11- அல் ஹூது

அதிகாரம் : அல் ஹூது
அருளப்பெற்ற இடம் : மக்கா | வசனங்கள் : 124
பிரிவுகள் : 10


  1. அளவற்ற அருளாளனும் மேன்மேலும் கருணைகாட்டுபவனுமாகிய அல்லாஹ்வின் பெயரால் (ஓதுகின்றேன்).
  2. அலிஃப் லாம் ரா 1(இது) உறுதி வாய்ந்த வசனங்களைக் கொண்ட ஒரு வேதமாகும். மேலும் அவை , மிக நுட்பமான ஞானமுள்ளவனும் நன்கு அறிந்தவனுமான (இறை) வனிடமிருந்து மிகத் தெளிவாக விளக்கப்பட்டுள்ளவையாகும் .
  3. (இதன் போதனையானது:) நீங்கள் அல்லாஹ்வையன்றி (வேறெதையும் ) வணங்காதீர்கள் . நிச்சயமாக நான் அவன் புறமிருந்து உங்களை எச்சரிப்பவனாகவும் நற்செய்தி கூறுபவனாகவும் வந்துள்ளேன் .
  4. மேலும் நீங்கள் உங்கள் இறைவனிடம் பாவமன்னிப்புக் கோரி அவன் பக்கம் திரும்புங்கள் . ( அவ்வாறாயின் ) அவன் உங்களுக்கு, குறிப்பிட்ட ஒரு காலம் வரை அழகிய பொருளை வழங்குவான். மேலும் அருளுக்குரிய ஒவ்வொருவருக்கும் தன் அருளை வழங்குவான் .பின்னர் நீங்கள் புறக்கணித்து விட்டால் , நிச்சயமாக நான் உங்களுக்குப் பெருந்தண்டனைக்குரிய ஒரு நாளைக் குறித்து அஞ்சுகின்றேன் .
  5. நீங்கள் திரும்ப வேண்டியது அல்லாஹ்விடமே . அவன் எல்லாவற்றிற்கும் முழுமையான ஆற்றல் பெற்றவனாவான் .
  6. கவனமாகக் கேளுங்கள். நிச்சயமாக, அவர்கள் அவனிடமிருந்து (தீய எண்ணங்களை) மறைத்துக் கொள்வதற்காகத் தங்கள் நெஞ்சங்களைத் திருப்பிக் கொள்கின்றனர். கவனமாகக் கேளுங்கள். அவர்கள் தங்கள் ஆடைகளைக் கொண்டு மூடிக் கொள்ளும் போது (கூட) அவர்கள் மறைப்பதனையும் , அவர்கள் வெளியிடுவதனையும் அவன் அறிகின்றான் . நிச்சயமாக அவன், நெஞ்சங்களிலுள்ளவற்றை அறிபவனாக இருக்கின்றான்.
  7. பூமியில் உள்ள எல்லா உயிரினத்திற்கும் உணவளிப்பது அல்லாஹ்வின் பொறுப்பில் உள்ளது. மேலும் அதன் தற்காலிகமானதும் நிரந்தரமானதுமான தங்குமிடத்தை 2 அவன் அறிகின்றான் . (இவை) எல்லாம் தெளிவான ஒரு நூலில் (பதிவாகி ) உள்ளன. 
  8. வானங்களையும், பூமியையும் அவனே ஆறு கால கட்டங்களில் படைத்தான். மேலும் அவனுடைய அரியணை 3 நீரின் மீது உள்ளது. உங்களுள் எவருடைய செயல்கள் மிகச் சிறந்தவை என அவன் உங்களைச் சோதிப்பதற்காக (இவற்றைப் படைத்தான்) . மேலும் நீர் (அவர்களிடம்) மரணத்திற்குப் பின்னர் நீங்கள் நிச்சயமாக எழுப்பப்படுவீர்கள் என்று கூறினால் இது தெளிவான ஓர் ஏமாற்றே ஆகும் என்று நிராகரிப்போர் நிச்சயமாக க் கூறுவர். 
  9. ஒரு குறிப்பிட்ட காலம் வரை அவர்களை விட்டு அத்தண்டனையை நாம் பிற்படுத்தினால் , அதனைத் தடுத்துக் கொண்டிருப்பது யாது என்று அவர்கள் கட்டாயம் கூறுவார்கள் என்பது உறுதி . கவனமாகக் கேட்டுக் கொள்ளுங்கள் ! அது அவர்களிடம் வரும் நாளில், அவர்களை விட்டும் அது அகற்றப்படமாட்டாது. அவர்கள் ஏளனம் செய்து கொண்டிருந்த (தன் தண்டனையான) து அவர்களைச் சூழ்ந்து கொள்ளும். ரு1
  10. நம்மிடமிருந்து ( ஏதாவதொரு) அருளை மனிதன் சுவைத்துப் பார்க்குமாறு நாம் செய்து , பின்னர் நாம் அதனை அவனிடமிருந்து அகற்றிவிட்டால் , அவன் முற்றிலும் நம்பிக்கையிழந்தவனாகவும் ,அருளை மறுப்பவனாகவும் ஆகி விடுகின்றான் .
  11. மேலும் அவனுக்கேற்பட்ட துன்பத்திற்குப் பின்னர், நாம் ஏதாவதொரு (பெரும்) அருட்கொடையைச் சுவைக்கச் செய்தால் (இப்பொழுது) என் துன்பங்கள் (எல்லாம்) என்னைவிட்டும் நீங்கிவிட்டனவென்று அவன் கூறுகின்றான். நிச்சயமாக, அவன் மிகுந்த பெருமை கொண்டவனாகவும் , ஆணவம் மிகுந்தவனாகவும் இருக்கின்றான். 
  12. ஆயினும் பொறுமையினை மேற்கொண்டு நற்செயல்கள் செய்வோருக்கு , மன்னிப்பும் பெரும் கூலியும் ( விதிக்கப்பட்டு) உள்ளன.
  13. உமக்கு வஹீயின் மூலம் அறிவிக்கப்பட்டதன் ஒரு சிறு பகுதியினை (மக்களுக்கு எட்ட வைக்காது) ஒருவேளை நீர் விட்டுவிடுவதற்கு ஆயத்தமாகி விடலாம் . (என்று நிராகரிப்பவர்கள் வீண் நம்பிக்கை வைத்துள்ளனர்) . இவருக்கு ஏதாவதொரு கருவூலம் ஏன் இறக்கப்படவில்லை அல்லது இவருடன் ஏதாவதொரு வானவர் (ஏன்) வரவில்லை என்ற அவர்களின் ஆட்சேபணையின் காரணத்தால் உமது உள்ளம் (ஒருவேளை) துன்பமடையலாம் (என்றும் அவர்கள் எதிர்பார்க்கின்றனர்). நீர் ஓர் எச்சரிப்பவரேயாவீர் . மேலும் அல்லாஹ் எல்லாவற்றிற்கும் பாதுகாவலனாவான் .
  14. அவர் இந்த வேதத்தை இட்டுக் கட்டியுள்ளார் என்று அவர்கள் கூறுகின்றனரா ? நீர் ( அவர்களிடம்) கூறுவீராக : (இவ்வாறு கூறுவதில்) நீங்கள் உண்மையாளர்களாயின் , நீங்களும் இதனைப் போன்ற பத்து அதிகாரங்களை (நீங்களாகவே) இயற்றிக் கொண்டு வாருங்கள் .மேலும் (உங்கள் உதவிக்காக) அல்லாஹ்வையன்றி உங்களால் (அழைக்க) முடிந்தவர்களை அழைத்துக் கொள்ளுங்கள். 
  15. எனவே, உங்கள் வார்த்தைகளை அவர்கள் ஏற்றுக் கொள்ளவில்லையாயின் , அல்லாஹ்வின் (தனிப்பட்ட) ஞானத்தினால் இது இறக்கப்பட்டுள்ளது என்றும், அவனையன்றி வேறெவரும் வணக்கத்திற்குரியவர் இல்லையென்றும் அறிந்து கொள்ளுங்கள். எனவே நீங்கள் முழுமையாகக் கட்டுப்பட்டு நடப்பீர்களா ? இல்லையா ?
  16. இவ்வுலக வாழ்க்கையையும் அதன் அலங்காரத்தையும் விரும்புவோருக்கு , நாம் அவர்களின் செயல்(களுக்குரிய பலன்) களை இவ்வுலகிலேயே முழுமையாகக் கொடுத்து விடுவோம். அவர்களுக்கு இதில் குறைவாகக் கொடுக்கப்படமாட்டாது. 
  17. இத்தகையோருக்கு மறுமையில் (நரக) நெருப்பைத் தவிர வேறொன்றுமில்லை. அவர்கள் இ(ந்)த (உலக வாழ்வி)ற்காகச் செய்தது அதில் 4 முற்றிலும் பயனற்றதாய்விடும் .அவர்கள் செய்து கொண்டிருப்பதும் வீணாகிவிடும் .
  18. எனவே தம் இறைவனிடமிருந்து மிகத் தெளிவானதொரு சான்றைப் பெற்றவரும் 5 தமது உண்மைத் தன்மையை உறுதிப்படுத்தி இறைவனிடமிருந்து தம்மைத் தொடர்ந்து வரும் ஒரு சாட்சியை 6 உடையவரும் , (அக்கால) மக்களுக்கு வழிகாட்டுதலாகவும் கருணையாகவும் இருந்த மூஸாவின் வேதம் (சாட்சியாக) கொண்டவருமான ஒருவர் எவ்வாறு பொய்வாதி ஆவார் ? (இவற்றில் கவனம் செலுத்தும்) அவர்களே , அவரிடத்து நம்பிக்கை கொள்வார்கள். (அவருடைய) கோத்திரத்தாருள் அவரை மறுப்பவர்களுக்கு வாக்களிக்கப்பட்ட இடம் நரகமாகும் .எனவே (செவியேற்பவரே !) நீர் அதனைப் பற்றி எவ்வித ஐயத்திற்கும் ஆளாக வேண்டாம். நிச்சயமாக இது உம்முடைய இறைவனிடமிருந்துள்ள உண்மையாகும். ஆனால் மக்களில் பெரும்பாலார் நம்பிக்கை கொள்வதில்லை. 
  19. அல்லாஹ்வின் மீது பொய்யைப் புனைந்து கூறுபவனைவிட மிக்க அநீதி இழைப்பவன் எவன் ? இத்தகையோர் தம் இறைவன் முன் கொண்டு வந்து நிறுத்தப்படுவர் . இவர்களே தங்கள் இறைவன் மீது பொய்யைப் புனைந்து கூறினர் என்று சாட்சியமளிப்பவர்கள் (எல்லாரும்) கூறுவர் . கவனமாகக் கேளுங்கள் : அல்லாஹ்வின் சாபம் அநீதியிழைப்பவர்கள் மீது உண்டாகும். 
  20. அவர்கள் அல்லாஹ்வின் வழியிலிருந்து (மக்களை) தடுத்து நிறுத்துவார்கள்.மேலும் அதனை கோணலாக்க விரும்புகின்றனர். மேலும் மறுமையை மறுப்பவர்கள் இவர்களே .
  21. இவர்களால் பூமியில் (இறைத் திட்டங்களை) செயலிழக்கச் செய்ய முடியாது. இவர்களுக்கு அல்லாஹ்வையன்றி நண்பர்கள் எவரும் இருப்பதுமில்லை. இவர்களுக்கு இருமடங்கு தண்டனை வழங்கப்படும். (அதாவது இவ்வுலகிலும், மறு உலகிலும் தண்டனை வழங்கப்படும்). இவர்களால் (சிறிதும்) கேட்கவும் முடியாது, பார்க்கவும் முடியாது.
  22. தங்களையே நஷ்டத்திற்குள்ளாக்கிக் கொண்டவர்கள் இவர்களே . அவர்கள் இட்டுக்கட்டிக் கூறியவையும் அவர்களி(ன் பிடியி)லிருந்து தப்பிச் சென்று விடும் . 
  23. இவர்களே மறுமையில் (மற்றெல்லாரையும் விட) மிகவும் நஷ்டத்திற்குரியவர்கள் என்பது உறுதி .
  24. நம்பிக்கை கொண்டு நற்செயல்களைச் செய்து , தம் இறைவனிடம் பணிந்து நடப்பவர்கள் நிச்சயமாக சுவர்க்கத்தில் வாழ்பவர்களாவர் . அவர்கள் அதில் என்றென்றும் வாழ்ந்து வருவர் .
  25. இவ்விரு சாராரின் நிலை குருடர், செவிடர், நன்றாகப் பார்ப்பவர், நன்றாகக் கேட்பவர் ஆகியவர்(களின் நிலை) களைப் போன்றது. இவ்விருவரின் நிலைமை சமமானதா ? இவ்வாறிருந்தும் நீங்கள் உணர்ந்து கொள்வதில்லையா ? ரு2.
  26. நாம் நூஹை அவருடைய சமுதாயத்தினரிடம் அனுப்பினோம்.(அவர் இவ்வாறு கூறினார் :) நான் உங்களுக்கு (மிக)த் தெளிவான எச்சரிக்கையாளனாக உள்ளேன் .
  27. நீங்கள் அல்லாஹ்வையன்றி வேறெதனையும் வணங்க கூடாது . நிச்சயமாக உங்களுக்கு வேதனை தரக்கூடிய நாளின் ஆக்கினை குறித்து நான் அஞ்சுகின்றேன் (என்றும் கூறினார்).
  28. இதற்கு அவருடைய சமுதாயத்தினருள் (அவரை ) நிராகரித்த பெரியவர்கள் (அவரிடம்) : நாங்கள் உம்மை எங்களைப் போன்ற ஒரு மனிதராகவே அன்றிக் காணவில்லை .மேலும் எங்களுள் வெளிப்படையில் அடிமட்டத்திலுள்ளவர்களைத் தவிர வேறெவரும் உம்மைப் பின்பற்றியதை நாங்கள் காணவில்லை. மேலும் எங்களைவிட உம்மிடம் எச்சிறப்பையும் நாங்கள் காணவில்லை. மாறாக உங்களைப் பொய்யர்களென்றே நாங்கள் நம்புகிறோம் .
  29. அவர் கூறினார் : என் சமுதாயத்தினரே ! ( நீங்களே) சொல்லுங்கள். நான் என் இறைவனிடமிருந்து (வந்து)ள்ள தெளிவான ஒரு சான்றில் இருக்க, மேலும் அவன் தன்னிடமிருந்து தனது (மாபெரும்) ஓர் அருளை எனக்கு வழங்கியும் இருக்க, அது உங்களுக்கு ஐயத்திற்குரியதாகவும் இருக்கிறதென்றால் ( உங்கள் நிலை என்னவாகும் ? )அதை நீங்கள் வெறுப்பவர்களாக இருக்கின்ற நிலையில் அதை ஏற்றுக் கொள்ளுமாறு நாங்கள் உங்களைக் கட்டாயப்படுத்துவோமா ? 7
  30. என் சமுதாயத்தினரே ! நான் இதற்காக உங்களிடம் பொருள் எதுவும் கேட்பதில்லை. எனக்குரிய நற்பலன் அல்லாஹ்வையன்றி வேறெவரிடத்திலுமில்லை. நம்பிக்கை கொண்டவர்களை நான் ஒரு போதும் விரட்டி விட மாட்டேன். நிச்சயமாக அவர்கள் தங்கள் இறைவனைச் சந்திக்கக் கூடியவர்களாவர் .ஆனால் உங்களை அறிவற்ற மக்களாக நான் காண்கிறேன். 
  31. என் சமுதாயத்தினரே ! நான் அவர்களை விரட்டி விட்டால் அல்லாஹ்விடமிருந்து எனக்கு உதவி செய்பவர் எவர் ? இவ்வாறிருந்தும் நீங்கள் உணர்ந்து கொள்வதில்லையா ?
  32. அல்லாஹ்வின் கருவூலங்கள் என்னிடமுள்ளனவென்றோ , மறைவானதை நான் அறிவேன் என்றோ நான் உங்களிடம் கூறுவதில்லை . மேலும் நான் வானவராக இருக்கிறேன் என்றும் நான் கூறுவதில்லை. உங்கள் கண்கள் எவர்களை இழிவாக காண்கின்றனவோ , அவர்களைக் குறித்து , அல்லாஹ் அவர்களுக்கு (ஒரு போதும்) எந்த நன்மையையும் வழங்கமாட்டான் என்றும் நான் கூறுவதில்லை. அவர்களின் உள்ளங்களிலுள்ளதை அல்லாஹ் (தான் எல்லாவற்றையும் விட) நன்கு அறிகின்றான். நீங்கள் கூறுவது போன்று நானும் கூறினால் நிச்சயமாக நான் அநீதியிழைப்பவர்களைச் சேர்ந்தவனாகிவிடுவேன் .
  33. அவர்கள் கூறினர் : நூஹே ! நீர் எங்களுடன் வாதம் செய்து விட்டீர் . ஆம், நன்றாகவே வாதம் செய்து விட்டீர் .எனவே நீர் உண்மையாளர்களைச் சேர்ந்தவராக இருப்பின் எ(ந்)த (ஆக்கி)னைப் பற்றி நீர் எங்களைப் பயமுறுத்துகின்றீரோ அதனை எங்களிடம் கொண்டு வாரும் .
  34. அவர் கூறினார் : அல்லாஹ் நாடினால் அவனே அதனை உங்களிடம் கொண்டு வருவான் .மேலும் (அவனை) உங்களால் செயலிழக்கச் செய்ய முடியாது.
  35. நான் உங்களுக்கு அன்பான முறையில் அறிவுறுத்த நாடினாலும், நீங்கள் வழிதவறியவர்களாகவே இருக்க அல்லாஹ் முடிவு செய்தால் , என் அறிவுரை உங்களுக்கு எப்பலனும் அளிக்காது. அவனே உங்கள் இறைவன். அவனிடமே நீங்கள் திருப்பப்படுவீர்கள் .
  36. இதனை அவர் இட்டுக்கட்டிக் கூறியுள்ளார் என்று அவர்கள் கூறுகின்றனரா ? நீர் (அவர்களிடம்) கூறுவீராக : நானாக இதனை இட்டுக்கட்டிக் கூறியிருந்தால் என் குற்றம் எனக்கே சாரும் . நீங்கள் செய்கின்ற (எல்லாக்) குற்றங்களிலிருந்தும் நான் விலகியவனாவேன் . ரு3
  37. மேலும் நூஹூக்கு வஹியறிவிக்கப்பட்டது. ( ஏற்கனவே) நம்பிக்கை கொண்டவர்களைத் தவிர உம்முடைய சமுதாயத்தினருள் வேறெவரும் (உம்மீது) ஒருபோதும் நம்பிக்கை கொள்ள மாட்டார்கள். எனவே அவர்கள் செய்து கொண்டிருப்பவை குறித்து நீர் வருந்த வேண்டாம்.
  38. நீர் நம்முடைய கண்முன்னால் நம்முடைய வஹி (மூலம் அறிவிக்கப்பட்ட கட்டளை ) க்கு ஏற்ப கப்பல் ஒன்றைக் கட்டுவீராக . அநீதி இழைத்தவர்களைக் குறித்து நீர் என்னிடம் (எதுவும்) பேசாதிருப்பீராக . நிச்சயமாக அவர்கள் மூழ்கடிக்கப்படுவர் .
  39. அவர் (நம்முடைய கட்டளைக்கேற்ப ) கப்பலைச் செய்யத் தொடங்கினார். அவருடைய சமுதாயத் தலைவர்கள், அவரைக் கடந்து சென்றபோதெல்லாம் , அவர்கள் அவரைப் பார்த்து ஏளனம் செய்தனர். (இதற்கு) அவர் (அவர்களிடம் இவ்வாறு) கூறினார் . நீங்கள் எங்களைப் பார்த்து நகைத்தால் , (இன்று) நீங்கள் (எங்களைப் பார்த்து) நகைப்பதைப் போன்று (நாளை) நாங்களும் உங்களைப் பார்த்து நகைப்போம். 
  40. பின்னர் எவருக்கு இழிவுபடுத்தக்கூடிய தண்டனை வருகிறது என்பதையும், எவருக்கு நிலையான தண்டனை இறங்குகிறது என்பதையும் நீங்கள் விரைவில் அறிவீர்கள் .
  41. இறுதியில் எமது கட்டளை வந்து நீரூற்றுக்கள் பெருக்கெடுத்து ஓடிய போது, நாம் இவ்வாறு கூறினோம் .(உயிரினங்களுள்) ஒவ்வொரு வகைக்கும் ஆணும், பெண்ணுமாக இரண்டையும், (அழிந்து விடவேண்டுமென்று) முன்னரே கூறப்பட்டவர்களைத் தவிர உம்முடைய குடும்பத்தினரையும் , நம்பிக்கை கொண்டவர்களையும் அதில் ( கப்பலில்) ஏற்றிக் கொள்வீராக . மேலும் ஒருசிலரைத் தவிர மற்றவர்கள் அவர்களுடன் நம்பிக்கை கொள்ளவில்லை .
  42. இதற்கேற்ப (வெள்ளப்பெருக்கு வந்தபோது) அவர் (தம்மைச் சேர்ந்தவர்களிடம் இவ்வாறு) கூறினார் : இதில் ஏறிக் கொள்ளுங்கள். இது செல்வதும் சென்றடைவதும் அல்லாஹ்வின் பெயரால் ( அருளால்) ஆகும். நிச்சயமாக என் இறைவன் மிக்க மன்னிப்போனும் , மேன்மேலும் கருணைகாட்டுபவனுமாவான் .
  43. அது மலைகளைப் போன்ற (உயரமான) அலைகளுக்கிடையே அவர்களைக் கொண்டு சென்றது. (அதே வேளையில்) தனித்து நின்று விட்ட தன் மகனை நோக்கி நூஹ் கூறினார் : என் மகனே , எங்களுடன் நீயும் ஏறிக் கொள் . நிராகரிப்பாளர்களுடன் சேர்ந்திருக்காதே ( என்றார்).
  44. (இதற்கு) அவன் : நான் இப்பொழுது இந்த வெள்ளத்திலிருந்து என்னைக் காப்பாற்றும் ஏதாவதொரு மலையைச் சென்றடைந்து தங்கிக் கொள்வேன் என்றான் . (அதற்கு) அவர், அல்லாஹ்வின் (ஆக்கினையைப் பற்றிய) கட்டளையிலிருந்து , அவனே எவருக்காவது கருணை காட்டினாலன்றி இன்று எவருக்கும் புகலிடம் இல்லை என்றார் . அப்போது ஓர் அலை அவ்விருவருக்குமிடையே குறுக்கிட்டது. அவன் மூழ்கடிக்கப்பட்டவர்களுள் ஒருவனாகிவிட்டான் .
  45. இதற்குப் பின்னர், பூமியே ! நீ ( இப்பொழுது) உன் தண்ணீரை விழுங்கி விடு என்றும், வானமே ! நீ (இப்பொழுது மழை பொழிவதை) நிறுத்திக் கொள் என்றும் கூறப்பட்டது. (அப்போது) தண்ணீர் ஈர்க்கப்பட்டு விட்டது. காரியம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டது. அது (கப்பல்) ஜூதி (மலை)யின் மீது 8 தங்கிற்று. (தண்டனை வழங்குவதற்கு நியமிக்கப்பட்ட வானவரகளே ) அநீதியிழைக்கும் மக்களுக்கு அழிவை விதித்து விடுங்கள் என்று கூறப்பட்டது. 
  46. நூஹ் தம்முடைய இறைவனை அழைத்து : என் இறைவா ! நிச்சயமாக என் மகன் என் குடும்பத்தைச் சேர்ந்தவன் . மேலும் உன் வாக்குறுதி (யும்) மிக்க உண்மையானதே . தீர்ப்பு வழங்குபவர்களிலெல்லாம் சிறந்த தீர்ப்பு வழங்குபவன் நீயே என்றார் .
  47. (அதற்கு இறைவன்) : நூஹே ! அவன் ஒருபோதும் உம்முடைய குடும்பத்தைச் சேர்ந்தவனல்லன் . ஏனென்றால், நிச்சயமாக அவன் நேர்மையற்ற செயல் உடையவன் . எனவே, நீர் அறியாத தைப் பற்றி நீர் என்னிடம் கேட்காதீர் . அறிவற்றவர்களைச் சேர்ந்தவராகிவிட வேண்டாம் என்று நான் உமக்கு அறிவுரை கூறுகிறேன் என்றான். 
  48. (அப்பொழுது நூஹ்): என் இறைவா ! எனக்கு உண்மையான ஞானம் கிடைக்கப் பெறாதவற்றைக் குறித்து, உன்னிடம் கேட்பதிலிருந்து நான் உன்னிடம் அடைக்கலம் தேடுகின்றேன் . ( எனது சென்ற கால கவனக்குறைவை ) மன்னித்து எனக்கு கருணை காட்டவில்லையாயின் , நான் நஷ்டவாளர்களைச் சார்ந்தவனாகி விடுவேன் என்றார் .
  49. (இதற்கு, அவரிடம் இவ்வாறு) கூறப்பட்டது : நூஹே ! உமக்கும் உம்மைச் சார்ந்த சமுதாயங்களுக்கும் 9 எம்மிடமிருந்து (வழங்கப் பெற்று) ள்ள சாந்தியுடனும், அருள்களுடனும் நீர் பயணத்தை மேற்கொள்வீராக .10 ( அவர்களுள்) சில வகுப்பினர்களுக்குக் கட்டாயம் நாம் (உலகின் தற்காலிகமான) பொருள்களை வழங்குவோம் .(ஆனால்) பின்னர் அவர்களுக்கு எம்மிடமிருந்து வேதனையளிக்கக்கூடிய தண்டனை கிடைக்கும்.
  50. இது11 மறைவான பெரும் செய்திகளைச் சேர்ந்தது. இதை நாம் உமக்கு வஹி (மூலம்) அறிவிக்கின்றோம் . இவற்றை இதற்கு முன்னர் நீரும் உம்முடைய சமுதாயத்தினரும் தெரிந்திருக்கவில்லை. எனவே, நீர் பொறுமையைக் கடைப்பிடிப்பீராக . ஏனெனில், நிச்சயமாக (நல்ல) முடிவு இறையச்சமுடையோருக்கே . ரு4
  51. ஆது  சமுதாயத்தினரிடம் (நாம்) அவர்களின் சகோதரர் ஹூதை (அனுப்பினோம்) . அவர் (அவர்களிடம்) இவ்வாறு கூறினார். என் சமுதாயத்தினரே ! நீங்கள் அல்லாஹ்வை வணங்குங்கள் . அவனையன்றி உங்களுக்கு வேறு வணக்கத்திற்குரியவன் இல்லை. ( அவனுக்கு இணைகளை ஏற்படுத்துவதில்) நீங்கள் பொய்யைப் புனைந்து கூறுபவர்களேயாவீர்.
  52. என் சமுதாயத்தினரே ! நான் இதற்காக உங்களிடம் எந்தக் கூலியும் கேட்கவில்லை. எனக்குரிய நற்பலன் , என்னை உருவாக்கியவனிடமே உள்ளது. ( இவ்வாறிருந்தும்) நீங்கள் சிந்தித்துச் செயல்பட வேண்டாமா ? 
  53. என் சமுதாயத்தினரே ! நீங்கள் உங்கள் இறைவனிடம் பாவமன்னிப்புக் கேளுங்கள் . பின்னர் அவன் பக்கம் (முழுமையாகத்) திரும்பிவிடுங்கள் . இதன் விளைவாக அவன் உங்களுக்கு நன்றாக மழை பொழியக்கூடிய மேகத்தை அனுப்புவான் . உங்களுக்கு மேன்மேலும் வலிமையினை வழங்குவான் . நீங்கள் குற்றவாளிகளாகி (அவனிடமிருந்து) திரும்பி விடாதீர்கள்.
  54. (இதற்கு) அவர்கள் கூறினார்கள் : ஹூதே ! நீர் ( உம்முடைய வாதத்திற்கு) தெளிவான எந்தச் சான்றையும் எங்களிடம் கொண்டு வரவில்லை . உம்முடைய கூற்றினால் (மட்டும்) நாங்கள் எங்கள் கடவுள்களை விடப்போவதில்லை . நாங்கள் உம்மீது நம்பிக்கை கொள்ளவுமாட்டோம் .
  55. எங்களுடைய ஏதாவதொரு தெய்வம், இழிவுபடுத்துவதற்காக உம்மைத் தாக்கியுள்ளது என்பதைத் தவிர (வேறெதனையும்) நாங்கள் சொல்வதற்கில்லை. (இதற்கு) அவர் இவ்வாறு கூறினார் : நீங்கள் அவனைத்தவிர (அல்லாஹ்வுக்கு) இணையாக ஆக்கிக் கொள்வதிலிருந்து நான் விலகியுள்ளேன்  என்பதற்கு அல்லாஹ்வை நான் சாட்சியாக்குகின்றேன் . நீங்களும் (அதற்குச்) சாட்சியாக இருங்கள்.
  56. நீங்களெல்லாரும் சேர்ந்து எனக்கெதிராகத் திட்டம் தீட்டுங்கள் .எனக்குக் காலக்கெடு (சிறிதும்)  அளிக்க வேண்டாம்.
  57. என்னுடைய இறைவனும், உங்களுடைய இறைவனுமாகிய அல்லாஹ்விடமே நான் நம்பிக்கை வைத்துள்ளேன் .(பூமியில்) இயங்கும் எல்லா உயிரினங்களின் முன் குடுமியும் அவன் பிடியில் இருக்கிறது. நிச்சயமாக என் இறைவன் (தன்னையே நம்பி இருப்போருக்கு உதவுவதற்காக) நேரான வழியில் உள்ளான்.
  58. நீங்கள் என்னைப் புறக்கணித்து விடுவீர்களாயின் (இதில் எனக்கொன்றும் நஷ்டமில்லை. ஏனெனில்) எ(ந்தப்  போ) தனை (யை)க்   கொண்டு நான் உங்களிடம் அனுப்பப்பட்டேனோ , அதனை நான் உங்களுக்கு எட்டவைத்து விட்டேன். (நீங்கள் புறக்கணித்து விட்டால்) என் இறைவன் உங்கள் இடத்தில் வேறொரு சமுதாயத்தினரை உருவாக்குவான் . உங்களால் அவனுக்கு எந்தத் தீங்கும் இருக்க முடியாது. நிச்சயமாக என் இறைவன் எல்லாவற்றையும் பாதுகாப்பவனாவான் .
  59. (தண்டனையைப் பற்றிய) எமது கட்டளை வந்த போது, நாம் ஹூதையும் அவருடன் நம்பிக்கை கொண்டிருந்தவர்களையும் எம்முடைய (தனிப்பட்ட) அருளைக் கொண்டு காப்பாற்றினோம் . மேலும் நாம் அவர்களைக் கடினமான ஒரு தண்டனையிலிருந்து காப்பாற்றினோம் .
  60. மேலும் இவர்களே ஆது  ( சமுதாயத்தினர்) . இவர்கள் தங்கள் இறைவனின் அடையாளங்களை மறுத்து, அவனுடைய தூதர்களுக்குக் கட்டுப்படாதிருந்தனர் . மேலும் அவர்கள் (உண்மையின்) எல்லாக் கொடிய எதிரிகளின் கட்டளைகளையும் பின்பற்றிக் கொண்டிருந்தனர்.
  61. இவ்வுலகிலும் , மறுமை நாளிலும் சாபம் அவர்களைப் பின்தொடர்ந்த து. கவனமாகக் கேளுங்கள். நிச்சயமாக ஆது  சமுதாயத்தினர் தங்கள் இறைவனை மறுத்தனர். கவனமாகக் கேளுங்கள். ஹூதின் சமுதாயத்தினராகிய ஆதுக்கு அழிவு விதிக்கப்பட்டுள்ளது. ரு5.
  62. ஸமூது சமுதாயத்தினரிடம் (நாம்) அவர்களின் சகோதரர் ஸாலிஹை அனுப்பினோம். அவர் (அவர்களிடம் இவ்வாறு) கூறினார் : என் சமுதாயத்தினரே ! நீங்கள் அல்லாஹ்வை வணங்குங்கள் . அவனையன்றி உங்களுக்கு வணக்கத்துக்குரியவன் வேறெவனுமில்லை. அவனே உங்களைப் பூமியிலிருந்து எழுப்பினான். அதில் உங்களை வாழச் செய்தான். எனவே நீங்கள் அவனிடம் பாவமன்னிப்புக் கோருங்கள். அவன் பக்கம் முழுமையாகத் திரும்பி விடுங்கள். நிச்சயமாக என் இறைவன் அருகிலுள்ளவனும் ( வேண்டுதல்களுக்குப்) பதிலளிப்பவனுமாவான் .
  63. (இதற்கு) அவர்கள் கூறினர் : ஸாலிஹே ! இதற்கு முன்னர் நீர் எங்களிடையே நம்பிக்கைக்கு உரியவராய் விளங்கினீர் . (இப்பொழுது) நீர் எங்கள் மூதாதையர்கள் வணங்கி வந்ததை நாங்கள் வணங்க க் கூடாதென்று எங்களைத் தடுக்கின்றீரோ ? நீர் எங்களை எதன்பால் அழைக்கின்றீரோ , அது குறித்து நாங்கள் அமைதியைக் குலைக்கும் ஐயத்திற்குள்ளாகியிருக்கிறோம் .
  64. அவர் கூறினார் : என் சமுதாயத்தினரே ! நீங்களே கூறுங்கள். (என் வாதத்தின் அடிப்படையை ) நான் என் இறைவனிடமிருந்து (வந்து) ள்ள தெளிவான ஒரு சான்றில் அமைத்து இருக்க, மேலும் அவன் தன்னிடமிருந்து தனது ( மாபெரும்) ஓர் அருளை எனக்கு வழங்கியும் இருக்க, நான் அவனுக்கு மாறு செய்தால் அல்லாஹ்விற்குப் பகரமாக எவர் எனக்கு உதவி செய்வார் ? எனவே நீங்கள் என்னை அழிவிற்காளாக்குவதைத் தவிர வேறெதனையும் எனக்கு அதிகப்படுத்தி விடமாட்டீர்கள் .
  65. என் சமுதாயத்தினரே ! இது அல்லாஹ்வின் பெண் ஒட்டகம்.12 . உங்களுக்கு (இது) ஓர் அடையாளமாகும். எனவே அல்லாஹ்வின் பூமியில் மேய்ந்து வருமாறு நீங்கள் இதனைச் ( சுதந்திரமாக) விட்டு விடுங்கள். இதற்கு எத்துன்பமும் அளிக்காதீர்கள் . இல்லையாயின் விரைந்து வரும் தண்டனையொன்று உங்களைப் பற்றிக் கொள்ளும் .
  66. ஆனால் அவர்கள் அதன் கால்களைத் துண்டித்துவிட்டனர். இதனைக் கண்டு அவர் (அவர்களிடம்) : நீங்கள் மூன்று நாட்கள் உங்கள் வீடுகளில் பயனடையுங்கள். இது மீறப்படாத வாக்குறுதியாகும் என்றார் .
  67. எமது (தண்டனையைப் பற்றிய) கட்டளை வந்தபோது, நாம் ஸாலிஹையும் , அவருடன் நம்பிக்கை கொண்டிருந்தவர்களையும் நம்முடைய (தனிப்பட்ட) அருளைக் கொண்டு (ஒவ்வொரு இன்னலிலிருந்தும், குறிப்பாக) அந்நாளில் இழிவடைவதிலிருந்தும் காப்பாற்றினோம். நிச்சயமாக உம்முடைய இறைவனே ஆற்றல் மிக்கவனும் , மிகைத்தோனுமாவான்.
  68. அநீதியிழைத்தவர்களை கொடுங்காற்று பற்றிக் கொண்டது. எனவே , அவர்கள் தங்கள் வீடுகளில் முகங்குப்புற விழுந்தனர் .
  69. அவர்கள் அதில் ( அந்த நாட்டில்) எக்காலத்திலும் வாழ்ந்திராதவர்கள் போன்றாகி விட்டனர் . கவனமாகக் கேளுங்கள். ஸமூது சமுதாயத்தினர் தங்கள் இறைவனுக்கு நன்றி செலுத்தவில்லை. கவனமாகக் கேளுங்கள் ! ஸமூது (சமுதாயத்தினர்) க்கு அழிவு விதிக்கப்பட்டுள்ளது. ரு6.
  70. நிச்சயமாக நம்முடைய தூதர்கள் இப்ராஹீமிடம் நற்செய்தியைக் கொண்டு வந்து  : ( எங்களிடமிருந்து தங்களுக்குச் ) சாந்தி உண்டாவதாக என்றனர். இதற்கு அவர் (உங்களுக்கும் என்றென்றும்) சாந்தி உண்டாவதாக என்றார் . பின்னர் அவர் பொரித்த கன்றுக்குட்டியொன்றினை விரைவாகக் கொண்டு வந்தார் .
  71. அவர்களின் கைகள் அதன்பால் செல்லாதிருப்பதை அவர் கண்டபோது , அவர்களை அந்நியர் எனக்கருதி, இதனால் அச்ச உணர்வு கொண்டார். 13. அவர்கள்: நீர் அஞ்ச  வேண்டாம். நாங்கள் லூத்துடைய சமுதாயத்தினரிடம் அனுப்பப்பட்டுள்ளோம் என்றனர் .
  72. அவருடைய மனைவி (யும் பக்கத்திலேயே) நின்று கொண்டிருந்தாள் . அவள் சிரித்தாள் . அப்போது நாம் அவளுக்கு இஸ்ஹாக் (கின் பிறப்பைப்) பற்றியும், இஸ்ஹாக்கிற்குப் பின்னர் யாகூப் பற்றியும் நற்செய்தி வழங்கினோம் .
  73. அவள் கூறினாள், அந்தோ என் துயரமே ! நான் கிழவியாகவும் , என் கணவர் முதுமை அடைந்தும் இருக்கும் நிலையில் நான் குழந்தை பெறுவேனா ? நிச்சயமாக இது வியக்கத்தக்கதேயாகும் .
  74. அவர்கள் கூறினர் : அல்லாஹ்வின் கட்டளை குறித்து நீ வியப்படைகின்றாயா ? இவ்வீட்டிர்குரியவர்களே ! உங்களுக்கு அல்லாஹ்வின் கருணையும், அவனுடைய அருள்களும் இருக்கின்றன . நிச்சயமாக அவன் மிகுந்த புகழுக்குரியவனும், மிக்க மகிமைக்குரியவனுமாவான்.
  75. ஆகையால் இப்ராஹீமை விட்டு அச்சம் நீங்கி , அவருக்கு நற்செய்தி கிடைத்தபோது , அவர் லூத்துடைய சமுதாயத்தினருக்காக எம்முடன் வாதிக்கலானார் .
  76. இப்ராஹீம் மிகுந்த சகிப்புத்தன்மையைக் கொண்டவராயும் , இரக்கம் கொண்டவராயும் , மேன்மேலும் (நமக்குப்) பணியக்கூடியவராயும் இலங்கினார் .
  77. (இதற்கு நாம் அவரிடம் இவ்வாறு கூறினோம் ). இப்ராஹீமே ! இதிலிருந்து விலகிக் கொள்வீராக . ஏனெனில் உம்முடைய இறைவனின் (இறுதிக்) கட்டளை வந்து விட்டது. மேலும் தவிர்க்க முடியாத தண்டனை அவர்களுக்குக் கிடைத்தேயாகவேண்டும்.
  78. நம்முடைய தூதர்கள் லூத்திடம் வந்த போது , அவர்களின் காரணமாக அவர் கவலைக்குள்ளாகி , மன வருத்தமடைந்து 14 இது (மிக்க) கடுமையான நாளாகத் தெரிகின்றது என்றார்.
  79. அவருடைய சமுதாயத்தினர் (கோபங்கொண்டு) அவரிடம் விரைந்தோடி வந்தனர். (இதற்கு) முன்னரும் அவர்கள் (பயங்கரமான) தீமைகள் செய்துள்ளனர். (அப்போது) அவர் கூறினார் : என் சமுதாயத்தினரே ! (உங்கள் வீடுகளிலேயே மணமுடித்துக் கொடுக்கப்பட்டுள்ள ) என் பெண் குழந்தைகள் இங்கேயே இருக்கின்றனர். 15. (நீங்களே பாருங்கள்). இவர்களே (எம்) புனிதத் தன்மைக்கு உங்களுக்குப் போதுமானவர்கள் . எனவே நீங்கள் அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள் ; என் விருந்தினர்களிடம் (மரியாதைக் குறைவாக நடந்து) என்னை இழிவுபடுத்தாதீர் . உங்களுள் நேர்மையுடையோர் எவருமே இல்லையா ?
  80. அவர்கள் கூறினர் : உம்முடைய பெண் மக்கள் தொடர்பாக 16 எங்களுக்கு எந்த வாதமும் கிடையாதென்பது நிச்சயமாக உமக்குத் தெரியும். நாங்கள் விரும்புவதென்னவென்பதையும் நீர் அறிவீர் .
  81. அவர் கூறினார் : உங்களை எதிர்ப்பதற்கு ( எந்த விதத்திலாவது ) எனக்கு ஆற்றல் (கிடைத்து) இருந்திருந்தால், ( நான் உங்களை எதிர்த்திருப்பேன்) . அல்லது நான் வலிமை வாய்ந்த ஒரு பாதுகாப்பிடத்தை நோக்கிக் குனிய  வேண்டிய நிலையே எஞ்சியுள்ளது. 17
  82. (இதற்கு விருந்தினர்களாகிய ) அவர்கள் இவ்வாறு கூறினர் : லூத்தே ! நிச்சயமாக நாங்கள் உம்முடைய இறைவனின் தூதர்களாவோம் 18. அவர்கள் உம்மை ஒருபோதும் நெருங்க மாட்டார்கள். எனவே நீர் இரவின் ஏதாவதொரு பகுதியில் உமது வீட்டிலுள்ளவர்களுடன் விரைவாக (இங்கிருந்து) சென்றுவிடுவீராக . உங்களுள் எவரும் பின்னால் திரும்பிப் பார்க்க வேண்டாம் . (அவ்வாறாயின் , நீங்கள் காப்பாற்றப்படுவீர்கள் ). உமது மனைவியைத் தவிர, அவர்களுக்கு வந்த (தண்டனையான) து நிச்சயமாக அவளுக்கு(ம்) வரக்கூடியது. அவர்களுக்காக க் குறிப்பிடப்பட்ட நேரம் ( அடுத்து வரவிருக்கின்ற) விடியற்காலையாகும் . (அந்த) விடியற்காலை நெருங்கி விடவில்லையா ?
  83. பின்னர் எம்முடைய ( தண்டனையைப் பற்றிய) கட்டளை வந்தபோது, நாம் அதனைத் தலைகீழாக கவிழ்த்து விட்டோம் . மேலும் அதன் மீது சுடு மண்ணால் ஆன கற்களால் தொடர்ந்து பொழியச் செய்தோம் .
  84. இவை உம்முடைய இறைவனிடம் ( அவன் தீர்ப்பில் அவர்களுக்காக) வரையப்பட்டதாகும் . இத்தண்டனை அநீதி இழைப்பவர்களாகிய இவர்களை19 விட்டுத் தூரமானதன்று .ரு7
  85. மத்யன் சமுதாயத்தினரிடம் (நாம்) அவர்களின் சகோதரர் ஷூஐபை (அனுப்பினோம்). அவர் (அவர்களிடம் இவ்வாறு) கூறினார். என் சமுதாயத்தினரே ! நீங்கள் அல்லாஹ்வை வணங்குங்கள். அவனையன்றி உங்களுக்கு வணக்கத்திற்குரியவன் வேறெவனுமில்லை .அளவையும் , நிறையையும் குறைக்காதீர்கள் .நிச்சயமாக நான் (இந்த நேரத்தில்) உங்களை நல்ல நிலையில் காண்கின்றேன் . (இத்துடன்) நான் உங்களுக்காக அழிவு நாளின் தண்டனையைக் குறித்து அஞ்சுகின்றேன்.
  86. என் சமுதாயத்தினரே ! நீங்கள் அளவையும்நிறையையும் நேர்மையுடன் நிறைவேற்றுங்கள் .மக்களுக்கு அவர்களுடைய பொருட்களைக் குறைத்துக் கொடுக்காதீர்கள் . மேலும் குழப்பம் விளைவிப்பவர்களாகிப் பூமியில் கெடுதியைப் பரப்பாதீர்கள் .
  87. நீங்கள் நம்பிக்கையாளர்களாயின் , (உங்களிடம்) எஞ்சியிருக்குமாறு அல்லாஹ்வினால் விடப்பட்ட (பொருளான)தே உங்களுக்கு மிகச் சிறந்தது. நான் உங்களுக்குப் பாதுகாவலன் இல்லை .
  88. அவர்கள் கூறினர் : ஷூஐபே ! எங்கள் மூதாதையர்கள் வணங்கி வந்ததையும், எங்கள் பொருள்களில் நாங்கள் விரும்பியவாறு செய்வதையும் நாங்கள் விட்டுவிட வேண்டுமென்றா உம்முடைய தொழுகை உமக்குக் கட்டளையிடுகின்றது ? ( அவ்வாறாயின்) நிச்சயமாக நீர் மிக்க அறிவாளியும் நேர்மையாளருமே20.
  89. அவர் கூறினார் : என் சமுதாயத்தினரே ! நீங்களே சொல்லுங்கள், நான் ( என் வாதத்தின் அடிப்படையை) என் இறைவனிடமிருந்து (வந்து)ள்ள மிகத் தெளிவான ஒரு சான்றில் (அமைத்து) இருக்க, மேலும் அவன் தன்னிடமிருந்து எனக்கு நல்ல உணவும் அளிக்க (நீங்கள் அவனுக்கு என்ன பதிலளிப்பீர்கள் ?) மேலும் நான் உங்களுக்கு எதைத் தடுக்கின்றேனோ அதை(யே) நான் உங்களுக்கு எதிராகச் செய்ய விரும்பவில்லை 21. (மாறாக) என்னால் இயன்ற (அளவிற்குச்) சீர்திருத்தம் செய்வதைத் தவிர, வேறெதையும் நான் விரும்பவில்லை . மேலும் எனக்கு (எதுவும் செய்வதற்கான) ஆற்றல் அல்லாஹ்விடமேயன்றி வேறில்லை. அவனிடமே நான் நம்பிக்கை வைத்துள்ளேன் . மேலும் அவனிடமே நான் மேன்மேலும் பணிகின்றேன் .
  90. என் சமுதாயத்தினரே ! என்னுடனான (உங்கள்) பகைமை நூஹின் சமுதாயத்திற்கோ , ஹூதின் சமுதாயத்திற்கோ , ஸாலிஹின் சமுதாயத்திற்கோ நேர்ந்த துன்பத்தைப் போன்ற துன்பத்திற்கு உங்களையும் ஆளாக்க உங்களைத் தூண்ட வேண்டாம். லூத்தின் சமுதாயத்தினர் உங்களைவிட்டுத் தொலைவில் இல்லை22.
  91. மேலும் நீங்கள் உங்கள் இறைவனிடம் மன்னிப்புக் கோருங்கள் . பின்னர் அவன் பக்கம் முழுமையாகத் திரும்பி விடுங்கள். நிச்சயமாக என் இறைவன் மேன்மேலும் கருணைகாட்டுபவனும் , மிக அதிகமாக நேசிப்பவனுமாவான்.
  92. அவர்கள் கூறினர் : ஷூஐபே ! நீர் கூறுபவற்றுள் அதிகமானவை எங்களுக்குப் புரிவதில்லை. நிச்சயமாக நாங்கள் உம்மை எங்களுக்கிடையே பலவீனமான ஒருவராகவே காண்கிறோம் . உம்முடைய கூட்டத்தினர் இல்லாதிருப்பின் நாங்கள் உம்மைக் கல்லெறிந்தே கொன்றிருப்போம்.நீர் எங்கள் பார்வையில் எவ்விதத்திலும் மதிக்கத்தக்கவர் இல்லை .
  93. அவர் கூறினார் : என் சமுதாயத்தினரே ! அல்லாஹ்வை விட என்னுடைய கூட்டத்தினர் உங்களுக்கு மிக மதிப்பிற்குரியவரா ? நீங்கள் அவனை உங்கள் முதுகுக்குப் பின்னால் எறிந்து விட்டீர்கள் . என் இறைவன் நீங்கள் செய்வதையெல்லாம் நன்கு அறிகின்றான்.
  94. என் சமுதாயத்தினரே ! நீங்கள் உங்கள் முறைப்படி செயலாற்றிக் கொண்டிருங்கள் . நானும் ( என் முறைப்படிச்) செயலாற்றிக் கொண்டேயிருக்கிறேன் . இழிவுபடுத்தும் தண்டனை எவருக்குக் கிடைக்கிறது என்பதையும், எவர் பொய்யர் என்பதையும் விரைவில் நீங்கள் தெரிந்து கொள்வீர்கள். நீங்கள் (உங்கள் முடிவையும், என் முடிவையும்) எதிர்பார்த்திருங்கள் . நிச்சயமாக நானும் உங்களுடன் எதிர்பார்க்கிறேன் .
  95. (தண்டனையைப் பற்றிய) எமது கட்டளை வந்தபோது , ஷூஐபையும் அவருடன் நம்பிக்கை கொண்டிருந்தவர்களையும் நம்முடைய (தனிப்பட்ட) அருளைக் கொண்டு (அத் தண்டனையிலிருந்து) நாம் காப்பாற்றினோம். அநீதியிழைத்தவர்களை அத்தண்டனை பற்றிக் கொண்டது. அவர்கள் தங்கள் வீடுகளில் முகங்குப்புற விழுந்தனர்.
  96. அவர்கள் அவற்றில் எக்காலத்திலும் வாழ்ந்திராதவர்கள் போன்றாகி விட்டனர். கவனமாகக் கேளுங்கள். (இறைவன்) ஸமூது சமுதாயத்தினர்க்குச் சாபத்தை விதித்தது போன்று மத்யன் சமுதாயத்தினர்க்கும் (அவன் ) சாபத்தை விதித்து விட்டான். ரு8
  97. மேலும் நிச்சயமாக நாம் மூஸாவை ( எல்லா வகையான) அடையாளங்களையும் மிகத் தெளிவான சான்றையும் வழங்கி ,
  98. ஃபிர்அவ்னிடமும் , அவனுடைய சமுதாயத் தலைவர்களிடமும் அனுப்பினோம். ஆனால் அவர்கள் ஃபிர்அவ்னின் கட்டளையைப் பின்பற்றினர் . ஃபிர்அவ்னின் கட்டளை ஒருபோதும் சரியாக இருந்ததில்லை.
  99. மறுமை நாளில் அவன் தன்னுடைய சமுதாயத்தினரை வழிநடத்திச் சென்று , அவர்களை (நரக) நெருப்பில் கொண்டு சேர்ப்பான் . அந்தச் சேருமிடம் மிகக் கெட்டது.
  100. இதிலும் மறுமை நாளிலும் ஒரு சாபம் அவர்களைப் பின் தொடர்ந்தது . அவர்களுக்கு வழங்கப்பட்ட அன்பளிப்பு 23 மிகத் தீயது.
  101. இது ( அழிவிற்குள்ளான) ஊர்கள் பற்றிய செய்தி(களின் ஒரு பகுதி) யாகும் . நாம் இதனை உமக்கு விளக்குகின்றோம் . இவற்றுள் சில (இப்போதும் நிலைத்து) நிற்கின்றன. மற்றுஞ்சில அழிந்து விட்டன .
  102. நாம் அவர்களுக்கு எந்த விதமான அநீதியும் இழைத்ததில்லை . எனினும் அவர்கள் தமக்குத்தாமே அநீதி இழைத்துக்  கொண்டனர் . பிறகு உம் இறைவனது (தண்டனையைப் பற்றிய) கட்டளை வந்தபோது , அவர்கள் அல்லாஹ்வையன்றி அழைத்துக் கொண்டிருந்த அவர்களின் கடவுளர் அவர்களுக்குச் சிறிதும் பயனளிக்கவில்லை . அழிவைத் தவிர (வேறெதனையும்) அவர்கள் அவர்களுக்குச் சேர்க்கவில்லை.
  103. ஊர்கள் , அநீதியிழைத்துக் கொண்டிருக்கின்ற நிலையில் அவற்றை உம் இறைவன் பிடித்தால் அவனது பிடி , இவ்வாறே இருக்கும். அவனது பிடி மிக்க வேதனையளிக்கக் கூடியதாயும், கடினமானதாயும் இருக்கின்றது.
  104. மறுமைத் தண்டனைக்கு அஞ்சுவோருக்கு , நிச்சயமாக இதில் ஓர் அடையாளம் உண்டு. அது மக்கள் எல்லாரும் ஒன்று திரட்டப்படும் நாளாகும். மேலும் அது (எல்லோரும்) காணக்கூடிய நாளாகும்.
  105. நாம் அதனைக் குறிப்பிட்ட ஒரு காலத்திற்காகவே பிற்படுத்தியுள்ளோம் .
  106. அந்நாள் வரும்போது , அவனுடைய அனுமதியின்றி எவரும் பேசமாட்டார்கள் . அப்பொழுது அவர்களுள் (சிலர்) துர்ப்பாக்கியமுள்ளவர்களும் (மற்றுஞ்சிலர்) உள்ளவர்களுமாயிருப்பர் .
  107. எனவே , துர்ப்பாக்கியமுள்ளவர் நெருப்பில் இருப்பார்கள். அதில் அவர்கள் பெருமூச்சு விடுபவர்களாகவும் , தேம்புபவர்களாகவும் ,
  108. உம்முடைய இறைவன் நாடினாலன்றி , வானங்களும் , பூமியும் நிலைத்திருக்கும் காலம் வரை24 அதில் வாழ்ந்து வருவர் . நிச்சயமாக உம் இறைவன் அவன் விரும்புவதைச் செய்கிறான் .
  109. நற்பேறு பெற்றோர், சுவர்க்கத்திலிருப்பார்கள் . உம்முடைய இறைவன் நாடினாலன்றி வானங்களும் , பூமியும் நிலைத்திருக்கும் காலம் வரை அவர்கள் அதில் வாழ்ந்து வருவர் .(இது ஒருபோதும்) துண்டிக்கப்படாத அருட்கொடையாகும் .
  110. எனவே (செவியேற்பவரே!) இவர்கள் வணங்கி வருவது குறித்து நீர் எந்தவிதமான ஐயத்திற்கும் ஆளாகி விடவேண்டாம் . (இவர்களுக்கு) முன்னர் இவர்களின் மூதாதையர்கள் வணங்கியது போன்றே இவர்களும் வணங்குகின்றனர். நிச்சயமாக நாம் இவர்களுக்கு இவர்களின் பங்கு சிறிதும் குறைக்கப்படாமல் முழுமையாகவே கொடுத்து விடுவோம். ரு9
  111. நிச்சயமாக நாம் மூஸாவுக்கு வேதத்தை வழங்கினோம் . பின்னர் அது குறித்து கருத்து வேறுபாடு உருவாயிற்று. உம்முடைய இறைவனிடமிருந்து முன்னரே இறங்கிவிட்ட வாக்கு (தடையாக) இருந்திராவிடில், அவர்களுக்கிடையே (என்றைக்கோ) தீர்ப்பு வழங்கப்பட்டிருக்கும். இப்பொழுது அவர்கள் இதைக் குறித்து மன அமைதியினைக் குலைக்கக்கூடிய ஐயத்திற்குள்ளாகி இருக்கின்றனர் .
  112. நிச்சயமாக உம்முடைய இறைவன் அவர்களெல்லோருக்கும் அவர்களின் செயல்(களுக்குரிய பலன்)களை முழுமையாகக் கொடுத்து விடுவான். அவர்கள் செய்து கொண்டிருப்பதனை அவன் நன்கு அறிகின்றான்.
  113. எனவே (தூதரே!) நீரும் உம்முடன் (இறைவன் பால்) திரும்பியவர்களும் , உமக்குக் கட்டளையிடப்பட்டவாறு நேரான வழியில் நிலைத்து நிற்பீராக . மேலும் நீங்கள் (ஒருபோதும்) வரம்பு மீறாதீர்கள் . நீங்கள் செய்து கொண்டிருப்பதை நிச்சயமாக அவன் பார்க்கின்றான் .
  114. அநீதியிழைத்தவர்களின்பால் நீங்கள் சாய்ந்து விடாதீர்கள். சாய்ந்து விட்டால், நெருப்பு உங்களைப் பற்றிக் கொள்ளும் (அந்த நேரத்தில்) உங்களுக்கு அல்லாஹ்வையன்றி வேறெவரும் நண்பராக இருக்கமாட்டார் . பின்னர் நீங்கள் உதவி செய்யப்படவும் மாட்டீர்கள் .
  115. செவியேற்பவரே ! நீர் பகலின் இரு கோடிகளிலும் , இரவின் (ஒரு) பகுதியிலும் (சிறந்த முறையில்) தொழுகையினை நிலைநாட்டுவீராக . நிச்சயமாக நற்செயல்கள் , தீய செயல்களை அகற்றிவிடுகின்றன. ( அல்லாஹ்வை) நினைவு கூர்பவர்களுக்கு இது ஓர் அறிவுரையாகும் .
  116. மேலும் நீர் பொறுமையை(யும் உறுதியையும்) கடைபிடிப்பீராக . ஏனென்றால், நன்மை செய்பவர்களின் கூலியினை அல்லாஹ் ஒருபோதும் வீணாக்குவதில்லை .
  117. உங்களுக்கு முன்னிருந்த தலைமுறைகளுள் , நாம் காப்பாற்றிய ஒரு சிலரைத் தவிர, பூமியில் குழப்பம் செய்வதிலிருந்து தடுக்கும் அறிவாளிகள் அவர்களுள் ஏன் தோன்றவில்லை ? அநீதியிழைத்த(ல் என்னும் செயலை மேற்கொண்டவர்களான ஏனைய)வர்கள் தங்களுக்கு வழங்கப்பட்ட பொருட் செல்வத்(தின் இன்பத்) தில் மூழ்கி குற்றவாளிகளாய் ஆகிவிட்டனர்.
  118. ஊர்களை , அவற்றில் வாழ்ந்து வருவோர் சீர்திருத்தம் செய்வோராய் இருக்கின்ற நிலையில், உம் இறைவன் ஒருபோதும் அநியாயமாக அழித்து விடமாட்டான் .
  119. உம்முடைய இறைவன் (கட்டாயமாக) நாடியிருந்தால் அவன் மக்களெல்லோரையும் ஒரே சமுதாயமாக ஆக்கியிருப்பான் .(ஆனால் அவன் அவ்வாறு செய்யாமல் , அவர்களை அவர்களது அறிவைக் கொண்டு செயல்படுமாறு விட்டுவிட்டான் ). அவர்கள் எப்போதும் கருத்து வேற்றுமை உள்ளவர்களாகவே இருப்பர் .
  120. உம் இறைவன் அருள்புரிந்தவர்களைத் தவிர, இதற்காகவே அவன் அவர்களைப் படைத்தான் . (கட்டுப்படாதவர்களான ) ஜின்கள் , மனிதர்கள் ஆகிய எல்லோரையும் கொண்டு நிச்சயமாக நான் நரகத்தை நிரப்புவேன் என்ற உம்முடைய இறைவனின் வாக்கு கட்டாயம் நிறைவேறிவிடும் .
  121. உமது உள்ளத்தை உறுதிப்படுத்துவதற்காக தூதர்களின் மிக முக்கியமான செய்திகளையெல்லாம் நாம் உமக்கு விளக்குகின்றோம் . உண்மை நிரம்பியதும் , அறிவுரை நல்க கூடியதும் , நம்பிக்கையாளர்களுக்கு (அவர்களின் கடமைகளை) நினைவூட்டக் கூடியதும் ஆகிய எல்லாம் இ(வ்வதிகாரத்) தில் உமக்கு வந்துவிட்டன .
  122. மேலும் நம்பிக்கை கொள்ளாதிருப்பவர்களிடம் நீர் இவ்வாறு கூறுவீராக : நீங்கள் உங்கள் நிலைக்கேற்ப செயலாற்றுங்கள் ; நாங்களும் (எங்கள் நிலைக்கேற்ப) செயலாற்றுவோம் .
  123. நீங்கள் எதிர்பார்த்திருங்கள் ; நாங்களும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம்.
  124. வானங்களிலும்,பூமியிலுள்ள மறைவானது அல்லாஹ்விற்கு மட்டும் உரியது. (முடிவைப் பொருத்தவரையில்) எல்லாக் காரியங்களும் அவனிடமே திரும்புகின்றன. எனவே நீர் அவனையே வணங்கி, அவனிடமே நம்பிக்கை வைப்பீராக . உம் இறைவன் நீங்கள் செய்வதைக் குறித்து ஒருபோதும் கவனமற்றவன் அல்லன் . ரு10



Powered by Blogger.