அதிகாரம் : பனீ இஸ்ராயீல்
அருளப்பட்ட இடம்
: மக்கா | வசனங்கள் : 112
பிரிவுகள் : 12
- அளவற்ற அருளாளனும், மேன்மேலும் கருணைகாட்டுபவனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால் (ஓதுகின்றேன்).
- தன் அடியாரை சிறப்புக்குரிய (இந்த) மஸ்ஜிதிலிருந்து, தொலைவிலுள்ள (அந்த) மஸ்ஜித் வரை இரவு நேரத்தில் கொண்டு சென்ற (இறை)வன் தூய்மையானவன் (என்பதை எடுத்துரைக்கின்றேன்). (இறைவனாகிய) நாம் அதன் சுற்றுப்புறங்களுக்கு வளத்தை வழங்கியுள்ளோம். நாம் அவருக்கு நம்முடைய சில அடையாளங்களைக் காட்டுவதற்காக (அவரைக் கொண்டு சென்றோம்). நிச்சயமாக அவனே (தன் அடியார்களின் வேண்டுதலை) நன்கு கேட்பவனும் (அவர்களின் நிலைகளை) நன்கு பார்ப்பவனுமாவான்.
- நாம் மூஸாவுக்கு (தவ்ராத்) வேதத்தை வழங்கினோம். நாம் மேலும் அதனை இஸ்ராயீலின் மக்களுக்கு நேர் வழியாக ஆக்கினோம். நீங்கள் என்னையன்றி வேறெவரையும் (உங்கள்) பாதுகாவலனாக்கிக் கொள்ளாதீர்கள் (என்று நாம் அதில் கட்டளையிட்டிருந்தோம்).
- நூஹூடன் (கப்பலில்) நாம் கொண்டு சென்றவர்களின் சந்ததியினரே! நிச்சயமாக அவர் (நமக்கு) மிக்க நன்றி செலுத்தக் கூடிய அடியாராக இருந்தார் (என்பதனை நினைவில் கொள்ளுங்கள். எனவே நீங்களும் நன்றி செலுத்துபவர்களாகி விடுங்கள் என்றும் கூறியிருந்தோம்).
- நாம் அந்த வேதத்தில் இஸ்ராயீலின் மக்களிடம், நிச்சயமாக நீங்கள் இந்த நாட்டில் இரண்டு முறை குழப்பம் விளைவிப்பீர்கள். மேலும் நிச்சயமாக நீங்கள் மாபெரும் கிளர்ச்சி செய்வீர்கள் என்று (மிகத்தெளிவாக) அறிவித்திருந்தோம்.
- அவ்விரண்டு (முறைக் குழப்பங்களு)ள் முதல் (முறைக்குரிய) வாக்குறுதி (நிறைவேறும் நேரம்) வந்தபோது, நாம் (உங்களுக்குத் தண்டனையளிப்பதற்காக்க்) கடுமையாகப் போர் செய்பவர்களாயிருந்த நம்முடைய சில அடியார்களை (வெற்றி பெற வைத்து) உங்களுக்கு எதிராகக் கொண்டு வந்து நிறுத்தினோம்1. அவர்கள் உங்கள் வீடுகளுக்குள் நுழைந்தனர். (எவ்வாறிருப்பினும்) இந்த வாக்குறுதி கட்டாயம் நிறைவேறக் கூடியதாகவே இருந்தது.
- (இதன்) பின்னர் உங்களுக்கு அவர்களுக்கெதிராக (தாக்குதல் நடத்த) வலிமையினை நாம் வழங்கினோம்2. பொருட்களையும், ஆண் மக்களையும் தந்து உங்களுக்கு நாம் உதவி புரிந்தோம். உங்களை (முன்னை விடப்) பெருங்கூட்டத்தினராகவும் நாம் அதிகப் படுத்தினோம்.
- நீங்கள் நன்மை செய்தால் நீங்கள் உங்களுக்கே நன்மை செய்கிறீர்கள். மேலும், நீங்கள் தீமை செய்தால் அது(வும்) உங்களுக்கே. எனவே இரண்டாவது வாக்குறுதி (நிறைவேறும் நேரம்) வந்தபோது, உங்கள் கண்ணியத்திற்குரியோரை இழிவுபடுத்தவும், அவர்கள் முதன்முறை பள்ளி வாயில் நுழைந்தது போன்று நுழையவும், அவர்கள் வெற்றி கொண்டதையெல்லாம் அழித்து விடவும் அவர்களை நாம் அனுப்பினோம்.
- (இப்பொழுது கூட யூதர்களாகிய) உங்களுக்கு உங்கள் இறைவன் அருள் செய்வதென்பது அப்பாற்பட்டதன்று. (மாறாக அது முற்றிலும் சாத்தியமானதேயாகும்). நீங்கள் (மீண்டும் உங்கள் தவறான போக்கின் பால்) திரும்பி விடுவீர்களாயின், நாமும் (நம்முடைய தண்டனையின் பால்) திரும்பி விடுவோம். நிராகரிப்பவர்களுக்கு நரகத்தைச் சிறைக் கூடமாக நாம் ஆக்கியுள்ளோம் (என்பதனை நினைவில் கொள்ளுங்கள்).
- நிச்சயமாக இந்தக் குர்ஆன் மற்றெல்லாவற்றையும் விட மிகவும் சரியானதாக இருக்கின்ற பாதையின் பக்கம் வழி காட்டுகின்றது. நம்பிக்கை கொண்டு நிலைமைக் கேற்றவாறு செயலாற்றுபவர்களுக்கு (மா) பெரும் வெகுமதி (விதிக்கப்பட்டு) உள்ளது என்று இது அவர்களுக்கு நற்செய்தியையும் வழங்குகின்றது.
- மேலும், மறுமை மீது நம்பிக்கை கொள்ளாதவர்களுக்கு வேதனைக்குரிய தண்டனையை நாம் தயாரித்துள்ளோம் (என்றும் இது கூறுகின்றது). ரு1
- அல்லாஹ், மனிதனை எத்தகு ஆர்வத்துடன் நன்மையின் பக்கம் அழைக்கின்றானோ (அதே ஆர்வத்துடன்) மனிதன் தீமையை அழைக்கின்றான். மனிதன் மிக மிக அவசரக்காரனாக இருக்கின்றான்.
- இரவையும், பகலையும் நாம் இரண்டு அடையாளங்களாக்கியுள்ளோம். நீங்கள் இறைவனின் அருளைத் தேடுவதற்காகவும், வருடங்களின் எண்ணிக்கையையும், கணக்கியலையும் (எளிதாகத்) தெரிந்து கொள்வதற்காகவும் இரவின் அடையாளத்தை நாம் அளித்தோம். பகலின் அடையாளத்தை நாம் பிரகாசமாக்கினோம். எல்லாவற்றையும் நாம் நன்றாகவும், மிக மிகத் தெளிவாகவும் விளக்கியுள்ளோம்.
- நாம் ஒவ்வொரு மனிதரின் கழுத்திலும் செயலைப்5 பிணைத்துள்ளோம். மறுமை நாளில் நாம் அவரு(டைய செயல்களு)க்குரிய ஒரு நூலை6 வெளிப்படுத்தி அவர் முன் வைத்து விடுவோம். அவர் அதனை (முற்றிலும்) திறந்திருக்கக் காண்பார்.
- உமது நூலை(நீரே) படித்துப் பாரும். இன்று உம்முடைய மனமே உமது கணக்கைப் பார்ப்பதற்குப் போதுமானது (என்று அவரிடம் கூறப்படும்).
- (எனவே நீங்கள் பின்வருவதை நினைவில் கொள்ளுங்கள்). எவர் நேர்வழியினை பின்பற்றிச் செல்கிறாரோ, அது அவரின் ஆன்மாவுக்கு நன்மை பயப்பதாகும். எவர்(அந்த நேர்வழியினை மறுத்துத்) தவறான வழியில் செல்வாரோ அவர் தம(து ஆன்மாவு)க்கே தீங்கிழைத்துக் கொள்கிறார். சுமை சுமக்கும் எவனும் பிறரின் சுமையை சுமக்க மாட்டான். நாம் (எந்தச் சமுதாயத்திற்கும், அவர்களிடம்) ஒரு தூதரை அனுப்பாதவரை ஒருபோதும் ஆக்கினையை அனுப்புவதில்லை.
- நாம் ஓர் ஊரை அழித்து விடக் கருதினால் (முதலாவதாக) நாம் அதன் சுகவாசிகளை (நன்மை செய்யுமாறு)7 கட்டளையிடுகின்றோம். அவர்கள் (அதற்கு நேர்மாறாக) அதில் (அந்த ஊரில்) கட்டுப்பாட்டை மீறி விடுகின்றனர். அப்போது அந்த ஊரைக் குறித்து நம்முடைய வாக்கு நிறைவேறி விடுகின்றது. நாம் அதனை முழுமையாக அழித்து விடுகின்றோம்.
- (இந்த நியதிக்கேற்பவே) நாம் நூஹூ(வின் சமுதாயத்தினரையும், அவர்களு)க்குப் பிறகு (ஒன்றன் பின் ஒன்றாக) எத்தனையோ தலைமுறையினர்களை(யும்) அழித்திருக்கின்றோம். உம்முடைய இறைவன் தன் அடியார்களின் பாவங்களை நன்கு அறிபவனும் (அவற்றை) நன்கு பார்ப்பவனுமாவான்.
- எவர் உலகத்தை (மட்டும்) விரும்புபவராக இருக்கின்றாரோ அவர்களுள் நாம் விரும்புபவருக்கு இவ்வுலகில் விரைவாகக் கிடைக்கக்கூடிய பயன்களுள் நாம் விரும்புவதைக் கொடுத்து விடுகின்றோம். அதன் பின்னர் அவருக்கு நரகத்தி(ன் தண்டனையி) னை நியமித்து விடுகின்றோம். அவர் அதில் பழிக்கப் பட்டவராகவும், கைவிடப்பட்டவராகவும் நுழைந்து விடுகின்றார்.
- எவர்கள் நம்பிக்கை கொண்டவர்களாக இருக்கும் நிலையில், மறுமையினை விரும்பி அதற்கான முயற்சியினை(யும்) முறைப்படி செய்தனரோ, அத்தகையவர்களின் முயற்சி அங்கீகரிக்கப்படும். (என்பதனை அவர்கள் நினைவில் கொள்வார்களாக).
- (மறுமையை நாடும்) இவர்களுக்கும் (இம்மையை மட்டும் நாடும்) அவர்களுக்கும், எல்லாருக்கும் உம்முடைய இறைவனின் கொடையிலிருந்தும் நாம் உதவி அளிக்கின்றோம். மேலும் உம்முடைய இறைவனின் கொடை (எவருக்கும்) தடுக்கப்பட்டதாக இல்லை .
- (உலகப் பொருட்களைப் பொருத்த வரையிலும் கூட) நாம் எவ்வாறு அவர்களுள் சிலருக்கு மற்றுஞ் சிலரைவிடச் சிறப்பினை வழங்கியுள்ளோம் என்பதனை நீர் காண்பீராக. நிச்சயமாக மறுமை (வாழ்க்கை அதனையும் விடப்) பெரும் பதவிகளையும், மிக்க சிறப்பினையும் கொண்டதாகும்.
- எனவே (செவியேற்பவரே!) அல்லாஹ்வுடன் வேறெதனையும் வணக்கத்திற்குரியதாக்கிக் கொள்ளாதீர். அவ்வாறாக்கினால், நீர் பழிக்கப்பட்டு (இறைவனின்) உதவியையும் இழந்தவராக இருந்து விடுவீர். ரு2
- உம்முடைய இறைவன் மிகவும் வலியுறுத்தி இவ்வாறு கட்டளையிட்டுள்ளான். நீங்கள் அவனையன்றி வேறெதனையும் வணங்காதீர்கள். மேலும் (உங்கள்) பெற்றோரிடம் நல்ல முறையில் நடந்து கொள்ளுங்கள். அவர்களுள் ஒருவர் அல்லது அவர்களிருவரும் உம்முடைய வாழ்நாளில் முதுமையை எய்தி விடுவார்களாயின், நீர் (அவர்களது விஷயத்தில் வெறுப்பைக் காட்டும் விதத்தில்) அவர்களைச் சீ என்று கூடச் சொல்லாதீர்8. அவர்களை ஏசவும் வேண்டாம். அவர்களிடத்து (எப்போதும்) இனிமையாகப் பேசுவீராக.
- கருணை காட்டும் ஆர்வத்துடன் அவர்கள் முன் பணிவாக நடந்து கொள்ளுங்கள். மேலும் (அவர்களுக்காக இறைவனிடம் வேண்டும் போது இவ்வாறு) கூறுவீராக, என் இறைவா! நான் குழந்தையாக இருந்த போது என்னை வளர்த்தது போல், நீ அவர்களிடம் கருணை காட்டுவாயாக.
- உங்கள் இறைவன், உங்கள் உள்ளங்களிலுள்ளவற்றை(யெல்லாம்) நன்கு அறிகின்றான். நீங்கள் நல்லவர்களாக இருந்தால், மீண்டும் மீண்டும் (தன் பக்கம்) திரும்பக் கூடியவர்களை அவன் அதிகமாக மன்னிப்பவனாவான் (என்பதனை நினைவில் கொள்ளுங்கள்).
- நெருங்கிய உறவினர், ஏழை, வழிப்போக்கர் ஆகியவர்களுக்குரியதைக் கொடுத்து விடுக. எவ்வகையிலும் வீண் விரயம் செய்யாதீர்.
- நிச்சயமாக வீண் விரயம் செய்பவர்கள் ஷைத்தான்களின் சகோதரர்களாவர். ஷைத்தான் தன்னுடைய இறைவனுக்கு மிக நன்றி கெட்டவனாவான்.
- மேலும் நீர் எதிர்பார்க்கும் உம்முடைய இறைவனின் மகத்துவமிக்க அருளை அடைவதற்காக, (உறவினர்களாகிய) அவர்களை நீர் புறக்கணித்தால் (இந்நிலையில் புறக்கணிப்பது ஆகுமானதாகும். ஆனால்) அந் நேரத்திலுங் கூட நீர் அவர்களிடம் மிருதுவான முறையில் பேசுக.
- நீர் (கருமித்தனம் செய்து) உமது கையை உமது கழுத்தில் மாட்டிக் கொள்ளவும் வேண்டாம்.(வீண் விரயம் செய்து) அதனை முற்றிலும் விரித்து விடவும் வேண்டாம். அவ்வாறு செய்தால், நீர் ஏளனத்திற்காளாகி அல்லது சோர்விற்குள்ளாகி (செயலற்று) உட்கார்ந்து விடுவீர்.
- உம்முடைய இறைவன், தான் விரும்புபவருக்கு உணவைத் தாராளமாக வழங்குகின்றான். மேலும், (தான் விரும்புபவருக்கு அவற்றைக்) குறைவாகக் கொடுக்கின்றான். நிச்சயமாக, அவன் தன் அடியார்(களின் நிலை)களை நன்கு அறிந்து கொள்பவனும், நன்கு பார்ப்பவனுமாவான். ரு3
- நீங்கள் வறுமைக்கு அஞ்சி உங்கள் குழந்தைகளைக் கொலை செய்யாதீர்கள். நாமே அவர்களுக்கும், உங்களுக்கும் உணவளிக்கின்றோம். அவர்களைக் கொலை செய்வது நிச்சயமாக (மா) பெரும் குற்றமாகும்.
- விபச்சாரத்தின் பக்கமே அணுகாதீர். நிச்சயமாக அது பகிரங்கமான, மானக்கேடான செயலும், மிகத் தீய வழியுமாகும்.
- எந்த உயிரை அல்லாஹ் விலக்கியுள்ளானோ அதனை (மார்க்கச் சட்ட விதியிலான) உண்மையைக் கொண்டே தவிர கொலை செய்யாதீர்கள். அநியாயமாகக் கொல்லப்பட்டவரின் வாரிசுக்கு, நாம் (பழி வாங்குவதற்கான) அனுமதி வழங்கியுள்ளோம். எனவே அவர் (கொலை செய்தவரை) கொன்று விடுவதில் (எம்மால் நியமிக்கப்பட்ட) எல்லையைக் கடந்து விடக் கூடாது (என்பது அவருக்கு இடப்பட்ட கட்டளையாகும். அவர் எல்லைக்குட்பட்டிருப்பாராயின்) நிச்சயமாக அவருக்கு (எமது) உதவி கிடைக்கும்.
- (அனாதைக்கு) நன்(மை பயக்கும்) முறையிலன்றி அனாதையின் பொருளை அணுகாதீர்கள். அதுவும் அவர் தமது வாலிப வயதை அடையும் வரையே ஆகும். மேலும் (உங்கள்) உடன்படிக்கையை நிறைவேற்றுங்கள். நிச்சயமாக ஒவ்வொரு உடன்படிக்கையைக் குறித்தும் விசாரிக்கப்படும்.
- நீங்கள் அளந்து கொடுக்கும் போது, அளவை முழுமையாகக் கொடுங்கள். (நீங்கள் நிறுத்துக் கொடுத்தாலும்) சரியான தராசு கொண்டு நிறுத்துக் கொடுங்கள். இவ்வாறு செய்வது மிக்க நல்லதும், முடிவைப் பொருத்தவரை மிகச் சிறந்ததுமாகும்.
- (செவியேற்பவரே!) உமக்கு எதனைப் பற்றிய அறிவு இல்லையோ, அதனைப் பின்பற்றாதீர். (ஏனென்றால்) காது, கண், மனம் இவையெல்லாவற்றையும் குறித்து (உம்மிடம்) விசாரிக்கப்படும்.
- பூமியில் ஆணவங் கொண்டு நடக்காதீர். ஏனென்றால், இதனால் நாட்டின் எல்லையையும், உம்மால் அடைந்து விட முடியாது. (இவ்வாறு செய்வதனால் சமுதாயத்) தலைவர்களது உயர்ந்த அந்தஸ்தையும் உம்மால் பெற்று விட முடியாது 9.
- இவை ஒவ்வொன்றும் உமது இறைவனிடத்தில் வெறுக்கப்பட்டதாகும்.
- (மகத்துவமிக்க போதனையாகிய) இது உம்முடைய இறைவன் வஹியின் வாயிலாக உமக்கு அனுப்பிய நுட்பமான ஞானத்தின் ஒரு பகுதியாகும். நீர் அல்லாஹ்வுடன் வேறெதனையும் வணக்கத்திற்குரியதாக்கிக் கொள்ளாதீர். அவ்வாறாக்கினால் நீர் பழிக்கப்பட்டவராகவும், கைவிடப்பட்டவராகவும் நகரத்தில் எறியப்படுவீர்.
- உங்கள் இறைவன் உங்களை ஆண் மக்க(ளின் அரு)ளைக் கொண்டு சிறப்பித்து விட்டு(த் தனக்கென) அவன் சில மலக்குகளை பெண் (மக்க)ளாக ஆக்கிக் கொண்டானா? நிச்சயமாக நீங்கள் மாபெரும் (ஆபத்தான) கூற்றைக் கூறுகிறீர்கள். ரு4
- அவர்கள் அறிவுரையினைப் பெற வேண்டுமென்பதற்காக நாம் இந்தக் குர்ஆனில் (ஒவ்வொரு விஷயத்தையும்) திரும்பத் திரும்ப விளக்கியுள்ளோம். (அவ்வாறு இருந்தும்) இது அவர்களுக்கு(த் தற்பெருமையையும்) வெறுப்பை(யும்) மட்டுமே அதிகரித்துக் கொண்டிருக்கிறது.
- நீர் கூறுக: அவர்கள் கூறுவது போன்று ( அல்லாஹ்வாகிய) அவனுடன் வேறு கடவுள்கள் இருந்திருந்தால், நிச்சயமாக அவர்கள்(இணை வைப்போர்) அரியணைக்கு உரியவனிடம் செல்லும் ஒரு வழியைக் கண்டுபிடித்திருப்பார்கள் 10.
- (இணை வைப்பவர்களாகிய) அவர்கள் (இணை வைப்பது குறித்துக்) கூறியவற்றை விட்டும் அவன் தூய்மையானவனும், மிக்க உயர்ந்தவனுமாவான்.
- ஏழு வானங்களும், பூமியும், அவற்றிலுள்ள யாவும் அவனைப் புகழ்கின்றன. மேலும் அவனைப் புகழ்ந்து போற்றாத எந்தப் பொருளும் இல்லை. ஆனால் அவற்றின் புகழ்ச்சியை நீங்கள் புரிந்து கொள்வதில்லை. நிச்சயமாக அவன் குறைபாடுகளை மறைப்பவனும், மிக மன்னிப்போனும் ஆவான்.
- நீர் குர்ஆனை ஓதும் போது, நாம் உமக்கும், மறுமையின் மீது நம்பிக்கை கொள்ளாதவர்களுக்கும் இடையில் மறைமுகமான (தும்,பொதுவான பார்வைகளை விட்டும் மறைந்திருக்கக்கூடியதுமான) ஒரு திரையினை உண்டாக்கியுள்ளோம்.
- அவர்களால் அ(ந்)த (உண்மையி) னைப் புரிந்து கொள்ள முடியாதிருப்பதற்காக நாம் அவர்களின் உள்ளங்களில் பல திரைகளையும், அவர்களின் காதுகளில் செவிட்டுத் தன்மையினையும் ஏற்படுத்தியுள்ளோம்11. நீர் குர்ஆனில் ஏகனாகிய உம்முடைய இறைவனை நினைவு கூர்ந்தால், அவர்கள் வெறுப்படைந்து தங்கள் முதுகுகளைத் திருப்பிக் கொண்டு சென்று விடுகின்றனர்.
- அவர்கள் உம(து வார்த்தை) க்குச் செவிசாய்க்கும் போது, அவர்கள் எதற்காக செவியேற்கின்றனர் என்பதையும், அவர்கள் தமக்குள் மறைவாகப் பேசும் போது, 'ஏமாற்றத்திற்கு ஆளாகியிருக்கும் ஒருவரைத் தான் நீங்கள் பின்பற்றுகிறீர்கள்', என்று அந்த அநீதியிழைப்போர் கூறுவதையும் நாம் நன்கறிவோம்.
- அவர்கள் உம்மைக் குறித்து எவ்வாறெல்லாம் கற்பனை செய்து கூறுகின்றனர் என்று பார்ப்பீராக. இதன் விளைவாக அவர்கள் வழி தவறிவிட்டனர். எனவே அவர்கள் நேர்வழியினை அடைய முடியாது.
- நாங்கள் (இறந்து) எலும்புகளாகி, மக்கித் துகள்களாகி விட்டாலும் (மீண்டும்) உண்மையில் ஒரு புதிய படைப்பாக எழுப்பப்படுவோமா? என்று அவர்கள் கேட்கின்றனர்.
- நீர் (அவர்களிடம்) கூறுவீராக: நீங்கள் கல்லாகவோ, இரும்பாகவோ ஆகிவிடுங்கள்;
- அல்லது, உங்கள் உள்ளங்களில் (அவற்றை விடவும்) கடினமாகத் தெரிகின்ற ஒரு படைப்புப் பொருளாக ஆகி விடுங்கள் . (அவ்வாறு ஆகிவிட்டாலும்) அவன் மீண்டும் உங்களை உயிர்ப்பிப்பான். பின்னர் எங்களை உயிர்ப்பிப்பவன் யார்? என்று அவர்கள் கேட்பார்கள். "உங்களை முதன்முறையாக படைத்தவனே (உயிர்ப்பிப்பான்)" என்று கூறுக. அதற்கு அவர்கள் வியப்புடன் தம் தலைகளை உம்மை நோக்கி அசைத்து, ' அது எப்போது (நிகழும்)' என்று கேட்பார்கள்; அது வெகு விரைவில் நிகழலாம்' என்று கூறுக12.
- அவன் உங்களை அழைக்கும் நாளில் (அந்த வாக்குறுதி13 நிறைவேறும்). அவனைப் புகழ்ந்து கொண்டே வருவீர்கள். நீங்கள் மிகக் குறுகிய காலமே (உலகில்) தங்கியிருந்தீர்கள் என்றும் நினைப்பீர்கள். ரு5
- நீர் என் அடியார்களிடம் கூறுக: அவர்கள் மிகச் சிறந்ததையே பேச வேண்டும். நிச்சயமாக ஷைத்தான் அவர்களுக்கிடையில் குழப்பத்தை ஏற்படுத்துகிறான். நிச்சயமாக ஷைத்தான் மனிதனின் பகிரங்க பகைவன் ஆவான்.
- உங்கள் இறைவன் உங்களை நன்கு அறிகிறான். அவன் விரும்பினால் உங்களுக்கு அருள் செய்வான். அவன் விரும்பினால் உங்களுக்கு தண்டனை அளிப்பான். (தூதரே) நாம், உம்மை அவர்களுக்குப் பொறுப்பாளராக அனுப்பி வைக்கவில்லை.
- வானங்களிலும், பூமியிலும் இருப்பவர்களை , உம்முடைய இறைவன் நன்கு அறிகின்றான். நிச்சயமாக நாம் நபிமார்களுள் சிலருக்கு சிலரைவிடச் சிறப்பினை வழங்கினோம். தாவூதுக்கு(ம்) நாம் ஸபூரை 14 வழங்கினோம்.
- நீர் (அவர்களிடம்) கூறுவீராக: அவனை விட்டு விட்டு, எவர்களைக் குறித்து (அவர்கள் இறைத் தன்மையினைக் கொண்டிருப்பதாக) வாதிக்கின்றீர்களோ அவர்களை (உங்கள் உதவிக்காக) அழைத்துப் பாருங்கள். (அப்போது) அவர்களால் (உங்களுடைய எந்தத்) துன்பத்தை(யும்) உங்களை விட்டும் அகற்றவோ (உங்கள் நிலையில்) எந்த மாற்றத்தையும் உண்டாக்கவோ முடியாது (என்பதை நீங்கள் அறிவீர்கள்).
- எவரை இவர்கள் அழைக்கின்றார்களோ அவர்களும்15 தங்களின் இறைவனை அணுகுவதற்கு (இறைவனுக்கு) மிகவும் நெருங்கியவர் எவர் என எதாவது வழியைத் தேடிக் கொண்டிருக்கின்றனர். மேலும் அவனது கருணையை எதிர்பார்க்கின்றனர். அவனது தண்டனைக்கு அஞ்சவும் செய்கின்றனர். நிச்சயமாக உம் இறைவனின் தண்டனை அஞ்சத்தக்கதாகும்.
- மறுமை நாளிற்கு முன்னர் நாம் அழித்து விடாத, அல்லது கடினமான தண்டனையளிக்காத எந்த ஊரும் (இப்பூமியின் மேற்பரப்பில்) இருக்காது16. இது (இறைவனது) நியதியில் (ஏற்கனவே) பதிவு செய்யப்பட்டதாகும்.
- நாம் அடையாளங்களை அனுப்புவதற்கு, அவற்றை முன்னோர்கள் பொய்ப் படுத்தினர் என்பதைத் தவிர எம்மை வேறு எதுவும் தடுத்ததில்லை. (அவ்வாறிருந்தும் ) நாம் ஸமூது(வின் சமுதாயத்தவரு)க்கு ஒரு பெண் ஒட்டகத்தைத் தெளிவான அடையாளமாக வழங்கினோம். ஆனால் அவர்கள் அதற்கு அநீதி இழைத்தனர். மேலும் எச்சரிப்பதற்காகவே நாம் அடையாளங்களை அனுப்புகிறோம்.
- நிச்சயமாக உம்முடைய இறைவன் மக்களை அழித்து (விட முடிவு செய்து) விட்டான் என்று நாம் உம்மிடம் கூறிய நேரத்தில் (கூட அவர்கள் பயன் பெறவில்லை) அடுத்து நாம் உமக்குக் காட்டிய ஆன்மீகக் காட்சியையும், குர்ஆனில் சபிக்கப்பட்ட மரத்தையும்17 மக்களுக்குச் சோதனையாகவே நாம் ஆக்கியுள்ளோம். அவர்களை நாம் பயமுறுத்திக் கொண்டேயிருக்கின்றோம். இவ்வாறிருந்தும் (எம்முடைய பயமுறுத்தலாகிய) அது அவர்களுக்கு அபாயகரமான வரம்பு மீறலையே அதிகரித்துக் கொண்டிருக்கிறது. ரு6
- நாம் வானவர்களிடம்: நீங்கள் ஆதமுடன் சிரம்பணிந்து வணங்குங்கள் என்று கூறிய(நேரத்தையும் நினைத்துப் பாருங்கள். அப்)போது அவர்கள் (எல்லோரும்) சிரம்பணிந்தனர். ஆனால் இப்லீஸ் (அவ்வாறு) செய்யவில்லை. களிமண்ணிலிருந்து நீ படைத்தவனுடன், நான் சிரம்பணிந்து வணங்க வேண்டுமா? என்று கூறினான்.
- அவன் கூறினான்: இவருக்கா (நான் கட்டுப்படுவது? இவருக்கு) நீ என்னை விடச் சிறப்பளித்துள்ளாய் என நீயே சொல். மறுமை நாள் வரை நீ எனக்குக் காலக்கெடு அளித்தால் (நீ பாதுகாப்பளிக்கும்) மிகச் சிலரைத் தவிர, இவர் சந்ததிகளை (எல்லாம்) நிச்சயமாக நான் வசப்படுத்திக் கொள்வேன்.
- (இதற்கு அல்லாஹ் இவ்வாறு) கூறினான்: செல் (இங்கிருந்து அகன்று போ) ஏனென்றால் அவர்களுள் உன்னைப் பின்பற்றும் உங்கள் எல்லோருக்கும் நரகமே தண்டனையாகும். (இதுவே) முழுமையான கூலியாகும்.
- அவர்களுள் உன்னால் முடிந்தவரை, உன் குரலினால் மயக்கி வசப்படுத்து. உன் குதிரைகளையும், உன் ஆட்களையும் அவர்கள் மீது ஏவி விடு. (அவர்களின்) பொருள்களிலும், குழந்தைகளிலும், அவர்களுடைய பங்குதாரராக இருந்து கொண்டு அவர்களிடம் (பொய்யான) வாக்குறுதியளி! (பின்னர் உன் முயற்சிகளின் விளைவைப் பார்). ஷைத்தானின் வாக்குறுதிகள் ஏமாற்றுதலே அன்றி வேறில்லை.
- நிச்சயமாக என் அடியார்கள்! அவர்கள் மீது உனக்கு (எந்த) அதிகாரமும் இல்லை (என் அடியாரே! உமக்குப்) பாதுகாப்பாளனாக இருப்பதற்கு உம் இறைவனே போதுமானவன்.
- (என் அடியார்களே!) நீங்கள் அவனது அருளைத் தேடக் கடலில் உங்களுக்காக கப்பல்களை இயக்குபவனே உங்கள் இறைவன். நிச்சயமாக அவன் உங்களுக்கு என்றும் பேரருள் செய்பவனாவான்.
- கடலில் (கொந்தளிப்பு ஏற்படுவதனால்) உங்களுக்குத் துன்பம் ஏற்படும் போது, அவனையன்றி நீங்கள் எவர்களை(க் கடவுளர்களென்று) அழைக்கின்றீர்களோ, அவர்கள் (எல்லோரும் உங்கள் உள்ளங்களிலிருந்து) மறைந்து போய் விடுகின்றனர். பின்னர் அவன் உங்களைக் காப்பாற்றி நிலத்திற்குக் கொண்டு வந்தால், நீங்கள் (அவனைப்) புறக்கணித்து விடுகின்றீர்கள். மனிதன் மிக அதிகமாக நன்றி கொன்றவனாக இருக்கின்றான்.
- அவன் உங்களை நிலத்தின் ஓர் ஓரத்தில் (அதாவது பூமியில்) புதைத்து விட மாட்டானென்றோ, உங்கள் மீது கல்மாரியை பொழிய வைக்க மாட்டானென்றோ நீங்கள் (நினைத்துக் கொண்டு) அச்சமற்றிருக்கின்றீர்களா? பின்னர் நீங்கள் உங்களுக்கென்று எந்தப் பாதுகாவலனையும் (உதவி செய்பவனையும்) பெற மாட்டீர்கள்.
- அல்லது அவன் உங்களை மீண்டும் ஒரு முறை அதில் (கடலில்) திரும்பக் கொண்டு சென்று கடும் புயற்காற்றை உங்கள் மீது அனுப்பி, நீங்கள் நிராகரிப்பதனால் உங்களை மூழ்கடித்து விட மாட்டானென்று நீங்கள் அச்சமற்றிருக்கின்றீர்களா? பின்னர் இ(த்தகு தண்டனையளிப்ப)தில் எமக்கு எதிராக உங்களுக்கு உதவி செய்பவர் எவரையும் நீங்கள் பெற மாட்டீர்கள்.
- நாம் நிச்சயமாக ஆதமுடைய மக்களுக்கு (மிகுந்த) சிறப்பினை வழங்கி, நிலத்திலும், நீரிலும் அவர்களுக்காக வாகனங்களைப் படைத்துத் தூய்மையான பொருட்களிலிருந்து அவர்களுக்கு உணவளித்துள்ளோம். நாம் படைத்த படைப்பின் ஒரு பெரும் பகுதியின் மீது நாம் அவர்களுக்கு (மகத்தான) சிறப்பினை வழங்கியுள்ளோம். ரு7
- ஒவ்வொரு கூட்டத்தினரையும் அவர்களின் தலைவருடன் நாம் அழைக்கவிருக்கின்ற நாளை(யும் நினைத்துப் பாருங்கள்). பின்னர் எவருடைய (செயல்களுக்குரிய) நூல் அவரின் வலக்கையில் கொடுக்கப்படுமோ அவர் (மிகுந்த ஆர்வத்துடன்) தங்கள் நூலைப் படித்துப் பார்ப்பார்கள். அவர்களுக்கு அணுவளவு கூட அநீதி இழைக்கப்பட மாட்டாது.
- இ(ந்த உலகத்)தில் குருடராக இருப்பவர் மறுமையிலும் குருடராகவே இருப்பார். மேலும் அவர் (மற்றெல்லாரையும் விட) மிகவும் வழி தவறியவராக இருப்பார்.
- நாம் உமக்கு வஹி அறிவித்ததன் காரணமாக, நீர் அதற்கு மாற்றமானதை எமக்கு எதிராகப் புனைந்து எம்முடையது எனக் கூறுவதற்காக அவர்கள் உமக்கு (கொடிய) சோதனை தர இருந்தனர். நீர் (அவ்வாறி(யற்றியி)ருப்பின் நிச்சயமாக அவர்கள் உம்மை(த் தங்கள்) நெருங்கிய நண்பராக்கியிருப்பர்.
- நாம் உமக்கு(க் குர்ஆனைக் கொடுத்து) உறுதியாக நிலைத்திருக்கும் வலிமையினை வழங்காதிருப்பின் நீர் மிகக் குறைவாகவேனும் அவர்களைச் சார்ந்திருப்பீர். (ஆனால் இப்பொழுதோ, இறையறிவிப்பானது உமக்குச் சரியான பாதையினைத் தெரிவித்து விட்டது).
- (அவர்கள் எண்ணத்திற்கு ஏற்ப நீர் பொய் கூறி இருந்தால்) அந்நிலையில் வாழ்விலும், மரணத்திற்கு பிறகும் உம்மை இருமடங்கு தண்டனையைச் சுவைக்கச் செய்திருப்போம். அதன் பின்னர், எமக்கு எதிராக உமக்கு உதவுவோர் எவரையும் நீர் பெறமாட்டீர்.
- நிச்சயமாக அவர்கள் உம்மை(ப் பயமுறுத்தி) இந்த நாட்டிலிருந்து வெளியேற்றுவதற்காக(ப் பல்வேறு தந்திரங்களைச் செய்து) உம்மை நிலைகுலையச் செய்து கொண்டேயிருக்கின்றனர். ஆனால் அவ்வாறு நிகழ்ந்து விடுமாயின் அவர்களும் உமக்குப் பின்னர் சிறிது காலம் தான் (பாதுகாப்பாக) இருப்பார்கள். (பின்னர் விரைவில் அழிவிற்குள்ளாகி விடுவார்கள்).
- உமக்கு முன்னர் நாம் அனுப்பிய நம் தூதர்க(ளின் சமுதாயங்க) ளுடன் நம் நடைமுறையும் இதுவேயாகும். நம் நடைமுறையில் எந்த வேறுபாட்டையும் நீர் காணமாட்டீர். ரு8
- சூரியன் சாய்ந்த (நேரத்) திலிருந்து இரவில் நன்றாக இருட்டி விடும்(நேரம்) வரை(ப் பல்வேறு நேரங்களின்) தொழுகையினை மிகச்சிறந்த முறையில் நிறைவேற்றுவீராக. அதிகாலையில் (குர்ஆன்) ஓதுவதையும் (கட்டாயமாக்கிக் கொள்வீராக). அதிகாலையில் குர்ஆன் ஓதுவது(அல்லாஹ்விடத்தில்) நிச்சயமாக ஏற்றுக் கொள்ளப்படும் (ஒரு) செயலாகும்.
- இரவிலும் நீர் இ(அந்தக் குர்ஆனைத் தஹஜ்ஜத் தொழுகையில் ஓதுவ) தற்காகச், சிறிது துயில் கொண்டதன் பின்னர் விழித்துக் கொள்க. இது உமக்கு அதிகப்படியான ஒரு வெகுமதியாகும். இதனால் உம்முடைய இறைவன் உம்மைப் புகழுக்குரிய இடத்திற்கு உயர்த்தக் கூடும்.
- நீர் கூறுவீராக: என் இறைவா! என்னை (மீண்டும் மக்காவிற்குள்) நல்ல முறையில்18 நுழையச் செய்வாயாக19. நற்பெயரை விட்டுச் செல்லும் முறையில் (மக்காவிலிருந்து) என்னை வெளியேறச் செய்வாயாக. மேலும் உன்னிடமிருந்து எனக்கு உதவியாளராகவும்20 சாட்சியாகவும் விளங்கும் ஒருவரை நியமிப்பாயாக.
- நீர் (எல்லா மக்களிடமும்) கூறி விடுக: (இப்பொழுது) உண்மை வந்து விட்டது. பொய் ஓடி விட்டது. பொய்யானது ஓடிவிடக்கூடிய ஒன்றேயாகும்.
- நம்பிக்கையாளருக்குக் குணமளிப்பதாகவும், அருளாகவும், தவறிழைப்பவர்களுக்கு நஷ்டத்தை அதிகரிக்கக் கூடியதாகவும், திருக்குர்ஆனிலிருந்து (படிப்படியாகப் போதனைகளை) இறக்கிக் கொண்டிருக்கிறோம்.
- நாம் மனிதனுக்கு அருள் செய்தால் அவன் (அதனைப்) புறக்கணித்து விட்டு (அதிலிருந்து) தன்னைத் தூரமாக்கிக் கொள்கின்றான். அவனுக்குத் துன்பம் ஏற்பட்டால், அவன் மிக அதிகமாக நம்பிக்கை இழந்தவனாகி விடுகின்றான்.
- நீர் கூறுக: ஒவ்வொருவரும் அவரவர் முறைக்கேற்ப செயல்படுகின்றனர். ஆனால் மிகவும் நேரான வழியில் இருப்பவர் எவர் என்பதை உங்கள் இறைவன் நன்கு அறிகின்றான். (எனவே தீர்ப்பளிப்பதை அவனிடத்தில் விட்டு விடுங்கள்). ரு9
- அவர்கள் உம்மிடம் 'ஆன்மா' வைப் பற்றி வினவுகின்றனர். நீர், (அவர்களிடம்) 'ஆன்மா' என் இறைவனின் கட்டளையினால் (படைக்கப்பட்டு) உள்ளது; உங்களுக்கு (அதுபற்றி) மிகக் குறைந்த அறிவே கொடுக்கப்பட்டுள்ளது', எனக் கூறுக.
- நாம் விரும்பினால் உமக்கு 'வஹி' மூலமாக அறிவித்திருந்த (இறை வசனத்) தை நிச்சயமாக (உலகிலிருந்து) எடுத்திருப்போம். பின்னர் இதில் எமக்கு மாற்றமாக, உமக்கு எந்த பாதுகாவலனையும் நீர் காணமாட்டீர்.
- உம் இறைவனின் அருளைத் தவிர (வேறெதுவும் அதனைத் திரும்பக் கொண்டு வர முடியாது). நிச்சயமாக உம்மீது அவனது அருள் மகத்தானது.
- நீர் (அவர்களிடம்) கூறுக: இந்தக் குர்ஆனிற்கு நிகரானதைக் கொண்டு வருவதற்காக எல்லா மனிதர்களும், ஜின்களும் ஒன்றுதிரண்டு விட்டாலும், அவர்களால் இதற்கு நிகரானதைக் கொண்டு வர முடியாது; அவர்களுள் ஒருவருக்கொருவர் உதவி செய்பவராக இருந்தாலும் சரியே.
- நிச்சயமாக நாம் மக்களுக்காக இந்தக் குர்ஆனில் (முக்கியமான) ஒவ்வொரு செய்தியினையும் பல்வேறு கோணங்களில் விளக்கி விட்டோம். இவ்வாறிருந்தும், பெரும்பாலானவர்கள் குப்ரின் வழியைத் தவிர மற்றெல்லாவற்றையும் நிராகரித்து விட்டனர்.
- அவர்கள் ( இவ்வாறு) கூறினர்: நீர் எங்களுக்காகப் பூமியிலிருந்து ஒரு நீரூற்றை பீறிட்டு வரச் செய்யாதவரை, உம்மை நாங்கள் ஒரு போதும் நம்பமாட்டோம்.
- அல்லது உமக்குப் பேரீச்சையும், திராட்சையும் நிறைந்த ஒரு தோட்டம் இருந்து, அதன் மத்தியில் நீரோடைகள் பெருக்கெடுத்தோடுமாறு நீர் செய்ய வேண்டும்.
- அல்லது நீர் வாதிப்பதைப் போன்று, வானம் (இடிந்து) துண்டுகளாக21 எங்கள் மீது விழ வேண்டும். அல்லது அல்லாஹ்வையும் வானவர்களையும் (எங்கள் முன்) நேருக்கு நேராக கொண்டு வந்து நிறுத்த வேண்டும்.
- அல்லது, உமக்குத் தங்கத்தாலான வீடொன்று இருத்தல் வேண்டும்; அல்லது, நீர் வானத்திற்கு ஏறிச் செல்ல வேண்டும்; நாங்கள் படிக்கத் தக்க ஒரு நூலை எங்களுக்குக் கொண்டு வராத வரை, நீர் வானத்திற்குச்22 சென்றதையும் நாங்கள் நம்பமாட்டோம். நீர் கூறுக: 'என் இறைவன் தூய்மையானவன்; நான் ஒரு மனிதனாகிய23 தூதரேயன்றி வேறு அல்லன்'. (எனவே என்னால் வானம் செல்ல இயலாது). ரு10
- மக்களிடம் நேர்வழி வந்தபோது அவர்கள், ' அல்லாஹ் ஒரு மனிதனையா தூதராக அனுப்பியுள்ளான்' என்று கூறியது தான் அவர்களை நம்பிக்கை கொள்ள விடாமல் தடுத்தது.
- நீர் கூறுக: பூமியில் வானவர்கள் அமைதியாக நடந்து, திரிந்து (வாழ்ந்து) இருந்தால், நாம் அவர்களுக்கு, நிச்சயமாக வானத்திலிருந்து ஒரு வானவரையே தூதராக இறக்கியிருப்போம்.
- நீர் கூறுக: 'எனக்கும் உங்களுக்கும் இடையில் சாட்சியாக இருக்க அல்லாஹ்வே போதுமானவன்; நிச்சயமாக அவன் தன் அடியார்களை நன்கு அறிபவனும், பார்ப்பவனும் ஆவான்'.
- அல்லாஹ், நேர்வழியில் நடத்துகிறவனே நேர்வழியில் இருப்பவனாவான்; வழி தவறிச் செல்லுமாறு அவன் விட்டு விடுபவர்களுக்கு இறைவனைத் தவிர வேறு உதவியாளர்களை நீர் காண இயலாது. மறுமை நாளில் அவர்களின் நோக்கங்களுக்கு ஏற்ப அவர்களை குருடர்களாகவும், ஊமையர்களாகவும், செவிடர்களாகவும் நாம் ஒன்று சேர்ப்போம். அவர்களது தங்குமிடம் நரகமாகும்; அது (நகரத்தின் நெருப்பு) தணியும் போதெல்லாம் அவர்களுக்காக அந்த நெருப்பின் ஜூவாலையை அதிகமாக எரியும் படிச் செய்வோம்.
- இது அவர்களுக்குரிய தண்டனையாகும். ஏனென்றால் அவர்கள் நம் அடையாளங்களை மறுத்து இவ்வாறு கூறினர்: " நாங்கள் (இறந்து) எலும்புகளாகி, மக்கித் துகள்களாகி விட்டாலும் (மீண்டும்) உண்மையிலேயே ஒரு புதிய படைப்பாக எழுப்பப்படுவோமா?".
- வானங்களையும், பூமியையும் படைத்த அல்லாஹ் அவர்களைப் போன்றவர்களைப் படைப்பதற்கும் ஆற்றல் பெற்றவன் என்பதை அவர்கள் அறியவில்லையா ? மேலும் அவன் அவர்களுக்கு ஒரு காலக்கெடுவை ஏற்படுத்தியிருக்கிறான் என்பதில் ஐயமில்லை. ஆனால் அநீதி இழைப்பவர்கள் நன்றி கொன்ற நிலையையே மேற்கொள்கின்றனர்.
- நீர் அவர்களிடம் கூறுவீராக: நீங்கள் என்னுடைய இறைவனின் (எல்லையற்ற) அருட் கருவூலங்களுக்கு(க் கூட) உரிமையாளர்களாக இருந்தாலும், நீங்கள் (அவை) செலவாகி விடுமோ என்ற பயத்தினால் (அவற்றைத்) தடுத்தே வைத்துக் கொண்டிருப்பீர்கள். மனிதன் மிகப்பெரிய கருமியாவான். ரு11
- நிச்சயமாக நாம் மூஸாவுக்குத் தெளிவான ஒன்பது அடையாளங்களைக் கொடுத்தோம். எனவே இஸ்ராயீலின் மக்களிடம் கேளும்: அவர் அவர்களிடம் வந்த போது, ஃபிர்அவ்ன் அவரிடம் "மூஸாவே நிச்சயமாக நான் உம்மை ஏமாற்றத்திற்கு ஆளானவராகக் கருதுகிறேன்" என்றான்.
- அவர் இவ்வாறு பதிலளித்தார்: வானங்கள், பூமி ஆகியவற்றின் இறைவனே (அடையாளங்களாகிய) இவற்றை அகப்பார்வை தரக்கூடியவையாக இறக்கியுள்ளான் என்பது நிச்சயமாக உனக்குத் தெரியும். ஃபிர்அவ்னே! நீ(உனது தீய நாட்டங்களில்) வீழ்ச்சியும், தோல்வியும் அடைபவன் என்றே நான் உன்னைக் குறித்து உறுதியாக நம்புகிறேன்.
- இதற்கு அவன் அவர்களை (மூஸாவையும், அவருடைய சமுதாயத்தினரையும்) நாட்டிலிருந்து வெளியேற்றி விட நாடினான். இதன் விளைவாக நாம் அவனையும், அவனைச் சார்ந்த யாவரையும் மூழ்கடித்து விட்டோம்.
- இதன் பின்னர் நாம் இஸ்ராயீலின் மக்களிடம் கூறினோம், நீங்கள் (முன்னறிவிக்கப்பட்ட) அந்த நாட்டில்24 வாழுங்கள்.(முஸ்லிம்களுக்கு) இரண்டாவது25 (தண்டனைக்குரிய) வாக்குறுதி (யின் காலம்) வரும் போது, நாம் உங்களை (எல்லாம்) ஒன்று திரட்டி அங்கே கொண்டு வருவோம்26.
- நாம் இந்தக் குர்ஆனை உண்மையை(யும், நுட்பமான ஞானத்தையும்) கொண்டே இறக்கினோம். உண்மையை(யும், நுட்பமான ஞானத்தையும்) கொண்டே இது இறங்கியுள்ளது. நாம் உம்மை நற்செய்தி வழங்குபவராகவும், (தண்டனையைப் பற்றி) எச்சரிப்பவராகவுமே அனுப்பியுள்ளோம்.
- மனிதர்களுக்கு நீர் அடுத்தடுத்து ஓதிக் காட்டுவதற்காக, நாம் குர்ஆனைப் பல பகுதிகளாக ஆக்கினோம். மேலும் நாம் படிப்படியாக அதனை இறக்கினோம்.
- நீர் கூறுக: நீங்கள் இதனிடத்து நம்பிக்கை கொண்டாலும், கொள்ளாவிட்டாலும் சரி; இதற்கு முன்னர் ஞானம் வழங்கப் பெற்றவர்களின் முன் இது படித்துக் காட்டப் பெற்றால், அவர்கள் முழுமையாகக் கட்டுப்படுவதின் அடையாளமாக சிரம்பணிந்து விடுகின்றனர்.
- மேலும் அவர்கள், எங்கள் இறைவன் (எல்லாக் குறைபாடுகளிலிருந்தும்) தூய்மையானவன் என்றும், எங்கள் இறைவனின் வாக்குறுதி கட்டாயம் நிறைவேறியே தீரும் என்றும் கூறுகின்றனர்27.
- அவர்கள் முகங்குப்புற வீழ்ந்து விடும் போது, அழுது கொண்டேயிருக்கின்றனர். (குர்ஆனாகிய) அது அவர்களது பணிவை (மேலும்) அதிகரிக்கின்றது.
- நீர் (அவர்களிடம்) கூறுவீராக:28 நீங்கள் அவனை அல்லாஹ் என்றோ, ரஹ்மான் என்றோ அழையுங்கள். எப்பெயர் கொண்டு அவனை அழைத்தாலும், அவனுக்கோ மிகச்சிறந்த பண்புப் பெயர்கள் உள்ளன. நீர் உம் பிரார்த்தனையில் உரத்த குரலிலோ, மிகக் குறைந்த குரலிலோ ஓதாதீர்; அவ்விரண்டுக்கும் இடையே ஒரு வழியைத் தேர்ந்தெடுத்துக் கொள்க29.
- நீர் கூறுக: அல்லாஹ்வே எல்லாப் புகழுக்கும் உரியவன். அவனுக்கு மகன் இல்லை; அவனுடைய ஆட்சியில் அவனுக்கு கூட்டாளி எவரும் இலர்; அவனின் ஆற்றலின்மை காரணமாக அவனுக்கு நண்பர் ஆனவரும் எவருமிலர்; நீர் அவனுடைய பெருமையைப் போற்றிப் புகழ்க. ரு12