அதிகாரம் : அல்
ஹிஜ்ர்
அருளப்பட்ட இடம் : மக்கா | வசனங்கள் : 100
பிரிவுகள் : 6
அருளப்பட்ட இடம் : மக்கா | வசனங்கள் : 100
பிரிவுகள் : 6
- அளவற்ற அருளாளனும் மேன்மேலும் கருணைகாட்டுபவனுமாகிய அல்லாஹ்வின் பெயரால் (ஓதுகின்றேன்).
- அலிஃப் லாம் ரா1. இவை தெளிவான குர்ஆன் என்னும் (முழுமைபெற்ற) ஒரு வேதத்தின் வசனங்களாகும்.
- (இவ் வேதத்தை) நிராகரித்தவர்கள் தாங்களும் முஸ்லிம்களாக (கட்டுப்படுபவர்களாக) இருந்திருக்கலாமே என்று பல வேளைகளில் விரும்புகின்றனர்.
- அவர்கள் தின்று, குடித்து(தற்காலிக) பயன் பெறுவதில் ஈடுபட்டிருக்குமாறும், (அவர்களின்) வீணான நம்பிக்கைகள் அவர்களைக் கவனமற்றவர்களாக்குமாறும், நீர் அவர்களை விட்டு விடுவீராக. ஆனால் அவர்கள் விரைவில் (உண்மையினைத்) தெரிந்து கொள்வர்.
- நாம் ஒரு போதும் எந்த ஊரையும், அது குறித்து (முன்னரே) அறியத்தக்க தீர்ப்பொன்று ஏற்பட்டாலன்றி, அழித்ததில்லை.
- எந்தச் சமுதாயத்தினராலும் தங்கள் (அழிவிற்குரிய) காலக்கெடுவிலிருந்து விரைந்தோடி(த் தப்பி) விடவும் முடியாது. (அதிலிருந்து) பின் தங்கி(த் தப்பி) விடவும் முடியாது.
- அவர்கள் கூறினர்: இந்த அறிவுரை இறக்கப் பெற்றவரே! நிச்சயமாக நீர் ஒரு பைத்தியக்காரரே.
- நீர் உண்மையாளராயின், வானவர்களை எங்களிடம் ஏன் கொண்டு வருவதில்லை.
- வானவர்களை நாம் உண்மையுடனே இறக்குகின்றோம் (என்பது அவர்களுக்குத் தெரியாதா?) மேலும் அந்த நேரத்தில் (நிராகரிப்பவர்களாகிய) அவர்களுக்கு காலக்கெடு அளிக்கப்படுவதில்லை.
- இந்த (குர்ஆனாகிய) அறிவுரையை நாமே இறக்கினோம். நிச்சயமாக நாமே இதனைப் பாதுகாப்போம்.
- உமக்கு முன்னர், முந்தைய மக்கள் பிரிவுகளிட(மு)ம் நாம் (தூதர்களை) அனுப்பினோம்.
- அவர்களிடம் எந்தத் தூதர் வந்தாலும், அவர்கள் அவரை ஏளனமே செய்தனர்.
- இவ்வாறே இதனை (ஏளனம் செய்யும் பழக்கத்தை) நாம் குற்றவாளிகளின் உள்ளங்களில் நுழையச் செய்கின்றோம்.
- அவர்கள் இ(ந்)த(க்குர்ஆ)னிடத்து நம்பிக்கை கொள்வதில்லை. ஆனால், முன்னோர்கள் (பற்றிய அல்லாஹ்வின்) செயல்முறை சென்று விட்டது.
- நாம் அவர்களுக்(குத் தெரிவிப்பதற்)காக வானத்தின் வாயிலொன்றைத் திறந்து, அவர்கள் அதன் வழியே ஏறத் தொடங்கினாலும்,
- எங்கள் பார்வைகள் மங்கிவிட்டன; இல்லை! நாம் சூனியம் செய்யப்பட்டுள்ள மக்களாக இருக்கிறோம் என அவர்கள் நிச்சயமாக கூறுவார்கள். ரு1
- நிச்சயமாக நாம், வானத்தில் (நட்சத்திரங்களுக்கு) பல நிலைகளை அமைத்துள்ளோம். மேலும் நாம், அதனைப் பார்ப்பவர்களுக்கு அழகு வாய்ந்ததாக ஆக்கியுள்ளோம்.
- விரட்டப்பட்ட ஒவ்வொரு ஷைத்தானிலிருந்தும் நாம் அதனைப் பாதுகாத்துள்ளோம்.
- ஆனால் திருட்டுத்தனமாக (இறையறிவிப்பு) ஏதாவதொன்றினைச் செவியேற்(று அதனைச் சீர்குலைத்துப் பரப்பு)கின்றவனை ஒளிமிக்க ஒரு தீச்சுடர் பின்தொடர்கின்றது2.
- நாம் பூமியை விரிவுபடுத்தி அதில் மலைகளை உறுதியாக நாட்டினோம். மேலும் எல்லாவகைப் பொருள்களையும், பொருத்தமான அளவில் அதில் நாம் வளரச் செய்தோம்.
- நாம் அதில் உங்களுக்காகவும், (படைப்புகளுள்) நீங்கள் உணவளிக்காதவற்றிற்காகவும் வாழ்விற்குரிய பொருள்களை ஏற்படுத்தியுள்ளோம்.
- எல்லாப் பொருள்களின் (எல்லையற்ற) கருவூலங்களும் எம்மிடம் உள்ளன. ஆனால் அதனைக் குறிப்பிட்ட ஓர் அளவிலேயே நாம் இறக்குகின்றோம்.
- நாம் (நீராவியை) சுமக்கக் கூடிய காற்றுக்களை அனுப்பி, (அவற்றின் மூலம்) மேகங்களிலிருந்து (மழை)நீரை இறக்கினோம். பின்னர் அதனை உங்களுக்குக் குடிக்கக் கொடுத்தோம். உங்களால் அதனைப் (பத்திரமாக) சேர்த்து வைத்திருக்க முடியாது இருந்தது3.
- நிச்சயமாக நாமே உயிரை வழங்குகின்றோம்; மரணத்தையும் கொடுக்கின்றோம். மேலும் நாமே( எல்லாவற்றிற்கும்) வாரிசாகவும் இருக்கின்றோம்.
- உங்களுள் முன்னேறுபவர்களையும் நாம் அறிகின்றோம். (அவ்வாறே) உங்களுள் பின்தங்கி விடுபவர்களையும் நாம் அறிகின்றோம்.
- நிச்சயமாக, உம்முடைய இறைவனே அவர்களை ஒன்று திரட்டுவான். அவன் மிக நுட்பமான ஞானமுள்ளவனும், நன்கு அறிபவனுமாவான். ரு2
- மேலும் படிந்திருக்கும் சேற்றிலிருந்து உருவான, ஓசை தரும் காய்ந்த களி மண்ணிலிருந்து நிச்சயமாக நாம் மனிதனைப் படைத்தோம்.
- இதற்கு முன்னர் நாம் ஜின்களை நெருப்புக் காற்றிலிருந்து 4 படைத்தோம்.
- (செவியேற்பவரே!) படிந்திருக்கும் சேற்றிலிருந்து உருவாக்கப்பட்ட, ஓசை தரும் காய்ந்த களிமண்ணிலிருந்து நான் மனிதனைப் படைக்கப் போகிறேன் என உமது இறைவன் வானவர்களிடம் கூறிய நேரத்தை (யும் நினைத்துப் பாரும்).
- நான் அவனை முழுமையாக்கி, என் ஆவியை அவனுள் ஊதிய போது, நீங்களெல்லாரும் அவனுடன்5 சிரம்பணிந்து விடுங்கள்.
- எனவே, வானவர்கள் எல்லாரும் ஒன்றாக (இறைவனுக்கு) சிரம் பணிந்தனர்.
- இப்லீசைத் தவிர, அவன் சிரம் பணிகின்றவருடன் சேர மறுத்து விட்டான்.
- (இறைவன்) கூறினான்: இப்லீஸே! சிரம் பணிவோருடன் நீ ஏன் சேரவில்லை? .
- அவன் கூறினான்: படிந்திருக்கும் சேற்றிலிருந்து உருவாக்கப்பட்ட, ஓசை தரும் காய்ந்த களி மண்ணிலிருந்து நீ படைத்த மனிதனைப் போல், நான் சிரம் பணியப் போவதில்லை.
- (இறைவன்) கூறினான்: இதிலிருந்து நீ வெளியேறி விடு. ஏனெனில், நிச்சயமாக நீ துரத்தப்பட்டவனாவாய்.
- மேலும், நற்பலனும்,தண்டனையும் வழங்கப்படும் நாள்வரை, உன் மீது நிச்சயமாக (என்) சாபமிருக்கும் (என்பதனை நினைவில் வைத்துக் கொள்).
- (அவன்) கூறினான்: என் இறைவா! அவர்கள் (மீண்டும்) எழுப்பப்படும் நாள் வரை, நீ எனக்குக் காலக்கெடு அளிப்பாயாக.
- (இறைவன்) கூறினான்: நிச்சயமாக நீ காலக்கெடு அளிக்கப்பட்டவர்களைச் சேர்ந்தவனாவாய்.
- குறிப்பிட்ட காலத்தின் அந்நாள் வரை.
- (அவன்) கூறினான்: என் இறைவா! நீ என்னை வழி தவறியவனென்று தீர்மானித்துக் கொண்டதன் காரணமாக, கட்டாயம் நான் உலகில் (தவறான வழியினை) அவர்களுக்கு அழகு வாய்ந்ததாக்கிக் காட்டி, அவர்களெல்லாரையும் வழிதவறச் செய்வேன்.
- ஆயினும், அவர்களுள் உன்னால் தேர்ந்தெடுக்கப்பட்ட அடியார்களைத் தவிர (அவர்கள் தப்பி விடுவார்கள்).
- (இறைவன்) கூறினான்: என்னிடம் வர இதுவே நேரான வழியாகும்.
- உன்னைப் பின்பற்றும் வழிகேடர்களைத் தவிர, என் அடியார்களிடத்து உனக்கு எந்த அதிகாரமும் கிடையாது.
- நிச்சயமாக அவர்கள் எல்லாருக்கும் நரகமே வாக்களிக்கப்பட்ட இடமாகும்.
- அதற்கு ஏழு வாயில்கள் உள்ளன. ஒவ்வொரு வாயிலுக்கும் அ(ந்த நிராகரிப்ப)வர்களுள் ஒரு பகுதியினர் ஒதுக்கப்பட்டுள்ளனர். ரு3
- நிச்சயமாக (இறைவனுக்கு) அஞ்சுவோர் தோட்டங்களிலும், நீரூற்றுக்களிலும் இருப்பார்கள்.
- (நீங்கள்) அதனுள் சாந்தியுடன் பாதுகாப்பில் நுழையுங்கள் (என்று அவர்களிடம் கூறப்படும்).
- அவர்களின் உள்ளங்களிலுள்ள பகைமை உணர்வை நாம் அகற்றி விடுவோம். அதனால் அவர்கள் (சுவர்க்கத்தில்) ஒருவரையொருவர் நோக்கிய வண்ணம் சகோதரர்களாய் மஞ்சங்களில் இருப்பர்.
- அவற்றில் அவர்களுக்கு களைப்பும் ஏற்படாது. அவற்றிலிருந்து அவர்கள் ஒருபோதும் வெளியேற்றப்படவும் மாட்டார்கள்.
- (தூதரே!) நான் மிக அதிகமாக மன்னிப்பவனும், மேன்மேலும் கருணைகாட்டுபவனுமாவேன் என நீர் என் அடியார்களுக்கு அறிவிப்பீராக.
- என்னுடைய ஆக்கினை தான் (உண்மையிலேயே) வேதனையளிக்கக் கூடிய ஆக்கினையாகும் (என்றும் அறிவிப்பீராக).
- நீர் அவர்களுக்கு இப்ராஹீமின் விருந்தினர்களைப் பற்றி (யும்) அறிவிப்பீராக.
- அவர்கள் அவரிடம் வந்து, சாந்தி (உமக்கு உண்டாவதாக) எனக் கூறிய போது, நாங்கள் உங்களு(டைய வருகை)க்கு அஞ்சுகிறோம் என்றார்.
- அவர்கள், நீர் அஞ்ச வேண்டாம். நாங்கள் உமக்கு மிகுந்த ஞானத்தைக் கொண்ட மகனைக் குறித்து நற்செய்தி வழங்குகின்றோம் என்றனர்.
- நான் முதுமையடைந்திருந்தும் நீங்கள் எனக்கு நற்செய்தி வழங்குகிறீர்களா? நீங்கள் எதன்படி எனக்கு (இந்த) நற்செய்தியினை வழங்குகிறீர்கள் (என்பதனைக் கூறுங்கள்) என்று அவர் கூறினார்.
- நாங்கள் உமக்கு உண்மையான நற்செய்தியினைக் கூறியுள்ளோம். எனவே, நீர் நம்பிக்கை இழந்தவராகி விடவேண்டாம் என்று அவர்கள் கூறினர்.
- அவர் கூறினார்: வழிதவறியவர்களைத் தவிர, தம்முடைய இறைவனின் கருணையிலிருந்து எவன்தான் நம்பிக்கை இழப்பான்?
- (மேலும்) அவர் கூறினார்: தூதர்களே! (இப்பொழுது) உங்களுடைய முக்கியமான பணி என்ன?
- அவர்கள் கூறினார்கள்: நாங்கள் குற்றவாளிகளான சமுதாயத்தினரிடம் (அவர்களை அழிப்பதற்காக) அனுப்பப்பட்டுள்ளோம்;
- லூத்தைப் பின்பற்றுபவர்களைத் தவிர. (லூத்தைப் பின்பற்றிய) அவர்கள் எல்லாரையும் நிச்சயமாக நாங்கள் காப்பாற்றுவோம்.
- ஆம், அவருடைய மனைவியைத் தவிர. நிச்சயமாக அவள் பின் தங்கி விடுபவர்களைச் சார்ந்தவளாவாள் என்று நாங்கள் கருதுகிறோம். ரு4
- பின்னர் அந்த தூதர்கள் லூத்தின் சமுதாயத்தினரிடம் வந்த போது,
- அவர்(அவர்களிடம்): நீங்கள் (இந்த ஊருக்கு) அன்னியர்களாக தெரிகிறதே என்றார்.
- அவர்கள் கூறினார்கள்: உண்மை என்னவென்றால், இவர்கள் ஐயம் கொண்டிருக்கும் அ(ந்)த(ஆக்கினையி)னை (ப் பற்றிய செய்தியை) நாங்கள் உம்மிடம் கொண்டு வந்துள்ளோம்.
- நாங்கள் உம்மிடம் உறுதியான செய்தியினைக் கொண்டு வந்துள்ளோம். நிச்சயமாக நாங்கள் உண்மையாளர்களே.
- எனவே நீர் இரவின் (பிற்) பகுதியில் உம்முடைய குடும்பத்தினரை அழைத்துக் கொண்டு சென்று விடுவீராக. நீர் அவர்களுக்கு பின்னாலேயே செல்வீராக. உங்களுள் எவரும் திரும்பிப் பார்க்க வேண்டாம்6. நீங்கள் எங்கு செல்ல வேண்டுமென்று உங்களுக்கு கட்டளையிடப்படுகின்றதோ (அங்கு நீங்களெல்லாரும்) சென்று விடுங்கள்.
- அதிகாலையிலே(யே) இவர்கள் வேருடன் துண்டிக்கப்பட்டு விடுவர் என்ற செய்தியினை நாம் அவருக்குத் திட்டவட்டமாகத் தெரிவித்து விட்டோம்.
- (இப்பொழுது லூத்தைப் பிடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்து விட்டது என்ற எண்ணத்தில்) அந்த நகர மக்கள், மகிழ்ச்சியடைந்தவர்களாக7 அவரிடம் வந்தனர்.
- அவர் கூறினார்: இவர்கள் என் விருந்தினர்கள். நீங்கள் (இவர்களைப் பயமுறுத்தி), என்னை இழிவுபடுத்தாதீர்கள்.
- மேலும் அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள்; என்னை அவமானப்படுத்தாதீர்கள்.
- அவர்கள் கூறினார்கள்: அன்னியர்களை தங்க வைப்பதிலிருந்து நாங்கள் உம்மைத் தடுக்கவில்லையா?
- அவர் கூறினார்: நீங்கள் தீங்கிழைக்க முனைந்துள்ளீர்கள் என்றால் என்னுடைய பெண் மக்கள் (உங்களைச் சேர்ந்தவர்களின் வீடுகளிலேயே மணமுடித்துக் கொடுக்கப்பட்டு) இருப்பதை எண்ணிப் பாருங்கள்.
- (நபியே!) உமது வாழ்வின் மீது ஆணையாக, நிச்சயமாக அவர்கள் தங்களுடைய போதை வெறியில் தடுமாறித் திரிகின்றனர்.
- எனவே (வாக்களிக்கப்பட்ட) அந்த ஆக்கினை பொழுது விடிந்ததும் அவர்களைப் பற்றிக் கொண்டது.
- நாம் அந்த ஊரை, தலைகீழாக ஆக்கினோம்8. பொடிக்கற்களின் மழையை அவர்கள் மீது பொழியச் செய்தோம்.
- நிச்சயமாக இவற்றில் அடையாளங்களைப் படிக்கக் கூடியவருக்கு அறிகுறிகள் (பல) உள்ளன.
- மேலும் அது9 (இன்னும்) நிலைத்திருக்கின்ற ஒரு பெரிய சாலையில் (அமைந்து) உள்ளது10.
- நிச்சயமாக நம்பிக்கை கொண்டோருக்கு, இதில் ஓர் அடையாளம் உள்ளது.
- நிச்சயமாக அய்க்க11 சமுதாயத்தினரும் அநீதி இழைப்பவர்களாகவே இருந்தனர்.
- எனவே! அவர்களையும் நாம் பழி வாங்கினோம். அவ்விரண்டு (இடங்களு)ம் ஒரு நெடுஞ்சாலையில் புதைந்து உள்ளன. ரு5
- நிச்சயமாக, ஹிஜ்ர் நகர மக்களும்12 (எம்முடைய) தூதரைப் பொய்ப்படுத்தினர்.
- அவர்களுக்கு (ம்) நாம் எம்முடைய அடையாளங்களை வழங்கினோம். ஆனால் அவர்கள் அவற்றைப் புறக்கணிப்பவர்களாக இருந்தனர்.
- அவர்கள் மலைகளின் சில பகுதிகளைக் குடைந்தெடுத்து பாதுகாப்புடன் வீடுகளை அமைத்து வந்தனர்.
- அதிகாலையிலேயே, (வாக்களிக்கப்பட்ட) அந்த ஆக்கினை அவர்களைப் பற்றிக் கொண்டது.
- அவர்கள் சேர்த்து வைத்திருந்தது, (அந்த நேரத்தில்) அவர்களுக்குச் சிறிதும் பயனளிக்கவில்லை.
- வானங்களையும், பூமியையும், அவ்விரண்டிற்கும் இடையிலுள்ளவற்றையும் நாம் உண்மையுடன் படைத்தோம். மேலும், (வாக்களிக்கப்பட்ட) அந்த நேரம் நிச்சயமாக வரக்கூடியதேயாகும். எனவே நீர் (அவர்களின் அநீதிகளை) அழகிய பொறுமையுடன் அலட்சியப்படுத்தி விடுவீராக.
- நிச்சயமாக, உம்முடைய இறைவன் சிறந்த படைப்பாளியும், நன்கு அறிபவனுமாவான்.
- நிச்சயமாக நாம் உமக்கு மீண்டும் மீண்டும் ஓதப்படும் ஏழையும் (ஏழு வசனங்களையும்), மகத்துவமிக்க குர்ஆனையும் வழங்கினோம்.
- நாம் தற்காலிகமாகப் பயன் தரும் பொருள்களை வழங்கியவர்களுள், சில பிரிவினர்களின் பால் உம் கண்களை விரிக்க வேண்டாம். அவர்களு(டைய அழிவு)க்கு க் கவலையடைய வேண்டாம். நம்பிக்கையாளர்களுக்கு உமது கருணையின் இறக்கையை விரிப்பீராக.
- மேலும் நீர் கூறுவீராக: நிச்சயமாக, நான் தெளிவான ஓர் எச்சரிக்கையாளனே.
- எவ்வாறெனில், பிரிக்கப்பட்டவர்களுக்கு14 நாம் (தண்டனை) இறக்கினோம்.
- (ஏனெனில்), அவர்கள் குர்ஆனைப் பகுதிகளாக உடைத்தனர்.
- எனவே உம் இறைவன் மீது ஆணையாக! நாம் அவர்களெல்லாரிடமும் கேள்வி(கணக்குக்) கேட்போம்.
- (அதாவது) அவர்கள் செய்து கொண்டிருந்த செயல்களைக் குறித்து (கணக்குக் கேட்போம்).
- (அவர்களுக்குத் தெரிவிக்குமாறு) உமக்குக் கட்டளையிடப்பட்ட செய்தியினை, நீர் தெளிவாக அறிவிப்பீராக; மேலும் இணைவைப்பவர்களைப் புறக்கணித்து விடுவீராக.
- ஏளனம் செய்வோருக்கு எதிரில் உமக்கு நாமே போதுமானவன்.
- (ஏளனம் செய்கின்ற) அவர்கள், அல்லாஹ்வுடன் வேறு கடவுளரை உருவாக்கிக் கொண்டிருக்கின்றனர். எனவே, அவர்கள் (அதன் விளைவை) விரைவில் அறிந்து கொள்வார்கள்.
- அவர்களின் கூற்றினால், உம்முடைய உள்ளம் துன்பமடைவதை நிச்சயமாக நாம் அறிகின்றோம்.
- எனவே, நீர் உம்முடைய இறைவனைப் புகழ்ந்து (அவனது) தூய்மையை எடுத்துரைப்பீராக. (மேலும் அவனுக்கு) சிரம் பணிவோருடன் சேர்ந்து விடுவீராக.
- உமக்கு மரண(நேர)ம் வரும் வரை உம்முடைய இறைவனை வணங்கிக் கொண்டேயிருப்பீராக. ரு6