அதிகாரம் : அந் நஹ்ல்
அருளப்பட்ட இடம்
: மக்கா | வசனங்கள் : 129
பிரிவுகள் : 16
- அளவற்ற அருளாளனும் மேன்மேலும் கருணைகாட்டுபவனுமாகிய அல்லாஹ்வின் பெயரால் (ஓதுகின்றேன்).
- (நிராகரிப்பாளர்களே), அல்லாஹ்வின் கட்டளை நெருங்கி விட்டது. எனவே, நீங்கள் அதுகுறித்து பொறுமை இழந்தவர்களாக இருக்க வேண்டாம். அவன் தூய்மையானவன்; (நிராகரிப்பவர்களாகிய) அவர்கள் (அவனுக்கு) ஏற்படுத்தும் இணையை விட அவன் மிக்க மேலானவன்.
- அவன் வானவர்களை "வணக்கத்திற்குரியவன் என்னைத் தவிர வேறு எவனும் இல்லை. எனவே எனக்கே அஞ்சுங்கள்" என எச்சரிப்பீராக என்ற வஹியுடன், அடியார்களுள் தான் விரும்பியோரிடம் தன் கட்டளை மூலம் இறக்குகிறான்.
- அவன் வானங்களையும், பூமியையும் உண்மையுடன் படைத்தான். அவர்கள் (அவனுக்கு) ஏற்படுத்தும் இணையை விட அவன் மிக்க மேலானவன்.
- அவன் மனிதனை (ஓர் அற்பமான) விந்திலிருந்து படைத்தான்.ஆனால், அந்தோ! அவன் (இறைவனுக்கு எதிராக) மிகவும் பகிரங்கமான குதர்க்கவாதியாகி விடுகிறான்.
- கால்நடைகளையும் அவன் படைத்தான். அவற்றில் உங்களுக்கு வெப்பம் தரும் பொருளும், (மற்றும்) பல பலன்களும் உள்ளன. மேலும் அவற்றி(ன் இறைச்சியி)லிருந்தும் நீங்கள் உண்கிறீர்கள்.
- நீங்கள் அவற்றை (மேய்த்து விட்டு) மாலையில் திருப்பி ஓட்டி வரும் போதும், நீங்கள் அவற்றை காலையில் (மேய) விட்டு விடும்போதும், அவற்றுள் உங்களுக்கு அழகு (மற்றும் பெருமைக்கான) வகைகள் உள்ளன.
- மிக்க கஷ்டத்துடன ன்றி, உங்களால் செல்ல முடியாத ஊருக்கு உங்கள் சுமைகளை அவை சுமந்து செல்கின்றன. நிச்சயமாக, உங்கள் இறைவன் இரக்கமிக்கோனும், மேன்மேலும் கருணை காட்டுபவனுமாவான்.
- அவன் குதிரைகளையும், கோவேறு கழுதைகளையும் நீங்கள் அவற்றின் மேல் ஏறிச் செல்வதற்காகவும், அழகிற்காகவும் (அவன் படைத்தான்). நீங்கள் அறியாதவை(களான மேலும் பல்வேறு வாகனங்)களை அவன் (வருங்காலத்திலும்) படைப்பான்1.
- (மார்க்கத்தின்) நேரான வழி (காட்டுவது) அல்லாஹ்வின் பொறுப்பே. அவற்றுள் (அதாவது வழிகளுள்) சில கோணலானவை. ஆனால், அவன் நாடியிருந்தால் உங்களெல்லாருக்கும் நேர் வழியினை வழங்கியிருப்பான். ரு1
- அவனே மேகங்களிலிருந்து (மழை) நீரை இறக்குகிறான். அதிலே உங்களுக்குக் குடிநீரும் உள்ளது. மேலும் அதிலிருந்தே நீங்கள் (உங்கள் கால்நடைகளை) மேய்க்கும் மரங்களும் (வளர்கின்றன).
- அவன் உங்களுக்காக அதன் மூலம் பயிரையும், ஒலிவ மரத்தையும், பேரீச்ச மரத்தையும், திராட்சைகளையும், எல்லா வகைப் பழங்களையும் உற்பத்தி செய்கிறான். நன்கு சிந்தித்துச் செயலாற்றுபவர்களுக்கு இதில் (தெளிவான) ஓர் அடையாளம் உள்ளது.
- அவன் இரவையும், பகலையும், சூரியனையும், சந்திரனையும் உங்களுக்கு ஊதியமின்றிப் பணி செய்வதற்காக அமைத்துள்ளான். மேலும் (ஏனைய) எல்லா நட்சத்திரங்களும், அவனது கட்டளையினால் (உங்களுக்குப்) பணி செய்வதற்கே நியமிக்கப்பட்டுள்ளன. சிந்தித்துச் செயலாற்றுபவர்களுக்கு நிச்சயமாக இதில் பல அடையாளங்கள் உள்ளன.
- அவன் உங்களுக்காகப் பூமியில் படைத்துள்ள பொருள்கள், பல்வேறு நிறங்க(ளையும், வகைக)ளை(யும்) கொண்டவையாகும். (அவை) உங்களுக்குப் பயனளித்துக் கொண்டிருக்கின்றன. அறிவுரை பெறுபவர்களுக்கு நிச்சயமாக இவற்றில் ஓர் அடையாளம் உள்ளது.
- நீங்கள் (மீன்களின்) புத்தம் புதிய இறைச்சியை உண்பதற்காகவும், நீங்கள் அணிகின்ற நகைக(ளுக்கான பொருள் க)ளை வெளியிலெடுப்பதற்காகவும் அவனே கடலை (உங்களுக்கு) த் தொண்டு செய்ய வைத்தான். (செவியேற்பவரே!) நீர் (கடற்பயணம் செய்வதற்காக) அதில் தண்ணீரைக் கிழித்துக் கொண்டு செல்லும் கப்பல்களைக் காண்கின்றீர். மேலும் நீங்கள் அவனுடைய மற்றுஞ் சில அருள்களைத் தேடுவதற்காகவும், நீங்கள் (அவனுக்கு) நன்றி செலுத்துவதற்காகவும் (அவன் கடலைப் படைத்தான்).
- உங்களுடன் நிலைகுலையாமல் தாங்கி இருக்க பூமியில் அவன் உறுதியான மலைகளை அமைத்தான். நீங்கள் (சேருமிடத்தை அடைய) வழிகளைத் தெரிந்து கொள்வதற்காக ஆறுகளையும், சாலைகளையும் ஏற்படுத்தினான்.
- (மேலும் பல) அடையாளங்களையும் (அவன் ஏற்படுத்தியுள்ளான்). நட்சத்திரங்களின் மூலமும் அவர்கள் சரியான பாதையைப் பெற்றுக் கொள்கின்றனர்.
- எனவே படைப்பவன் படைக்காதவனைப் போலாவானா? இருந்தும் நீங்கள் புரிந்து கொள்வதில்லையா?.
- நீங்கள் அல்லாஹ்வின் அருட்களை எண்ணத் தொடங்கினால், அவற்றை உங்களால் (ஒருபோதும்) கணக்கிட முடியாது. நிச்சயமாக அல்லாஹ் மிக்க மன்னிப்பவனும், மேன்மேலும் கருணைகாட்டுபவனுமாவான்.
- மேலும் நீங்கள் மறைத்து வைப்பதையும், நீங்கள் வெளிப்படுத்துவதையும் அல்லாஹ் அறிகின்றான்.
- மேலும், அவர்கள் அல்லாஹ்வையன்றி எவர்களை அழைக்கின்றனரோ அவர்களால் (பொய்க் கடவுளரால்) எதனையும் படைக்க முடியாது. மேலும் அவர்களே (இறைவனால்) படைக்கப்பட்டவர்கள்.
- அவர்கள் மரணமடைந்தவர்கள்; உயிருள்ளவர்கள் அல்ல. மேலும் எப்போது எழுப்பப்படுவர் என்பதனை (க் கூட) அவர்கள் அறிவதில்லை. ரு2
- உங்களின் வணக்கத்திற்குரியவன் ஏக இறைவனாவான். மறுமையில் நம்பிக்கை கொள்ளாதவர்களின் உள்ளங்கள் (உண்மையை) வெறுப்பவையாகும். மேலும் அவர்கள் பெருமையடிப்பவர்களாவார்கள்.
- அவர்கள் மறைவாகச் செய்வதையும், அவர்கள் வெளிப்படையாகச் செய்வதையும் ஐயத்திற்கிடமின்றி அல்லாஹ் அறிகின்றான் என்பது உறுதி. பெருமையடிப்பவர்களை அவன் ஒருபோதும் நேசிப்பதில்லை.
- மேலும் உங்கள் இறைவன் இறக்கியது (குறித்து) என்ன (நினைக்கிறீர்கள்?) என்று அவர்களிடம் கூறப்பட்டால், இது முன்னோர்களின் கதைகளாகும் என்று அவர்கள் கூறுகின்றனர்.
- (இதன் விளைவாக) அவர்கள் மறுமைநாளில் தம் (பாவச்) சுமைகளை முழுமையாகவும், மற்றும் தாம் அறிவின்றி வழி தவறச் செய்கின்றவர்களின் சுமைகளின் ஒரு பகுதியையும் சும ப்பார்கள். கவனமாகக் கேளுங்கள். அவர்கள் சும ப்பது மிக மோசமானதாகும். ரு3
- இவர்களுக்கு முன்னிருந்தவர்களும் (தமது காலத்து தூதர்களுக்கு எதிராக) சதித் திட்டங்கள் தீட்டினர். ஆனால் அல்லாஹ் அவர்களுடைய கட்டுமானத்தை அடியோடு அழித்தான். எனவே, கூரைகள் அவர்களுக்கு மேலிருந்து அவர்கள் மீது விழுந்தன. அவர்களுக்குச் சிறிதும் தெரியாத இடத்திலிருந்து ஆக்கினை அவர்களிடம் வந்தது.
- பின்னர் மறுமை நாளில் அவன், அவர்களை இழிவுபடுத்துவான். மேலும் அவன், நீங்கள் (என்னுடைய தூதர்களை) எதிர்ப்பதற்குக் காரணமாய் இருந்த என் இணைகள் (அதாவது எனக்கு இணையாக்கப்பட்டவர்கள் இப்பொழுது) எங்கே? என்று கூறுவான். அப்பொழுது அறிவு வழங்கப்பட்டவர்கள், நிச்சயமாக இன்றைய தினம் இழிவும், துன்பமும் நிராகரிப்பவர்களுக்கே (ஏற்படும்) எனக் கூறுவர்.
- (நிராகரிப்பவர்களாகிய) அவர்கள் தமக்குத் தாமே அநீதியிழைத்துக் கொண்டிருக்கும் வேளையில், வானவர்கள் அவர்களை மரணிக்கச் செய்கின்றனர். அப்போது அவர்கள் எந்தத் தீமையையும் நாங்கள் செய்ததில்லை என்று (கூறி முற்றிலும்) பணிந்து விடுகின்றனர். (அவ்வாறன்று); மாறாக, நீங்கள் செய்து வந்ததை அல்லாஹ் நன்கு அறிகிறான் (எனக் கூறப்படும்).
- எனவே(இப்பொழுது) நீங்கள் நகரத்தில் நீண்ட காலம் தங்குவதற்காக, அதன் வாயில்களின் வழியாக நுழையுங்கள். நிச்சயமாக பெருமையடிப்பவர்களின் தங்குமிடம் மிகக் கெட்டதேயாகும்.
- இறையச்சத்துடன் நடப்பவர்களிடம், உங்கள் இறைவன் இறக்கியது (குறித்து) என்ன (நினைக்கிறீர்கள்?) என்று கூறப்படும் போது, அவர்கள் (அது) மிகச் சிறந்தது எனக் கூறுவார்கள். நன்மை செய்வோருக்கு இந்த உலகில் நன்மையே விளையும். (அவர்களுக்குரிய) மறுமையின் வீடு, அதை விடவும் சிறந்தது. (இறைவனுக்கு) அஞ்சுவோரின் வீடு, நிச்சயமாக மிகச் சிறந்த தேயாகும்.
- (அந்த) நிலையான தோட்டங்களில் அவர்கள் நுழைவார்கள். அவற்றுள் ஆறுகள் ஓடும். அவற்றில் அவர்கள் விரும்புவதெல்லாம் அவர்களுக்குக் கிடைக்கும். (இறைவனுக்கு) அஞ்சுவோருக்கு, இவ்வாறே அல்லாஹ் நற்பலன் அளிக்கின்றான்.
- (இறையச்சத்துடன் நடப்பவர்களாகிய) அவர்கள் தூயவர்களாய் இருக்கும் நிலையில், வானவர்கள் அவர்களின் உயிர்களைக் கைப்பற்றி உங்களுக்கு சாந்தி உண்டாவதாக, உங்களுடைய நற்செயல்களுக்குப் பதிலாக நீங்கள் சுவர்க்கத்தில் நுழையுங்கள் என்று கூறுவார்கள்.
- (நிராகரிப்பாளர்களாகிய) அவர்களிடம் வானவர்கள் வருவதையோ, உம்முடைய இறைவனின் தீர்ப்பு வருவதையோ தவிர வேறெதனை அவர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்? இவ்வாறே அவர்களுக்கு முன்னிருந்தவர்களும் செய்தனர். அல்லாஹ் அவர்களுக்கு எந்த அநீதியும் இழைக்கவில்லை. மாறாக, அவர்கள் தமக்குத் தாமே அநீதி இழைத்துக் கொண்டனர்.
- ஆகவே அவர்கள் செய்த தீமை(யின் விளைவு)கள் அவர்களைப் பற்றிக் கொண்டது. அவர்கள் ஏளனம் செய்து கொண்டிருந்தது, அவர்களைச் சூழ்ந்து கொண்டது. ரு4
- இணைவைப்பவர்கள் (இவ்வாறும்) கூறினர். அல்லாஹ் நாடியிருப்பின், நாங்களும், எங்கள் மூதாதையர்களும் அவனைத் தவிர வேறெதனையும் வணங்கியிருக்க மாட்டோம்; மேலும் நாங்கள் அவன் (கட்டளை) இன்றி எதனையும் விலக்கியிருக்க மாட்டோம். அவர்களுக்கு முன் (உண்மையின் பகைவர்களாக) இருந்தவர்களும் அவ்வாறே செய்தனர். (இறைத்தூதை) மிகத்தெளிவாக எடுத்துரைப்பதைத் தவிர தூதர்களுக்கு வேறென்ன பொறுப்புள்ளது? .
- நீங்கள் அல்லாஹ்வை வணங்குங்கள்; தீயவர்களை விட்டு விலகுங்கள் என்ற கட்டளையுடன் ஒவ்வொரு சமுதாயத்திற்கும் நிச்சயமாக நாம் தூதரை அனுப்பினோம். அவர்களுள் சிலருக்கு அல்லாஹ் நேர்வழியை வழங்கினான். மற்றும் சிலருக்கு அழிவு உறுதியாகி விட்டது. எனவே நீங்கள் பூமியில் பயணம் செய்து (நபிமார்களைப் ) பொய்ப்படுத்தியவர்களின் முடிவினைப் பாருங்கள்.
- (தூதரே!) அவர்கள் நேர்வழி பெறவேண்டுமென நீர் மிகுந்த ஆர்வம் கொண்டிருப்பின், வழி தவறச் செய்து கொண்டிருப்பவர்களுக்கு, ஒருபோதும் அல்லாஹ் நேர்வழி காட்ட மாட்டான். மேலும், அவர்களுக்கு எந்த உதவியாளரும் இல்லை.
- மரணமடைந்து விடுபவரை அல்லாஹ் எழுப்ப மாட்டான் என்று அவர்கள் அல்லாஹ்வின் மீது மிகவும் உறுதியான சத்தியங்கள் செய்கின்றனர். (ஆனால், உண்மை) அவ்வாறன்று. (நிறைவேற்றுவதை) அவன் கடமையாகக் கொண்டுள்ள வாக்குறுதியே இது. ஆனால், பெரும்பாலான மக்கள் அறிவதில்லை.
- அவர்கள் கருத்து வேற்றுமை கொண்டிருப்பதை அவர்களுக்கு அவன் தெளிவுபடுத்தவும், தாங்கள் பொய்யர்களாயிருந்தனர் என்பதை நிராகரிப்போர் அறிந்து கொள்வதற்கும் (அவன் அவர்களை நிச்சயமாக எழுப்புவான்).
- நாம் ஒன்றை (ஆக்க) நாடினால், அதனிடம் நாம் 'ஆகுக' என்று மட்டுமே கூறுகிறோம். அது ஆகிவிடுகின்றது. ரு5
- அநீதியிழைக்கப்பட்ட பின்னர், அல்லாஹ்வுக்காக இடம் பெயர்ந்து செல்வோருக்கு நிச்சயமாக நாம் இவ்வுலகில் சிறந்த தங்குமிடத்தை வழங்குவோம். மறுமையின் நற்பலனோ அதைவிடப் பெரிதாகும். அவர்கள் அறிந்திருக்க வேண்டுமே! .
- அத்தகையோர் பொறுமையைக் கடைப்பிடிப்போரும், தம் இறைவனிடம் நம்பிக்கை வைப்போரும் ஆவர்.
- நாம் உமக்கு முன்னர் ஆண்களையே வஹி அறிவித்து(த் தூதர்களாக) அனுப்பியுள்ளோம். நீங்கள் அறியவில்லையாயின் வேதஞானம் பெற்றவர்களிடம் கேளுங்கள்.
- தெளிவான அடையாளங்களுடனும், வேதங்களுடனும் (நாம் அவர்களை அனுப்பினோம்) மேலும் மக்களுக்கு நாம் இறக்கியதை நீர் அவர்களுக்குத் தெளிவாக விளக்குவதற்காகவும், அவர்கள் சிந்தித்துத் தெளிவு பெறுவதற்காகவும் இந்த வேதத்தை நாம் உமக்கு இறக்கினோம்.
- எனவே, தீய திட்டங்கள் தீட்டுவோரை அல்லாஹ், நாட்டிலே இழிவுபடுத்தமாட்டான் என்றோ, அந்த அவர்கள் அறியாத இடத்திலிருந்து அவர்களுக்கு வராது என்றோ அவர்கள் அச்சமற்றிருக்கின்றனரா?.
- அல்லது அவர்கள் அங்குமிங்கும் திரியும் போது, அவன் அவர்களைப் பிடித்துக் கொள்வான் (என்பதிலிருந்து அச்சமற்றிருக்கின்றனரா?) எனவே அவர்கள் (அவனது திட்டங்களைச்) செயலிழக்கச் செய்ய முடியாது.
- அல்லது அவன் அவர்களைப் படிப்படியாகக் குறைத்து அழித்து விடலாம் (என்பதிலிருந்து அச்சமற்றிருக்கின்றனரா?) ஏனெனில் நிச்சயமாக உம்முடைய இறைவன், (நம்பிக்கை கொண்டவர் மீது) இரக்கம் மிக்கோனும், மேன்மேலும் கருணைகாட்டுபவனுமாவான்.
- அவர்கள் இழிவடைந்து கொண்டேயிருந்தும், அவர்கள் அல்லாஹ்விற்கு சிரம் பணிந்தவர்களாக அல்லாஹ் படைத்தவற்றின் நிழல்கள் வலப்பக்கமிருந்தும், இடப்பக்கமிருந்தும், இங்குமங்குமாகச் சென்று கொண்டிருப்பதை ஆராய்ந்து பார்க்கவில்லையா? (இவ்வாறே நபிகள் பெருமானார்(ஸல்) அவர்களின் நிழல் பெருகும். நிராகரிப்போர் இழிவடைந்தே தீருவர்).
- வானங்களிலும், பூமியிலுள்ள உயிரினங்களனைத்தும் அல்லாஹ்வுக்கே சிரம் பணிகின்றன. வானவர்களும் (அவனுக்கே சிரம் பணிகின்றனர்). அவர்கள் பெருமையடிப்பதில்லை.
- அவர்கள் தங்களுக்கு மேலுள்ள தங்கள் இறைவனுக்குப் பயந்து தங்களுக்கு இடப்படும் கட்டளையை நிறைவேற்றுகின்றனர். ரு6
- அல்லாஹ் (எப்போதும் ஒவ்வொரு சமுதாயத்தினரிடமும் இவ்வாறே) கூறினான்: நீங்கள் இரண்டு கடவுளரை உருவாக்கிக் கொள்ளாதீர்கள். (உண்மையிலேயே) வணக்கத்திற்குரியவன் அவன் ஒருவனே. எனவே, நீங்கள் எனக்கு மட்டுமே (அஞ்சுங்கள்).
- வானங்களிலும், பூமியிலுமுள்ளவையெல்லாம் அவனுக்கே உரியன. என்றென்றும் மார்க்கத்தின் எஜமான ன் அவனே. அல்லாஹ்வைத் தவிர வேறெதற்காவது நீங்கள் அஞ்சுவீர்களா?.
- உங்களிடமுள்ள அருட்கொடைகள் எல்லாம் அல்லாஹ்விடமிருந்து கிடைத்தவையாகும். பின்னர் உங்களுக்கு (ஏதேனும்) துன்பம் ஏற்பட்டால், நீங்கள் அவனிடமே (உதவிக்காக) முறையீடு செய்கின்றீர்கள்.
- பிறகு அவன் உங்களிடமிருந்து அந்தத் துன்பத்தை அகற்றினால், உடனே உங்களுள் ஒரு பிரிவினர் தங்கள் இறைவனுக்கு இணை வைக்கின்றனர்.
- இதனால் நாம் அவர்களுக்கு வழங்கியதை அவர்கள் மறுக்கின்றனர். எனவே, நீங்கள் தற்காலிகமான பலன் பெறுங்கள். (இதன் முடிவையும்) நீங்கள் விரைவில் தெரிந்து கொள்வீர்கள்.
- நாம் அவர்களுக்கு வழங்கியதிலிருந்து ஒரு பகுதியினை அவர்கள் தாங்கள் அறியாதவை(களான பொய்க் கடவுளர்) களுக்கென ஒதுக்கி விடுகின்றனர். அல்லாஹ்வின் மீது ஆணையாக! நீங்களாகவே இட்டுக்கட்டி வந்ததை ப்பற்றி நிச்சயமாக நீங்கள் கேட்கப்படுவீர்கள்.
- அவர்கள் அல்லாஹ்வுக்குப் பெண் மக்களை ஏற்படுத்துகின்றனர். அவன் (அதிலிருந்து) தூய்மையானவன். ஆனால் அவர்களுக்கோ, தாங்கள் விரும்புவது (அதாவது ஆண் மக்கள்) கிடைக்கின்றது.
- அவர்களுள் எவருக்காவது பெண் குழந்தை (பிறக்கும்) என்று அறிவிக்கப்பட்டால் அவர் மிகுந்த துயரத்திற்குள்ளாகி அவருடைய முகம் கறுத்து விடுகிறது.
- தமக்கு அறிவிக்கப்பட்டது கெட்ட செய்தி என்று மக்களிடமிருந்து அவர் மறைந்து கொள்கின்றார். அவர் அதை அவமானத்துடன் (உயிர்) வாழ விடுவதா அல்லது மண்ணில் புதைத்து விடுவதா(என்றும் சிந்திக்கின்றார்). கவனமாகக் கேளுங்கள். அவர்கள் செய்கின்ற தீர்மானம் மிகக் கெட்டதாகும்.
- அல்லாஹ்வின் பண்புகள் மிக உயர்ந்தவையாய் இருக்க மறுமையில் நம்பிக்கை கொள்ளாதவர்களின் எடுத்துக்காட்டு தீயது. அவன் வல்லவனும், நுண்ணிய ஞானமுள்ளவனுமாவான். ரு7
- அநீதியிழைத்ததற்காக, அல்லாஹ் அவர்களுக்கு (திருந்த வாய்ப்பளிக்காமல்) தண்டனையளிப்பதாக இருந்தால், அவன் இதில் (பூமியில்) எந்த உயிரினத்தையும் விட்டு வைத்திருக்க மாட்டான். ஆனால் அவன் அவர்களுக்குக் குறிப்பிட்ட ஒரு காலம் வரை கெடு அளிக்கிறான். பிறகு அவர்களின் (தண்டனைக்குரிய) நேரம் வந்து விட்டால், அவர்களால் ஒரு நொடிப்பொழுது பிந்தவும் முடியாது. அதற்கு முந்தவும் முடியாது.
- அவர்கள் (தாம்) வெறுப்பதை அல்லாஹ்வுக்காக ஆக்கிக் கொள்கின்றனர். நிச்சயமாக தங்களுக்கு நல்லது கிடைத்தே தீரும் என்று அவர்களின் நாவுகள் பொய்யுரைக்கின்றன. (ஆனால்) அவர்களுக்கு நெருப்பு (தான்) உள்ளது என்பதும், அதில் அவர்கள் விடப்படுவர் என்பதும் உறுதியானதாகும்.
- அல்லாஹ்வின் மீது ஆணையாக, நாம் உமக்கு முன்னர் எல்லா மக்களுக்கும் தூதர்களை அனுப்பினோம். ஆனால் ஷைத்தான் அவர்களின் (அம் மக்களின் தீய) செயல்களை அவர்களுக்கு அழகு வாய்ந்ததாக்கிக் காட்டினான். எனவே அவனே இன்று அவர்களின் உதவியாளனாக இருக்கிறான். மேலும், அவர்களுக்குத் துன்புறுத்தும் ஆக்கினை உண்டு.
- அவர்கள் கருத்து வேற்றுமை கொண்டிருப்பதை, அவர்களுக்குத் தெளிவு படுத்துவதற்காகவும், நம்பிக்கை கொண்ட மக்களுக்கு ஒரு நேர்வழியாகவும், கருணையாகவுமே அன்றி இவ்வேதத்தை நாம் உம்மீது இறக்கவில்லை.
- மேலும் அல்லாஹ் வானிலிருந்து நீரை இறக்கினான். இதன் மூலம் அவன் பூமிக்கு, அதன் மரணத்திற்குப் பின்னர், புத்துயிர் அளிக்கிறான். (உண்மையை) செவியேற்கும் மக்களுக்கு நிச்சயமாக இதில் ஓர் அடையாளம் உள்ளது. ரு8
- நிச்சயமாக, உங்களுக்குக் கால்நடைகளிலும் ஒரு படிப்பினை உள்ளது. அவற்றின் வயிறுகளில் உள்ளவற்றிலிருந்து, அதாவது சாணத்திற்கும், இரத்தத்திற்கும் இடையிலிருந்து, குடிப்போரை மகிழவைக்கும் தூய்மையான பாலை நாம் உங்களைக் குடிக்க வைக்கிறோம்.
- பேரீச்சம் பழங்களிலிருந்தும், திராட்சைகளிலிருந்தும் நீங்கள் மதுவும், அழகிய உணவும் செய்கின்றீர்கள். சிந்தித்துச் செயலாற்றும் மக்களுக்கு நிச்சயமாக இதில் ஓர் அடையாளம் உண்டு.
- உம் இறைவன் தேனீக்கு (இவ்வாறு) வஹி அறிவித்தான். நீ மலைகளிலும், மரங்களிலும்,(திராட்சை முதலிய செடி, கொடிகளுக்காக) அவர்கள் அமைக்கின்ற பந்தல்களிலும் கூடுகளைக் கட்டிக் கொள்.
- பின்னர் எல்லா வகையான பழங்களிலிருந்தும் தின்று, உன் இறைவனின் எளிதான வழிகளில் தடங்கலின்றிச் செல். (தேனீக்களாகிய) இவற்றின் வயிறுகளிலிருந்து (நீங்கள்) பருகும் பொருளொன்று (அதாவது தேன்) வெளியாகின்றது. அது பல்வேறு நிறங்களைக் கொண்டது. அதில் மக்களுக்கு குணமளிக்கும் தன்மை உள்ளது. சிந்தித்துச் செயலாற்றுபவர்களுக்கு நிச்சயமாக இதில் ஓர் அடையாளம் இருக்கிறது.
- அல்லாஹ் உங்களைப் படைத்தான். பின்னர் அவன் உங்களை மரணிக்கச் செய்கிறான். உங்களுள் வயதின் மிக மோசமான முதுமை நிலைக்கு கொண்டு செல்லப்படுபவரும் சிலர் உள்ளனர். இதன் விளைவாக அவர் அறிவினைப் பெற்றிருந்ததற்குப் பின்னர், சிறிதும் அறிவற்றவராகி விடுகின்றார். நிச்சயமாக அல்லாஹ் எல்லாம் அறிந்த, ஆற்றல் மிக்கவனாவான். ரு9
- அல்லாஹ் உங்களுள் சிலருக்கு மற்றுஞ்சிலரை விட உணவளிப்பதில் சிறப்பினை வழங்கியுள்ளான். (இவ்வாறு) சிறப்பினை வழங்கப்பெற்றவர்கள், தங்களின் வலக்கரங்கள் சொந்தமாக்கிக் கொண்டவர்கள் அதில் தமக்குச் சமமாகிவிடுவார்களோ எனக்கருதி, (தாம் கைப்பற்றியுள்ள) உணவுகளை அவர்களுக்குத் திருப்பிக் கொடுப்பதில்லை. எனவே அவர்கள் அல்லாஹ்வின் அருட்கொடையை மறுக்கின்றார்களா? .
- மேலும் அல்லாஹ் உங்களுக்காக, உங்களிலிருந்தே2 இணைகளை ஆக்கியுள்ளான். மேலும் அவன் உங்களுக்காக, உங்கள் இணைகளிலிருந்து, ஆண் பிள்ளைகளையும், பேரப்பிள்ளைகளையும் ஆக்கினான். மேலும் அவன் உங்களுக்கு தூய்மையான (எல்லாவகைப்) பொருள்களிலிருந்தும் உணவளித்துள்ளான். இதன் பிறகு(ம்), அவர்கள் அழியக் கூடியவற்றை நம்பவும், அல்லாஹ்வின் அருட்களை மறுக்கவும் செய்கின்றார்களா? .
- அவர்கள் அல்லாஹ்வை விட்டு விட்டு வானங்கள், பூமி ஆகியவற்றிலிருந்து எப்பொருளையும் அவர்களுக்குக் கொடுப்பதற்கான ஆற்றல் அற்றவர்களை வணங்குகின்றனர். அந்த ஆற்றல் அவர்களுக்கு இருக்கவும் முடியாது.
- எனவே (இறைவனுக்கு இணை வைப்பவர்களே!) நீங்கள் அல்லாஹ்வுக்கு உவமை கற்பிக்காதீர்கள். நிச்சயமாக அல்லாஹ் அறிகின்றான். நீங்கள் அறிய மாட்டீர்கள்.
- அல்லாஹ் ஓர் அடியாரின் நிலையை இவ்வாறு விளக்குகின்றான். அவர் அடிமையாகவும், எதற்கும் சக்தியற்றவராகவும் இருக்கின்றார். (இன்னொரு அடியாரின் நிலையையும் இவ்வாறு விளக்குகின்றான்). இவருக்கு நாம் நம்மிடமிருந்து வாழ்க்கைக்குத் தேவையான அழகிய பொருளை வழங்கினோம். இவர் அதிலிருந்து மறைமுகமாகவும், வெளிப்படையாகவும் (நம்முடைய வழியில்) செலவு செய்கின்றார். அவ்விருவரும் சமமாவாரா? எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே உரியன. ஆயினும் அவர்களுள் பெரும்பாலார் அறியமாட்டார்கள்.
- அல்லாஹ் மேலும் இரு மனிதரின் நிலையை இவ்வாறு விளக்குகின்றான். அவர்களுள் ஒருவர் ஊமையாகவும், எதற்கும் ஆற்றல் அற்றவராகவும் இருக்கின்றார். அவர் தமது எஜமானருக்குப் பயனற்ற சுமையாகவும் இருக்கின்றார். (அவருடைய எஜமானர்) அவரை எங்கு அனுப்பினாலும் (அவர்) நல்லது எதனையும் கொண்டு வருவதில்லை. எனவே அவரும், நேர்மையுடன் நடக்குமாறு கட்டளையிட்டுத் தாமும் நேரான வழியில் இருக்கும் ஒருவரும் சமமானவர்களாக இருக்க முடியுமா? . ரு10
- வானங்களிலும், பூமியிலுள்ள மறைவான (தைப் பற்றிய ஞானமான)து அல்லாஹ்வுக்கு (மட்டுமே) உரியது. (வாக்களிக்கப்பட்ட) அந்த நேரம் (வருவதைப்) பற்றிய பிரச்சினை கண்ணிமைப்பது போன்றதேயாகும். அல்லது அது (அதனையும் விட) மிக விரைவானதாகும். நிச்சயமாக, அல்லாஹ் எல்லாவற்றிற்கும் முழுமையான ஆற்றல் பெற்றவனாவான்.
- மேலும், அல்லாஹ் உங்களை உங்கள் தாய்மார்களின் வயிறுகளிலிருந்து , நீங்கள் எதனையும் அறியாதவர்களாக இருந்த நிலையில் வெளியில் கொண்டு வந்தான். மேலும், நீங்கள் நன்றி செலுத்த வேண்டும் என்பதற்காக, அவன் உங்களுக்குக் காதுகளையும், கண்களையும், உள்ளங்களையும் அளித்துள்ளான்.
- வானவெளியில் (அல்லாஹ்வின் சட்டத்திற்குக்) கீழ்ப்படிந்துள்ள பறவைகளை அவர்கள்(ஆராய்ந்து) பார்க்கவில்லையா? (அவை உங்களைக் கொத்தித் தின்பதை விட்டும்) அவற்றை அல்லாஹ்வையன்றி வேறு எவரும் தடுத்துக் கொண்டிருக்கவில்லை. நம்பிக்கை கொண்ட மக்களுக்கு நிச்சயமாக இதில் பல அடையாளங்கள் உள்ளன.
- மேலும், அல்லாஹ் உங்கள் வீடுகளை நீங்கள் வாழ்வதற்குரியதாக ஆக்கினான். அவன் உங்களுக்கு கால்நடைகளின் தோல்களிலிருந்தும் வீடுகளை அமைத்தான். அவற்றை நீங்கள் உங்கள் பயணக் காலத்திலும், நீங்கள் தங்கியிருக்கும் காலத்திலும் பயன்பட இலேசானதாக இருக்கக் காண்கின்றீர்கள். அவற்றின் (மிருதுவான) உரோமங்கள், அவற்றின் (கனத்த) மயிர்கள், அவற்றின் முடிகள் ஆகியவற்றிலிருந்து வீட்டு உபயோகப் பொருட்களையும், சிறிது காலத்திற்கான மற்றப் பொருட்களையும் (வழங்கினான்).
- மேலும், அல்லாஹ் படைத்தவற்றுள் உங்களுக்கு நிழல் (தரக்கூடிய பல பொருட்களை) ஏற்படுத்தியுள்ளான். மேலும் மலைகளில் உங்களுக்குப் பாதுகாப்பான இடங்களை அவன் உண்டாக்கியுள்ளான் மேலும் அவன் உங்களை வெப்பத்திலிருந்து காக்கக் கூடிய சட்டைகளையும்3, உங்கள் போரிலிருந்து உங்களைக் காப்பாற்றும் (போர்க் கவசங்களாகிய) சட்டைகளையும் அவன் உங்களுக்காக அமைத்தான். நீங்கள் (அவனுக்கு முழுமையாகக்) கட்டுப்பட்டு நடப்பதற்காக இவ்வாறே அவன் உங்களுக்குத் தன்னுடைய அருட்கொடையை முழுமைப்படுத்துகிறான்.
- எனவே, அவர்கள் (இப்பொழுதும்) புறக்கணித்து விடுவார்களாயின், உமது பொறுப்பு (எமது தூதை) தெளிவாக எடுத்துரைப்பது மட்டுமேயாகும்.
- அவர்கள் அல்லாஹ்வின் (அந்த)அருட்கொடையை (நன்கு) அறிகின்றனர். ஆனால் இதன் பிறகும் அவர்கள் அதனை மறுக்கின்றனர். அவர்களுள் பெரும்பாலார் முற்றிலும் நன்றி கெட்டவர்களாக இருக்கின்றனர். ரு11
- ஒவ்வொரு சமுதாயத்திலிருந்தும் ஒரு சாட்சியை எழுப்பும் நாளை (நினைத்துப் பார்ப்பீராக). அப்போது நிராகரிப்போர் (திருந்திக் கொள்ள) அனுமதிக்கப்பட மாட்டார்கள். மேலும் அவர்கள் (இறை) அருளை வேண்டவும் அனுமதிக்கப்பட மாட்டார்கள்.
- அநீதியிழைத்தவர்கள் (வாக்களிக்கப்பட்ட) அந்தத் தண்டனையைக் காணும் போது, அவர்களுக்கு அது எளிதாக்கப்படவும் மாட்டாது. அவர்களுக்குக் காலக்கெடு அளிக்கப்படவும் மாட்டாது.
- அல்லாஹ்வுக்கு இணைகளை உருவாக்கியவர்கள், தங்கள் இணை(கடவுளர்) களைக் காணும் போது, எங்கள் இறைவா! உன்னையன்றி நாங்கள் அழைத்துக் கொண்டிருந்த எங்களுடைய இணை (கடவுளர்) கள் இவர்களே என்பார்கள். இதற்கு அவர்கள் (பொய்த் தெய்வங்கள்) அவர்களுக்கு, நிச்சயமாக நீங்கள் பொய்யர்களாவீர்கள் எனப் பதிலளிப்பார்கள்.
- (அநீதியிழைத்தவர்களாகிய) அவர்கள் அந்நாளில் அல்லாஹ்விடம் பணிவைக் காட்டுவார்கள். மேலும் அவர்கள் இட்டுக்கட்டியவை அவர்களை விட்டு மறைந்து விடும்.
- எவர்கள் (தாங்களும்) நிராகரித்து, ஏனைய மக்களையும் அல்லாஹ்வின் வழியை விட்டுத் தடுப்பார்களோ, அவர்களுக்கு நாம் தண்டனைக்கு மேல் கூடுதலான தண்டனையைக் கொடுப்போம் ஏனெனில், அவர்கள் குழப்பம் செய்து கொண்டுருந்தனர்.
- நாம் ஒவ்வொரு சமுதாயத்திலும், அவர்களுக்கு எதிராக அவர்களிலிருந்தே சாட்சியொருவரை எழுப்பி, (தூதரே) அவர்கள் அனைவருக்கும் எதிராக நாம் உம்மைச் சாட்சியாக்கிக் கொண்டு வரும் நாளை(யும் நினைத்துப் பாரும்). மேலும் நாம் எல்லாவற்றையும் தெளிவாக விளக்குவதற்காகவும், (எல்லா மக்களுக்கும்) வழிகாட்டியாகவும், (அவர்களுக்கு) கருணையாகவும், (அல்லாஹ்வுக்கு) கட்டுப்பட்டு நடப்போருக்கு நற்செய்தியாகவும் இவ் வேதத்தை நாம் உமக்கு இறக்கினோம். ரு12
- நிச்சயமாக அல்லாஹ் (நீங்கள்) நேர்மையுடன் நடந்து கொள்ளவும், நன்மை செய்யவும், உறவினர்களுக்கு(கொடுப்பதைப் போல)க் கொடுக்கவும் கட்டளையிடுகின்றான். (எல்லா வகை) வெட்கக்கேட்டிலிருந்தும், வெறுக்கத்தக்கவற்றிலிருந்தும், வரம்பு மீறுதல்களிலிருந்தும், அவன் தடுக்கின்றான். நீங்கள் விளங்கிக் கொள்வதற்காக அவன் உங்களுக்கு அறிவுரை வழங்குகின்றான்.
- மேலும் அல்லாஹ்விடம் நீங்கள் செய்திருக்கும் உடன்படிக்கையை நிறைவேற்றுங்கள். அல்லாஹ்வை உங்கள் பொறுப்பாளியாக்கிச் சத்தியங்களை உறுதிப்படுத்திய பின்னர், அவற்றை முறிக்காதீர்கள். நிச்சயமாக, அல்லாஹ் நீங்கள் செய்பவற்றை நன்கறிகின்றான்.
- தான் நூற்ற நூல் வலுவடைந்த பின்னர், அதனை வெட்டித் துண்டு துண்டாக்கிய பெண்ணைப் போன்று நீங்கள் ஆகி விடாதீர்கள். (இவ்வாறே) ஒரு சமுதாயம் இன்னொரு சமுதாயத்தை விட வலுவடைந்துவிடும் என்ற அச்சத்தினால், ஏமாற்றும் வழியாக உங்கள் ஆணைகளை உங்களுக்கிடையே பயன்படுத்தாதீர்கள். நிச்சயமாக, அல்லாஹ் அவற்றைக் கொண்டு உங்களைச் சோதிக்கிறான். மேலும், அவன் மறுமை நாளில் நீங்கள் கருத்து வேறுபாடு கொண்டவற்றை உங்களுக்குத் தெளிவாக்குவான்.
- அல்லாஹ் (கட்டாயமாக) நாடியிருப்பின், அவன் உங்களை(யெல்லாம்) ஒரே சமுதாயத்தினராக்கியிருப்பான். ஆனால், விரும்புபவரை அவன் வழிதவற விட்டு விடுகிறான். மேலும், விரும்புபவருக்கு அவன் நேர்வழியினை வழங்குகின்றான். நீங்கள் செய்து கொண்டிருப்பது குறித்து நிச்சயமாக (மறுமை நாளில்) உங்களிடம் கேள்வி கேட்கப்படும்.
- நீங்கள் உங்கள் சத்தியங்களை உங்களுக்கிடையில் ஏமாற்றுவதற்குரிய வழிவகையாக ஆக்கிக் கொள்ளாதீர்கள். அவ்வாறு செய்வீர்களாயின், (உங்கள்) காலடி உறுதியாக நிலைகொண்ட பின், வழுக்கிவிடும். நீங்கள் அல்லாஹ்வின் வழியிலிருந்து (மக்களை) தடுத்ததற்காக, தீமையைச் சுவையுங்கள். உங்களுக்குக் கொடிய தண்டனை கிடைக்கும்.
- நீங்கள் அல்லாஹ்வுடைய உடன்படிக்கைக்குப் பதிலாக, அற்ப விலை பெறாதீர்கள். நீங்கள் அறிவுடையவர்களாயின், அல்லாஹ்விடமுள்ளது நிச்சயமாக உங்களுக்கு (அதைவிடப் பலமடங்கு) சிறந்ததாகும் (என்பதனைப் புரிந்து கொள்வீர்கள்).
- உங்களிடமுள்ளது, தீர்ந்து போய்விடும். (ஆனால்) அல்லாஹ்விடமுள்ளது (என்றென்றும்) நிலைத்திருக்கக் கூடியதாகும். பொறுமையைக் கடைப்பிடித்தவர்களுக்கு, நிச்சயமாக அவர்கள் செய்ததை விட மிக்க அழகான நற்பலனை நாம் வழங்குவோம்.
- ஆணாயினும், பெண்ணாயினும் எவர் நற்செயல் செய்தாலும், அவர் நம்பிக்கை கொண்டவராக இருப்பின் அவருக்கு நிச்சயமாக நாம் தூய்மையான ஒரு வாழ்வினை வழங்குவோம். மேலும் நாம் அவர்களுக்கு அவர்கள் செய்ததை விட அழகான நற்பலனை வழங்குவோம்.
- (செவியேற்பவரே!) நீர் குர்ஆனை ஓதும் போது, துரத்தப்பட்ட ஷைத்தானி(ன் தீங்கி)லிருந்து அல்லாஹ்விடம் பாதுகாப்புத் தேடுவீராக.
- நிச்சயமாக, நம்பிக்கை கொண்டு தம் இறைவனிடமே நம்பிக்கை வைத்திருப்போரிடத்து, அவனுக்கு (ஷைத்தானுக்கு) எந்த ஆற்றலும் கிடையாது.
- அவனிடம் நட்பு கொண்டவரிடத்தும், (இறைவனுக்கு) இணை வைப்பவர்களிடத்தும் மட்டுமே அவனுக்கு ஆற்றல் உண்டு. ரு13
- நாம் ஓர் அடையாளத்திற்குப் பதிலாக மற்றோர் அடையாளத்தைக் கொண்டு வரும் போது, அல்லாஹ் இறக்குவ(தன் நோக்கத்)தை அவன் நன்கு அறிகின்றான். நீர் ஓர் இட்டுக் கட்டுபவராவீர் என அவர்கள் கூறுகின்றனர். அவ்வாறன்று ; அவர்களுள் பெரும்பாலார் அறியாது இருக்கிறார்கள்.
- நீர் கூறுவீராக: இதனை உமது இறைவனிடமிருந்து உண்மையுடன் தூய ஆவி இறக்கியுள்ளது. இது நம்பிக்கையாளர்களை (நம்பிக்கையில்) உறுதிப்படுத்தவும், கட்டுப்பட்டு நடப்போருக்கு வழிகாட்டியாகவும், நற்செய்தியாகவும் இருக்கிறது.
- இதனை ஒரு மனிதரே அவருக்குக் கற்றுக் கொடுக்கின்றார் என்று அவர்கள் கூறுவதை , நிச்சயமாக நாம் அறிவோம். அவர்கள் குறிப்பிடுகின்றவரின் மொழி வேற்றுமொழியாகும். ஆனால், இது (குர்ஆனின் மொழியோ) தெளிவான அரபி மொழியாகும்.
- அல்லாஹ்வின் அடையாளங்களிடம் நம்பிக்கை கொள்ளாதவருக்கு, அல்லாஹ் நேர்வழியினை வழங்குவதில்லை. மேலும் அவர்களுக்கு வேதனை தரும் ஆக்கினை உண்டு.
- அல்லாஹ்வின் அடையாளங்களிடம் நம்பிக்கை கொள்ளாதவர்கள், பொய்யைப் புனைந்து கூறுகின்றனர். மேலும் இத்தகையவர்களே (அதிகமாக) பொய்யுரைப்பவர்களாவார்கள்.
- எவர் நம்பிக்கை கொண்ட பின் அல்லாஹ்வை மறுப்பாரோ" (ஆனாலும்) நம்பிக்கையில் அவருடைய உள்ளம் திருப்தி பெற்ற நிலையில் கட்டாயத்திற்கு உள்ளானவரைத் தவிர " எவர் நிராகரிப்பிற்கு உள்ளத்தை திறந்து விடுவாரோ அவர் மீது அல்லாஹ்வின் சாபம் இருக்கும். மேலும் அவர்களுக்கு பெருந்தண்டனை உண்டு.
- ஏனென்றால், அவர்கள் இவ்வுலக வாழ்க்கையை மறுமையை விட (மிகுதியாக) நேசித்ததே யாகும். மேலும் நிராகரிக்கும் சமுதாயத்திற்கு அல்லாஹ் வழி காட்ட மாட்டான்.
- அவர்களின் உள்ளங்கள், அவர்களின் காதுகள், அவர்களின் கண்கள் ஆகியவற்றின் மீதே அல்லாஹ் முத்திரையிட்டு விட்டான். இத்தகையோரே முற்றிலும் கவனமற்றவர்களாக இருக்கின்றனர்.
- மறுமையில் நஷ்டமடைபவர்கள் இவர்களே என்பதில் எவ்வித ஐயமும் இல்லை.
- துன்பத்திற்காளாக்கப்பட்ட பின்னர், இடம்பெயர்ந்து சென்று அறப்போர் செய்து, உறுதியாக நிலைத்து இருந்தவர்களுக்காகவே உம்முடைய இறைவன் இருக்கின்றான். நிச்சயமாக, உம்முடைய இறைவன் இதன்பின்னர் மிக்க மன்னிப்பவனும் மேன்மேலும் கருணைகாட்டுபவனுமாவான். ரு14
- (இத்தகு வெகுமதி மிகவும் சிறப்பான முறையில் ஒரு நாளில் வெளிப்படும்). அந்நாளில் ஒவ்வொரு ஆன்மாவும் தன்னைப் பற்றியே வாதாடிக் கொண்டிருக்கும். ஒவ்வொரு ஆன்மாவுக்கும் அது செய்ததற்கு (ரிய கூலி) முழுமையாகக் கொடுக்கப்படும். மேலும் அவர்களுக்கு (எவ்வகையிலும்) அநீதியிழைக்கப்பட மாட்டாது.
- அல்லாஹ் (உங்களுக்குப் புரிய வைப்பதற்காக) ஓர் ஊரை4 எடுத்துக்காட்டாக கூறி விளக்குகின்றான். அது அமைதியாகவும், அச்சமற்றதாகவும் இருந்தது. அதற்குரிய உணவு எல்லாவிடத்திலிருந்தும் தாராளமாக அதற்குக் கிடைத்தது. (இதன்) பிறகு(ம்) அது அல்லாஹ்வின் அருட்கொடைகளுக்கு நன்றி செலுத்த மறுத்தது. எனவே, அவர்களின் செயலின் காரணமாக அல்லாஹ் அவர்களுக்குப் பசி, பயம் ஆகியவற்றின் சுவையைச் சுவைத்துப் பார்க்குமாறு செய்தான்.
- நிச்சயமாக, அவர்களிடம் அவர்களிலிருந்தே ஒரு தூதர் வந்து விட்டார். ஆனால், அவர்கள் அவரைப் பொய்ப்படுத்தினார்கள். எனவே அவர்கள் அநீதியிழைத்துக் கொண்டிருந்த நிலையில், (நமது) தண்டனை அவர்களைப் பிடித்துக் கொண்டது.
- அல்லாஹ் உங்களுக்கு வழங்கியதிலிருந்து அனுமதிக்கப்பட்ட, தூய்மையானதையே உண்ணுங்கள். நீங்கள் அவனையே வணங்குகின்றீர்கள் என்றால் அல்லாஹ்வுடைய அருட்கொடைக்கு நன்றி செலுத்துங்கள்.
- தானாகச் செத்ததையும், இரத்தத்தையும், பன்றி இறைச்சியையும், அல்லாஹ் அல்லாத வேறு பெயர் கூறப்பட்ட பொருள்களையுமே அவன் உங்களுக்கு விலக்கியுள்ளான். ஆனால், (ஷரிஅத்திற்கு) முரண்பட எண்ணமில்லாமலும், வரம்புகளை மீறுவதற்கான எண்ணம் சிறிதும் இல்லாத நிலையிலும் (அவற்றுள் ஏதாவது பொருளை உண்பதற்குக்) கட்டாயத்திற்கு உள்ளாக்கப்பட்டால், அல்லாஹ் மிக்க மன்னிப்பவனும், மேன்மேலும் கருணைகாட்டுபவனுமாவான் (என்பதனை நினைவில் கொள்க).
- உங்கள் நாவுகள் கூறுகின்ற பொய்கள் மூலம், இது அனுமதிக்கப்பட்டது என்றும் இது விலக்கப்பட்டது என்றும் கூறாதீர்கள். (அவ்வாறு கூறினால்) நீங்கள் அல்லாஹ்விற்கு எதிராகப் பொய்யைப் புனைந்து கூறுபவர்களாகி விடுவீர்கள். அல்லாஹ்விற்கு எதிரில் பொய்யைப் புனைந்து கூறுபவர்கள் ஒருபோதும் வெற்றி பெறுவதில்லை.
- (இவ்வுலகம்) தற்காலிகமான சம்பாத்தியமாகும். (அவ்வாறு பொய்யுரைப்பதன் விளைவாக) அவர்களுக்கு வேதனைக்குரிய ஆக்கினை (விதிக்கப்பட்டு) உள்ளது.
- நாம் உமக்கு விலக்கியவற்றை இதற்கு முன்னர், நாம் யூதர்களுக்கும் விலக்கியிருந்தோம். நாம் அவர்களுக்கு (இக் கட்டளை மூலம்) அநீதியிழைக்கவில்லை. மாறாக, அவர்கள் (இக் கட்டளைக்கு மாறு செய்து) தமக்குத் தாமே அநீதியிழைத்துக் கொண்டிருந்தனர்.
- பின்னர் அறியாமையினால் (ஏதாவது) தீமை செய்ததன் பிறகு, (அதற்காகக்) கழிவிரக்கங் கொண்டு (தங்கள் தவற்றைத்) திருத்திக் கொள்பவர்களை அவற்றிற்குப் பின்னர், உம்முடைய இறைவன் மிக்க மன்னிப்பவனும் (அத்தகையவர்களுக்கு) மேன்மேலும் கருணைகாட்டுபவனுமாவான் (என்பதனை நினைவில் கொள்ளுங்கள்). ரு15
- நிச்சயமாக, இப்ராஹீம் (தங்களிலே) ஒரு சமுதாயமாகவும், அல்லாஹ்விற்கு கட்டுப்பட்டவராகவும், எப்போதும் (அவன்பால்) சாய்ந்தவராகவும் இருந்தார். அவர் இணை வைப்பவர்களைச் சார்ந்தவராயிருந்ததில்லை.
- (அவர்) அவனுடைய அருட்கொடைகளுக்கு நன்றி செலுத்துபவராயிருந்தார். அவன் அவரைத் தேர்ந்தெடுத்தான். மேலும், ஒரு நேரான பாதையில் அவரை நடத்தினான்.
- நாம் அவருக்கு இவ்வுலகில் (பெரும்) நன்மையினை வழங்கினோம். மேலும், நிச்சயமாக அவர் மறுமையிலும் நன்மக்களைச் சார்ந்தவராவார்.
- (தூதரே! எமக்கு) முழுமையாகக் கட்டுப்பட்டு நடப்பவரான இப்ராஹீமின் நடைமுறையினை , நீர் பின்பற்றுவீராக என்று நாம் உமக்கு வஹி அறிவித்தோம். அவர் இணை வைப்பவர்களைச் சார்ந்தவராகயிருக்கவில்லை.
- இது குறித்து கருத்து வேற்றுமை கொண்டிருந்தவர்களுக்கே 'ஸபத்' விதிக்கப்பட்டிருந்தது. அவர்கள் கருத்து வேற்றுமை கொண்டிருந்தது குறித்து, நிச்சயமாக உம்முடைய இறைவன் மறுமை நாளில் அவர்களுக்கிடையில் தீர்ப்பு வழங்குவான்.
- நீர் நளினமாகவும், அழகிய அறிவுரையைக் கொண்டும் உம் இறைவனின் வழியில் அழைப்பீராக! மேலும், அவர்களுடன் மிக அழகிய முறையில் கருத்து பரிமாற்றம் செய்வீராக! அவனுடைய வழியிலிருந்து தவறியவர்களையும், நேரான வழியில் இருப்பவர்களையும் நிச்சயமாக உம்முடைய இறைவன் நன்கறிகின்றான்.
- நீங்கள் (அநீதி இழைத்தவர்களுக்கு) தண்டனை வழங்கினால், உங்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியின் அளவிற்கே, நீங்கள் தண்டனை வழங்க வேண்டும். ஆனால், நீங்கள் பொறுத்துக் கொண்டால், நிச்சயமாக அது பொறுமையுடையோருக்கு மிகச் சிறந்ததாகும்.
- நீர் பொறுமையுடன் செயல்படுவீராக! நிச்சயமாக உமது பொறுமையானது அல்லாஹ்வி(ன் உதவியி)னாலேயே ஆகும். அவர்களுக்காக நீர் கவலையடையவோ, அவர்களின் சூழ்ச்சிகளினால் துயரத்தில் இருக்கவோ வேண்டாம்.
- நிச்சயமாக அல்லாஹ் இறையச்சமுடையவர்கள் உடனும், நன்மை செய்கின்றவர்களுடனும் இருக்கின்றான். ரு16