அதிகாரம் : அல்-அன்ஆம்
அருளப்பட்ட இடம்
: மக்கா
வசனங்கள் : 166 | பிரிவுகள் : 20
வசனங்கள் : 166 | பிரிவுகள் : 20
- அளவற்ற அருளாளனும் மேன் மேலும் கருணை காட்டுபவனுமாகிய அல்லாஹ்வின் பெயரால் (நான் ஓதுகின்றேன்.)
- வானங்களையும், பூமியையும் படைத்து இருள்களையும் ஒளியையும் அமைத்த அல்லாஹ்வுக்கே எல்லா புகழும் உரியது. இவ்வாறிருந்தும் நிராகரிப்பவர்கள் தங்கள் இறைவனுக்கு இணை வைக்கின்றனர்.
- அந்த இறைவனே உங்களை (ஈரமான) களிமண்ணிலிருந்து படைத்தான். (பின்னார் வாழ்நாளிற்காக) குறிப்பிட்ட ஒரு காலத்தைத் தீர்மானித்தான். அவனிடத்து வரையறுக்கப்பட்ட இன்னொரு காலமும் உண்டு1. இவ்வாறிருந்தும் நீங்கள் ஐயம் கொள்கின்றீர்கள்.
- வானங்களிலும் பூமியிலும் உள்ள அல்லாஹ் அவனேயாவான். உங்களின் மறைவானவற்றையும், வெளிப்படையானவற்றையும் அவன் அறிகின்றான். மேலும் அவன் நீங்கள் சம்பாதிப்பதையும் அறிகின்றான்.
- அவர்களிடம் அவர்களுடைய இறைவனின் அடையாளங்களுள் எந்த அடையாளம் வந்தாலும், அவர்கள் அதனை புறக்கணிக்கின்றனர்.
- எனவே முழுமையான உண்மை (குர்ஆன்) அவர்களிடம் வந்த போது, அதனையும் அவர்கள் மறுத்துவிட்டனர். ஆனால் அவர்கள் ஏளனம் செய்து கொண்டிருந்த செய்திகள் விரைவிலேயே அவர்களுக்குக் கிடைக்கும்2.
- இவர்களுக்கு முன்னர் பல்வேறு காலங்களில் எவ்வளவு சமுதாயங்களை நாம் அழித்துள்ளோம் என்பது இவர்களுக்கு தெரியாதா? உங்களுக்கு நாம் வழங்காத பெரும் வலிமையினை நாம் அவர்களுக்குப் பூமியில் வழங்கியிருந்தோம். மேலும் அவர்களின் மேல் பெரும் மழை பெய்யும் மேகங்களை நாம் அனுப்பினோம். நாம் அவர்களுக்குக் கீழே ஆறுகள் ஓடச் செய்தோம். பின்னர் அவர்களின் பாவங்களின் காரணமாக, அவர்களை நாம் அழித்துவிட்டு அவர்களுக்கு பின்னர் மற்றொரு சமுதாயத்தை எழுப்பினோம்.
- தாள்களில் எழுதப்பட்ட வேதமொன்றை நாம் உமக்கு இறக்கி, அதனை அவர்கள் தங்கள் கைகளால் தொட்டு உணர்ந்திருந்தாலும், இது மிகவும் தெளிவான மாயக்கலை என்றே நிராகரிப்போர் கூறியிருப்பர்.
- அவரிடத்து ஓர் வானவர் ஏன் இறக்கப்படவில்லை என்று அவர்கள் கேட்கின்றனர். நாம் ஒரு வானவரை இறக்கியிருந்தால், பிரச்சனைக்கு ஒரு முடிவு ஏற்பட்டிருக்கும். பின்னர் அவர்களுக்கு எவ்வித கெடுவும் கொடுக்கப்பட்டிருக்காது.
- நாம் ஒரு வானவரை (தூதராக) அமர்த்தியிருந்தால் நாம் அவருக்கு மனித வடிவத்தையே கொடுத்திருப்போம். ஆகவே அவர்கள் இப்பொழுது (தங்களுக்குள்) ஐயங்கொண்டிருப்பவற்றில், அவர்களுக்கு மேலும் ஐயத்தையே ஏற்படுத்தியிருப்போம்.
- உமக்கு முன்னர் தோன்றிய தூதர்களும் ஏளனம் செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் எதனை (அதாவது எந்த ஆக்கினை) குறித்து ஏளனம் செய்தனரோ அந்த ஆக்கினையே அவர்களுள் ஏளனம் செய்தவர்களைச் சூழ்ந்து கொண்டது. ரு1
- நீங்கள் பூமியில் சுற்றித்திரிந்து (தூதர்களை) பொய்யாக்கியோருக்கு என்ன முடிவு ஏற்பட்டதென்பதைப் பாருங்கள் என்று நீர் (அவர்களிடம்) கூறுவீராக.
- வானங்களிலும் பூமியிலும் உள்ளவை எவனுக்குரியவை என்று (அவர்களிடம்) நீர் கேட்பீராக. (இதற்கு அவர்கள் என்ன பதில் தரப்போகிறார்கள்? நீரே அவர்களிடம் அவை) அல்லாஹ்விற்குரியவை என்று கூறுவீராக. அவன் கருணையைத் தன் கடமையாகக் கொண்டுள்ளான். அவன் உங்களை நிச்சயமாக மறுமை நாள் வரையிலும் ஒன்று சேர்த்துக் கொண்டேயிருப்பான். இதில் ஐயமே இல்லை. தங்கள் வாழ்வை வீணாக்கியவர்கள் நம்பிக்கை கொள்ள மாட்டார்கள்3.
- இரவி(ன் இருளி)லும் பக(லின் ஒளியி)லும் வாழ்பவையெல்லாம் (இறைவனாகிய) அவனுக்கே உரியன. மேலும் அவன் நன்கு கேட்பவனும் நன்கு அறிபவனுமாவான்.
- நீர் கூறுவீராக! வானங்களையும், பூமியையும் படைத்தவனாகிய அல்லாஹ்வையன்றி வேறொருவனை நான் நண்பனாக ஆக்கிக் கொள்வேனா? அவன் (எல்லா மக்களுக்கும்) உணவளிக்கின்றான். (எவரிடமிருந்தும்) அவனுக்கு உணவளிக்கப்படுவதில்லை. நீர் கூறுவீராக! கட்டுப்பட்டு நடப்பவர்களில் முதன்மையானவனாக இருக்க வேண்டும் என்று நான் கட்டளையிடப்பட்டுள்ளேன். மேலும் (தூதரே) நீர் (இறைவனுக்கு) இணைவைப்போரைச் சார்ந்தவராக இருக்க வேண்டாம்.
- நீர் கூறுவீராக! நான் என் இறைவனுக்கு கட்டுப்படாவிட்டால், பெருந்தண்டனைக்குரிய நாளுக்கு நான் அஞ்சுகிறேன்.
- அது (தண்டனை) அந்நாளில் அகற்றப்பட்டவர்க்கு நிச்சயமாக இறைவன் கருணை காட்டியுள்ளான். மேலும் இது நிச்சயமாக வெளிப்படையான வெற்றியாகும்.
- அல்லாஹ் உமக்கு ஒரு துன்பத்தைத் தந்தால், அவனையன்றி வேறெவராலும் அதை நீக்க முடியாது. அவன் உமக்கு ஒரு நன்மையைத் தந்தால் அவன் விரும்பியவற்றைச் செய்ய பேராற்றல் பெற்றவனாவான்.
- அவன் தன் அடியார்களிடத்து ஒப்புயர்வற்றவன்4. அவன் மிக நுட்ப ஞானங்களைக் கொண்டவனும் எல்லாம் தெரிந்தவனுமாவான்.
- நீர் கூறுவீராக! சான்றுகளுள் மிக வலுவானது எது? கூறுவீராக; எனக்கும் உங்களுக்கும் இடையில் அல்லாஹ் சாட்சியாவான். இந்தக் குர்ஆனைக் கொண்டு உங்களுக்கும், இது போய்ச் சேர்ந்தவர்களுக்கும் நான் எச்சரிக்கை செய்யும் பொருட்டு, இக்குர்ஆன் (வஹீ) மூலம் எனக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. அல்லாஹ்வைத் தவிர வேறு கடவுள்களும் இருக்கின்றனர் என்று நீங்கள் சாட்சி கூறுகின்றீர்களா? கூறுவீராக; நான் அவ்வாறு சாட்சி கூறமாட்டேன். (மீன்றும் அவர்களிடம்) கூறுவீராக; அவன் ஒருவனே வணக்கதிற்குரியவனாவான். நீங்கள் (அவனுக்கு) வைக்கும் இணைகளிலிருந்து நான் மிகவும் விலகியுள்ளேன்.
- வேதம் கிடைத்துள்ளவர்கள், தங்கள் பிள்ளைகளை அறிந்து கொள்வது போன்றே இவரை5 (யும்) அறிந்து கொள்கின்றனர். (ஆனால்) தங்களை இழப்பிற்கு ஆளாக்கிக் கொண்டவர்கள் நம்பிக்கை கொள்வதில்லை. ரு2
- அல்லாஹ்வைப் பற்றி பொய் புனையவோ அல்லது அவனுடைய அடையாளங்களைப் பொய்யாக்கவோ செய்பவனை விட அக்கிரமக்காரன் யார்? நிச்சயமாக அக்கிரமக்காரர்களுக்கு வெற்றி கிடைப்பதில்லை.
- ஒரு நாள், நாம் அவர்கள் எல்லாரையும் ஒன்று சேர்த்து (இறைவனுக்கு) இணை வைத்தவர்களிடம் நீங்கள் உறுதியாக வாதித்த இணைகள் எங்கே? என்று நாம் கேட்போம் (அந்நாளை நினைத்துப் பாருங்கள்.)
- பின்னர் எங்கள் இறைவனாகிய அல்லாஹ்வின் பேரின் ஆணையாக நாங்கள் இணை வைப்போராய் இருந்ததில்லை என்று கூறுவதல்லாமல் அவர்களுக்கு வேறு பதில் இருக்காது.
- அவர்கள் தங்களுக்கு எதிராக எவ்வாறு பொய்யுரைக்கிறார்கள் என்பதையும் அவர்கள் பொய்யாக புனைந்து கூறியவை (யெல்லாம்) அவர்களுக்கு பயனளிக்கவில்லை என்பதையும் நீர் பார்ப்பீராக.
- உமக்குச் செவி சாய்ப்பவர் அவர்களில் சிலர் உள்ளனர். ஆனால் அவர்கள் அதனை புரிந்து கொள்ளாதிருப்பதற்காக அவர்களின் உள்ளங்களில் திரைகளையும், அவர்களின் காதுகளில் செவிட்டுத் தன்மையையும் நாம் ஏற்படுத்தியுள்ளோம்6 அவர்கள் ஒவ்வொரு அடையாளத்தைக் கண்டாலும் அவர்கள் அதனிடத்து நம்பிக்கை கொள்ள மாட்டார்கள். எதுவரையெனில், அவர்கள் உம்மிடம் வந்தால், உம்முடன் வாக்குவாதம் செய்கின்றனர். (குர்ஆனாகிய) இது முன்னோர்களின் கட்டுக்கதைகளேயாகும் என்று நிராகரிப்போர் கூறுகின்றனர்7.
- அவர்கள் அதனை (நம்பவிடாமல் மற்றவர்களை) தடுக்கின்றனர். (தாங்களும்) அதிலிருந்து விலகிக் கொள்கின்றனர். ஆனால் அவர்கள் தங்களையே தவிர வேறெவரையும் அழித்துக் கொள்வதில்லை. ஆனால் அவர்கள் இதனை உணர்வதில்லை.
- நரகத்திற்கு முன் அவர்கள் நிறுத்தப்படும்போது நீர் அவர்களைக் கண்டால், அவர்கள் அந்தோ! நாங்கள் மீண்டும் (உலகிற்கு) அனுப்பப்பட்டால் நலமாக இருக்குமே. (அவ்வாறாயின்) நாங்கள் ஒரு போதும் எங்கள் இறைவனின் அடையாளங்களைப் பொய்யாக்க மாட்டோம். மேலும் நாங்கள் நம்பிக்கை கொண்டவர்களாக இருப்போம் என்று கூறுவார்கள்.
- உண்மையில் அவர்கள் முன்னர் மறைத்து வைத்திருந்தவை அவர்களுக்கு தெளிவாகி விட்டது. அவர்கள் திரும்பவும் அனுப்பப்பட்டால் தடுக்கப்பட்டதன் பக்கமே நிச்சயமாக மீண்டும் செல்வர். நிச்சயமாக அவர்கள் பொய்யர்களே ஆவர்.
- நம்முடைய இந்த உலக வாழ்வினைத் தவிர (மறுமை) எதுவுமில்லை; நாம் எழுப்பப்படவும் மாட்டோம் என்று அவர்கள் கூறுகின்றனர்.
- அவர்கள் தங்கள் இறைவன் முன் நிறுத்தப்படும்போது நீர் (அவர்களைக்) கண்டால்! அவன் (அவர்களிடம், மறுமை வாழ்வாகிய) இது உண்மையல்லவா என்று கேட்பான். அவர்கள் எங்கள் இறைவன் மீது ஆணையாக உண்மைதான் என்று பதிலளிப்பார்கள். அவ்வாறாயின் நீங்கள் நிராகரித்ததினால் தண்டனையைச் சுவைத்துப் பாருங்கள் என்று அவன் கூறுவான். ரு3
- அல்லாஹ்வுடனுள்ள சந்திப்பைப் பொய்யாக்குபவர்கள், நிச்சயமாக இழப்பிற்கு ஆளானோர் ஆவர். எதுவரை எனில், அவர்களிடம் அந்நேரம் திடீரென வரும்போது (இந்நேரத்தை) நாங்கள் புறக்கணித்த காரணத்திற்காக இது எங்களுக்கு ஏற்பட்ட துயரமே என்று அவர்கள் கூறுவார்கள். அவர்கள் தங்கள் சுமைகளைத் தங்கள் முதுகுகளில் சுமப்பார்கள். நிச்சயமாக அவர்கள் சுமப்பது மிகவும் தீயதே.
- உலக வாழ்க்கை விளையாட்டும் பொழுது போக்குமேயன்றி வேறில்லை. ஆனால் இறையச்சம் உடையவர்களுக்கு நிச்சயமாக மறுமை வீடே சிறந்தது. எனவே நீங்கள் சிந்தித்து செயலாற்ற வேண்டாமா?
- அவர்கள் கூறுவது உமக்கு மெய்யாகவே கவலையைத் தருகின்றது என்பதனை நாம் (நன்கு) அறிகின்றோம். ஏனென்றால் அவர்கள் உம்மைப் பொய்ப்படுத்தவில்லை. எனினும் அநீதி இழைப்போர் அல்லாஹ்வின் வசனங்களை வேண்டுமென்றே நிராகரிக்கின்றனர்.
- நிச்சயமாக உமக்கு முன்னர் வந்த தூதர்களும் பொய்ப்படுத்தப்பட்டனர். அவர்கள் பொய்ப்படுத்தப்பட்டதுடன், துன்புறுத்தப்பட்டிருந்தும் அவர்களுக்கு நம் உதவி வரும் வரை பொறுமையாக இருந்தனர். அல்லாஹ்வின் வசனங்களை மாற்றுபவன் எவனுமில்லை. இத்தூதர்களின் செய்திகள் நிச்சயமாக உம்மிடம் வந்தே இருக்கின்றன.
- (நிராகரிப்பவர்களாகிய) அவர்களின் புறக்கணிப்பு உமக்குத் துன்பம் தருமாயின், உம்மால் முடிந்தால் பூமிக்குள் செல்லும் சுரங்கத்தையோ, வானத்திற்குச் செல்லும் ஒரு ஏணியையோ தேடி ஓர் அடையாளத்தை அவர்களுக்காக கொண்டுவாரும். (உம்மால் முடியாது) அல்லாஹ் விரும்பியிருந்தால், நிச்சயம் அவர்களை நேரான வழியில் ஒன்று சேர்த்திருப்பான். எனவே நீர் அறியாதவர்களைச் சார்ந்தவராகி விட வேண்டாம்.
- கவனமாக கேட்கின்றவர்களே ஒப்புக் கொள்வார்கள். மரணமடைந்தவர்களை8 அல்லாஹ் எழுப்புவான். பின்னர் அவர்கள் அவனிடமே திரும்பவும் கொண்டு செல்லப்படுவர்.
- அவருடைய இறைவனிடமிருந்து அவருக்கு ஓர் அடையாளம் ஏன் இறக்கப்படவில்லை என்று அவர்கள் கூறுகின்றனர். நீர் கூறுவீராக, அல்லாஹ் அடையாளத்தை இறக்குவதற்கு நிச்சயமாக ஆற்றல் பெற்றவனே. ஆனால் அவர்களுள் பெரும்பாலார் அறிவதில்லை.
- பூமியின் (மேல் நடந்து செல்லும்) பிராணிகளும், (வானில்) தம் இறக்கைகளால் பறந்து செல்லும் பறவைகளும் உங்களைப் போன்ற கூட்டங்களே அன்றி வேறில்லை9. இந்த வேதத்தில் எதனையும் விட்டு வைக்கவில்லை. பின்னர் அவர்கள் தங்கள் இறைவனிடமே ஒன்று சேர்க்கப்படுவார்கள்.
- மேலும் நம்முடைய வசனங்களை மறுத்தவர்கள் காரிருளில் உள்ள செவிடர்களும், ஊமையர்களும் ஆவர். அல்லாஹ் தான் நாடுபவரை அழித்து விடுகின்றான்; மேலும் தான் நாடுபவரை நேர்வழியில் நடத்துகிறான்.
- உங்களுக்கு அல்லாஹ்வின் தண்டனை வந்துவிட்டால் அல்லது (முன்னறிவிக்கப்பட்ட) அந்த நேரம் வந்துவிட்டால் உங்கள் நிலமை எவ்வாறு இருக்கும்.? நீங்கள் உண்மையாளர்களாயின் அல்லாஹ்வையன்றி வேறெவரையாவது அழைப்பீர்களா? என்று நீர் கேட்பீராக.
- இல்லை, அவனையே நீங்கள் அழைப்பீர்கள். பின்னர் அவன் விரும்பினால், எதை அகற்றுவதற்காக நீங்கள் (அவனை) அழைப்பீர்களோ அதை அவன் கட்டாயமாக அகற்றிவிடுவான். மேலும் நீங்கள் (இறைவனுக்கு) இணையாக்கியதை மறந்து விடுவீர்கள். ரு4
- நாம் உமக்கு முன்னுள்ள சமுதாயங்களுக்கும், நிச்சயமாக (தூதர்களை) அனுப்பினோம். அத்தூதர்கள் வந்த10 பின்னர் அவர்கள் பணிவை மேற்கொள்ளும் பொருட்டு துன்பம், துயரம் ஆகியவற்றால் நாம் அவர்களைப் பிடித்து கொண்டோம்.
- நம்முடைய தண்டனை அவர்களிடம் வந்த போது, அவர்கள் பணிந்து நடந்திருக்க வேண்டாமா? ஆனால் அவர்களின் உள்ளங்கள் (மேலும்) கடினமாகி விட்டன. மேலும் அவர்கள் செய்து கொண்டிருந்ததை ஷைத்தான் அவர்களுக்கு அழகுமிக்கதாய்க் காட்டிவிட்டான்.
- பின்னர் அவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டதை அவர்கள் மறந்து விட்ட போது, எல்லாப் பொருள்களின் வாயில்களையும் நாம் அவர்களுக்கு திறந்து விட்டோம். அவர்களுக்கு வழங்கப்பட்டவற்றால் அவர்கள் மகிழ்ச்சியடைந்தபோது, நாம் அவர்களைத் திடீரென பிடித்துக் கொண்டோம். அந்நேரத்தில் அவர்கள் நிராசை அடைந்து விட்டார்கள்.
- எனவே அநீதி இழைத்தவர்களின் அடிவேரே துண்டிக்கப்பட்டது. எல்லா உலகங்களையும் படைத்துக் காத்தோம்பும் அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும் உரியன.
- அல்லாஹ் உங்கள் கேள்விப்புலனையும் பார்வையையும் போக்கி உங்கள் உள்ளங்களில் முத்திரையிட்டு விட்டால், அல்லாஹ்வையன்றி அதனை (த்திருப்பி)க் கொண்டு வரும் கடவுள் யார் என்பதைச் சொல்வீர்களா என்று நீர் கேட்பீராக. நாம் வசனங்களை எவ்வாறு மீண்டும் மீண்டும் (பல்வேறு கோணத்தில்) விளக்குகின்றோம் என்று பார்ப்பீராக. (ஆனால்) இவ்வாறிருந்தும் அவர்கள் புறக்கணிக்கின்றனர்.
- அல்லாஹ்வின் தண்டனை (அறிவிப்பின்றி) திடீரெனவோ வெளிப்படையாகவோ உங்களிடம் வந்துவிட்டால், அநீதி இழைப்பவர்களைத் தவிர (வேறெவரும்) அழிவிற்குள்ளாக்கப்படுவாரா என்பதையும் கூறுங்கள் (பார்க்கலாம்) என்று நீர் கேட்பீராக.
- நற்செய்தி உடையவராகவும், அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவராகவுமன்றி நாம் தூதர்களை அனுப்புவதில்லை. ஆகவே, நம்பிக்கைக் கொண்டு (தம்மைச்) சீர்திருத்திக் கொள்கின்றவர்களுக்கு (வருங்காலத்தைப் பற்றி) எவ்விதக் பயமும் ஏற்படாது; அவர்கள் (சென்ற காலம் பற்றிக்) கவலைப்படவும் மாட்டார்கள்.
- மேலும் நம்முடைய வசனங்களைப் பொய்யாக்குவோருக்கு அவர்களின் கட்டுப்படாத நிலை காரணத்தினால் நமது தண்டனை அவர்களைப் பற்றிக் கொள்ளும்.
- நீர் கூறுவீராக! அல்லாஹ்வின் கருவூலங்கள் என்னிடம் இருக்கின்றன (என்றும்) மறைவானவற்றை நான் அறிகிறேன் என்று(ம்) உங்களிடம் நான் கூறவில்லை. மேலும் நான் ஒரு மலக்கு என்றும் உங்களிடம் நான் கூறவில்லை. எனக்கு (இறைவனால் வஹீயின் மூலம்) அறிவிக்கப்படுவதையே நான் பின்பற்றுகிறேன். நீர் கூறுவீராக; குருடனும், பார்வையுள்ளவனும் சமமானவர்களா? பின்னர் ஏன் நீங்கள் சிந்திப்பதில்லை?
- தங்கள் இறைவனிடம் தாங்கள் ஒன்று சேர்க்கப்படுவோமென்றும் (அச்சமயம்) அவனையன்றி (எந்தவொரு) நன்மையுமில்லை, பரிந்து பேசுபவருமில்லை என்றும் அஞ்சுகின்றவர்கள், இறையச்சத்தை மேற்கொள்ளும் பொருட்டு நீர் இதனால் அவர்களை எச்சரிக்கை செய்வீராக.
- மேலும் தங்களின் இறைவனின் கவனத்தை நாடியவர்களாகக் காலையிலும், மாலையிலும், அவனை அழைப்பவர்களை நீர் வீரட்டாதீர். அவர்களின் கணக்கில் உமக்கு சிறிதும் பங்கில்லை. உம் கணக்கில் அவர்களுக்குச் சிறிதும் பங்கில்லை. ஆகவே நீர் அவர்களை விரட்டினால் அநீதியிழைப்போரைச் சேர்ந்தவராவீர்.
- இவ்வாறே நம்மிடையேயுள்ள இவர்களுக்கா அல்லாஹ் அருள் செய்தான் என்று அவர்கள் கூறும் பொருட்டு அவர்களில் சிலரை சிலரால் நாம் சோதித்தோம். நன்றி செலுத்துபவர்களை அல்லாஹ் நன்கு அறிபவனல்லவா?
- நம்முடைய வசனங்களில் நம்பிக்கை கொள்பவர்கள் உம்மிடம் வரும்போது நீர் (அவர்களிடம்) கூறுவீராக: உங்களுக்கு என்றென்றும் சாந்தி உண்டாவதாக: உங்கள் இறைவன் உங்களுக்குக் கருணை காட்டுவதைத் தன் கடமையாகக் கொண்டுள்ளான். (அது இவ்வாறு:) உங்களுள் எவராவது அறியாமையினால் ஏதாவதொரு தீமையைச் செய்து, பின்னர் மனம் வருந்தியும் திருந்திக் கொள்ளவும் செய்தால், நிச்சயமாக அவன் மிக்க மன்னிப்பவனும் மேன்மேலும் கருணை காட்டுபவனுமாவான்.
- இவ்வாறே, (உண்மை வெளிவரும் பொருட்டும்) குற்றவாளிகளின் வழி நன்கு தெளிவாகிவிடும் பொருட்டு(ம்) நாம் அடையாளங்களைத் தெளிவாக விளக்குகின்றோம். ரு6
- நீர் (அவர்களிடம்) கூறுவீராக: அல்லாஹ்வையன்றி நீங்கள் அழைப்பவை (களான பொய்யான தேவங்) களை நான் வணங்கக்கூடாதென்று (முற்றிலும்) தடுக்கப்பட்டுள்ளேன். நீர் (அவர்களிடம்) கூறுவீராக: நான் உங்களுடைய (இழிவான) விருப்பங்களை பின்பற்ற மாட்டேன். (நான் அவ்வாறு செய்தால்) அப்பொழுது நான் வழிதவறியவன் (என்றும்) நான் நேர்வழி பெற்றவர்களை சார்ந்தவனல்லன் (என்றும் புரிந்து கொள்ளுங்கள்).
- நீர் (அவர்களிடம்) கூறுவீராக: நான் என் இறைவன் புறமிருந்துள்ள தெளிவான் சான்றில் (நிலைகொண்டு) உள்ளேன். நீங்கள் அதைப் பொய்யாக்குகின்றீர்கள். விரைவில் (நிகழ) வேண்டுமென்று நீங்கள் விரும்புவது என்னிடம் இல்லை. தீர்ப்பு அல்லாஹ்விடமே. அவன் உண்மையினை விளக்குகின்றான். அவன் தீர்ப்பு வழங்குவதில் மிகச் சிறந்தவனாவான்.
- நீர் (அவர்களிடம்) கூறுவீராக: விரைந்து (நிகழ) வேண்டும் என நீங்கள் விரும்புவது என்னிடமிருந்தால், எனக்கும் உங்களுக்கும் இடையிலுள்ள பிரச்சனை (எப்போதோ) முடிந்திருக்கும். அல்லாஹ் அநீதியிழைப்பவர்களை நன்கு அறிகின்றான்.
- அவனிடமே மறைவானவற்றிற்குரிய திறவுகோல்கள் இருக்கின்றன. அவற்றை அவனையன்றி வேறெவரும் அறிவதில்லை. நிலத்திலும் கடலிலும் உள்ளதை அவன் அறிகின்றான். அவன் அறியாமல் ஓரிலையும் உதிருவதில்லை. பூமியின் ஆழிருள்களிலுள்ள தானியமும், ஈரமானதும், காய்ந்ததும் (ஆன எல்லாம் மிகவும்) தெளிவான (அவனுடைய) நூலில் (பதிவு செய்யப்பட்டு) உள்ளது.
- அவனே இரவில் உங்கள் உயிரைக் கைப்பற்றுகின்றான். பகலில் நீங்கள் செய்வதை அறிகின்றான். பின்னர் குறிப்பிடப்பட்ட காலம் நிறைவுபெறும் பொருட்டு உங்களை மீண்டும் எழுப்புகின்றான். இதன் பின்னர் அவனிடமே நீங்கள் திருப்பிச் செல்ல வேண்டியதுள்ளது. பின்னர் நீங்கள் செய்து கொண்டிருப்பது பற்றி அவன் உங்களுக்கு அறிவிப்பான். ரு7
- அவன் தன் அடியார்களிடத்து மிகைத்தவனாவான். அவன் உங்களுக்கு பாதுகாவலர்களை அனுப்புகின்றான். உங்களுள் எவருக்காவது மரணம் வரும்போது, நம் தூதர்கள் (அதாவது வானவர்கள்) அவருடைய உயிரைக் கைப்பற்றுகின்றனர். அவர்கள் (அதில்) தவறுவதில்லை.
- பின்னர் அவர்களுடைய உண்மையான எஜமானனாகிய அல்லாஹ்விடம் அவர்கள் திரும்பக் கொண்டு செல்லப்படுவர். கேளுங்கள்! தீர்ப்பு அவனுக்கே உரியது. மேலும் அவன் விரைவில் கணக்கெடுப்பவனாவான்.
- நீங்கள் நிலத்திலும், கடலிலும் உள்ள இருள்களில் சிக்கி (ய சமயத்தில்) எங்களை இதிலிருந்து காப்பாற்றினால், நிச்சயமாக நாங்கள் நன்றி செலுத்துவோராகி என்று பணிவாகவும் மறைவாகவும் அவனை அழைத்துக் கொண்டிருக்கும் தருணத்தில், உங்களை மீட்பவன் யார் என்று நீர் (அவர்களிடம்) கேட்பீராக.
- நீர் (அவர்களிடம்) கூறுவீராக. அல்லாஹ் (தான் ) உங்களை அவற்றிலிருந்தும் (ஏனைய) எல்லாத் துன்பங்களிலிருந்தும் காப்பாற்றுகின்றான். ஆயினும் நீங்கள் (அவனுக்கு) இணைவைக்கின்றீர்களே!
- நீர் (அவர்களிடம்) கூறுவீராக: உங்களுக்கு மேலிருந்தும், உங்கள் கால்களுக்கு கீழிருந்தும் தண்டனையை அனுப்புவதற்கோ உங்களைப் பல்வேறு பிரிவுகளாகப் (பிரித்து) சீர்குலைத்து ஒருவருக்கொருவர் செய்யும் கொடுமைகளைச் சுவைக்கச் செய்வதற்கோ அவன் ஆற்றல் பெற்றவனாவான். அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக நாம் சான்றுகளை எவ்வாறு மீண்டும் மீண்டும் விளக்குகின்றோம் என்பதனை பார்ப்பீராக.
- இது உண்மையாயிருந்தும், இதனை உமது சமுதாயம் மறுக்கின்றது. நீர் அவர்களிடம், நான் உங்களுக்கு பொறுப்பாளி அல்ல என்று கூறுவீராக.
- ஒவ்வொரு முன்னறிவிப்பிற்கும் (அது நிறைவேறுவதற்கு) குறிப்பிட்ட ஒரு காலம் உள்ளது. விரைவிலேயே நீங்கள் (உண்மையினைத்) தெரிந்து கொள்வீர்கள்.
- நம்முடைய வசனங்களை ஏளனம் செய்து பேசுவோரை நீர் கண்டால், அவர்கள் இதை விட்டு வேறு பேச்சில் ஈடுபடும் வரை, நீர் அவர்களை விட்டு விலகியிருப்பீராக. ஷைத்தான் உம்மை மறக்கச் செய்தால் நினைவு வந்த பிறகு, நீர் அநீதி இழைப்பவர்களுடன் அமர்ந்திருக்காதீர்.
- அவர்களின் கணக்கில் இறையச்சமுடையோருக்கு எப்பங்குமில்லை. எனினும், அவர்கள் இறையச்சம் கொள்வதற்காக அறிவுரை நல்குவது (இவர்களின் பொறுப்பாகும்)
- தங்கள் மார்க்கத்தை ஒரு விளையாட்டாகவும், பொழுது போக்காகவும் ஆக்கிக் கொண்டு உலக வாழ்க்கையின் ஏமாற்றத்திற்கு உள்ளானவர்களை நீர் விட்டு விடுவீராக. ஓர் ஆன்மா, தான் சம்பாதித்துக் கொண்டவற்றின் காரணமாக அழிவிற்குள்ளாக்கப்படாதிருக்க நீர் இதன் மூலம் அறிவுரை கூறுவீராக. இறைவனையன்றி அதற்கு உதவியாளர் எவருமில்லை. எல்லா (வகையான) ஈட்டுப் பொருளையும் அது கொடுத்தாலும், அதனிடமிருந்து ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது. இத்தகையோர் தங்கள் செயல்களின் காரணத்தால் அழிவிற்குள்ளாக்கப்படுவர். இவர்கள் நிராகரித்ததன் காரணத்தால் குடிப்பதற்குக் கொதிக்கும் நீரும், வேதனையளிக்கக் கூடிய ஆக்கினையும் அவர்களுக்கு உண்டு. ரு8
- நீர் அவர்களிடம் கூறுவீராக: அல்லாஹ்வையன்றி எங்களுக்கு நன்மையோ, தீமையோ செய்ய இயலாதவற்றை நாங்கள் அழைக்க வேண்டுமா? மேலும் எங்களுக்கு அல்லாஹ் நேர்வழியினை காட்டிய பின்னர், தீயவர்களால் கவரப்பட்டு மனங்குழம்பியபடி பூமியில் தடுமாறியவனைப் போல் நாங்கள் குதிகால்களில் திருப்பி விடப்பட வேண்டுமா? நேர்வழியினைப் பெற எங்களிடம் வாருங்கள் என்று அவனை அழைக்கும் நண்பர்கள் அவனுக்கு உள்ளனர். (நிராகரிப்பவர்களாகிய அவர்களிடம்) நீர் கூறுவீராக. நிச்சயமாக அல்லாஹ்வின் வழியே (உண்மையான) நேர்வழி. எல்லா உலகங்களின் இறைவனுக்கு நாங்கள் கட்டுப்பட்டு நடக்க வேண்டுமென்று எங்களுக்குக் கட்டளையிடப்பட்டுள்ளது.
- நீங்கள் தொழுகைகளைச் (சரியாக) நிறைவேற்றுங்கள். அவனுக்கே அஞ்சுங்கள். அவனிடமே நீங்கள் ஒன்று சேர்க்கப்படுவீர்கள். என்றும் (கட்டளையிடப்பட்டுள்ளது.)
- அவனே வானங்களையும், பூமியையும் நுட்பமான ஞானத்துடன் படைத்தான். ஆகிவிடு என்று அவன் கூறும் நாளில் (அவ்வாறே) ஆகிவிடும். அவனது வாக்கு உண்மையானது. மேலும் எக்காலம் ஊதப்படும் நாளின் ஆட்சி அவனுக்கே! (அவன்) மறைவானவற்றையும், வெளிப்படையானவற்றையும் அறிபவன். அவன் நுட்பமான் ஞானமுள்ளவனும், மேலும் நன்கு தெரிந்து கொள்பவனுமாவான்.
- இப்ராஹீம் தமது தந்தை ஆஸரிடம் நீர் சிலைகளை வணக்கதிற்குரியவையாக்கிக் கொண்டீரா? நாம் உம்மையும் உமது சமுதாயத்தினரையும் (மிகவும்) தெளிவான வழிகேட்டில் இருப்பதைக் காண்கிறேன் என்று கூறிய நேரத்தை (நினைத்துப் பாருங்கள்.)
- இவ்வாறு, நாம் இப்ராஹீமுக்கு அவர் (அவர் முழுமையான ஞானம் பெற்று நேர்வழியில் நடக்கவும்), உறுதியான நம்பிக்கையாளர்களைச் சார்ந்தவராய் இருக்க(வும்) வானம் பூமி ஆகியவற்றின் ஆட்சியினை காட்டினோம்.
- (ஒரு நாள்) இரவின் இருள் அவரைச் சூழ்ந்த போது, அவர் ஒரு விண்மீனைக் கண்டார். (அப்போது) அவர் இது என் இறைவன் (ஆக முடியுமா) என்றார். பின்னர் அது மறைந்து விடவே, அவர் மறையக் கூடியவற்றை இறைவனாக்க நான் விரும்பவில்லை என்றார்.
- (பின்னர்) அவர் ஒளி வீசித் தோன்றும் சந்திரனைக் கண்ட போது, அவர் இது(வா) என் இறைவன் என்றார். பிறகு அதுவும் மறைந்து விடவே அவர், என் இறைவன் எனக்கு வழி காட்டவில்லை எனில், நிச்சயமாக நான் வழி தவறிய மக்களைச் சார்ந்திருப்பேன் என்றார்.
- அடுத்து அவர் ஒளி வீசித் தோன்றும் சூரியனைக் கண்ட போது, இது மிகவும் பெரியது இது இறைவன் ஆகுமா? என்றார். பின்னர் அது(வும்) மறைந்து விடவே, அவர் என் மக்களே நீங்கள் இறைவனுக்கு, இணை வைக்கின்ற (இ) வைகளிலிருந்து நான் முற்றிலும் விலகியுள்ளேன்11 என்று கூறினார்.
- நிச்சயமாக நான் வானங்களையும், பூமியையும் படைத்த அவன் பக்கம் குனிந்தவனாய் என் கவனத்தைத் திருப்பி விட்டேன். நான் இணைவைப்பவர்களைச் சேர்ந்தவனல்லன்.
- அவருடைய சமுதாயத்தினர், அவருடன் வாதம் செய்தனர். (அப்போது) அவர், அல்லாஹ்வே எனக்கு நேரான வழியை காட்டியிருக்கும்போது, நீங்கள் அவனைக் குறித்து என்னுடன் வாதிக்கின்றீர்களா? என் இறைவன் ஒன்றை நாடினால், அதற்கன்றி நீங்கள் இணையாக்கும் எதற்கும் நான் அஞ்சுவதில்லை. என் இறைவன் ஒவ்வொரு பொருளையும் தன் ஞானத்தால் சூழ்ந்துள்ளான். பின்னர் ஏன் நீங்கள் நல்லறிவு பெறுவதில்லை?
- அவன் உங்களுக்கு எந்த அத்தாட்சியும் வழங்காதிருந்தும் அல்லாஹ்வுக்கு நீங்கள் இணை வைப்பதனை, நீங்களே அஞ்சாதிருக்கும் நிலையில், நீங்கள் இணை வைக்கும் பொருளைப் பற்றி நான் ஏன் அஞ்ச வேண்டும்? ஆகவே உண்மையிலேயே நீங்கள் அறிந்தவராயிருந்தால், நம் இரு பிரிவினருள் பாதுகாப்பிற்குரியவர் எவர் (என்று கூறுவீராக).
- நம்பிக்கை கொண்டு, தங்கள் நம்பிக்கையை அநீதியுடன் கலக்காதவர்களுக்கே அமைதி (விதிக்கப்பட்டு) உள்ளது. அவர்களே நேர்வழி பெற்றவர்களுமாவர். ரு9
- இது எங்கள் வாதம். தம்மக்களுக்கு எதிராக12 எடுத்துக் காட்டுவதற்கு இதை நாம் இப்ராஹீமுக்கு வழங்கினோம். நாம் விரும்புகிறவருக்கும் பதவிகளை உயர்த்துகின்றோம். நிச்சயமாக உம்முடைய இறைவன் நுட்பமான ஞானமுள்ளவனும் நன்கு அறிபவனுமாவான்.
- நாம் அவருக்கு (இப்ராஹீமுக்கு) இஸ்ஹாக்கையும், யாகூபையும் வழங்கினோம். (இதற்கு) முன்னர் நாம் நூஹ்வுக்கும் நேர்வழியினை வழங்கியுள்ளோம். மேலும் அவருடைய வழித்தோன்றல்களுள் தாவூது, சுலைமான், அய்யூப், யூஸுஃப், மூஸா, ஹாரூன் ஆகியவர்களுக்கும் (நேர்வழியினை வழங்கினோம்). இவ்வாறே நான் நன்மை செய்கிறவர்களுக்கு நற்பலன் வழங்குகிறோம்.
- மேலும் ஸகரிய்யா, யஹ்யா, ஈஸா, இல்யாஸ் ஆகியோருக்கும் (நேர்வழியினை வழங்கினோம். இவர்கள்) எல்லோருமே நல்லவர்களைச் சார்ந்தவர்களாக விளங்கினர்.
- மேலும் இஸ்மாயில், அல்யஸஃ, யூனுஸ், லூத்து ஆகியவர்களுக்கும் (நேர்வழியினை வழங்கினோம்). இவர்கள் எல்லோருக்கும் (அந்தந்த கால) உலக மக்கள் மீது மேன்மையை வழங்கினோம்.
- அவர்களின் மூதாதையர்கள், அவர்களின் வழிதோன்றல்கள், அவர்களின் சகோதரர்கள், ஆகியவர்களுக்கும் (நாம் நேர்வழியினை வழங்கினோம்). நாம் அவர்களைத் தேர்ந்தெடுத்து நேரான பாதையில் நடத்திச் சென்றோம்.
- இதுவே அல்லாஹ்வின் நேர்வழியாகும். இதன் மூலம் அவன் தன் அடியார்களுள், தான் விரும்புகிறவருக்கு வழிகாட்டுகின்றான். அவர்கள் இணைவைத்திருப்பார்களாயின், அவர்கள் ஆற்றிய செயல்களெல்லாம் அவர்களிடமிருந்து வீணாகியிருக்கும்.
- இத்தகையவர்களுக்கே வேதத்தையும், கட்டளையையும் நபித்துவத்தையும் நாம் வழங்கினோம். எனவே இவர்கள் அதனை (நபித்துவத்தை) நிராகரித்து விட்டால், அதனை நிராகரிக்காத மற்றொரு சமுதாயத்தினரிடம் (அதாவது முஸ்லிம்களிடம்) நாம் ஒப்படைத்து விட்டோம்.
- (மேற்கூறப்பெற்ற) இவர்களுக்கே அல்லாஹ் நேர்வழியினை வழங்கினான். ஆகவே நீர் இவர்களின் நேர்வழியினைப் பின்பற்றுவீராக. நான் உங்களிடம் இதற்காக எந்த ஊதியத்தையும் கோருகிறதில்லை. இது எல்லா அகிலத்திற்கும் ஓர் அறிவுரையேயன்றி வேறில்லை எனக் கூறுவீராக! ரு10
- அல்லாஹ் எந்த அடியாருக்கும் எதனையும் இறக்கவில்லை என அவர்கள் கூறிய போது, அவர்கள் அல்லாஹ்வை (அதாவது அவனுடைய கண்ணியத்தை) மதிக்க வேண்டியவாறு மதிக்கவில்லை. நீர் (அவர்களிடம்) கூறுவீராக! மக்களுக்கு ஒளியினையும், நேர்வழியினையும், வழங்கக் கூடியதாக மூஸா கொண்டு வந்த வேதத்தை இறக்கியவன் எவன்? நீங்கள் அதனை வெற்றுத் தாள்களாக்கிக் கொண்டிருக்கிறீர்கள். நீங்கள் அதனை வெளிப்படுத்தவும், (அதிலிருந்து) அதிகமானவற்றை மறைத்து விடவும் செய்கிறீர்கள். ஆனால் நீங்களும் உங்கள் மூதாதையர்களும் அறியாமலிருந்தவை உங்களுக்குக் கற்றுக் கொடுக்கப்பட்டன. நீர் (அவர்களிடம்) அல்லாஹ் (தான் அதனை இறக்கினான்) எனக் கூறிவிட்டுப் பின்னர் அவர்களை அவர்களின் பொய்யில் விளையாடிக் கொண்டிருக்குமாறு விட்டுவிடுவீராக.
- நாம் இறக்கிய இந்த மறை, அருள் நிறைந்ததாகும். இது தனக்கு முன்னுள்ளதை முழுமைப் படுத்தக்கூடியது. நகரங்களின் தாயை (அதாவது மக்காவாழ் மக்களை)யும், அதன் சுற்றுப்புறங்களில் உள்ளவர்களையும் நீர் எச்சரிக்கவும் நாம் இதனை இறக்கியுள்ளோம். மறுமையை நம்புவோர் இதையும் நம்புவர். மேலும் அவர்கள் தம் தொழுகைகளை எப்போதும் பாதுகாத்துக் கொண்டிருப்பர்.
- வேண்டுமென்றே அல்லாஹ்வின் மீது பொய்யை புனைந்து கூறுபவனை விடவும், தனக்கு வஹி அருளப்படாதிருக்க எனக்கு வஹி அருளப்பட்டது என்று கூறுபவனை விடவும் இன்னும் அல்லாஹ் இறக்கியது போன்றே நிச்சயமாக நானும் (வேத வசனத்தை) இறக்குவேன் என்று கூறுபவனை விடவும் மிகவும் கொடியவன் எவன்? அநீதி இழைப்பவர்கள் மரண வேதனைகளுக்கு ஆளாக்கப்பட்டிருக்கும் சமயத்தில் நீர் அவர்களை கண்டிருந்தால், வானவர் (அவர்களிடம்) தங்களின் கைகளை நீட்டி உங்கள் உயிர்களை வெளியே எடுங்கள்; நீங்கள் அல்லாஹ்வை குறித்து உண்மைக்கு மாற்றமானதைக் கூறிக் கொண்டிருந்தாலும் நீங்கள் அவனுடைய வசனங்க சம்பந்தமாக பெருமையடித்து கொண்டிருந்ததாலும் இன்று உங்களுக்கு இழிவிற்குரிய தண்டனை கொடுக்கப்படும், என்று கூறும் (படிப்பினைக்குரிய காட்சியினை நீர் காண்பீர்.)
- (அப்போது நாம் கூறுவோம்) முதன் முறையாக நாம் உங்களைப் படைத்தது போன்று (இப்போது) நீங்கள் எம்மிடம் தனித்தனியாக வந்துள்ளீர்கள். நாம் உங்களுக்கு வழங்கிய பேரருளை நீங்கள் உங்கள் முதுகுக்குப் பின்னால் விட்டு விட்டீர்கள். உங்கள் காரியங்களில் இவர்கள் (இறைவனுக்கு) இணையானவர்கள் என்று நீங்கள் வாதிட்டு வந்த உங்கள் பரிந்துரையாளர்களை நாம் உங்களுடன் காணவில்லையே, (ஏன்) உங்களுக்கிடையிலுள்ள தொடர்புகள் முற்றிலும் அறுந்து போய்விட்டன. நீங்கள் வாதாடிக் கொண்டிருந்தது உங்களுக்கு வீணாகிவிட்டது. ரு11
- நிச்சயமாக அல்லாஹ் வித்துக்களையும், கொட்டைகளையும் வெடிக்கச் செய்பவனாவான். அவன் உயிரற்றதிலிருந்து, உயிருள்ளதை வெளிப்படுத்துகின்றான். மேலும் உயிருள்ளதிலிருந்து உயிரற்றதை வெளிப்படுத்துபவனுமாவான். இத்தகையவனே உங்கள் அல்லாஹ். எனவே நீங்கள் எங்கு விலகிச் செல்ல முடியும்?
- அவன் காலைப் பொழுதை விடியச் செய்பவன். அவன் இரவை ஓய்விற்காகவும், சூரியனையும், சந்திரனையும் (காலத்தை) கணக்கிடுவதற்காகவும் ஆக்கியுள்ளான். இது மிகைத்தவனும், நன்கு அறிபவனுமான அவனுடைய நியதியாகும்.
- அவனே உங்களுக்காக விண்மீன்களையும், நீங்கள் அவற்றின் மூலம் நிலம், நீர் ஆகியவற்றின் காரிருளில் வழியினைத் தெரிந்து கொள்ள வேண்டுமென்பதற்காகப் படைத்துள்ளான். அறிவுள்ளவர்களுக்கு நாம் அடையாளங்களைத் தெளிவாக விளக்கிவிட்டோம்.
- அவனே உங்களை ஒரே மூலத்திலிருந்து படைத்துள்ளான். இதன் பின்னர் அவன் (உங்களுக்கு) தற்காலிகமாகத் தங்குவதற்கென்று ஓரிடத்தையும்13 நீண்ட காலம் வரைத் தங்குவதற்கென்று ஓரிடத்தையும் நியமித்துள்ளான். புரிந்து கொள்பவர்களுக்கு நாம் அடையாளங்களைத் தெளிவாக விளக்கியுள்ளோம்.
- அவனே மேகத்திலிருந்து தண்ணீரை இறக்கினான். பின்னர் நாம் அதனால் ஒவ்வொரு பொருளின் வளர்ச்சியினையும் ஏற்படுத்தினோம். அதனைக் கொண்டு வயலையும் ஆக்கியுள்ளோம். இதிலிருந்து கொத்துக்கொத்தான தானியங்களையும் வெளியாக்குகின்றோம். பேரீச்ச மரத்தில் அதன் பாளைகளிலிருந்து வளைந்து தொங்கும் பழங்கள் உள்ளன. (இவற்றையும் நாமே வெளிப்படுத்துகின்றோம்) மேலும் திராட்சைகள், ஸைத்தூன் (ஒலிவை), மாதுளை ஆகியவற்றுள் சில ஒன்றையொன்று ஒத்தவையாகும் (மற்றும் சில) வேறுபட்டவையாயுமிருக்கின்ற தோட்டங்களையும் (நாம் வெளியாக்குகின்றோம்) அவற்றுள் ஒவ்வொரு வகையைச் சார்ந்த மரமும் கனியைத் தரும்போது, அதன் கனியையும், அது கனி(ந்து வரு)வதையும் பாருங்கள். நிச்சயமாக இதில் நம்பிக்கை கொண்டவர்களுக்கு (எத்தனையோ) அடையாளங்கள் உள்ளன.
- ஜின்களை அவனே படைத்திருந்தும், அவர்களை அல்லாஹ்வுக்கு இணையாக்குகின்றனர். அவர்கள் எந்த அறிவும் இல்லாமல் அவனுக்கு ஆண் மக்களையும், பெண் மக்களையும் பொய்யாக ஏற்படுத்தியுள்ளனர். அவன் தூய்மையானவனும் அவர்கள் வருணிப்பவற்றிலிருந்தும் மேலானவனுமாவான். ரு12
- (அவன்) வனங்களையும் பூமியையும் முன் மாதிரியின்றிப் படைப்பவனாவான் அவனுக்கு மனைவியே இல்லாதிருக்கும்போது, அவனுக்கு மகன் எவ்வாறிருக்க முடியும்? ஒவ்வொரு பொருளையும் அவன் (தான்) படைத்துள்ளான். அவன் எல்லாவற்றையும் நன்கு அறிபவனாவான்.
- இத்தகையவனே உங்கள் இறைவனாகிய அல்லாஹ். அவனைத்தவிர வணக்கத்திற்குரியவன் எவனுமில்லை. அவன் ஒவ்வொன்றையும் படைப்பவனாவான். ஆகவே நீங்கள் அவனையே வணங்குங்கள். மேலும் அவன் ஒவ்வொரு பொருளுக்கும் காப்பாளனாவான்.
- பார்வைகளால் அவனை அடைய முடியாது. ஆனால் அவன் பார்வைகளை அடைகிறான்14. அவன் நுட்பமானவனும், யாவற்றையும் அறிந்தவனுமாவான்.
- உங்கள் இறைவனிடமிருந்து உங்களிடம் தெளிவான சான்றுகள் வந்துள்ளன. எனவே, எவர் அவற்றை (கவனித்துப்) பார்க்கிறாரோ அது அவருக்கு நன்று. எவர் கண்ணை மூடிக்கொள்கிறாரோ அது அவருக்கே கேடு15. நான் உங்களைக் காப்பாற்றுபவனல்லன்.
- நீர் (கற்றதை) படித்துக் காட்டினீர் என்று அவர்கள் கூறுவதற்காகவும், அறிவுடைய மக்களுக்கு, இதை விளக்கி விடவும் உண்மையை நிலை நாட்டும் பொருட்டு இவ்வாறு நம் வசனங்களை பல்வேறு முறைகளில் விளக்குகின்றோம்.
- உம்முடைய இறைவனிடமிருந்து உமக்கு இறக்கப்படுவதை நீர் பின்பற்றி நடப்பீராக; அவனன்றி (வேறு) எதுவும் வணங்கத்தக்கதல்ல. மேலும் இணை வைப்பவர்களை விட்டு நீர் விலகிக் கொள்வீராக.
- அல்லாஹ் நாடியிருந்தால் அவர்கள் இணை வைத்திருக்க மாட்டார்கள். நாம் உம்மை அவர்களைக் காப்பாற்றுபவராக நியமிக்கவில்லை. நீர் அவர்களுக்குப் பாதுகாவலருமில்லை.
- அல்லாஹ்வையன்றி அவர்கள் அழைப்பவற்றை நீங்கள் ஏசாதீர்கள். இல்லையாயின், அவர்கள் அறியாமையினால் அல்லாஹ்வை ஏசுவார்கள். இவ்வாறு நாம் ஒவ்வொரு சமுதாயத்தினருக்கும் அவர்களின் செயலை அழகு வாய்ந்ததாக்கிக் காட்டியுள்ளோம். பின்னர் அவர்கள் தங்கள் இறைவனிடமே திரும்பிச் செல்ல வேண்டியவராய் உள்ளனர். அப்போது அவர்கள் செய்ததைக் குறித்து அவர்களுக்கு அறிவிப்பான்.
- தங்களிடம் ஏதேனும் அடையாளம் வந்தால் நிச்சயமாக அதனை ஏற்றிருப்போம் என அவர்கள் அல்லாஹ்வின் மீது ஆணையிட்டு, உறுதியான சத்தியங்கள் செய்துள்ளனர். நீர் (அவர்களை நோக்கி) கூறுவீராக: அடையாளங்கள் அல்லாஹ்விடம் (ஏராளமாக) இருக்கின்றன. அந்த அடையாளங்கள் வந்தால் (கூட) அவர்கள் நம்பிக்கை கொள்ள மாட்டார்கள் என்று உங்களுக்குத் தெரிவிக்கும் ஒன்றும்16 அல்லாஹ்விடமே உள்ளன.
- இதன் (இறையறிவிப்பின்) மீது அவர்கள் முன்னர் நம்பிக்கை கொள்ளாததால், நாம் அவர்களின் கண்களையும் திருப்பி விட்டோம். மேலும் வரம்பு மீறும் செயல்களில் தடுமாறித் திரிய விட்டிருக்கின்றோம். ரு13
- நாம் அவர்களிடம் வானவர்களை இறக்கினாலும், மரணமடைந்தவர்கள் அவர்களுடன் உரையாடினாலும், நாம் எல்லாப் பொருளையும் அவர்கள் கண்முன் ஒன்று சேர்த்தாலும் அல்லாஹ்வின் நாட்டமின்றி அவர்கள் நம்பிக்கை கொள்ள மாட்டார்கள். ஆனால் அவர்களில் பெரும்பாலார் அறிவீனர்களாவர்.
- மேலும் இவ்வாறே நாம் மனிதர்களிடமிருந்தும் ஜின்களிலிருந்தும்16அ தீயவர்களை ஒவ்வொரு நபிக்கும் பகைவனாக ஆக்கியுள்ளோம். அவர்கள் ஒருவர் மற்றவரை ஏமாற்றுவதற்காக (இவர்களின் உள்ளங்களில்) பகட்டு மொழிகளால் தீய17 எண்ணத்தை உருவாக்குகின்றனர். உம்முடைய இறைவன் விரும்பியிருப்பின், அவர்கள் அவ்வாறு செய்திருக்க மாட்டார்கள். எனவே நீர் அவர்களையும் அவர்களின் கட்டுக்கதையையும் விட்டு விடுக.
- மறுமையை நம்பாதவர்களின் உள்ளங்கள் (அத்தீயவற்றின் பக்கம்) சாய்ந்து இருக்கவும் (பொய்யான) அதனை அவர்கள் விரும்பவும் தங்கள் செயல்களின் விளைவை அவர்கள் கண்டு கொள்ளவுமே18 (இறைவன் அவ்வாறு செய்கின்றான்)
- (நீர் கூறுவீராக) அவன் உங்களுக்குத் தெளிவான விளக்கமுடைய வேதத்தை இறக்கியிருக்கும் போது அல்லாஹ்வையன்றி வேறொரு தீர்ப்பு வழங்குபவரை நான் தேடிக் கொள்ள வேண்டுமா? மேலும் நாம் எவர்களுக்கு வேதத்தை கொடுத்துள்ளோமோ அவர்கள் இது உம்முடைய இறைவனிடமிருந்து உண்மையினைக் கொண்டு இறக்கப்பட்டது என்பதை அறிவர். ஆகவே நீர் சந்தேகங் கொள்வோரைச் சார்ந்து விடாதீர்.
- உம்முடைய இறைவனின் வாக்கு மெய்யாகவும், நீதமாகவும் நிறைவேறிவிட்டது. (ஏனென்றால்) அவனது வார்த்தைகளை எவராலும் மாற்ற இயலாது. மேலும் அவன் நன்கு கேட்பவனும் நன்கு அறிபவனுமாவான்.
- இவ்வுலகில் வாழ்பவர்களுள் பெரும்பாலானவர்களை நீர் பின்பற்றினால் அவர்கள் அல்லாஹ்வின் வழியிலிருந்து உம்மை (வழி) தவறச் செய்துவிடுவர். அவர்கள் பின்பற்றுவது யூகங்களை அன்றி வேறில்லை மேலும் அவர்கள் கற்பனையிலேயே மூழ்கி உள்ளனர்.
- நிச்சயமாக உம்முடைய இறைவன் மட்டுமே அவனுடைய வழியிலிருந்து தவறுகின்றவர்களை நன்கு அறிகின்றான். அவனே நேர்வழியில் செல்கின்றவர்களையும் நன்கு அறிகின்றான்.
- எனவே நீங்கள் அவனுடைய அடையாளங்களில் நம்பிக்கை கொண்டவர்களாயின் அல்லாஹ்வின் பெயர் கூறப்பட்டதை உண்ணுங்கள்.
- அல்லாஹ்வின் பெயர் கூறப்பட்டதிலிருந்து நீங்கள் உண்ணாமலிருக்க உங்களுக்கு என்னவாகிவிட்டது? நீங்கள் கட்டாயத்திற்காளாகினாலன்றி (உண்ணக் கூடாது என) உங்களுக்கு விலக்கி வைக்கப்பட்டவை எவை என அவன் ஏற்கனவே உங்களுக்கு மிகத் தெளிவாக விளக்கியிருந்தான். மேலும் நிச்சயமாகப் பெரும்பாலார் அறிவின்றி தங்களின் (மன) விருப்பங்களால் (மற்றவர்களைக்) கெடுக்கின்றனர். நிச்சயமாக உம்முடைய இறைவன் வரம்பு மீறுபவர்களை நன்கு அறிகின்றான்.
- வெளிப்படையானதும் மறைவானதுமான பாவத்திலிருந்து, தவிர்ந்து கொள்ளுங்கள். பாவத்தைச் சம்பாதிக்கிறவர்களுக்கு நிச்சயமாக அவர்கள் சம்பாதித்ததற்குரிய கூலி கொடுக்கப்படும்.
- அல்லாஹ்வின் பெயர் கூறப்படாததிலிருந்து நீங்கள் உண்ணாதீர்கள். நிச்சயமாக இது கீழ்படியாமையாகும். நிச்சயமாக ஷெய்த்தான்கள், உங்களுடன் சச்சரவு ஏற்படுத்த வேண்டுமென்ற எண்ணத்தைத் தமது நண்பர்களின் உள்ளங்களில் போடுகிறான். நீங்கள் அவர்களுக்கு கட்டுப்பட்டீர்களாயின், நிச்சயமாக நீங்கள் இணைவைப்பவர்களாகி விடுவீர்கள். ரு14
- மரணித்த ஒருவரை நாம் உயிர்பெறச் செய்து அவருக்கு ஒளி வழங்கி, அந்த ஒளியினால் மக்களிடத்தில் நடந்து செல்கிற அவர் காரிருள்களில் சிக்கி அதிலிருந்து வெளியேற இயலாத ஒருவரைப் போன்று இருக்க முடியுமா? இவ்வாறே நிராகரிப்போரின் செயல்களை அவர்களுக்கு அழக்குப்படுத்திக் காட்டுகிறோம்.
- இவ்வாறே ஒவ்வொரு ஊரிலும் உள்ள குற்றவாளிகளையே நாம் தலைவர்களாக ஆக்கியுள்ளோம்19. இதனால் அவர்கள் அவர்களிடத்தில் (நபிமார்களுக்கு எதிராக) சதித் திட்டங்கள் தீட்டுகின்றனர். ஆனால் உண்மையிலேயே அவர்கள் தங்களுக்கு எதிராகவே திட்டங்கள் தீட்டுகின்றனர். (இந்த உண்மையை அவர்கள் உணர்வதில்லை)
- மேலும் அவர்களிடம் ஒரு அடையாளம் வரும்போது, அல்லாஹ்வின் தூதர்களுக்கு வழங்கப்பட்டது போன்று, எங்களுக்கும் வழங்கப்படாத வரை நாங்கள் நம்பிக்கை கொள்ள மாட்டோம் என்று அவர்கள் கூறுகின்றனர். தன் தூதை எங்கு வைக்க வேண்டும் என்பதை அல்லாஹ் நன்கு அறிகின்றான்20. அக்குற்றவாளிகள் (நபிக்கு எதிராக) சதித்திட்டங்கள் தீட்டியதனால் அல்லாஹ்வின் முன்னிலையில் இழிவும் கடுந்தண்டனையும் நிச்சயமாக அவர்களைப் பற்றிக் கொள்ளும்.
- அல்லாஹ் நேர்வழி காட்ட நாடுகின்றவருடைய உள்ளத்தை இஸ்லாத்தி(னை ஏற்பத)ற்காக திறக்கின்றான். மேலும் வழிதவறச் செய்ய நாடுகின்றவருடைய உள்ளத்தை வானத்தில் ஏறிச் செல்கின்றதைப் போன்று மிகவும் குறுகச் செய்கின்றான். இவ்வாறே அல்லாஹ் நம்பிக்கை கொள்ளாதவர் மீது தண்டனையை இறக்குகின்றான்.
- இது உம்முடைய இறைவனின் நேர்வழியாகும். அறிவுரையினைப் பெற்றுக் கொள்பவர்களுக்கு அடையாளங்களை நாம் நிச்சயமாக நாம் மிகத் தெளிவாக விளக்கியுள்ளோம்.
- அவர்களுக்கு அவர்களின் இறைவனிடம் அமைதியின் இடம் உள்ளது. மேலும் அவர்கள் செய்த செயலின் காரணமாக அவன் அவர்களுக்கு நண்பனாக இருக்கின்றான்.
- அவன் அவர்கள் எல்லாரையும் ஒன்று சேர்க்கும் நாளை (நினைத்துப் பாருங்கள்). ஜீன் கூட்டத்தினரே! நீங்கள் மனிதர்களுள் பெரும்பாலானவர்களை (உங்களுடன் சேர்ந்திருக்குமாறு) எடுத்துக் கொண்டீர்கள். மனிதர்களிலுள்ள அவர்களின் நண்பர்கள், எங்கள் இறைவா! நாங்கள் ஒருவர் மற்றவரிடமிருந்து பயன் பெற்றோம். ஆனால் நீ எங்களுக்கு குறித்திருந்த எங்கள் கால எல்லையை நாங்கள் அடைந்து விட்டோம் என்று கூறுவார்கள். இதற்கு அவன், நெருப்பு உங்கள் தங்குமிடமாகும். அல்லாஹ் நாடினாலன்றி நீங்கள் அதில் (நீண்ட நெடுங்காலம்) தங்கியிருப்பீர்கள் என்று கூறுவான். நிச்சயமாக உம்முடைய இறைவன் நுட்ப ஞானமுள்ளவனும் நன்கு அறிபவனுமாவான்.
- இவ்வாறு நாம் அநீதி இழைப்பவர்களில் சிலரைச் சிலருக்கு அவர்கள் சம்பாதித்ததின் காரணமாக நண்பர்களாக்கி விடுகின்றோம். ரு15
- ஜின்னும் மனிதர்களுமாகிய கூட்டத்தினரே! உங்களிடமிருந்தே உங்களிடம் தொடர்கள் வந்து, உங்களுக்கு எனது வசனங்களைப் படித்துக் காட்டி, உங்களுக்குரிய இந்த நாளைச் சந்திப்பது குறித்து உங்களுக்கு அச்சமூட்டி எச்சரிக்கை செய்யவில்லையா> இதற்கு அவர்கள், நாங்களே எங்களுக்கு எதிராக சாட்சி பகர்கின்றோம் என்பார்கள். மேளும் உலக வாழ்க்கை அவர்களை ஏமாற்றிவிட்டது. எனவே அவர்கள் நிராகரிப்பவர்களாயிருந்தனர் என அவர்கள் தங்களுக்கு எதிராக(த் தாங்களே) சாட்சி பகர்வர்.
- ஏனெனில் உம் இறைவன் நகரங்களை (தூதரை அனுப்பி) அங்கு வாழ்வோர் (எச்சரிக்கப்படாமல்) கவனமற்றவராய் இருக்கும் நிலையில் அநியாயமாக அழிக்க மாட்டான்.
- ஒவ்வொருவருக்கும் (அல்லது சமுதாயத்திற்கும்) அவர்களின் செயல்களுக்கேற்ற பதவிகள் உள்ளன. உம்முடைய இறைவன் அவர்கள் செய்வதை கவனிக்காமல் இல்லை.
- மேலும் உம்முடைய இறைவன் தன்னிறைவு பெற்றவன். அருடையவன்.அவன் நாடினால் உங்களை அழித்து விட்டு உங்களை தோற்றுவித்தது போன்று மற்றொரு சமுதாயத்தின் சந்ததியினரிலிருந்து அவன் நாடுபவரை உங்களுக்குப் பின்னர் உங்களுடைய இடத்தில் அமர்த்துவான்.
- உங்களிடம் வாக்களிக்கப்பட்டது நிச்சயமாக நிகழ்ந்தே தீரும். அதனைத் தடுக்க உங்களால் இயலாது.
- நீர் கூறுவீராக: என்னுடைய சமுதாயத்தினரே! நீங்கள் உங்கள் முறைப்படி செயலாற்றுங்கள். நானும் (எனது முறைப்படிச்) செயலாற்றுகிறேன். பின்னர் நீங்கள் (உலகு என்ற) இவ்வீட்டின் முடிவு எவருக்கு சாதகமா உள்ளது என்பதனை விரைவிலேயே தெரிந்து கொள்வீர்கள். நிச்சயமாக அநீதி இழைப்பவர்கள் (என்றுமே) வெற்றிப்பெறுவதில்லை.
- அல்லாஹ் உற்பத்தி செய்த விளைச்சலிலிருந்தோ, கால்நடைகளிலிருந்தோ அவர்கள் ஒரு பகுதியினை அவனுக்கென்று பங்கிட்டு, பின்னர் அவர்கள் கற்பனை செய்து, இந்த அளவு அல்லாஹ்வுக்குரியது: இந்த அளவு நம்முடைய இணை (வைக்கும் கடவுள்)களுக்குரியது என்று கூறுகின்றனர். ஆனால் அவர்கள் தங்களுடைய இணைகளுக்குரியதோ அல்லாஹ்விடம் போய்ச் சேருவதில்லை. அல்லாஹ்வுக்குரியதோ தங்களுடைய இணைகளிடம் போய்ச் சேர்ந்து விடுகின்றது (என்றும் வாதிக்கின்றனர்) அவர்கள் எடுத்துக் கொண்ட முடிவு மிகவும் கெட்டதாகும்.
- இவ்வாறே இணைவைப்போருள் பெரும்பாலாருக்கு, அவர்களை அழித்து விடுவதற்கும், அவர்களின் மார்க்கத்தில், அவர்களுக்குச் சந்தேகம் ஏற்படுத்துவதற்கும், தங்களின் பிள்ளைகளை கொல்வதை அவர்களின் இணை (வைக்கும் கடவுள்)கள் அழகு படுத்தி காட்டின. அல்லாஹ் நாடியிருப்பின் (இணை வைக்கும்) அவர்கள் அவ்வாறு செய்திருக்க மாட்டார்கள். எனவே நீர் அவர்களையும் அவர்களின் பொய்யினையும் விட்டுவிடுவீராக.
- அவர்கள் குறிப்பிட்ட கால்நடைகளும், விளைச்சலும் (சாப்பிடக் கூடாதென்று) விலக்கப்பட்டவை எனவும், நாம் விரும்புகிறவர் மட்டுமே அவற்றைச் சாப்பிடலாம் எனவும் கூறி வாதிடுகின்றனர். குறிப்பிட்ட கால்நடைகளின் முதுகுகள் (சவாரி செய்வதற்கு) விலக்கப்பட்டுள்ளன. குறிப்பிட்ட கால்நடைகள் மீது அல்லாஹ்வின் பெயரைத் தாங்கள் கூறுவதில்லை (என்றும்) அவன் பேரில் இட்டுக் கட்டிக் கூறுகின்றனர். அவர்கள் இட்டுக் கட்டுகின்ற பொய்யின் காரணமாக, அவன் அவர்களுக்கு விரைவில் தண்டனை கொடுப்பான்.
- மேலும் அந்தக் கால் நடைகளின் வயிறுகளிலிருப்பது ஆண்களுக்கு மட்டுமே உரியது; நம்முடைய மனைவியருக்கு அது விலக்கப்பட்டது; ஆயினும் அது செத்ததாக இருந்தால், அவர்கள் (யாவரும்) பங்காளிகளாவர் என்றும் அவர்கள் கூறுகின்றனர். அவர்களின் இக்கூற்றிற்காக அவர்களுக்கு அவர் கட்டாயம் தண்டனை வழங்குவான். நிச்சயமாக அவன் நுட்ப ஞானம் உள்ளவனும் நன்கு அறிபவனுமாவான் (என்பதை நினைவில் கொள்ளுங்கள்).
- தங்கள் குழந்தைகளை மூடத்தனமாக அறிவின்றிக் கொன்றதன் காணமாக, அல்லாஹ் தங்களுக்கு வழங்கியதை, அல்லாஹ் மீது இட்டுக்கட்டி விலக்கிக் கொள்வதன் காரணமாகவும், உண்மையிலேயே அவர்கள் இழப்புக்குரியவராவர். அவர்கள் உண்மையிலேயே வழி தவறிவிட்டனர். மேலும் அவர்கள் நேர்வழி பெற்றவர்கள் அல்லர். ரு16
- அவன் பந்தலில் படர்ந்துள்ள தோட்டங்களையும், பந்தலின்றிக் காணப்படும் தோட்டங்களையும், பல்வேறு சுவையுடைய பேரீச்ச மரங்கள், தானிய வகைகள் ஆகியவற்றையும், ஒன்றையொன்று ஒத்ததும், ஒவ்வாததுமான ஒலிவ மரம், மாதுளை மரம் ஆகியவற்றையும் படைத்தான். அவை காய்க்கும் போது அவற்றின் பழங்களை உண்ணுங்கள். அறுவடை நாளில் அவனுடைய (இறைவனுடைய) பங்கைக் கொடுத்து விடுங்கள்.21 மேலும் வீண்விராயம் செய்யாதீர்கள். ஏனென்றால், வீண் விரயம் செய்பவர்களை அவன் நேசிப்பதில்லை.
- கால்நடைகளில் (சில) பாரம் சுமக்கவும், சில உணவுக்காகவும் (படைக்கப்பட்டு) உள்ளன. அல்லாஹ் உங்களுக்கு வழங்கியதிலிருந்து நீங்கள் உண்ணுங்கள். மேலும் ஷெய்த்தானின் அடிச்சுவடுகளை பின்பற்றாதீர்கள். நிச்சயமாக, அவன் உங்களுக்கு (மிக) வெளிப்படையான எதிரி ஆவான்.
- அவன் எட்டு இணைகளை அதாவது செம்மறியாடுகளுள் இரண்டையும், வெள்ளாடுகளுள் இரண்டையும் (படைத்துள்ளான்.) நீர் அவர்களிடம் கூறுவீராக: (அவற்றுள்) இரண்டு கிடாய்களையா, இரண்டு ஆடுகளையா அல்லது அவ்விரண்டு ஆடுகளின் கருப்பைகள் உள்ளே கொண்டிருப்பதையா அவன் விலக்கியுள்ளான்? நீங்கள் உண்மையாளர்களாயின் (இதனைப்பற்றி) அறிவின் அடிப்படையில் எனக்குத் தெரிவியுங்கள்.
- ஒட்டகங்களின் இரண்டையும் மாடுகளின் இரண்டையும் (அவன் படைத்துள்ளான்). நீர் அவர்களிடம் கூறுவீராக: அவன் (அவற்றுள்) ஆண்களுள் இரண்டையா பெண்களுள் இரண்டையா அல்லது இவ்விரண்டிலுமுள்ள பெண்களின் கருப்பைகள் தம்முள் கொண்டிருப்பதையா விலக்கியுள்ளான்? அல்லாஹ் உங்களுக்கு இதற்குரிய கட்டளையிட்ட போது நீங்கள் இருந்தீர்களா? அறிவின்றி மக்களை வழிதவறச் செய்வதற்காக, வேண்டுமென்றே அல்லாஹ்வின் மீது பொய்யை புனைந்து கூறுபவனை விட மிக்க அநீதி இழைப்பவன் எவன்? நிச்சயமாக அல்லாஹ் அநீதி இழைப்பவர்களுக்கு வழிகாட்டுவதில்லை. ரு17
- நீர் அவர்களிடம் கூறுவீராக: ஏதேனும் பொருளை சாப்பிட விரும்புவருக்கு செத்தது, ஒழுகும் இரத்தம், பன்றியின் இறைச்சி ஆகியவற்றைத் தவிர்த்து வேறெந்த பொருளும் விலக்கப்பட்டுள்ளதாக நான் எனக்கு கிடத்த இறையறிவிப்பில் காணவில்லை. ஏனெனில் , இது (எல்லாம்) தூய்மையற்றது. அல்லாஹ்வல்லாத வேறொன்றின் பெயர் கூறப்பட்டது பாவமாக இருப்பதனால், அதுவும் விலக்கப்பட்டதாகும். எனினும் (மார்க்க விதிக்குக்) கட்டுப்படாதவராகவோ வரம்பை மீறுபவராகவோ இல்லாத நிலையில் (அதனை உண்ணும் கட்டாயத்திற்கு உள்ளானவர், நிச்சயமாக உம்முடைய இறைவன் மிக்க மன்னிப்பவனும் மேன்மேலும் கருணை காட்டுபவனுமாக (கண்டு கொள்வார்.)
- நகத்துடைய22 எல்லா பிராணிகளையும், யூதர்களுக்கு நாம் விலக்கியுள்ளோம். எருது, செம்மறி, வெள்ளாடு ஆகியவற்றுள் அவற்றின் முதுகுகளிலுள்ளதும், குடல்களிலுள்ளதும், எலும்புடன் இணைந்துள்ளதும் ஆகிய கொழுப்பை தவிர்த்து, பிற கொழுப்புகளையும் நாம் விலக்கியிருந்தோம்23. இதனை நாம் அவர்களுக்கு அவர்களின் கீழ்படியாமைக்குத் தண்டனையாக வழங்கினோம். நிச்சயமாக நாம் உண்மை கூறுகின்றோம்.
- (இதன் பின்னரும்) அவர்கள் உம்மை பொய்யாக்கினால், நீர் (அவர்களிடம்) உங்கள் இறைவன் விரிவான அருளை கொண்டவன்; அவனுடைய தண்டனை குற்றவாளிகளை விட்டு அகற்றப்பட மாட்டாது என்று கூறுவீராக.
- அல்லாஹ் நாடியிருந்தால் நாங்களும் எங்கள் மூதாதையர்களும் (ஒருக்காலும்) இணை வைத்திருக்க மாட்டோம்; எப்பொருளையும் விலக்கியிருக்கவுமாட்டோம் என்று இணை வைத்தவர்கள் கூறுவர். இவ்வாறே இவர்களுக்கு முன்னுள்ளவர்களும் எம்முடைய தண்டனையை சுவைக்கும் வரை (தூதர்களை) பொய்ப்படுத்தினர். நீர் அவர்களிடம் ஏதாவது ஞானம் உங்களிடம் உள்ளதா? இருப்பின் எங்களுக்கு வெளிப்படுத்துங்கள். நீங்கள் வெறும் யூகத்தைத் தவிர வேறெதையும் பின்பற்றுவதில்லை. நீங்கள் சொல்வது பொய்யன்றி வேறில்லை எனக் கூறுவீராக.
- நீர் கூறுவீராக; மறுக்கயியலாத வாதம் அல்லாஹ்வுடையதே. அவன் விரும்பியிருப்பின், உங்கள் எல்லாரையும் நேர்வழி நடத்தியிருப்பான்.
- நீர் (அவர்களிடம்) கூறுவீராக; அல்லாஹ் இப்பொருளை (அதாவது இன்னென்ன பொருளை) விலக்கியுள்ளான் என்று சாட்சி கூறும் உங்கள் சாட்சிகளை அழையுங்கள். அவர்கள் அவ்வாறு சாட்சி கூறினால், அவர்களுடன் நீர் சாட்சி பகர வேண்டாம். மேலும் நம் வசனங்களைப் பொய்பாடுத்தியோர், மறுமையை நம்பாதோர் ஆகியோரின் விருப்பங்களை நீர் பின்பற்ற வேண்டாம். இவர்களே தம் இறைவனுக்கு இணையை ஏற்படுத்துகின்றனர். ரு18
- நீர் (அவர்களிடம்) கூறுவீராக: வாருங்கள்! உங்கள் இறைவன் உங்களுக்குத் தடுத்தவற்றை நான் உங்களுக்கு படித்துக் காட்டுகின்றேன். நீங்கள் எப்பொருளையும் அவனுக்கு இணையாக்காதீர்கள். மேலும் பெற்றோரிடத்தில் மிக்க நல்ல முறையில் நடந்து கொள்ளுங்கள். மேலும் வறுமைக்கு அஞ்சி உங்கள் குழந்தைகளைக் கொலை செய்யாதீர்கள். நாமே உங்களுக்கும் அவர்களுக்கும் உணவளிக்கின்றோம். தீமைகள் வெளிப்படையாயிருப்பினும், மறைமுகமாயிருப்பினும், அவற்றின் பால் நெருங்காதீர்கள். அல்லாஹ் தடுத்துள்ள உயிரை (சட்ட) அனுமதியின்றி கொலை செய்யாதீர்கள். நீங்கள் விளங்கிக் கொள்வதற்காக அல்லாஹ் உங்களுக்கு இது குறித்துக் கட்டளையிடுகின்றான்.
- மேலும் (அவன் இவ்வாறு கட்டளையிடுகின்றான்). நீங்கள் அநாதையின் உடமையை, அவர் தமது வாலிப பருவத்தை அடையும் வரை முறையின்றி நெருங்காதீர்கள். மேலும் அளவையும் நிறுவையையும் முழுமையாக கொடுப்பதில் நேர்மையாக் நடந்து கொள்ளுங்கள். நாம் தகுதிக்கு அப்பாற்பட சுமையை எவருக்கும் வழங்குவதில்லை. நீங்கள் பேசும்பொழுது, அது உறவினர் (குறித்து) ஆக இருப்பினும் நேர்மையைக் கடைபிடியுங்கள் மேலும் அல்லாஹ்விடம் செய்த உடன்படிக்கையை நிறை வேற்றுங்கள். நீங்கள் கவனத்தில் கொள்ளும் பொருட்டு அவன் உங்களுக்கு இதனை வலியுறுத்திக் கூறுகின்றான்.
- நிச்சயமாக இது எனது நேரான வழியாகும். எனவே நீங்க்ல் இதனைப் பின்பற்றுங்கள். (ஏனைய) வழிகளைப் பின்பற்றாதீர்கள். இல்லையென்றால் அவை உங்களை அவனுடைய வழியிலிருந்து திருப்பிவிடும். நீங்கள் உங்களை இறையச்சமுள்ளவர்களாக்குவதற்காக, அவன் உங்களுக்கு இதனை வலியுறுத்திக் கூறுகின்றான்.
- நன்மை செய்தவர் மீது நமது அருளை நிறைவு செய்யும் பொருட்டு நாம் மூஸாவுக்கு வேதத்தை வழங்கினோம். மேலும் அது தேவையான எல்லாவற்றையும் விளக்குகின்றதும், நேர்வழியும், கருணை மிக்கதுமாகும். அது அவர்கள் தங்கள் இறைவனைச் சந்திப்பதில் நம்பிக்கை கொள்ளும் பொருட்டே ஆகும். ரு19
- நாம் இறக்கிய இது ஓர் அருள் நிறைந்த வேதமாகும். எனவே நீங்கள் இதனைப் பின்பற்றுங்கள். உங்களுக்குக் கருணை காட்டப் பட இறையச்சத்தைக் கைக் கொள்ளுங்கள்.
- எங்களுக்குக் முன்னர் இரு கூட்டத்தினர்களுக்கே24 வேதம் இறக்கப்பட்டுள்ளது; அவர்கள் படித்து வந்ததில் நாங்கள் கவனமற்றவராய் இருந்தோம் என்று நீங்கள் கூறாதிருப்பதற்காகவும்;
- அல்லது எங்களுக்கு வேதம் இறக்கப்பட்டிருப்பின், நிச்சயமாக நாங்கள் அவர்களை விடச் சிறந்த நேர்வழியினைப் பெற்றிருப்போம் என்று நீங்கள் கூறாதிருப்பதற்காகவும் (நாம் இந்த குர்ஆனை இறக்கினோம்). ஆகவே உங்கள் இறைவனிடமிருந்து உங்களிடம் தெளிவான சான்றும், நேர்வழியும், கருணையும் வந்து விட்டன. எனவே நீங்கள் அல்லாஹ்வின் வசனங்களைப் பொய்யாக்கி, அவற்றி(ன் மீது நம்பிக்கை கொள்வதி)லிருந்து விலகிக் கொண்டவனை விட மிக்க அநீதி இழைப்பவன் எவன்? எம்முடைய வசனங்களி(ன் மீது நம்பிக்கை கொள்வதி)லிருந்து விலகிக் கொள்பவர்களுக்கு அவர்கள் விலகிக் கொண்டதன் காரணத்தால் கட்டாயமாக நாம் துன்பத்தைத் தரக் கூடிய ஆக்கினையைக் கூலியாகக் கொடுப்போம்.
- தங்களிடம் வானவர்கள் வர வேண்டுமென்றோ அல்லது உம்முடைய இறைவனே வரவேண்டுமென்றோ உம்முடைய இறைவனின் சில அடையாளங்கள் வர வேண்டுமென்றோ அவர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர். உம்முடைய இறைவனின் சில அடையாளங்கள் வெளியாகும் நாளில் அப்போது அதில் நம்பிக்கை கொள்வது எந்த ஆன்மாவுக்கும் பயனளிக்காது. (ஏனெனில்) அதற்கு முன்னர் நம்பிக்கை கொள்ளவோ அந் நம்பிக்கையினால் எவ்வித நன்மையும், பெறவோ இல்லை, நீர் கூறுவீராக: நீங்களும் எதிர்பார்த்திருங்கள்: நிச்சயமாக நாங்களும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றோம்.
- தங்கள் மார்க்கத்தை பிளந்து பல்வேறு பிரிவானர்களாகிவிட்டவர்களுடன் உமக்கு எத்தொடர்புமில்லை. நிச்சயமாக அவர்களைப் பற்றி முடிவு எடுப்பது அல்லாஹ்வின் பொறுப்பு. பின்னர் அவர்கள் செய்து கொண்டிருந்தவற்றைப் பற்றி அவனே அவர்களுக்கு அறிவித்து விடுவான்.
- நன்மையைச் செய்பவன் அதன் பத்து மடங்கு (நன்மையைப்) பெறுவான். ஆனால் தீமையைச் செய்பவன் அதன் அளவிற்கே தண்டனை பெறுவான். அவர்களுக்கு அநீதி இழைக்கப்பட மாட்டாது.
- நீர் (அவர்களிடம்) கூறுவீராக: நிச்சயமாக என் இறைவன் எனக்கு நேரான பாதையைக் காட்டியுள்ளான். (அது) நிலைநிற்கக் கூடிய மார்க்கமாகும். (மேலும் அது) உண்மையில் நிலைத்து நின்ற இப்ராஹீமின் மார்க்கமுமாகும். அவர் இணை வைப்பவர்களைச் சார்ந்தவராக இருந்ததில்லை.
- நீர் (அவர்களிடம்) கூறுவீராக: என் தொழுகையும், என் தியாகமும், என் வாழ்வும், என் மரணமும் எல்லா உலகங்களுக்கும் இறைவனாகிய அல்லாஹ்விற்கே உரியன.
- அவனுக்கு இணையே இல்லை. இவ்வாறே எனக்குக் கட்டளையிடப்பட்டுள்ளது. மேலும் கட்டுப்பட்டு நடப்பவர்களில் நானே முதல்வன்.
- நீர் கூறுவீராக: எல்லாவற்றிற்கும் இறைவனாகிய அல்லாஹ்வைத் தவிர இன்னொருவனை நான் இறைவனாகத் தேடிக் கொள்வதா? ஒவ்வொரு ஆன்மாவிற்கும் அது சம்பாதித்தது கிடைக்கும். சுமப்பவன் எவனும் இன்னொருவனின் சுமையைச் சுமக்க மாட்டான். பின்னர் நீங்கள் திரும்பிச் செல்லுமிடம் உங்கள் இறைவனே. பின்னர் நீங்கள் கருத்து வேறுபாடு கொண்டுள்ளவை பற்றி அவன் உங்களுக்கு அறிவிப்பான்.
- அவனே உங்களை உலகில் (முன்னோர்களுக்குப்) பிரதிநிதிகளாக ஆக்கியுள்ளான். அவன் உங்களுக்கு வழங்கியது குறித்துச் சோதிப்பதற்காக உங்களுள் சிலருக்கு சிலரை விட பதவிகளை உயர்த்தியுள்ளான். நிச்சயமாக உம்முடைய இறைவன் கணக்கெடுப்பதில் மிகவும் விரைவானவன். மேலும் நிச்சயமாக அவன் மிக்க மன்னிப்பவனும் மேன்மேலும் கருணை காட்டுபவனுமாவான். ரு20