14- இப்ராஹீம்

அதிகாரம் : இப்ராஹீம்

அருளப்பட்ட இடம் : மக்கா | வசனங்கள் : 53
பிரிவுகள் : 7



  1. அளவற்ற அருளாளனும், மேன்மேலும் கருணைகாட்டுபவனுமாகிய அல்லாஹ்வின் பெயரால் (ஓதுகின்றேன்).
  2. அலிஃப் லாம் ரா 1. (இது) ஒரு வேதநூல். நீர் மக்களை அவர்களின் இறைவனின் கட்டளையால் இருள்களிலிருந்து ஒளியின்பால் வெளியேற்றி, மிகைத்தோனும், புகழ்களுக்கு உரியோனுமாகிய அவர்களின் இறைவனின் வழியில் கொண்டு செல்ல நாம் இதனை உமக்கு இறக்கினோம்.
  3. (மிகைத்தோனும், புகழுக்குரியோனுமாகிய அந்த இறைவன்) அல்லாஹ்(வேயாவான்). வானங்களிலும், பூமியிலுமுள்ளவை எல்லாம் அவனுக்குரியனவேயாகும்.(அவனை) மறுப்பவர்களுக்குக் கடினமான ஒரு தண்டனை (விதிக்கப்பட்டு) உள்ளது.
  4. (நிராகரிக்கின்ற) இவர்கள், மறுமையை விட இவ்வுலக வாழ்க்கைக்கு முதன்மை அளிக்கின்றனர். (மற்றவர்களையும்) அல்லாஹ்வின் வழியிலிருந்து தடுத்து, அதனைக் கோணலாக்கவும் நாடுகின்றனர். இவர்கள் தவறான வழியில் வெகுதூரம் சென்று விட்டனர்.
  5. ஒவ்வொரு தூதரும் தமது சமுதாயத்தினருக்கு(நம்முடைய போதனைகளை )த் தெளிவாக எடுத்துரைப்பதற்கு, அவர்களுடைய மொழியிலேயே (அவருக்கு வஹி அறிவித்து) அவரை அனுப்பினோம். பின்னர் அல்லாஹ் தான் விரும்புகின்றவரை தவறான வழியில் செல்ல விடுகின்றான். மேலும், தான் விரும்புகின்றவருக்கு (நேர்) வழி காட்டுகின்றான். அவன் முற்றிலும் மிகைத்தவனும், நுட்பமான ஞானமுள்ளவனுமாவான்.
  6. (உமக்கு முன்னர்) மூஸாவை(யும்) நாம் நம்முடைய அடையாளங்களுடன் (இவ்வாறு கட்டளையிட்டு) அனுப்பினோம். நீர், உம்முடைய சமுதாயத்தினரை இருள்களிலிருந்து ஒளியின் பக்கம் வெளியேற்றுவீராக. மேலும், அல்லாஹ்வின் அருட்களையும், அவனுடைய தண்டனைகளையும் அவர்களுக்கு ஞாபகமூட்டுவீராக. (ஏனெனில்) நிச்சயமாக, முழுமையாகப் பொறுமையினை மேற்கொண்டு, முழுமையாக நன்றி செலுத்தக்கூடிய ஒவ்வொருவருக்கும் இதில் பல அடையாளங்கள் உள்ளன.
  7. (செவியேற்பவரே!) மூஸா தம் சமுதாயத்தினரிடம் இவ்வாறு கூறிய நேரத்தை (யும் நினைத்துப் பாரும். என் சமுதாயத்தினரே!), ஃபிர்அவ்னைச் சேர்ந்தவர்கள், உங்களுக்குக் கடுமையான தண்டனையளித்துக் கொண்டிருந்த நிலையில், உங்களை அவர்களிடமிருந்து அல்லாஹ் காப்பாற்றிய போது அவன் உங்களுக்குச் செய்த அருளை நினைத்துப் பாருங்கள். மேலும், அவர்கள் உங்கள் ஆண்மக்களைக் கொன்றும், உங்கள் பெண்களை வாழவும் விட்டு வந்தனர். அதில் உங்கள் இறைவனிடமிருந்து (உங்களுக்குப்) பெரும் சோதனை இருந்தது. ரு1
  8. நீங்கள் நன்றி செலுத்துபவர்களாக விளங்கினால், நான் உங்களுக்கு மேலும் அதிகமாக வழங்குவேன். நீங்கள் நன்றிகொன்றவர்களாய் விடுவீர்களாயின், நிச்சயமாக என் தண்டனை கடினமானது என உங்கள் இறைவன் அறிவித்த நேரத்தையும் (நினைத்துப் பாருங்கள்).
  9. மூஸா (தம் சமுதாயத்தினரிடம் இவ்வாறு கூறினார்:) நீங்களும் (மற்றும்) பூமியில் வாழ்பவர்கள் எல்லாரும் ஒருங்கிணைந்து நிராகரித்து விட்டால் (கூட அதனால் இறைவனுக்கு எந்தத் தீங்கும் ஏற்படுத்த முடியாது. ஏனெனில்) நிச்சயமாக அல்லாஹ் தேவைகளற்றவனும், பெரும் புகழுக்குரியவனுமாவான்.
  10. உங்களுக்கு முன்னர் தோன்றிய நூஹின் சமுதாயத்தினர், ஆது, ஸமூது சமுதாயத்தினர், அவர்களுக்குப் பின்னர் தோன்றியவர்கள் ஆகியோர் பற்றிய (நடுக்கத்தை உண்டாக்கும்) செய்தி உங்களுக்குக் கிடைக்கவில்லையா?. (இப்பொழுது) அவர்களைப் பற்றி அல்லாஹ்வைத் தவிர வேறெவருக்கும் தெரியாது. அவர்களிடம் அவர்களின் தூதர்கள் மிகத்தெளிவான அடையாளங்களுடன் வந்தனர். (அப்போது) அவர்கள், அவர்களின் செய்தியினை ஏற்றுக் கொள்ளாமல், கோபத்தால் விரல்களைக் கடித்தனர். நீங்கள் எதனுடன் அனுப்பப்பட்டுள்ளீர்களோ அ(ந்தப் போ)தனை(யை) நாங்கள் மறுக்கின்றோம். நீங்கள் எங்களை எதன்பால் அழைக்கின்றீர்களோ, அது குறித்து நாங்கள் மன அமைதியினைக் குலைக்கக் கூடிய ஐயத்தில் இருக்கின்றோம் என்றனர்.
  11. அவர்களின் தூதர்கள் (அவர்களிடம் இவ்வாறு) கூறினர்: வானங்களையும், பூமியையும் படைத்தவனாகிய அல்லாஹ்வைக் குறித்து உங்களுக்கு ஏதேனும் ஐயம் உள்ளதா?. அவன் உங்கள் பாவங்களில் சிலவற்றை மன்னித்து, குறிப்பிட்ட ஒரு காலம் வரை உங்களுக்கு காலக்கெடு அளிப்பதற்காக அவன் உங்களை அழைக்கிறான். இதற்கு அவர்கள் கூறினர்: நீங்கள் எங்களைப் போன்ற மனிதர்களே ஆவீர்கள். எங்கள் மூதாதையர் வணங்கி வந்ததிலிருந்து எங்களை அகற்றிவிட நீங்கள் விரும்புகிறீர்கள். எனவே, ஏதாவதொரு தெளிவான அடையாளத்தை எங்களிடம் கொண்டு வாருங்கள்.
  12. அவர்களின் தூதர்கள் அவர்களிடம் இவ்வாறு கூறினர்: நாங்கள் உங்களைப் போன்ற மனிதர்கள் தாம் (என்பது உண்மையே) ஆனால் அல்லாஹ் தன் அடியார்களுள், தான் விரும்புபவருக்கு அருள் செய்கின்றான். நாங்கள் அல்லாஹ்வின் கட்டளையின்றி, உங்களிடம் எந்த அடையாளத்தையும் கொண்டு வருவதென்பது எங்களால் இயன்றதன்று. நம்பிக்கை கொண்டவர்கள் அல்லாஹ்விடமே நம்பிக்கை வைத்திருக்க வேண்டும்.
  13. அவன் எங்கள் (நிலைகளுக்கு ஏற்ற) வழிகளை எங்களுக்குக் காட்டி இருக்க, நாங்கள் அல்லாஹ்விடம் நம்பிக்கை வைக்காமலிருப்பதற்கு எங்களுக்கு என்ன (நேர்ந்தது)?. மேலும், நீங்கள் எங்களுக்கு இழைத்த துன்பங்களை நிச்சயமாக நாங்கள் பொறுத்தே வருவோம். எனவே நம்பிக்கை வைப்போர் அல்லாஹ் மீதே நம்பிக்கை வைக்க வேண்டும். ரு2
  14. நிராகரித்தவர்கள் தங்கள் தூதர்களிடம், கட்டாயம் நாங்கள் உங்களை எங்கள் நாட்டிலிருந்து வெளியேற்றி விடுவோம். அல்லது நீங்கள் (கட்டாயத்திற்குள்ளாக்கப்பட்டு) எங்கள் மார்க்கத்திற்கே திரும்பி வருவீர்கள் என்றனர். அப்போது அவர்களின் இறைவன் அவர்களுக்கு (இவ்வாறு) வஹி அறிவித்தான்: நிச்சயமாக நாம் இந்த அநீதியிழைப்பவர்களை அழித்து விடுவோம்.
  15. மேலும் அவர்களுக்குப் பின்னர் கட்டாயம் நாம் உங்களை இந்த நாட்டில் வாழ வைப்போம். இ(ந்த வாக்குறுதியான)து என் (மேலான) இடத்தைக் கண்டு அஞ்சி, எச்சரிக்கையைக் கொண்ட என் முன்னறிவிப்புகளுக்கு அஞ்சுபவருக்கே உரியது.
  16. அவர்கள் (தமது) வெற்றிக்காக வேண்டினர். (ஆயினும்) தீமைமிக்கவரும், (உண்மைக்கு) எதிரியுமாகிய ஒவ்வொருவரும் தோல்வியுற்றனர்.
  17. அவர்களுக்கு முன்னால் உள்ளது நரகமே. அவன் கொதிக்கும் நீரைக் குடிக்க வைக்கப்படுவான்.
  18. விழுங்க முடியாத அதனை அவன் வாய் நிறைய உறிஞ்சுவான். எல்லா இடத்திலிருந்தும் அவனுக்கு மரணம் வரும். ஆனால் அவன் மரணமடைய மாட்டான். இதற்கு அப்பாலும் கடினமான தண்டனை (அவனுக்கு) உள்ளது.
  19. தங்கள் இறைவனை (அதாவது அவன் கட்டளைகளை) மறுத்தவர்களின் செயல்களின் உதாரணம், புயற்காற்றைக் கொண்ட ஒரு நாளில் காற்று வேகமாக அடித்துச் சென்று விட்ட சாம்பலைப் போன்றதாகும். அவர்கள் (தங்கள் வருங்காலத்திற்காகச்) சம்பாதித்ததில் அவர்களுக்கு எந்த அதிகாரமும் இருக்காது. இதுவே மிகவும் மோசமான அழிவாகும்.
  20. (செவியேற்பவரே!) அல்லாஹ் வானங்களையும், பூமியையும் உண்மையுடன் படைத்திருப்பதை நீர் காணவில்லையா? அவன் விரும்பினால் உங்களை அழித்து விட்டு (உங்களுக்குப் பதிலாக) வேறொரு புதிய படைப்பைக் கொண்டு வந்து விடுவான்.
  21. இவ்வாறு செய்வது அல்லாஹ்வுக்கு எவ்வகையிலும் கடினமானதன்று.
  22. அவர்களெல்லாரும் அல்லாஹ்வின் முன் வந்து சேர்வார்கள். அப்போது (அவர்களில்) பலவீனமானவர்கள் (எனக் கருதப்பட்டவர்கள்) பெருமையடித்தவர்களிடம், நாங்கள் உங்களையே பின்பற்றியிருந்தோம் ; எனவே (இப்பொழுது) உங்களால் அல்லாஹ்வின் தண்டனையை எங்களிடமிருந்து சிறிதளவேனும் அகற்ற முடியுமா? என்பர். இதற்கு அவர்கள் அல்லாஹ் எங்களுக்கு நேர்வழியினை வழங்கியிருந்தால், நாங்களும் உங்களுக்கு நேர்வழியினை வழங்கியிருப்போம். (ஆனால் இப்பொழுது எதுவும் செய்ய முடியாது. இந்த நேரத்தில்) நாங்கள் பதற்றமடைவதும், பொறுமையைக் கடைப்பிடிப்பதும் எங்களுக்கு ஒன்றே. தப்பித்துக் கொள்வதற்கான எந்த வழிவகையும் எங்களுக்கில்லை என்று (பதில்) கூறுவர். ரு3
  23. பிரச்சினைகளுக்குத் தீர்ப்பு வழங்கப்பட்ட பின்னர், ஷைத்தான் கூறுவான்: நிச்சயமாக அல்லாஹ் உங்களுக்கு உண்மையான வாக்குறுதி அளித்தான். நானும், உங்களிடம் வாக்குறுதி அளித்தேன். ஆனால் நான் உங்களுக்கு நிறைவேற்றவில்லை. எனக்கு உங்கள் மீது எந்த ஆதிக்கமும் இருந்ததில்லை. நான் உங்களை என்பால் அழைத்தேன். நீங்கள் நான் கூறியதை ஏற்றுக் கொண்டீர்கள். (அவ்வளவு தான்). எனவே, (இப்பொழுது) நீங்கள் என்னைப் பழிக்காதீர்கள். உங்களையே நீங்கள் பழித்துக் கொள்ளுங்கள். (இப்போது) என்னாலும் உங்களுடைய முறையீட்டைக் கேட்க முடியாது. என்னுடைய முறையீட்டை நீங்களும் கேட்க முடியாது. நீங்கள் என்னை அல்லாஹ்விற்கு இணையாக ஆக்கி வைத்திருந்த தை ஏற்கனவே நான் நிராகரித்து விட்டேன். (அல்லாஹ் கூறுவான்): அநீதி இழைப்போருக்கு நிச்சயமாக வேதனையளிக்கும் தண்டனை (விதிக்கப்பட்டு) உள்ளது.
  24. நம்பிக்கை கொண்டு நற்செயல்களைச் செய்பவர்கள் , தம் இறைவனின் கட்டளையினால் தோட்டங்களில் நுழையுமாறு செய்யப்படுவர். அவற்றில் ஆறுகள் ஓடும். அவர்கள் அவற்றில் என்றென்றும் வாழ்ந்து வருவர். அங்கு அவர்களின் வாழ்த்து, சாந்தி (உண்டாவதாக) என்பதேயாகும். 
  25. (செவியேற்பவரே!) தூய்மையான வாக்கு பற்றிய உண்மை நிலையை அல்லாஹ் எவ்வாறு விளக்கியுள்ளான் என்பதனை நீர் காணவில்லையா? அது தூய்மையான ஒரு மரத்தைப் போன்றது. அதன் வேர் உறுதியாக (நிலைபெற்று) உள்ளது. அதன் கிளை வானத்தை எட்டியுள்ளது.
  26. ஒவ்வொரு காலத்திலும், அது தன் இறைவனின் அனுமதியுடன் தனது (புத்தம் புதிய) பழத்தை வழங்குகின்றது2. மக்கள் அறிவுரையினைப் பெற வேண்டுமென்பதற்காக அல்லாஹ் அவர்களுக்கு உருவகங்களை விளக்குகின்றான்.
  27. கெட்டவாக்கின் நிலை பூமியிலிருந்து பிடுங்கி எறியப்பட்ட, மேலும் தனக்கு எங்கும் நிலையில்லாத கெட்ட மரத்தைப் போன்றதாகும்3.
  28. நிலைத்து நிற்கக் கூடிய (தும்,தூய்மையானதுமான) அந்த வாக்கைக் கொண்டு அல்லாஹ் நம்பிக்கை கொண்டவர்களுக்கு இவ்வுலக வாழ்க்கையிலும், மறுமையிலும் உறுதியை வழங்குகிறான். மேலும் அநீதியிழைப்பவர்களை அல்லாஹ் (வழி) தவற விடுகிறான். மேலும் அல்லாஹ் தான் விரும்புவதைச் செய்கின்றான். ரு4
  29. (செவியேற்பவரே!) அல்லாஹ்வின் அருளை, நன்றிகேடாக மாற்றி விட்டவர்(களின் நிலை)களை நீர் பார்க்கவில்லையா? மேலும் அவர்கள் தங்கள் சமுதாயத்தினரை அழிவிற்குரிய வீட்டில் இறக்கி விட்டனர்.
  30. (அதாவது) அவர்கள் நரகிற்குள் நுழைவர். அது தங்குவதற்கு மிகத் தீய இடமாகும்.
  31. மேலும் அவர்கள் (மக்களை) அல்லாஹ்வின் வழியிலிருந்து தவறச் செய்வதற்காக அவனுக்கு நிகராக இணைகளை ஆக்கிக் கொண்டனர். நீர் கூறுவீராக: தற்காலிகமான பயனைப் பெற்றுக் கொள்ளுங்கள். பின்னர் நிச்சயமாக நீங்கள் சேருமிடம் நெருப்பேயாகும்.
  32. (தூதரே!) நீர் நம்பிக்கை கொண்டுள்ள என் அடியார்களிடம் எவ்விதமான கொடுக்கல், வாங்கலும் இல்லாத, மேலும் எத்தகு நெருங்கிய நட்பும் இல்லாத நாள் வருவதற்கு முன்னர், அவர்கள் தொழுகையினைச் சிறந்த முறையினில் நிறைவேற்றி வருமாறும் நாம் அவர்களுக்கு வழங்கியதிலிருந்து மறைமுகமாகவும், வெளிப்படையாகவும் (நம்முடைய வழியில்) செலவு செய்து வருமாறும் கூறுவீராக.
  33. அல்லாஹ்வே வானங்களையும், பூமியையும் படைத்து, மேகங்களிலிருந்து நீரை இறக்கி, அதன்மூலம் உங்களுக்குப் பழங்களி(ன் வகையி)லிருந்து உணவைப் படைத்தான். கப்பல்கள் அவனுடைய கட்டளையினால் கடலில் செல்ல வேண்டுமென்பதற்காக, அவன் அவற்றை(ச் செலுத்தக்கூடிய காற்றை)க் கூலியின்றி உங்களுக்குத் தொண்டு செய்ய வைத்தான். (இவ்வாறே) அவன் ஆறுகளை(யும்) ஊதியமின்றி உங்களுக்குத் தொண்டு செய்ய வைத்தான்.
  34. அவன் சூரியனையும், சந்திரனையும் ஊதியமின்றி உங்களுக்குத் தொண்டு செய்ய வைத்தான். அவை(இரண்டும் தம்மிடம் ஒப்படைக்கப்பட்ட) பணியினை ஓய்வின்றிச் செய்து வருகின்றன. அவன் இரவையும், பகலையும் ஊதியமின்றி உங்களுக்குத் தொண்டு செய்ய வைத்தான்.
  35. நீங்கள் அவனிடம் கெஞ்சிக் கேட்டவற்றையெல்லாம் அவன் உங்களுக்கு வழங்கினான். நீங்கள் அல்லாஹ்வின் அருள்களை எண்ணத் தொடங்கினால், அவற்றை உங்களால் கணக்கிட முடியாது. நிச்சயமாக மனிதன் மிக்க அநீதியிழைப்பவனும் மிக்க நன்றிகெட்டவனும் ஆவான். ரு5
  36. (செவியேற்பவரே!) இப்ராஹீம் இவ்வாறு கூறிய நேரத்தை (நினைத்துப் பாரும்). என் இறைவா! இந்த (மக்கா) நகரத்தை அமைதிக்குரியதாக்கி வைப்பாயாக. நாங்கள் பொய்த் தெய்வங்களை வணங்குவதிலிருந்து என்னையும், என் சந்ததிகளையும் காப்பாயாக.
  37. என் இறைவா! நிச்சயமாக அவை பெரும்பாலான மக்களை வழிதவறச் செய்துள்ளன. எனவே என்னைப் பின்பற்றியவர் என்னைச் சார்ந்தவரே. எவர் எனக்குக் கட்டுப்பட்டு நடக்கவில்லையோ (அவரையும் மன்னிப்பாயாக) நிச்சயமாக நீ மிக்க மன்னிப்பவனும், மேன்மேலும் கருணைகாட்டுபவனுமாவாய்.
  38. எங்கள் இறைவா! நான் என் சந்ததிகளுள் சிலரை எந்த விளைநிலமும் இல்லாத ஒரு பள்ளத்தாக்கில், உன்னுடைய சிறப்பிற்குரிய வீட்டின் அருகில் வாழ்ந்து வரச் செய்துள்ளேன்.எங்கள் இறைவா! தொழுகையினை அவர்கள் சிறந்த முறையில் நிறைவேற்றி வர வேண்டுமென்பதற்காக (நான் அவ்வாறு செய்துள்ளேன்). எனவே, நீ மக்களின் உள்ளங்களை அவர்களின் பக்கம் சாய்ப்பாயாக. மேலும் அவர்கள் (என்றென்றும் உனக்கு) நன்றி செலுத்துவதற்காக பல்வேறு பழங்களால் அவர்களுக்கு உணவளித்தும் வருவாயாக.
  39. எங்கள் இறைவா! நாங்கள் மறைத்து வைப்பவற்றையும், நாங்கள் வெளிப்படுத்துபவற்றையும் நிச்சயமாக நீ அறிகின்றாய். பூமியிலும், வானத்திலும் எப்பொருளும் அல்லாஹ்வை விட்டும் மறைந்த தாக இல்லை.
  40. எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே உரியன. (எனது) முதுமையிலும் அவன் எனக்கு இஸ்மாயீலையும், இஸ்ஹாக்கையும் வழங்கியுள்ளான். நிச்சயமாக இறைவன் வேண்டுதல்களை நன்கு கேட்பவனாவான்.
  41. என் இறைவா! என்னையும் என் சந்ததிகளையும் தொழுகையினை மிகச்சிறந்த முறையில் நிறைவேற்றுபவர்களாக்கி வைப்பாயாக. எங்கள் இறைவா! என் பிரார்த்தனையை ஏற்றுக் கொள்வாயாக.
  42. எங்கள் இறைவா! கேளவி, கணக்கு நிகழும் நாளில், எனக்கும், என் பெற்றோருக்கும், நம்பிக்கை கொண்டவர்களெல்லாருக்கும் நீ மன்னிப்பு வழங்குவாயாக. ரு6
  43. (செவியேற்பவரே!) அநீதியிழைப்போர் என்ன செய்து கொண்டிருக்கின்றனர் என்பது குறித்து, அல்லாஹ் கவனமற்றவனாக இருக்கின்றான் என்று நீர் ஒருபோதும் நினைக்காதீர். திறந்த கண்கள் நிலைகுத்தியவாறே நின்று விடுகின்ற அந்நாள் வரை தான் அவர்களுக்குக் காலக்கெடு அளிக்கப்படும்.
  44. (அவர்கள்) தங்கள் தலைகளை மேலே உயர்த்திக் கொண்டு பயந்து விரைந்தோடிக் கொண்டிருப்பர். அவர்களின் பார்வைகள் அவர்களிடம் திரும்பி வரமாட்டா. அவர்களின் உள்ளங்கள் (நம்பிக்கைகளை விட்டும்) வெறுமையாகிவிடும்.
  45. (வாக்களிக்கப்பட்ட) தண்டனை அவர்கள் மீது வரும் அந்த நாளைக் குறித்து நீர் மக்களை அச்சுறுத்தி எச்சரிப்பீராக. அநீதியிழை(க்கும் வேலையைத் தேர்ந்தெடு)த்தவர்கள் (அப்போது) எங்கள் இறைவா! எங்களுக்குச் சிறிது காலக்கெடு அளிப்பாயாக. உன்னிடமிருந்து வந்துள்ள அழைப்பை நாங்கள் ஏற்று, (உன்) தூதர்களைப் பின்பற்றுவோம் என்பர். (இதற்கு அவன் கூறுவான்:) உங்களுக்கு எவ்விதத்திலும் வீழ்ச்சி (வரப்போவது) இல்லை என்று இதற்கு முன் நீங்கள் (பலமுறை) ஆணையிடவில்லையா?
  46. மேலும் நீங்கள் தமக்குத் தாமே தீங்கிழைத்தோரின் வீடுகளை உங்கள் வீடாக்கிக் கொண்டீர்கள். நாம் அவர்களுடன் எவ்வாறு நடந்து கொண்டோம் என்பது உங்களுக்கு மிக நன்றாகத் தெரிந்து விட்டது. நாம் உங்களுக்கு எல்லா உதாரணங்களையும் மிகத்தெளிவாக விளக்கி விட்டோம்.
  47. அவர்கள் தங்கள் திட்டத்தைத் தீட்டினர். ஆனால் அவர்களின் திட்டங்கள் மலைகளை நகர்த்தக் கூடியவையாய் இருப்பினும், அவர்களின் திட்டங்களை (எப்படி இல்லாமலாக்குவது என்பது) அல்லாஹ்வுக்குத் தெரியும்.
  48. எனவே (செவியேற்பவரே!) அல்லாஹ் தன்னுடைய தூதர்களிடம் அளித்த வாக்குறுதிக்கு அவன் மாற்றம் செய்பவன் என்று நீர் ஒருபோதும் நினைக்காதீர். நிச்சயமாக அல்லாஹ் மிகைத்தவனும் (தீய செயல்களுக்குப்) பழி வாங்குபவனுமாவான்.
  49. பூமியும், வானமும் மாற்றப்பட்டு, மற்றொரு பூமியும், வானமும் நிலைநாட்டப் பெறும் நாள் ( நிச்சயமாக வரவிருக்கின்றது). தனித்தவனும், மிக்க வல்லோனுமாகிய அல்லாஹ்விடமே அவர்கள் வந்து சேர்வார்கள்.
  50. அந்நாளில் நீர் அந்தக் குற்றவாளிகளை விலங்குகளில் பிணைக்கப்பட்டவர்களாக காண்பீர்.
  51. அவர்களின் சட்டைகள் கீல் தாரால் செய்யப்பட்டது. மேலும் அவர்களின் முகங்களை (நரக) நெருப்பு மூடியிருக்கும்.
  52. ஒவ்வொரு ஆன்மாவும் செய்ததற்கான கூலியை அல்லாஹ் வழங்குவதற்கே  (இவ்வாறு செய்யப்படும்). நிச்சயமாக அல்லாஹ் விரைவில் கணக்கெடுப்பவனாவான்.
  53. இது மக்களுக்கு முழுமையான ஓர் அறிவுரையாகும். அவர்கள் இதன்மூலம் (முழுமையாக) எச்சரிக்கப்படுவதற்கும், அல்லாஹ் மட்டுமே வணக்கத்திற்குரிய ஒருவன் என்பதனை அவர்கள் தெரிந்து கொள்வதற்கும், அறிவுள்ளவர்கள் அறிவுரையினைப் பெறுவதற்கும் (இது போதுமானது). ரு7

Powered by Blogger.