18- அல் கஹ்ஃப்

அத்தியாயம் : அல் கஹ்ஃப்
அருளப்பெற்ற இடம் : மக்கா | வசனங்கள் : 111

பிரிவுகள் :12

  1. அளவற்ற அருளாளனும், மேன்மேலும் கருணைகாட்டுபவனுமாகிய அல்லாஹ்வின் பெயரால் (ஓதுகின்றேன்)
  2. அல்லாஹ்வே எல்லாப் புகழுக்கும் உரியவன். அவன் (இந்த) வேதத்தைத் தன் அடியாரிடத்து இறக்கினான். அவன் இதில் எந்தக் கோணலையும் வைக்கவில்லை.
  3. தன்னிடமிருந்துள்ள துன்பமிகு தண்டனை பற்றி அவன் எச்சரிப்பதற்காக (இதனை) உண்மையும், நேர்வழியும் கொண்டதாக இறக்கினான். மேலும் நற்செயல் செய்கிற நம்பிக்கையாளர்களுக்கு (இறைவன் புறமிருந்து) நற்கூலி உண்டு என்று இது நற்செய்தியும் கூறுகிறது.
  4. அவர்கள் அதில் (நற்பலனான பதவியில்) என்றென்றும் இருப்பர்.
  5. அல்லாஹ் தனக்கென ஒரு மகனைக் கொண்டுள்ளான் என்று கூறுபவரை இது எச்சரிக்கையும் செய்கிறது.
  6. அவர்களுக்கும், அவர்களின் மூதாதையர்களுக்கும் இதுபற்றி எவ்வித ஞானமும் இல்லை. அவர்களின் வாய்களிலிருந்து வெளிவரும் இச்சொல் மிகவும் அபாயகரமான கூற்றாகும். அவர்கள் பொய்யையே கூறுகின்றனர்.
  7. மகத்துவமிக்க இந்த வசனத்தை அவர்கள் நம்பவில்லை எனில், நீர் அவர்களைப் பற்றிய கவலையினால், மிகுந்த வருத்தத்தினால் உம் உயிரை அழித்து விடுவீரா?
  8. நிச்சயமாக நாம் அவர்களுள்1 எவர் மிகச்சிறந்த முறையில் செயலாற்றுகின்றார் என்பதனைச் சோதிப்பதற்காகப் பூமியி(ன் மே) லுள்ளவற்றை நாம் அதற்கு அலங்காரமாக்கியுள்ளோம்.
  9. நிச்சயமாக நாம் இதிலுள்ளவற்றையெல்லாம் (ஒரு நாளில்) அழித்து வெட்ட வெளிச்சமாக்கி விடுவோம்.
  10. குகைக்கும், கல்வெட்டுக்கும் உரியவர்கள் எம்முடைய அடையாளங்களுள் வியப்புக்குரியதாக இருந்தனர் என்று (ம் இனிமேல் அவர்களுக்கு நிகர் காணவே முடியாதென்றும்) நீர் கருதுகின்றீரா?
  11. அந்த இளைஞர்கள் விசாலமான குகையினுள் அடைக்கலம் புகுந்த போது, "எங்கள் இறைவா! நீ எங்களுக்கு உன்னிடமிருந்து அருளை வழங்கிவாயாக. மேலும் எங்களின் இவ்விசயத்தில் நேர்வழியை எளிதாக்கித் தருவாயாக" என்று வேண்டினர்.
  12. இதனால் நாம் விரிவான அக்குகையில் குறிப்பிட்ட சில வருடங்கள் வெளியுலகச் செய்திகளை அவர்கள் கேட்காமலிருக்கச் செய்து விட்டோம்.
  13. (அங்கு) தங்கியிருந்த காலத்தில் (ஈஸாவைப் பின்பற்றிய) இரு பிரிவினருள், எவர் அதிக பாதுகாப்பிலிருந்தனர் என்பதை நாம் (மக்களுக்கு) அறிவிப்பதற்காக அவர்களை எழுப்பினோம். ரு1
  14. (இப்பொழுது) நாம் அவர்கள் பற்றிய மிக முக்கியமான செய்தியினை மிகச்சரியாக உமக்கு விளக்குகின்றோம். அவர்கள் தங்கள் இறைவன் மீது (உண்மையான) நம்பிக்கை கொண்ட சில வாலிபர்களாக இருந்தனர். அவர்களை நாம் நேர்வழியில் (மேன்மேலும்) முன்னேறச் செய்தோம்.
  15. அவர்கள் (ஊரை விட்டு வெளியேற) எழுந்த போது, அவர்களின் உள்ளங்களை நாம் உறுதிப்படுத்தினோம். அவர்கள் (தங்களுக்குள்) வானங்களுக்கும், பூமிக்கும் உரிய இறைவனே எங்கள் இறைவன் ஆவான்; அவனையன்றி வேறு கடவுளை நாங்கள் ஒரு போதும் அழைக்க மாட்டோம்; அவ்வாறு செய்தால், உண்மைக்குப் புறம்பானதைக் கூறியவர்களாவோம் என்று கூறினர்.
  16. நம்முடைய இந்தச் சமுதாயத்தினர் உண்மையான வணக்கத்திற்குரியவனை விட்டு விட்டு(த் தங்களுக்கென்று) பல்வேறு தெய்வங்களை உருவாக்கிக் கொண்டனர். அவற்றை நிரூபிக்க தெளிவான எந்தச் சான்றையும் ஏன் அவர்கள் கொண்டு வருவதில்லை? எனவே அல்லாஹ்வின் மீது பொய்யைப் புனைந்து கூறுபவனை விட மிகவும் அநீதி இழைப்பவன் யார்? (என்பதனை அவர்கள் ஏன் உணர்வதில்லை). 
  17. அவர்களிலிருந்தும், அல்லாஹ்வையன்றி அவர்கள் வணங்குபவற்றிலிருந்தும் நீங்கள் விலகிக் கொண்ட பின்னர், குகைக்குள் அடைக்கலம் புகுந்து விடுங்கள். உங்கள் இறைவன் உங்களுக்குத் தன் அருளைத் திறந்து தருவான்; உங்களுடைய விஷயத்தில் அவன் எளிதான ஏற்பாடுகளைச் செய்வான்.
  18. சூரியன் தோன்றும் போது, அது அவர்களின் குகையின் வலப்பக்கமாக நகர்வதையும், அது மறையும் போது அவர்களின் இடப்பக்கமாக நகர்வதையும் நீர் காண முடியும்2. அவர்கள் அதன் (குகையின்) பரந்த இடத்தில் இருந்தனர். இது அல்லாஹ்வின் அடையாளங்களைச் சார்ந்ததாகும். அல்லாஹ் எவருக்கு (நேர்) வழி காட்டுகிறானோ அவன் நேர்வழியில் இருக்கிறான். அல்லாஹ் எவரை வழிதவற விட்டுவிடுகிறானோ, அவருக்கு வழிகாட்டக் கூடிய உதவியாளரை நீர் பெற இயலாது. ரு2
  19. (செவியேற்பவரே!) நீர் அவர்களை விழித்துக் கொண்டிருப்பதாகக் கருதுகின்றீர். ஆனால் அவர்களோ தூங்கிக் கொண்டு இருக்கின்றனர். நாம் அவர்களை வலப்புறமாகவும், இடப்புறமாகவும் திருப்புவோம்3. அவர்களது நாய் (அவர்களுடன்) வாயிலில் தன் முன்னங்கால்களை விரித்த வண்ணமிருக்கிறது4. நீர் அவர்களின் நிலைகளை தெரிந்து விட்டால், அவர்களை விட்டும் வெருண்டோடுவதற்காகப் புறமுதுகு காட்டி, அவர்களின் காரணமாக அச்சம் கொண்டிருப்பீர்.
  20. எனவே நாம் அவர்களை(ப் பலவீனமான நிலையிலிருந்தும்) எழுப்பினோம். இதனால் அவர்கள் தங்களுக்குள் வினவத் தொடங்கினர். அவர்களில் ஒருவர் நீங்கள் (இங்கு) எவ்வளவு காலம் தங்கியிருக்கிறீர்கள் எனக் கேட்டார். அவர்கள் ஒரு நாள் அல்லது ஒரு நாளின் ஒரு பகுதி நேரம் நாம் தங்கியிருக்கிறோம் என்றனர். அ(தற்கு மற்ற)வர்கள் (இவ்வாறு) கூறினர்: நீங்கள் தங்கியிருந்த காலத்தை உங்கள் இறைவனே நன்கறிவான். ஆகவே, உங்களின் இந்த நாணயங்களை உங்களுள் ஒருவரிடம் கொடுத்து நகருக்கு அனுப்புங்கள்5. அவர் சிறந்த உணவைத் தெரிந்து, அதில் கொஞ்சம் உங்களுக்கு வாங்கி வரட்டும்; அவர் பணிவுடனும், உங்களைப் பற்றி எவருக்கும் தெரிவிக்காமலும் நடந்து கொள்ளட்டும்.
  21. ஏனென்றால் அவர்கள் உங்களை வென்று விட்டால், நிச்சயமாக அவர்கள் உங்களைக் கல்லெறிந்து கொன்று விடுவார்கள். அல்லது உங்களை(க் கட்டாயப்படுத்தி)த் திரும்பவும் தங்கள் மதத்தில் சேர்த்துக் கொள்வார்கள். அவ்வாறாயின் உங்களால் ஒருபோதும் வெற்றி பெற முடியாது.
  22. அல்லாஹ்வின் வாக்குறுதி நிறைவேறியே தீருமென்பதையும் (முன்னறிவிக்கப்பட்ட) அந்த நேரம் (வருவது) பற்றி எவ்வித ஐயத்திற்கும் இடமில்லை என்பதையும் அவர்கள் தெரிந்து கொள்வதற்காக இவ்வாறு நாம் அவர்(களின் நிலை)களைப் பற்றி (மக்களுக்கு) அறிவித்தோம். அவர்கள் தங்கள் பணியைக் குறித்து தங்களுக்கிடையில் விவாதித்து, அவர்கள் (வாழ்ந்து வந்த இடத்தின்) மீது கட்டடம் ஒன்றை நீங்கள் கட்டுங்கள் என்று கூறிய நேரத்தை (நினைத்துப் பாருங்கள்). அவர்களுடைய இறைவன் அவர்க(ளின் நிலைக)ளை நன்கு அறிந்திருந்தான். நிச்சயமாக நாங்கள் அவர்கள் (வாழ்ந்து வந்த குகையின்) மீது ஒரு கட்டிடத்தைக் கட்டுவோம் என்று தங்களின் வாதத்தில் வென்றவர்கள் கூறினர்.
  23. சிலர் கற்பனையாக அவர்கள் மூவர்; நான்காவது அவர்களின் நாய் என்றும், (சிலர்) அவர்கள் ஐவர்; ஆறாவது அவர்களின் நாய் என்றும் கூறுகிறார்கள்6. மேலும் (வேறு சிலர்) அவர்கள் எழுவர், எட்டாவது அவர்களின் நாய் என்றும் கூறுகின்றனர். கூறுக: என் இறைவன் அவர்களின் எண்ணிக்கையை நன்கறிவான். அவர்களைப் பற்றிச் சிலரைத் தவிர வேறு எவரும் அறியமாட்டார்கள்7, அவர்களைப் பற்றிய விவகாரத்தில் தெளிவான விஷயங்களைத் தவிர ஏனையவற்றில் விவாதம் செய்ய வேண்டாம். அவர்களைப் பற்றி அவர்களுள் எவரிடமும் நீர் கேட்க வேண்டாம். ரு3
  24. நீர் எதனைப் பற்றியும் நிச்சயமாக நான் இதை நாளைக்குச் செய்து விடுவேன் என்று ஒருபோதும் கூறாதீர்8. 
  25. ஆனால் அல்லாஹ் நாடியபடி (செய்வேன் எனக் கூறுக). நீர் மறந்து விட்டால், உமது இறைவனை நினைவுகூர்ந்து, நேர்வழி பெறுவதற்கு இதை விட மிகவும் சமீபமான ஒரு பாதையில் என் இறைவன் என்னை நடத்திச் செல்வான் என்ற நம்பிக்கை (எனக்கு) உண்டு என்று கூறுக.
  26. அவர்கள் தங்களின் (விரிவான பாதுகாப்பு இடமாகிய) குகையில் முந்நூறு வருடங்களும்9, இதற்கு மேலும் ஒன்பது வருடங்களும் தங்கியிருந்தனர். (என்றும் சிலர் கூறுகின்றனர்).
  27. கூறுக: அவர்கள் (அதில்) இருந்த காலத்தை அல்லாஹ் தான் நன்கறிவான். வானங்கள், பூமி ஆகியவற்றின் இரகசியங்கள் அவனுக்கே உரியவை. அவன் எவ்வளவு நன்றாக பார்க்கிறான்! அவன் எவ்வளவு நன்றாக கேட்கிறான்! அவர்களுக்கு அவனையன்றி உதவி செய்பவர் எவருமில்லை. அவன் தன் அதிகாரத்தில் எவருக்கும் பங்களிப்பதில்லை.
  28. உமது இறைவனின் வேதத்திலிருந்து உமக்கு வஹி(யின் மூலம்) அறிவிக்கப்பட்டதை நீர் (மக்களுக்கு) எடுத்துரைப்பீராக. அவனுடைய வசனங்களை எவராலும் மாற்றி விட முடியாது. அவனையன்றி எங்கும் நீர் அடைக்கலம் பெற மாட்டீர்.
  29. தங்கள் இறைவனின் விருப்பத்தை நாடிக் காலையிலும், மாலையிலும் அவனை அழைக்கின்றவர்களுடன் நீர் சேர்ந்திருப்பீராக. நீர் இவ்வுலக வாழ்வின் அலங்காரத்தை விரும்பி, உம் பார்வைகள் அவர்களை விட்டும் கடந்து செல்ல வேண்டாம்10. நாம் எவனது உள்ளத்தை நம்மை நினைப்பதிலிருந்து கவனமற்றதாக்கி விட்டோமோ அவனுக்குக் கட்டுப்படாதீர். அவன் அற்ப ஆசையைப் பின்பற்றுகிறான். அவனின் நிலை எல்லை கடந்ததாகும்.
  30. நீர் கூறுக: இந்த உண்மை உங்கள் இறைவனிடமிருந்து உள்ளதாகும். எனவே எவர் விரும்புகிறாரோ அவர் நம்பட்டும். எவர் விரும்புகிறாரோ அவர் நிராகரிக்கட்டும். அநீதி இழைப்பவர்களுக்கு நிச்சயமாக நாம் நெருப்பொன்றை ஆயத்தப்படுத்தியுள்ளோம். அதன் (சுடர்ச்)சுவர் அவர்களைச் சூழ்ந்து கொள்ளும். அவர்கள் உதவி கோரி கதறினால் உருகிய செம்பைப் போன்ற நீரே அவர்களுக்குக் கொடுக்கப்படும். அது அவர்களின் முகங்களைச் சுட்டெரிக்கும். அது எவ்வளவு மோசமான பானமாகும்! (அந் நெருப்பு) எவ்வளவு கெட்ட தங்குமிடமாகும்!
  31. நம்பிக்கை கொண்டு நற்செயல்களைச் செய்பவர்கள் (தங்களின் வெகுமதியைப் பெற்றுக் கொள்வார்கள்) நிச்சயமாக நற்செயல் செய்தோரின் கூலியை நாம் வீணாக்குவதில்லை.
  32. அவர்களுக்கு நிலையான தோட்டங்கள் உண்டு. அவர்களுக்குக் கீழே ஆறுகள் ஓடும். அங்கு அவர்களுக்குப் பொற்காப்புகள் அணிவிக்கப்படும். அவர்கள் மெல்லிய பச்சைப் பட்டாடைகளையும் , தடித்த பட்டுடைகளையும் அணிவர். அங்கு அவர்கள் அழகிய மஞ்சங்களில் சாய்ந்து இருப்பர். எவ்வளவு அழகிய பரிசு! எவ்வளவு அழகிய தங்குமிடம்! ரு4
  33. நீர் அவர்களுக்கு இருவரின் உவமையை விளக்குக. அவர்களுள் ஒருவருக்கு இரு திராட்சைத் தோட்டங்களை12 வழங்கினோம். அவற்றைச் சுற்றிலும் பேரீச்சை மரங்களை அமைத்தோம். அவ்விரண்டுக்கும் இடையில் (தானிய) வயல்களை உண்டாக்கினோம்.
  34. அவ்விரு தோட்டங்களும் தமது பழங்களைச் சிறிதும் குறைவின்றி(வளமாக)க் கொடுத்தன. அவற்றிற்கிடையில் ஓர் ஆற்றையும்13 நாம் ஓடச் செய்தோம்.
  35. அவருக்குப் பழம்(பெருமளவில்) கிடைத்தது. இதனால் அவர் தம் தோழரிடம், அவருடன் பேசுகையில், உம்மை விட நான் எனது செல்வத்திலும், ஆள் பலத்திலும் மிகைத்தவனாக விளங்குகின்றேன் என்று கூறினார்14.
  36. (ஒரு தடவை) அவர் (அதாவது கிறித்தவர்) தனக்கே அநீதி இழைத்துக்  கொண்டு, தம் தோட்டத்தில் நுழைந்து இது எக்காலத்திலும் அழிந்து விடுமென்று நான் கருதவில்லை என்றார்.
  37. (அழிவைக் குறித்து முன்னறிவிக்கப்பட்ட) அந்த நேரம் (என்றாவது) வரும் என்றும் நான் கருதவில்லை. (ஒருவேளை) நான் என் இறைவனிடம் திரும்பக் கொண்டு செல்லப்பட்டால் (அங்கும்) நிச்சயமாக நான் இதனை விடச் சிறந்த தங்குமிடத்தைப் பெறுவேன்.
  38. அவருடைய தோழர் அவரிடம் உரையாடியவராக (கீழ் காணுமாறு) கூறினார். உம்மை (முதலில்) மண்ணிலிருந்தும், பின்னர் விந்திலிருந்தும் படைத்து இதன் பின்னர் உம்மை முழு மனிதனாகவும் ஆக்கிய (இறை)வனை நீர் நிராகரிக்கின்றீரா?
  39. ஆனால் (உண்மையாகவே) அல்லாஹ் தான் என் இறைவன், நான் என் இறைவனுக்கு வேறெவரையும் இணையாக்க மாட்டேன்.
  40. நீர் உமது தோட்டத்தில் நுழைந்த போது அல்லாஹ்வின் நாட்டமே (நிறைவேறும்). அல்லாஹ்விடமிருந்து அன்றி வேறு ஆற்றல் இல்லை என்று நீர் ஏன் கூறவில்லை? என்னை உம்மை விடப் பொருட் செல்வத்திலும், மக்கட் செல்வத்திலும் குறைந்தவனாக நீர் கண்டால்,
  41. ஒருவேளை என் இறைவன் உமது தோட்டத்தை விடச் சிறந்ததை எனக்குத் தந்து விட்டு15 வானத்திலிருந்து அதில் (உமது தோட்டத்தில்) தீப்பிழம்பை இறக்கலாம். இதனால் அது வெற்று வழுக்கை நிலமாக ஆகிவிடும்.
  42. அல்லது அதன் நீர் வற்றி விடும். பின்னர் நீர், அதனைக் கண்டறிய முடியாது போய் விடலாம்.
  43. அவருடைய பழங்கள் எல்லாம் அழிக்கப்பட்டன. அதற்கு அவர் செலவு செய்ததற்காகவும், அது அதனைத் தாங்கி நின்றவற்றுடன் வீழ்ந்து கிடந்ததற்காகவும் தம்மிரு கைகளை பிசைந்து, அந்தோ! நான் என் இறைவனுக்கு எவரையும் இணையாக்காது இருந்திருக்க வேண்டுமே! என்று கூறினார்.
  44. (அப்போது) அல்லாஹ்வையன்றி அவருக்கு உதவிட எந்தக் கூட்டமும் இருந்ததில்லை. (அதற்குப்) பழி வாங்கவும் அவரால் இயன்றதில்லை.
  45. இத்தகு வேளையில் உண்மையான அல்லாஹ்விடம் இருந்தே உதவி வருகிறது. அவன் வெகுமதி வழங்குவதிலும் மிகச் சிறந்தவன். நல்ல முடிவை வழங்குவதிலும் மிகச் சிறந்தவன்.  ரு5
  46. நீர் அவர்களுக்கு இவ்வுலக வாழ்வின் உவமையை தெளிவாக விளக்குக. அது நாம் மேகத்திலிருந்து பொழியச் செய்கிற நீரைப் போன்றது. பூமியில் உள்ள தாவரம் அதனுடன் கலந்தது. பின்னர் அது காற்று பரத்திச் செல்லும் பதராகி விடுகிறது. அல்லாஹ் எல்லாவற்றின் மீதும் ஆற்றல் பெற்றவன்.
  47. பொருட் செல்வமும், மக்கட் செல்வமும் இவ்வுலக வாழ்வின் அலங்காரமாகும். ஆனால் (இவற்றால் செய்யப்படும்) நிலையான நற்செயல்கள் தான், உமது இறைவனிடத்தில் நற்கூலி கிடைப்பதற்கும், எதிர்காலத்தின் எதிர்பார்ப்புக்கும் சிறந்தவை.
  48. நாம் மலைகளை (அவற்றிற்குரிய இடங்களிலிருந்து) அகற்றி விடும் நாளில் (அவர்களது மிகச்சிறந்த விளைவுகள் வெளிப்படும்). உலக மக்களெல்லாம் (ஒருவரையொருவர் எதிர்த்துப் போரிடுவதற்காக) வெளியேறுவதை நீர் காண்பீர். நாம் அவர்களை (எல்லாம்) ஒன்று திரட்டுவோம்16. அவர்களுள் எவரையும் (எஞ்சியிருக்குமாறு ) விட்டு வைக்க மாட்டோம்.
  49. அவர்கள் அணிவகுத்தவர்களாக உமது இறைவன் முன் கொண்டு வந்து நிறுத்தப்படுவர். (அப்போது அவர்களிடம் இவ்வாறு கூறப்படும்) நாம் உங்களை முதல் தடவைப்(பலவீனமான நிலையில்) படைத்ததை போன்று நீங்கள் (இப்பொழுதும் அதே நிலையில்) எம்மிடம் வந்துள்ளீர்கள். (நீங்கள் இதனை எதிர்பார்ப்பதில்லை). இந்நாள் பற்றிய வாக்குறுதியை நாம் நிறைவேற்ற மாட்டோம் என்று நீங்கள் எண்ணியிருந்தீர்கள்.
  50. (அவர்களின் செயல்கள் பதிவு செய்யப்பட்ட) நூல் (அவர்கள் முன்) வைக்கப்படும். எனவே, நீர் அக் குற்றவாளிகளை அதில் (பதிவு செய்யப்பட்டு) உள்ளவற்றால் பயந்தவர்களாகக் காண்பீர். (அப்போது) அவர்கள் அந்தோ! நாங்கள் அழிவிற்குள்ளாகி விட்டோம். இந்த நூலுக்கு என்ன ஏற்பட்டு விட்டது? இது (எங்கள் செயல்களுள்) சிறிய, பெரிய எதனையும் பதிவு செய்யாமல் விட்டு விடவில்லையே எனக் கூறுவர். அவர்கள் தாங்கள் செய்தவற்றையெல்லாம் தங்கள் முன் காண்பர். உமது இறைவன் எவருக்கும் அநீதி இழைப்பதில்லை. ரு6
  51. நாம் மலக்குகளிடம் நீங்கள் ஆதத்துடன் (இணைந்து) சிரம் பணியுங்கள் என்று கூறிய நேரத்தை (நினைத்துப் பாருங்கள்). இப்லீஸைத் தவிர அவர்கள் எல்லோரும் சிரம் பணிந்தனர். அவன் ஜின்களைச் சார்ந்தவனாக இருந்தான்17. இதனால் அவன் (தன் இயல்பிற்கேற்ப) தனது இறைவனின் கட்டளைக்கு மாறு செய்தான். ஆகவே (என் அடியார்களே!) நீங்கள் என்னை விட்டு விட்டு (ஷைத்தானாகிய) அவனையும், அவனுடைய சந்ததிகளையும்(உங்கள்) நண்பராக்கிக் கொள்கின்றீர்களா? ஆனால் அவர்களோ உங்கள் விரோதிகளாவர். (ஷைத்தானாகிய அவன்) அநீதியிழைப்பவர்களுக்கு மிக மோசமான விளைவே.
  52. நான் வானங்கள், பூமி ஆகியவற்றைப் படைத்த (நேரத்)திலும், அவர்களது உயிர்களைப் படைத்த (ச் சந்தர்ப்பத்) திலும் அவர்களைச் சாட்சிகளாக்கவுமில்லை. வழி தவறச் செய்பவர்களை (என்னுடைய) உதவியாளர்களாகவும் நான் ஆக்குவதுமில்லை.
  53. அவன் அந்நாளில் கூறுவான்: எனக்கு இணையானவர்களென்று எவர்களை நீங்கள் எண்ணினீர்களோ அவர்களை அழையுங்கள். அதன்படி அவர்கள் அழைப்பார்கள். ஆனால் அவர்கள் இவர்களுக்குப் பதிலளிக்க மாட்டார்கள். அவர்களுக்கிடையில் நாம் ஒரு தடையை ஏற்படுத்தி விடுவோம்.
  54. குற்றவாளிகள் அந்த நெருப்பைக் கண்டு தாங்கள் அதில் விழக் கூடியவர்களே என்று புரிந்து கொள்வர். அவர்கள் அதிலிருந்து தப்பித்துக் கொள்வதற்கான எந்த இடத்தையும் பெற மாட்டார்கள்.ரு7
  55. நிச்சயமாக நாம் மனித இனத்தின் நன்மைக்காக இந்தக் குர்ஆனில் (அவசியமான) எல்லாவற்றையும் பற்றியும் பல்வேறு கோணங்களில் விளக்கி விட்டோம். ஆனால் மனிதன் மிகுதியாக வாதம் செய்பவனாக இருக்கிறான்.
  56. மக்களிடம் நேர்வழி வந்த போது (அதன்மீது) நம்பிக்கை கொண்டு தங்கள் இறைவனிடம் மன்னிப்புக் கோருவதை விட்டும் அவர்களைத் தடுப்பது, முன் சென்றோரின் முடிவு அவர்களுக்கு வருதல் வேண்டும் அல்லது அவர்களுக்குத் தண்டனை (அவர்கள் கண்) முன் வர வேண்டும் என்பதேயாகும்.
  57. நாம் தூதர்களை நற்செய்தி வழங்குபவர்களாகவும், (இறையாக்கினையைப் பற்றி) அச்சமூட்டி எச்சரிப்பவர்களாகவுமே அனுப்புகின்றோம். நிராகரித்தவர்கள் உண்மையை அழித்து விடுவதற்காக பொய்யைக் கொண்டு குதர்க்கம் பேசுகின்றனர். மேலும் அவர்கள் என் அடையாளங்களையும் அவர்களுக்கு அச்சமூட்டி எச்சரிக்கப்பட்டதையும் ஏளனத்திற்கு உரியவையாக்கி விட்டனர்.
  58. தம் இறைவனின் அடையாளங்களைக் கொண்டு நினைவூட்டப் பட்டதன் பின்னரும், அவற்றைப் புறக்கணித்து தம் கரங்கள் முன்னமே அனுப்பியதை மறந்து விட்டவரை விடவும், மிக்க அநீதி இழைப்பவர் யார்? அவர்கள் அதனைப் புரிந்து கொள்ளாமலிருப்பதற்காக, நிச்சயமாக நாம் அவர்களின் உள்ளங்களில் பல திரைகளிட்டு, அவர்களின் காதுகளில் செவிட்டுத் தன்மையினை ஏற்படுத்தி விட்டோம். நீர் அவர்களை நேர் வழியிடத்து அழைத்தால், அவர்கள் நேர்வழியினை ஒருபோதும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.
  59. உம் இறைவன் மிக்க மன்னிப்பவனும் (மிக அதிகமாக) அருள் செய்பவனுமாவான். அவன் அவர்களின் (தீய) செயல்களின் காரணமாக அவர்களை அழித்து விட விரும்பினால், அவன் அவர்களுக்கு உடனடியாகத் தண்டனை வழங்கியிருப்பான். (ஆனால் அவன் அவ்வாறு செய்வதில்லை) எனினும் அவர்களுக்காக ஒரு காலக்கெடு (நியமிக்கப்பட்டு) உள்ளது. அதனை விட்டு (தப்புவதற்கு) அவர்கள் எந்தப் புகலிடத்தையும் காண மாட்டார்கள்.
  60. நாம் அந்த ஊர்களை, அவற்றிலுள்ளவர்கள் அநீதி இழைத்ததினால் அழித்து விட்டோம். நாம் அவர்களின் அழிவிற்காக ஏற்கனவே ஒரு காலக்கெடுவை (பாவ மன்னிப்புக் கோருவதற்கு) ஏற்படுத்தியிருந்தோம். ரு8
  61. மூஸா தமது வாலிப (நண்ப)ரிடம்18 இவ்வாறு கூறிய நேரத்தை (யும் நினைத்துப் பாருங்கள்!). இரண்டு கடல்கள்19 சந்திக்குமிடத்தை அடையும் வரை, நான் (என் பயணத்தை ) நிறுத்தப் போவதில்லை; அல்லது பல நூற்றாண்டுகள் வரை சென்று கொண்டேயிருப்பேன்.
  62. எனவே அவ்விருவரும் அவ்விரண்டு (கடல்களு)ம்20 சந்திக்குமிடத்தை அடைந்த போது (அதாவது நபிகள் நாயகத்தின் காலத்தை நெருங்கிய போது) அவர்கள் தங்கள் மீனை (அங்கு) மறந்து விட்டனர். இதனால் அது மிக வேகமாகச் சென்று கடலுக்குள் தன் வழியை அமைத்துக் கொண்டது.
  63. பின்னர் அவ்விருவரும் (அவ்விடத்தைக்) கடந்து சென்ற போது21 அவர் தமது வாலிப (நண்ப)ரிடம் இவ்வாறு கூறினார்: நமக்கு நமது காலையுணவைக் கொண்டு வருக, நிச்சயமாக, நாம் நமது இப் பயணத்தினால் களைப்படைந்து விட்டோம்.
  64. அவர் கூறினார்: (இப்பொழுது நிகழவிருப்பது என்னவென்பதை) நீங்கள் கூறுங்கள், நாம் ஓய்வெடுப்பதற்காக அந்தப் பாறையில்22 தங்கிய போது நான் மீனைப் பற்றி மறந்து விட்டேன். இதை நான் நினைவில் கொள்வதை விட்டும், ஷைத்தானைத் தவிர வேறெவனும் என்னை மறக்கச் செய்யவில்லை. அது வியக்கத்தக்க விதத்தில் கடலுக்குள் தன் வழியினை அமைத்துக் கொண்டது.
  65. இதற்கு அவர் இதுவே நாம் தேடி வந்த இடம் என்றார். பின்னர் அவ்விருவரும் தங்கள் காலடிகளின் அடையாளங்களைக் கொண்டே திரும்பச் சென்றனர்23. 
  66. அப்போது அவர்கள் எம்(மால் தேர்ந்தெடுக்கப்பட்ட) அடியார்களுள் மகத்தான ஓர் அடியாரை (அங்கு) கண்டனர்24. நாம் அவருக்கு எம்மிடமிருந்து அருளை வழங்கியிருந்தோம். நாம் அவருக்கு எம்மிடமிருந்தே (சிறப்பான) ஞானத்தையும் அளித்திருந்தோம்.
  67. மூஸா அவரிடம், தங்களுக்குக் கற்றுக் கொடுக்கப்பட்ட நேர்வழியிலிருந்து எனக்கும் நீங்கள் கற்றுக் கொடுப்பதற்காக நான் உங்களைப் பின் தொடர்ந்து வரலாமா என்றார்.
  68. அவர் கூறினார்: என்னுடன் பொறுமையாக இருக்க உம்மால் ஒருபோதும் இயலாது.
  69. நீர் முழுமையாகத் தெரிந்து கொள்ளாதவற்றில் உம்மால் எவ்வாறு பொறுமையுடன் இருக்க முடியும்?
  70. அவர்(மூஸா) கூறினார்: அல்லாஹ் நாடினால், தாங்கள் என்னைப் பொறுமையுடன் இருப்பதைக் காண்பீர்கள். நான் தங்களுடைய எந்தக் கட்டளைக்கும் மாறு செய்ய மாட்டேன்.
  71. (மாபெரும் ஆத்மீக ஞானியாகிய) அவர்: நன்று, நீர் என்னுடன் வந்தால், எதனைப் பற்றியும் நானாக உம்மிடம் கூறும் வரை, என்னிடம் அதனைப் பற்றி கேட்கக் கூடாது என்றார். ரு9
  72. பின்னர் அவ்விருவரும் (அங்கிருந்து) சென்றனர். அவர்கள் கப்பலில் ஏறிய போது (இறைவனால் தேர்ந்தெடுக்கப்பட்டவராகிய ) அவர், அதில் துளையிட்டார். இதனால் (மூஸாவாகிய) அவர்: இதிலுள்ளவர்களை மூழ்கடிப்பதற்காகத் தாங்கள் இதில் துளையிட்டீர்களா? நிச்சயமாகத் தாங்கள் வெறுக்கத்தக்க ஒரு செயலைச் செய்துள்ளீர்கள் என்றார்.
  73. உம்மால் என்னுடன் பொறுமையாக ஒருபோதும் இருக்க முடியாது என்று நான் சொல்லவில்லையா என்று அவர் கூறினார்.
  74. இதற்கு அவர் (அதாவது மூஸா) நான் மறந்து விட்டதற்காக நீர் என் மீது குற்றம் சாட்டாதீர். நீர் எனது (இச்) செயலினால் என்னுடன் வன்மையாக நடந்து கொள்ளாதீர் என்றார்.
  75. பின்னர் அவ்விருவரும் (அங்கிருந்து) சென்றனர். அவர்கள் ஒரு சிறுவனைச் சந்தித்த போது25 அவர் அவனைக் கொன்று விட்டார். அப்போது அவர் (அதாவது மூஸா) : நீர் குற்றமற்ற ஒருவனை ஒரு உயிருக்காக அன்றி ( அதாவது அவன் யாரையும் கொலை செய்யாமல் இருக்கும் போது) கொன்று விட்டீரே! நிச்சயமாக, நீர் மிகவும் தீயதொரு செயலைச் செய்து விட்டீர் என்றார்.
  76. உம்மால் என்னுடன் பொறுமையாக ஒருபோதும் இருக்க முடியாது என்று நான் உம்மிடம் சொல்லவில்லையா? என்று அவர் கூறினார்.
  77. (மூஸா) : இதற்குப் பிறகு நான் எதனைப் பற்றியும் உம்மிடம் வினவினால், நீர் என்னை உம்முடன் வைத்திருக்க வேண்டாம். ஏனென்றால் நீர் என்னை மன்னிக்க வேண்டிய அளவுக்கு மன்னித்து விட்டீர் என்றார்.
  78. பின்னர் அவ்விருவரும் (அங்கிருந்து) சென்றனர். இறுதியாக அவர்கள் ஒரு நகர மக்களிடம் வந்த போது, அவர்கள் அம்மக்களிடம் உணவளிக்குமாறு வேண்டினர்26. ஆனால் அவர்கள் அவ்விருவரையும் (தங்கள்) விருந்தினராக்கிக் கொள்ள மறுத்து விட்டனர். பின்னர் அவ்விருவரும் அங்கு விழுந்து விடும் நிலையிலிருந்த சுவரொன்றைக் கண்டனர். அவர் அதனைச் செப்பனிட்டார். நீர் விரும்பியிருந்தால், நிச்சயமாக இதற்குரிய கூலியினைப் பெற்றிருக்கலாம் என்று (மூஸா) கூறினார்.
  79. (இறைவனால் தேர்ந்தெடுக்கப்பட்டவராகிய) அவர் இவ்வாறு கூறினார்: எனக்கும், உமக்கும் இடையில் பிரிவு (க்குரிய இடமும் காலமும்) இதுவே. உம்மால் பொறுத்துக் கொள்ள முடியாதவற்றின் விளக்கத்தை நான் இப்பொழுது கூறுகிறேன்.
  80. அந்தப் படகு கடலில் பணியாற்றி வந்த சில ஏழைகளுக்குரியது27.  அவர்களுக்குப் பின்புறம் (அநீதி இழைத்து வந்த ) மன்னனொருவன் இருந்தான்28. அவன் ஒவ்வொரு படகையும் வலிந்து பறித்துக் கொண்டிருந்தான். எனவே நான் அதனைப் பழுதாக்க விரும்பினேன்.
  81. இளைஞனைப் பொறுத்தவரை, அவனுடைய பெற்றோர், நம்பிக்கை கொண்டோர் ஆவர். அவன் (பெரியவனாகி) அநீதி இழைத்தும் (இறைவனை) மறுத்தும் அவ்விருவரையும் துன்புறுத்துவானோ என நாம் அஞ்சினோம்29.
  82. எனவே அவனை விட நல்லவனும், தூய்மையில் சிறந்தவனும், மிக்க பாசம் கொண்டவனுமான ஒருவனை அவனுக்குப் பதிலாக அவர்களின் இறைவன் அவர்களுக்குக் கொடுக்க வேண்டும் என்று நாம் விரும்பினோம்.
  83. மேலும் அச்சுவர்30 அந்நகரிலுள்ள அநாதைச் சிறுவர்களுக்கு உரியது. அதன் கீழ் அவர்களுக்குரிய புதையல் ஒன்று இருந்தது. அவர்களின் தந்தை நல்லவர். எனவே அவ்விருவரும் தங்களுடைய முழு வலிமையை (உடைய வாலிபத்தை) அடைந்து தங்களின் புதையலை உம் இறைவனின் அருட்கொடையாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்று உம் இறைவன் விரும்பினான். நான் அதனை என் விருப்பத்தின்படிச் செய்யவில்லை31. இதுதான் உம்மால் பொறுத்துக் கொள்ள முடியாத விளக்கமாகும். ரு10
  84. அவர்கள் உம்மிடம் 'துல்கர்னைனைக்' குறித்தும்32 வினவுகின்றனர். நிச்சயமாக அவரைக் குறித்துச் சிலவற்றை நான் உங்களுக்குக் கூறுவேன் என்று நீர் (அவர்களிடம்) கூறுவீராக.
  85. நிச்சயமாக நாம் அவருக்குப் பூமியில் ஆட்சியிணை வழங்கி அவருக்கு ஒவ்வொரு பொருளி(னையும் பெற்றுக் கொள்வத)ற்கான வழிவகைகளையும் கொடுத்திருந்தோம்.
  86. எனவே அவர் ஒரு வழியைப் பின்பற்றிச் சென்றார்.
  87. இறுதியாக, அவர் சூரியன் மறையும் இடத்தை அடைந்த போது அது சேற்று நீரில்33 மறைந்து கொண்டிருப்பதைக் கண்டார். மேலும் அவர் அதன் அருகில் (வாழ்ந்து வந்த) ஒரு சமுதாயத்தினரைக் கண்டார்34. (அப்போது) நாம் (அவரிடம்) துல்கர்னைனே! நீர் அவர்களுக்குத் தண்டனை வழங்கலாம் அல்லது அவர்களை நல்ல முறையில் நடத்தலாம் என்றோம்.
  88. அவர் கூறினார்: அநீதி இழைப்பவனுக்கு நிச்சயமாக நாம் தண்டனையளிப்போம். பின்னர் அவன் தன் இறைவனிடம் கொண்டு செல்லப்படுவான். அவனும், அவனுக்குக் கடினமான தண்டனை வழங்குவான்.
  89. நம்பிக்கை கொண்டு நற்செயலாற்றுபவருக்கு சிறந்த கூலி உண்டு. நிச்சயமாக நாம் அவருக்கு எம் கட்டளை மூலம் எளிய (வார்த்)தைக் கூறுவோம்.
  90. பின்னர் அவர் (வேறு) ஒரு வழியைப் பின்பற்றிச் சென்றார்.
  91. இறுதியாக அவர் சூரியன் உதிக்குமிடத்தை (கிழக்கை) அடைந்த போது, ஒரு சமுதாயத்தினர்35 மீது அது உதயமாகிக் கொண்டிருந்ததையும் கண்டார். அம் மக்களுக்கும், அதற்கும் இடையில் எந்தத் தடுப்பையும் நாம் ஏற்படுத்தவில்லை36.
  92. (அவர்களின் நிலை) அவ்வாறே; நிச்சயமாக நாம் அவரிடமுள்ள அனைத்தைப் பற்றியும் அறிந்திருந்தோம்.
  93. பின்னர் அவர் (வேறு) ஒரு வழியினைப் பின்பற்றிச் சென்றார்.
  94. இறுதியாக அவர் இரு மலைகளுக்கு இடையேயுள்ள இடத்தை அடைந்தார். (அவருடைய) பேச்சை எளிதில் புரிந்து கொள்ள முடியாத ஒரு சமுதாயத்தினரை அவற்றிற்கப்பால் கண்டார்.
  95. அவர்கள் (அவரிடம்) துல்கர்னைனே! நிச்சயமாக யாஜூஜூம், மாஜூஜூம் இந்த நாட்டில் குழப்பத்தை விளைவித்துக் கொண்டிருக்கின்றனர். எனவே தாங்கள் எங்களுக்கும், அவர்களுக்குமிடையில் தடையொன்றை ஏற்படுத்தும் நிபந்தனையின் மீது நாங்கள் உமக்குக் கப்பம் செலுத்தலாமா? என்றனர்.
  96. அவர் கூறினார்: இதற்காக (இத்தகு பணிகள் தொடர்பாக) என் இறைவன் எனக்கு வழங்கிய வலிமை மிகச்சிறந்ததாகும். எனவே நான் உங்களுக்கும், அவர்களுக்குமிடையில் தடுப்புச் சுவரை ஏற்படுத்துவதற்காக நீங்கள் எனக்கு (உங்கள் உடலுழைப்பின்) வலிமையைக் கொண்டு உதவுங்கள்.
  97. நீங்கள் என்னிடம் இரும்புப் பாளங்களைக் கொண்டு வாருங்கள்37. (அவற்றால் அத்தடையை உருவாக்கி விட்டு) இறுதியாக அவ்விரு தடைகளுக்கு இடையிலுள்ள38 இடைவெளியை நிரப்பி சமப்படுத்திய போது39 அவர் (உலைக்களம் அமைத்து நெருப்பை) ஊதுங்கள் என்றார். (அவர்கள் ஊதி) அவர் அதனை (சிவந்த) நெருப்பு (போல்) ஆக்கிய போது, இதன் மேல் ஊற்றுவதற்கு உருக்கிய செம்பை என்னிடம் கொண்டு வாருங்கள் என்று கூறினார்.
  98. எனவே (யாஜூஜ், மாஜூஜ்களாகிய) அவர்களால் அதன்மீது ஏறவும் முடியாது போய் விட்டது; அதில் துளையிடவும் முடியாது போய் விட்டது.
  99. (அப்பொழுது) அவர், இது என் இறைவனின் அருளேயாகும். ஆனால் (உலக அழிவு பற்றிய) என் இறைவனின் வாக்குறுதி நிறைவேறும் போது, அவன் அ(ந்)த(த் தடையி)னைத் (தகர்த்து) தூள் தூளாக்கி விடுவான். என் இறைவனின் வாக்குறுதி (கட்டாயம்) நிறைவேறியே தீரும் என்றார்.
  100. அந்நாளில் நாம் அவர்களுள் சிலரை, சிலருடன் (கடல்) அலைபோல் மோத விடுவோம்40. பின்னர் எக்காளம் ஊதப்படும் போது நாம் அவர்கள் எல்லோரையும் ஒன்று திரட்டுவோம்.
  101. அந்நாளில் நாம் நரகத்தை, நிராகரிப்பவர்களின் முன் நேருக்கு நேராகக் கொண்டு வருவோம்.
  102. அவர்களின் கண்கள் (திருக்குர்ஆனிலுள்ள) என் அறிவுரையிலிருந்து (பயனடையாமல்) திரைக்குள் இருந்தன. மேலும் அவர்களால் செவியேற்கவும் முடியவில்லை. ரு11
  103. நிராகரிப்பவர்கள் என்னை விட்டு விட்டு, என் அடியார்களை உதவியாளர்களாக ஆக்கிக் கொள்ளலாம் என்று நினைக்கின்றனரா? நிராகரிப்பவர்களுக்குப் பரிசாக41 நரகத்தை நாம் ஆயத்தப்படுத்தியுள்ளோம்.
  104. நீர் கூறுவீராக: செயல்களினால் மாபெரும் இழப்பு அடைபவர்களைப் பற்றி நாம் உங்களுக்கு அறிவிக்கட்டுமா?
  105. அவர்களின் முயற்சியெல்லாம் இவ்வுலக வாழ்க்கையில் வீணாகி விட்டது. (எனினும்) அவர்கள் தாங்கள் நல்லதையே செய்வதாக எண்ணுகின்றனர்.
  106. தங்கள் இறைவனின் அடையாளங்களையும், அவனைச் சந்திப்பதையும் நிராகரித்தவர்கள் இவர்களே! எனவே அவர்களுடைய செயல்கள் (எல்லாம் இவ்வுலகிலேயே) வீணாகி விட்டன. ஆகவே மறுமை நாளில் நாம் அவர்களுக்குச் சிறிதும் கண்ணியமளிக்க மாட்டோம்.
  107. அவர்கள் நிராகரித்து, என் அடையாளங்களையும், என் தூதர்களையும் ஏளனமாக எடுத்துக் கொண்டதால் நரகமே அவர்களுக்குரிய கூலியாகும்.
  108. நம்பிக்கை கொண்டு நற்செயல்களை ஆற்றியவர்களுக்கு தங்குமிடம், நிச்சயமாக சுவர்க்கத்தின் தோட்டங்களாகும்.
  109. அவர்கள் அவற்றில் என்றென்றும் வாழ்ந்து வருவர். அவற்றை விட்டும் பிரிந்து விடுவதை விரும்ப மாட்டார்கள்.
  110. நீர் கூறுக: என் இறைவனின் சொற்களுக்(கு அதை எழுதுவதற்)காகக் கடல், மையாக ஆகி விட்டாலும் என் இறைவனின் சொற்கள் முடிவடைவதற்கு முன்னர் கடல் தீர்ந்து போய் விடும். (அதனை) அதிகப்படுத்துவதற்காக நாம் (மேலும்) அதே அளவு (நீரைக்) கொண்டு வந்தாலும் சரியே.
  111. நீர் கூறுவீராக: நான் உங்களைப் போன்ற ஒரு மனிதனே. (ஆனால்) உங்களுடைய (உண்மையான) இறைவன் ஒரே இறைவன் தான் என்று எனக்கு வஹியின் அறிவிக்கப்படுகிறது. (இது தான் நமக்கிடையிலுள்ள வேற்றுமை). ஆகவே எவன் தன் இறைவனைச் சந்திக்க விரும்புகிறானோ அவன் நற்செயல்களைச் செய்து தன் இறைவனுக்கு வேறெவரையும் இணையாக ஆக்காதிருக்க வேண்டும். ரு12

Powered by Blogger.