணிகின்றவருடன் சேர மறுத்து விட்டான்.
  33. (இறைவன்) கூறினான்: இப்லீஸே! சிரம் பணிவோருடன் நீ ஏன் சேரவில்லை? .
  34. அவன் கூறினான்: படிந்திருக்கும் சேற்றிலிருந்து உருவாக்கப்பட்ட, ஓசை தரும் காய்ந்த களி மண்ணிலிருந்து நீ படைத்த மனிதனைப் போல், நான் சிரம் பணியப் போவதில்லை.
  35. (இறைவன்) கூறினான்: இதிலிருந்து நீ வெளியேறி விடு. ஏனெனில், நிச்சயமாக நீ துரத்தப்பட்டவனாவாய்.
  36. மேலும், நற்பலனும்,தண்டனையும் வழங்கப்படும் நாள்வரை, உன் மீது நிச்சயமாக (என்) சாபமிருக்கும் (என்பதனை நினைவில் வைத்துக் கொள்).
  37. (அவன்) கூறினான்: என் இறைவா! அவர்கள் (மீண்டும்) எழுப்பப்படும் நாள் வரை, நீ எனக்குக் காலக்கெடு அளிப்பாயாக.
  38. (இறைவன்) கூறினான்: நிச்சயமாக நீ காலக்கெடு அளிக்கப்பட்டவர்களைச் சேர்ந்தவனாவாய்.
  39. குறிப்பிட்ட காலத்தின் அந்நாள் வரை.
  40. (அவன்) கூறினான்: என் இறைவா! நீ என்னை வழி தவறியவனென்று தீர்மானித்துக் கொண்டதன் காரணமாக, கட்டாயம் நான் உலகில் (தவறான வழியினை) அவர்களுக்கு அழகு வாய்ந்ததாக்கிக் காட்டி, அவர்களெல்லாரையும் வழிதவறச் செய்வேன்.
  41. ஆயினும், அவர்களுள் உன்னால் தேர்ந்தெடுக்கப்பட்ட அடியார்களைத் தவிர (அவர்கள் தப்பி விடுவார்கள்).
  42. (இறைவன்) கூறினான்: என்னிடம் வர இதுவே நேரான வழியாகும்.
  43. உன்னைப் பின்பற்றும் வழிகேடர்களைத் தவிர, என் அடியார்களிடத்து உனக்கு எந்த அதிகாரமும் கிடையாது.
  44. நிச்சயமாக அவர்கள் எல்லாருக்கும் நரகமே வாக்களிக்கப்பட்ட இடமாகும்.
  45. அதற்கு ஏழு வாயில்கள் உள்ளன. ஒவ்வொரு வாயிலுக்கும் அ(ந்த நிராகரிப்ப)வர்களுள் ஒரு பகுதியினர் ஒதுக்கப்பட்டுள்ளனர். ரு3
  46. நிச்சயமாக (இறைவனுக்கு) அஞ்சுவோர் தோட்டங்களிலும், நீரூற்றுக்களிலும் இருப்பார்கள்.
  47. (நீங்கள்) அதனுள் சாந்தியுடன் பாதுகாப்பில் நுழையுங்கள் (என்று அவர்களிடம் கூறப்படும்).
  48. அவர்களின் உள்ளங்களிலுள்ள பகைமை உணர்வை நாம் அகற்றி விடுவோம். அதனால் அவர்கள் (சுவர்க்கத்தில்) ஒருவரையொருவர் நோக்கிய வண்ணம் சகோதரர்களாய் மஞ்சங்களில் இருப்பர்.
  49. அவற்றில் அவர்களுக்கு களைப்பும் ஏற்படாது. அவற்றிலிருந்து அவர்கள் ஒருபோதும் வெளியேற்றப்படவும் மாட்டார்கள்.
  50. (தூதரே!) நான் மிக அதிகமாக மன்னிப்பவனும், மேன்மேலும் கருணைகாட்டுபவனுமாவேன் என நீர் என் அடியார்களுக்கு அறிவிப்பீராக.
  51. என்னுடைய ஆக்கினை தான் (உண்மையிலேயே) வேதனையளிக்கக் கூடிய ஆக்கினையாகும் (என்றும் அறிவிப்பீராக).
  52. நீர் அவர்களுக்கு இப்ராஹீமின் விருந்தினர்களைப் பற்றி (யும்) அறிவிப்பீராக.
  53. அவர்கள் அவரிடம் வந்து, சாந்தி (உமக்கு உண்டாவதாக) எனக் கூறிய போது, நாங்கள் உங்களு(டைய வருகை)க்கு அஞ்சுகிறோம் என்றார்.
  54. அவர்கள், நீர் அஞ்ச  வேண்டாம். நாங்கள் உமக்கு மிகுந்த ஞானத்தைக் கொண்ட மகனைக் குறித்து நற்செய்தி வழங்குகின்றோம் என்றனர்.
  55. நான் முதுமையடைந்திருந்தும் நீங்கள் எனக்கு நற்செய்தி வழங்குகிறீர்களா? நீங்கள் எதன்படி எனக்கு (இந்த) நற்செய்தியினை வழங்குகிறீர்கள் (என்பதனைக் கூறுங்கள்) என்று அவர் கூறினார்.
  56. நாங்கள் உமக்கு உண்மையான நற்செய்தியினைக் கூறியுள்ளோம். எனவே, நீர் நம்பிக்கை இழந்தவராகி விடவேண்டாம் என்று அவர்கள் கூறினர்.
  57. அவர் கூறினார்: வழிதவறியவர்களைத் தவிர, தம்முடைய இறைவனின் கருணையிலிருந்து எவன்தான் நம்பிக்கை இழப்பான்?
  58. (மேலும்) அவர் கூறினார்: தூதர்களே! (இப்பொழுது) உங்களுடைய முக்கியமான பணி என்ன?
  59. அவர்கள் கூறினார்கள்: நாங்கள் குற்றவாளிகளான சமுதாயத்தினரிடம் (அவர்களை அழிப்பதற்காக) அனுப்பப்பட்டுள்ளோம்;
  60. லூத்தைப் பின்பற்றுபவர்களைத் தவிர. (லூத்தைப் பின்பற்றிய) அவர்கள் எல்லாரையும் நிச்சயமாக நாங்கள் காப்பாற்றுவோம்.
  61. ஆம், அவருடைய மனைவியைத் தவிர. நிச்சயமாக அவள் பின் தங்கி விடுபவர்களைச் சார்ந்தவளாவாள் என்று நாங்கள் கருதுகிறோம். ரு4
  62. பின்னர் அந்த தூதர்கள் லூத்தின் சமுதாயத்தினரிடம் வந்த போது,
  63. அவர்(அவர்களிடம்): நீங்கள் (இந்த ஊருக்கு) அன்னியர்களாக தெரிகிறதே என்றார்.
  64. அவர்கள் கூறினார்கள்: உண்மை என்னவென்றால், இவர்கள் ஐயம் கொண்டிருக்கும் அ(ந்)த(ஆக்கினையி)னை (ப் பற்றிய செய்தியை) நாங்கள் உம்மிடம் கொண்டு வந்துள்ளோம்.
  65. நாங்கள் உம்மிடம் உறுதியான செய்தியினைக் கொண்டு வந்துள்ளோம். நிச்சயமாக நாங்கள் உண்மையாளர்களே.
  66. எனவே நீர் இரவின் (பிற்) பகுதியில் உம்முடைய குடும்பத்தினரை அழைத்துக் கொண்டு சென்று விடுவீராக. நீர் அவர்களுக்கு பின்னாலேயே செல்வீராக. உங்களுள் எவரும் திரும்பிப் பார்க்க வேண்டாம்6. நீங்கள் எங்கு செல்ல வேண்டுமென்று உங்களுக்கு கட்டளையிடப்படுகின்றதோ (அங்கு நீங்களெல்லாரும்) சென்று விடுங்கள்.
  67. அதிகாலையிலே(யே) இவர்கள் வேருடன் துண்டிக்கப்பட்டு விடுவர் என்ற செய்தியினை நாம் அவருக்குத் திட்டவட்டமாகத் தெரிவித்து விட்டோம்.
  68. (இப்பொழுது லூத்தைப் பிடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்து விட்டது என்ற எண்ணத்தில்) அந்த நகர மக்கள், மகிழ்ச்சியடைந்தவர்களாக7 அவரிடம் வந்தனர்.
  69. அவர் கூறினார்: இவர்கள் என் விருந்தினர்கள். நீங்கள் (இவர்களைப் பயமுறுத்தி), என்னை இழிவுபடுத்தாதீர்கள்.
  70. மேலும் அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள்; என்னை அவமானப்படுத்தாதீர்கள்.
  71. அவர்கள் கூறினார்கள்: அன்னியர்களை தங்க வைப்பதிலிருந்து நாங்கள் உம்மைத் தடுக்கவில்லையா?
  72. அவர் கூறினார்: நீங்கள் தீங்கிழைக்க முனைந்துள்ளீர்கள் என்றால் என்னுடைய பெண் மக்கள் (உங்களைச் சேர்ந்தவர்களின் வீடுகளிலேயே மணமுடித்துக் கொடுக்கப்பட்டு) இருப்பதை எண்ணிப் பாருங்கள்.
  73. (நபியே!) உமது வாழ்வின் மீது ஆணையாக, நிச்சயமாக அவர்கள் தங்களுடைய போதை வெறியில்  தடுமாறித் திரிகின்றனர்.
  74. எனவே (வாக்களிக்கப்பட்ட) அந்த ஆக்கினை பொழுது விடிந்ததும் அவர்களைப் பற்றிக் கொண்டது.
  75. நாம் அந்த ஊரை, தலைகீழாக ஆக்கினோம்8. பொடிக்கற்களின் மழையை அவர்கள் மீது பொழியச் செய்தோம்.
  76. நிச்சயமாக இவற்றில் அடையாளங்களைப் படிக்கக் கூடியவருக்கு அறிகுறிகள் (பல) உள்ளன.
  77. மேலும் அது9 (இன்னும்) நிலைத்திருக்கின்ற ஒரு பெரிய சாலையில் (அமைந்து) உள்ளது10.
  78. நிச்சயமாக நம்பிக்கை கொண்டோருக்கு, இதில் ஓர் அடையாளம் உள்ளது.
  79. நிச்சயமாக அய்க்க11 சமுதாயத்தினரும் அநீதி இழைப்பவர்களாகவே இருந்தனர்.
  80. எனவே! அவர்களையும் நாம் பழி வாங்கினோம். அவ்விரண்டு (இடங்களு)ம் ஒரு நெடுஞ்சாலையில் புதைந்து உள்ளன. ரு5
  81. நிச்சயமாக, ஹிஜ்ர் நகர மக்களும்12 (எம்முடைய) தூதரைப் பொய்ப்படுத்தினர்.
  82. அவர்களுக்கு (ம்) நாம் எம்முடைய அடையாளங்களை வழங்கினோம். ஆனால் அவர்கள் அவற்றைப் புறக்கணிப்பவர்களாக இருந்தனர்.
  83. அவர்கள் மலைகளின் சில பகுதிகளைக் குடைந்தெடுத்து பாதுகாப்புடன் வீடுகளை அமைத்து வந்தனர்.
  84. அதிகாலையிலேயே, (வாக்களிக்கப்பட்ட) அந்த ஆக்கினை அவர்களைப் பற்றிக் கொண்டது.
  85. அவர்கள் சேர்த்து வைத்திருந்தது, (அந்த நேரத்தில்) அவர்களுக்குச் சிறிதும் பயனளிக்கவில்லை. 
  86. வானங்களையும், பூமியையும், அவ்விரண்டிற்கும் இடையிலுள்ளவற்றையும் நாம் உண்மையுடன் படைத்தோம். மேலும், (வாக்களிக்கப்பட்ட) அந்த நேரம் நிச்சயமாக வரக்கூடியதேயாகும். எனவே நீர் (அவர்களின் அநீதிகளை) அழகிய பொறுமையுடன் அலட்சியப்படுத்தி விடுவீராக.
  87. நிச்சயமாக, உம்முடைய இறைவன் சிறந்த படைப்பாளியும், நன்கு அறிபவனுமாவான்.
  88. நிச்சயமாக நாம் உமக்கு மீண்டும் மீண்டும் ஓதப்படும் ஏழையும் (ஏழு வசனங்களையும்), மகத்துவமிக்க குர்ஆனையும் வழங்கினோம்.
  89. நாம் தற்காலிகமாகப் பயன் தரும் பொருள்களை வழங்கியவர்களுள், சில பிரிவினர்களின் பால் உம் கண்களை விரிக்க வேண்டாம். அவர்களு(டைய அழிவு)க்கு க் கவலையடைய வேண்டாம். நம்பிக்கையாளர்களுக்கு உமது கருணையின் இறக்கையை விரிப்பீராக.
  90. மேலும் நீர் கூறுவீராக: நிச்சயமாக, நான் தெளிவான ஓர் எச்சரிக்கையாளனே.
  91. எவ்வாறெனில், பிரிக்கப்பட்டவர்களுக்கு14 நாம் (தண்டனை) இறக்கினோம்.
  92. (ஏனெனில்), அவர்கள் குர்ஆனைப் பகுதிகளாக உடைத்தனர்.
  93. எனவே உம் இறைவன் மீது ஆணையாக! நாம் அவர்களெல்லாரிடமும் கேள்வி(கணக்குக்) கேட்போம்.
  94. (அதாவது) அவர்கள் செய்து கொண்டிருந்த செயல்களைக் குறித்து (கணக்குக் கேட்போம்).
  95. (அவர்களுக்குத் தெரிவிக்குமாறு) உமக்குக் கட்டளையிடப்பட்ட செய்தியினை, நீர் தெளிவாக அறிவிப்பீராக; மேலும் இணைவைப்பவர்களைப் புறக்கணித்து விடுவீராக.
  96. ஏளனம் செய்வோருக்கு எதிரில் உமக்கு நாமே போதுமானவன்.
  97. (ஏளனம் செய்கின்ற) அவர்கள், அல்லாஹ்வுடன் வேறு கடவுளரை உருவாக்கிக் கொண்டிருக்கின்றனர். எனவே, அவர்கள் (அதன் விளைவை) விரைவில் அறிந்து கொள்வார்கள். 
  98. அவர்களின் கூற்றினால், உம்முடைய உள்ளம் துன்பமடைவதை நிச்சயமாக நாம் அறிகின்றோம்.
  99. எனவே, நீர் உம்முடைய இறைவனைப் புகழ்ந்து (அவனது) தூய்மையை எடுத்துரைப்பீராக. (மேலும் அவனுக்கு) சிரம் பணிவோருடன் சேர்ந்து விடுவீராக.
  100. உமக்கு மரண(நேர)ம் வரும் வரை உம்முடைய இறைவனை வணங்கிக் கொண்டேயிருப்பீராக. ரு6

Powered by Blogger.