13- அர் ரஅத்


அதிகாரம் : அர் ரஅத்
அருளப்பட்ட இடம் : மக்கா  | வசனங்கள்: 44
பிரிவுகள்: 6


  1. அளவற்ற அருளாளனும், மேன்மேலும் கருணைகாட்டுபவனுமாகிய அல்லாஹ்வின் பெயரால (ஓதுகின்றேன்).
  2. அலிஃப் லாம் மீம் ரா1. இவை (முழுமை பெற்ற) வேதத்தின் வசனங்களாகும். உம்முடைய இறைவனிடமிருந்து உமக்கு இறக்கப்பட்ட இது முற்றிலும் உண்மையானது. ஆனால், மக்களில் பெரும்பாலார் நம்பிக்கை கொள்வதில்லை.
  3. நீங்கள் காணும் படி அல்லாஹ் வானங்களைத் தூண்களின்றி உயர்த்தியவனாவான். பின்னர் அவன் அரியணையில் (உறுதியாக) நிலை கொண்டான். மேலும் அவன் சூரியனையும், சந்திரனையும் (உங்களின்) சேவைக்காக இயங்கச் செய்தான். (எனவே தான் விண்கோள்களுள்) ஒவ்வொன்றும் ஒரு குறிப்பிட்ட காலம் (அதன் வட்டத்தில்) இயங்கிக் கொண்டிருக்கிறது. அவன் (இயற்கைச்) சட்டத்தை அடக்கி ஆள்கிறான். நீங்கள் உங்கள் இறைவனைச் சந்திக்கவிருப்பதில் உறுதி கொள்வதற்காக, அவன் தன்னுடைய அடையாளங்களைத் தெளிவாக விளக்குகின்றான்.
  4. மேலும் அவனே பூமியைப் பரப்பி, அதில் மலைகளையும், ஆறுகளையும் அமைத்தான். மேலும் அதில் எல்லா (வகைப்) பழங்களையும், ஆண் பெண் என இரட்டையாக ஆக்கினான். அவன் இரவால் பகலை மூடச் செய்கிறான். சிந்திக்கும் மக்களுக்கு இதில் (பல) அடையாளங்கள் உள்ளன.
  5. மேலும் பூமியில் ஒன்றையொன்று அடுத்துப் பல (வகை) நிலப்பகுதிகளும், திராட்சைத் தோட்டங்களும், பயிர்(வகை) களும், ஒரே வேரிலிருந்து அநேகமாக வெளிப்படக் கூடியவையும், ஒரே வேரிலிருந்து வெளிப்படக் கூடாதவையுமான பேரீச்ச மரங்களும் உள்ளன. இவை ஒரே (வகைத்) தண்ணீரைக் கொண்டே நீர் பாய்ச்சப் படுகின்றன. (இவ்வாறிருந்தும்) பழத்தைப் பொறுத்தவரையில் (மரங்களாகிய) அவற்றுள் சிலவற்றிற்கு சிலவற்றை விடவும் நாம் சிறப்பினை வழங்கியுள்ளோம். இதில் சிந்திக்கும் மக்களுக்கு (பல) அடையாளங்கள் உள்ளன.
  6. (செவியேற்பவரே! உண்மையை மறுக்கும் இவர்களைக் கண்டு) உமக்கு வியப்பு ஏற்பட்டால் (அது பொருத்தமானது தான். ஏனெனில்) நாங்கள் மரணமடைந்து மண்ணாகி விட்டால், உண்மையிலேயே நாங்கள் (மீண்டும்) புதிய பிறவியில் வருவோமா? என்ற அவர்களின் கூற்று மிக்க வியப்பிற்குரியதே. தங்கள் இறைவனை மறுத்தவர்கள் இவர்களே. மேலும் தங்கள் கழுத்துகளில் விலங்குகள் உடையோரும் இவர்களே. மேலும் இவர்களே நெருப்பிற்குரியோர், இவர்கள் அதிலேயே நெடுங்காலம் வாழ்ந்து வருவர்.
  7. (நீர் வாக்களித்த) நன்மையை விட, (நீர் எச்சரித்த) தீமையை விரைவில் (கொண்டு வருமாறு) அவர்கள் உம்மிடம் எதிர்பார்க்கின்றனர். ஆனால் இவர்களுக்கு முன்னர் (இவ்வாறு கோரியவர்களிடம்) எல்லாப் படிப்பினைகளையும் கொண்ட தண்டனைகள் வந்து விட்டன. மக்களில் அநீதி (மிகைத்து) இருந்தும், உம்முடைய இறைவன் நிச்சயமாக அவர்களை மிகவும் மன்னிப்பவனாக இருக்கின்றான். (அவ்வாறே) நிச்சயமாக உம்முடைய இறைவன் கடினமான தண்டனைகளை வழங்குபவனாகவும் இருக்கின்றான்.
  8. நிராகரிப்போர் இவருக்கு, இவருடைய இறைவனிடமிருந்து எந்த அடையாளமும் ஏன் இறக்கப்படவில்லை என்று கூறுகின்றனர் . (ஆனால்) நீர் (அச்சமூட்டி) எச்சரிப்பவரேயாவீர். மேலும் ஒவ்வொரு சமுதாயத்தினருக்கும் (இறைவனிடமிருந்து அனுப்பப்பட்ட) வழிகாட்டி ஒருவர் உண்டு. ரு1
  9. ஒவ்வொரு பெண்ணும் சும ப்பதையும், கருப்பைகள் குறையாக்கி (விழச் செய்து) விடுவதையும், அவை வளரச் செய்வதையும் அல்லாஹ் (நன்கு) அறிகின்றான். மேலும் ஒவ்வொரு பொருளும் தேவையான அளவுக்கு அவனிடம் உண்டு.
  10. அவன் மறைவானதையும், வெளிப்படையானதையும் அறிகின்ற மிகப் பெரியவனும், மிக மேலானவனுமாவான்.
  11. உங்களுள் வார்த்தையை மறைப்பவரும், அதனை வெளியாக்குபவரும் (அவனுடைய ஞானத்தில்) சமமானவரே. அவ்வாறே இரவில் மறைந்து கொள்பவரும், பகலில் (வெளிப்படையாகச்) செல்பவரும் (சமமானவரே).
  12. அவனிடமிருந்து இ(த்தூது)வருக்கு முன்னாலும், இவருக்குப் பின்னாலும் (ஒருவரையொருவர்) தொடர்ந்து வரக்கூடிய (மலக்குகளின்) ஒரு குழுவினர் உள்ளனர். அவர்கள் அல்லாஹ்வின் கட்டளையினால் இவரைப் பாதுகாத்துக் கொண்டிருக்கின்றனர். எந்தச் சமுதாயத்தினரும் தங்கள் அகநிலையை மாற்றிக் கொள்ளாத வரை, அல்லாஹ் ஒருபோதும் அவர்களின் நிலையினை மாற்றுவதில்லை. அல்லாஹ் ஒரு சமுதாயத்தினருக்கு தண்டனை அளிக்க முடிவு செய்து விட்டால் அதனை அகற்றுபவர் எவருமில்லை. அவனையன்றி அவர்களுக்கு உதவி செய்பவரும் எவருமில்லை.
  13. அவனே பயத்தையும், விருப்பத்தையும் தூண்டுவதற்காக மின்னலை உங்களுக்கு காட்டுகின்றான். மேலும் அவனே எடை மிகுந்த மேகங்களை உயர்த்துகின்றான்.
  14. இடி2 அவனைப் புகழ்வதுடன், அவனது தூய்மையை வெளிப்படுத்தவும் செய்கின்றது. அவ்வாறே அவனிடத்திலுள்ள அச்சத்தால் வானவர்களும் (செய்கின்றனர்). மேலும் அவன் இடியை அனுப்பி, தான் நாடுவோரை அதனால் தாக்குகின்றான். அவர்கள் அல்லாஹ்வைக் குறித்து வாக்குவாதம் செய்து கொண்டிருக்கின்றனர். ஆனால், அவனோ கடினமான தண்டனை வழங்குபவனாவான்.
  15. (உதவிக்கான) அழைப்புகளில் அவனை மட்டும் அழைப்பவனின் அழைப்பே உண்மையானது. அவர்கள் அவனைத் தவிர, எவர்களை அழைக்கின்றனரோ, அவர்கள் எப்பதிலும் தருவதில்லை. (அவர்களின் செயல்) தண்ணீர் தன் வாய்க்கு எட்டுவதற்காக அதன்பால் தன் இரு கைகளை நீட்டும் ஒருவனைப் போன்றதே. ஆனால் அது (அவனது) வாய்க்கு எட்டுவதில்லை. நிராகரிப்பவர்களின் கூப்பாடு வீணாய்ப் போகின்றதாகும்.
  16. வானங்களிலும், பூமியிலும் இருப்பவைகளும், அவற்றின் நிழல்களும் விருப்புடனோ, வெறுப்புடனோ காலையிலும், மாலையிலும் அல்லாஹ்வுக்கே  சிரம் பணிகின்றன.
  17. நீர் அவர்களிடம், வானங்கள், பூமி ஆகியவற்றின் இறைவன் எவன் என்று கேட்பீராக. அல்லாஹ் என்று நீரே கூறுவீராக. கூறுவீராக, தமக்கே எந்தப்பலனோ, தீங்கோ ஏற்படுத்த ஆற்றல் அற்றவர்களையா அவனையன்றி உதவியாளர்களாக ஏற்படுத்தியுள்ளீர்கள்?. (மேலும் அவர்களிடம்) கூறுவீராக: குருடரும், பார்வையுடையவரும் சமமானவரா? அல்லது இருளும், ஒளியும் சமமாகுமா? அல்லது அவன் படைத்ததைப் போன்று, அவை படைத்ததன் காரணமாகவா அவற்றை அவர்கள் அல்லாஹ்வுக்கு இணையாக ஆக்கிக் கொண்டனர்? எனவே (தான், இரு) படைப்பினங்களும் அவர்களுக்கு ஒன்று போல் தெரிகிறதோ?. நீர் கூறுவீராக: எல்லாவற்றையும் அல்லாஹ் (ஒருவனே) படைத்துள்ளான். அவன் ஏகனும், வல்லமை மிக்கவனுமாவான்.
  18. அவன் வானத்திலிருந்து தண்ணீரை இறக்குகிறான். அது பள்ளத்தாக்குகளில் அதன் கொள்ளளவிற்கு ஏற்றவாறு ஓடுகிறது. பின்னர் அந்த வெள்ளப்பெருக்கு (தன் மேற்பரப்பில்) நுரையைச் சுமந்து செல்கிறது. நகைகள் அல்லது வீட்டு உபயோகத்திற்குரிய பொருள்கள் செய்வதற்காக அவர்கள் நெருப்பில் உருக்குகின்றதிலும் அதைப் போன்றதொரு நுரையுள்ளது. இவ்வாறே அல்லாஹ் உண்மை, பொய் ஆகியவற்றி(ற்குள்ள வேறுபாட்டி)னை விளக்குகின்றான். பின்னர் நுரையானது , தூக்கி எறியப்படுவதினால் அழிந்து விடுகின்றது. மக்களுக்குப் பயனளிக்கும் பொருள், பூமியில் நிலைத்திருக்கின்றது. இவ்வாறே அல்லாஹ் உவமைகளை விளக்குகின்றான்.
  19. தங்கள் இறைவன் கூறுவதை ஏற்றுக் கொண்டவர்களுக்கு (நிலையான) நன்மையுண்டு. மேலும், அவன் கூறுவதை ஏற்றுக் கொள்ளாதவர்கள், பூமியிலுள்ளவை அனைத்தும் இன்னும் அவற்றிற்கு சமமானவையும் அவர்களுக்கு இருந்து, அவர்கள் அப்பொருள்களையெல்லாம் தங்களுக்கு ஈடாகக் கொடுத்தாலும், அவர்களுக்குத் தீய (முடிவைக் கொண்ட) கேள்விக்கணக்கு உள்ளது. அவர்களின் தங்குமிடம் நரகமாகும். (தங்குவதற்கு) அது மிகக் கெட்ட இடமாகும். ரு2
  20. உம்முடைய இறைவனிடமிருந்து உமக்கு இறக்கப்பட்ட(வேதமான)து முற்றிலும் உண்மையானதே ஆகுமென்று அறிபவர் குருடனைப் போன்றவரா? இல்லை, ஏனென்றால் அறிவுடையவர் மட்டுமே அறிவுரையினைப் பெறுவர்.
  21. அத்தகையோர், அல்லாஹ்வின் உடன்படிக்கையினை முழுமையாக நிறைவேற்றுபவர்களும், உறுதி வாய்ந்த அவ்வுடன்படிக்கையினை முறிக்காதிருப்பவர்களும்;
  22. மேலும் எவற்றுடன் தொடர்பு கொண்டிருக்க வேண்டுமென்று அல்லாஹ் கட்டளையிட்டுள்ளானோ அவற்றுடன் நிரந்தரத் தொடர்பு கொண்டிருப்பவர்களும், தங்கள் இறைவனுக்கு அஞ்சுபவர்களும், தீய(தை விளைவிக்கும் ) கேள்வி கணக்குக்கு அஞ்சுபவர்களும்,
  23. தங்கள் இறைவனின் திருப்தியினை நாடி உறுதியாக நின்று செயலாற்றுபவர்களும், தொழுகையினைச் சிறந்த முறையில் நிறைவேற்றுபவர்களும், நாம் அவர்களுக்கு வழங்கியதிலிருந்து மறைமுகமாகவும், வெளிப்படையாகவும் (நம்முடைய வழியில்) செலவு செய்பவர்களும், நன்மையைக் கொண்டு, தீமையை அகற்றுபவர்களுமேயாவர். (மறுமை) வீட்டின் (மிகச்சிறந்த) நற்பலன் உடையவர்கள் இவர்களே.
  24. நிலையான தோட்டங்களில் அவர்களும், அவர்களின் தந்தையர்கள், அவர்களின் துணைவியர்கள், அவர்களின் சந்ததிகள் ஆகியவர்களில் நன்மை செய்தவர்களும் நுழைவர். மேலும் வானவர்கள் ஒவ்வொரு வாயில் வழியாகவும் அவர்களிடம் வருவார்கள்.
  25. நீங்கள் பொறுமையைக் கடைப்பிடிப்பதனால் உங்களுக்குச் சாந்தி உண்டாவதாக. எனவே, இவ்வீட்டின் வெகுமதி எவ்வளவு சிறந்தது (என அவ்வானவர்கள் கூறுவர்.
  26. மேலும் அல்லாஹ்வின் உடன்படிக்கையை உறுதிப்படுத்திக் கொண்ட பின்னர் அதனை முறிப்பவர்கள், அல்லாஹ் இணைத்து வைக்கும் படி கட்டளையிட்டுள்ளதைத் துண்டிப்பவர்கள், பூமியில் குழப்பம் விளைவிப்பவர்கள் ஆகியவர்களுக்கு (அல்லாஹ்விடமிருந்து) சாபம் விதிக்கப்பட்டுள்ளது. மேலும் அவர்களுக்கு ஒரு தீய வீடும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
  27. அல்லாஹ் தான் விரும்புபவருக்கு உணவை வளமாக வழங்குகிறான். குறைவாகவும் கொடுக்கின்றான். இவர்கள் இவ்வுலக வாழ்க்கையைக் கொண்டு மகிழ்ச்சியடைந்து விட்டனர். ஆனால் இவ்வுலக வாழ்க்கையோ  மறுமையுடன் ஒப்பிடும்போது ஓர் அற்ப ப் பொருளே. ரு3
  28. இவருக்கு, இவருடைய இறைவனிடமிருந்து எந்த அடையாளமும் ஏன் இறக்கப்படவில்லை? என்று நிராகரிப்பவர்கள் கூறுகின்றனர். நீர் கூறுவீராக: அல்லாஹ் தான் விரும்புபவரை வழி தவறிச் செல்ல விடுகிறான். (தன்னை நோக்கித்) திரும்புபவருக்குத் தன்பக்கம் வழிகாட்டுகின்றான்.
  29. இவர்களே நம்பிக்கை கொண்டவர்கள், இவர்களின் உள்ளமே அல்லாஹ்வின் நினைவால் அமைதியடைகின்றது. கவனமாகக் கேளுங்கள். அல்லாஹ்வின் நினைவிலேயே உள்ளங்கள் அமைதி அடைகின்றன.
  30. நம்பிக்கை கொண்டு நற்செயல்களைச் செய்தவர்களுக்கு பெரு மகிழ்ச்சியும், மிகச்சிறந்த திரும்பிச் செல்லுமிடமும் உள்ளன.
  31. இவ்வாறே, ஒரு சமுதாயத்திடம் நாம் உம்மை அனுப்பினோம். இதற்கு முன்னர் பல சமுதாயங்கள் (வரவிருப்பவர்களை எதிர்பார்த்தவர்களாய் ) சென்றுள்ளனர். நாம் உமக்கு வஹி மூலம் அறிவித்தவற்றை இவர்களுக்கு ஓதிக் காண்பிப்பீராக. இவர்கள் அளவற்ற அருளாளனை மறுக்கின்றனர். கூறுவீராக: அவனே என் இறைவன். அவனையன்றி வணக்கத்திற்குரியவன் இல்லை. நான் அவனிடமே நம்பிக்கை வைத்துள்ளேன். மேலும் (எப்போதும்) நான் அவனிடமே திரும்புகிறேன்.
  32. மலைகளை நகர்த்தக் கூடிய அல்லது பூமியை (பல) துண்டுகளாக்கக் கூடிய அல்லது மரணமடைந்தவர்களுடன் பேசுவதற்குக் கருவியாக இருக்கக் கூடிய ஒரு குர்ஆன் இருந்தாலும் (அவர்கள் நம்பிக்கை கொள்ள மாட்டார்கள்). மாறாக (நம்பிக்கை கொள்வதற்கான) முடிவு முழுவதும் அல்லாஹ்விடமே இருக்கின்றது. அல்லாஹ் கட்டாயமாக விரும்பியிருந்தால், எல்லா மக்களுக்கும் அவன் நேர்வழியினை வழங்கியிருப்பான் என்பதனை நம்பிக்கை கொண்டவர்கள் உணர்வதில்லையா? (தூதரே) உம்மை மறுத்தவர்கள் செய்த செயலின் காரணமாக, எப்போதும் ஏதாவதொரு கடினமான இன்னல் அவர்களை அடைந்து கொண்டேயிருக்கும்5 அல்லது அவர்களின் வீட்டின் பக்கம் இறங்கிக் கொண்டேயிருக்கும்6. இறுதியில் அல்லாஹ்வின் வாக்குறுதி (யாகிய மக்கா வெற்றி) வந்துவிடும். நிச்சயமாக,  அல்லாஹ் அந்த வாக்குறுதிக்கு ஒருபோதும் மாற்றம் செய்ய மாட்டான். ரு4
  33. நிச்சயமாக, உமக்கு முன்னர் (தோன்றிய) தூதர்களும் ஏளனம் செய்யப்பட்டனர். இதனால் நான்,  நிராகரித்தவர்களுக்கு(ச் சிறிது காலம் வரை)த் தவணையளித்து விட்டுப் பின்னர் அவர்களைப் பிடித்துக் கொண்டேன். என்னுடைய தண்டனை எவ்வாறு (கடினமாகதாக) இருந்தது (என்பதனை இப்பொழுது பாருங்கள்).
  34. ஒவ்வொரு ஆன்மாவையும், அது சம்பாதிப்பது குறித்து கண்காணித்து வரும் அவனா ( அவர்களிடம் கேள்வி கணக்குக் கேட்கமாட்டான்?). அவர்களோ அல்லாஹ்வுக்குப் பல இணைகளை(யும்) உருவாக்கியுள்ளனர். கூறுவீராக: நீங்கள் (கற்பனைக் கடவுளர்களாகிய) அவர்களின் பெயர்களைக் கூறுங்கள்: அல்லது பூமியில் அவனுக்குத் தெரியாத ஒன்றை நீங்கள் அவனுக்குத் தெரிவிக்கின்றீர்களா? அல்லது இது ஒரு வெறும் பேச்சா? மாறாக, நிராகரித்தவர்களுக்கு அவர்களின் சூழ்ச்சி(யே) அழகு வாய்ந்த தாக காட்டப்பட்டுள்ளது. அவர்கள் (நேரான) வழியிலிருந்து அகற்றப்பட்டுள்ளனர். அல்லாஹ் தவறான வழியில் செல்ல விட்டுள்ளவனுக்கு, (நேர்) வழி காட்ட எவனுமில்லை.
  35. அவர்களுக்கு ஒரு தண்டனை இவ்வுலக வாழ்க்கையிலே உள்ளது. நிச்சயமாக மறுமைத் தண்டனையோ இன்னும் கடினமாகதாக இருக்கும். மேலும் அவர்களை அல்லாஹ்விடமிருந்து காப்பாற்றுபவர் எவரும் இருக்கமாட்டார்.
  36. இறையச்சமுடையோருக்கு வாக்களிக்கப்பட்ட சொர்க்கத்தின் உவமைரீதியிலான விளக்கமாவது: அதில் ஆறுகள் ஓடிக் கொண்டிருக்கும்; அதன் பழமும், அதன் நிழலும் என்றென்றும் நிலைத்திருக்கும். இது இறைவனுக்கு அஞ்சுவோருக்கான முடிவாகும். மேலும், நிராகரிப்பவர்களின் முடிவு நெருப்பாகும்.
  37. நாம் வேதம் வழங்கியுள்ளவர்கள், உமக்கு இறக்கப்பட்டதைக் கொண்டு மகிழ்ச்சி அடைகின்றனர். (பலதரப்பட்ட) அப்பிரிவினர்களில் இதிலுள்ள சிலவற்றை மறுக்கின்றவர்களும் (சிலர்) இருக்கின்றனர். நீர் கூறுவீராக: நான் அல்லாஹ்வை வணங்குமாறும், அவனுக்கு இணை வைக்காமல் இருக்குமாறும் எனக்கு கட்டளையிடப்பட்டுள்ளது. நான் அவன் பக்கமே (உங்களை) அழைக்கிறேன். மேலும் நானும் அவனிடமே திரும்புகின்றேன்.
  38. மேலும், இவ்வாறே நாம் அதனைத் தெளிவான தீர்ப்பாகவே இறக்கினோம். (செவியேற்பவரே) உமக்கு ஞானம் கிடைத்துவிட்டபின்னரும் நீர் (நிராகரிப்பாளர்களாகிய) அவர்களின் தீய இச்சைகளைப் பின்பற்றினால், அல்லாஹ்விற்கெதிராக உமக்கு நண்பர் எவரும் இருக்க மாட்டார். (உம்மைக்) காப்பாற்றுபவரும் இருக்க மாட்டார். ரு5
  39. நிச்சயமாக, நாம் உமக்கு முன்னரும் தூதர்கள் பலரை அனுப்பினோம். அவர்களுக்கு மனைவியரையும், மக்களையும் கொடுத்தோம். அல்லாஹ்வின் அனுமதியின்றி எந்தத் தூதராலும் (தம்முடைய சமுதாயத்தினரிடம்) எந்த அடையாளத்தையும் கொண்டு வர இயலாது. ஒவ்வொரு திட்டத்தின் காலமும் வரையறுக்கப்பட்டுள்ளது.
  40. அல்லாஹ் தான் விரும்புகின்ற பொருளை அழித்து விடுகின்றான். (தான் விரும்புவதை) நிலைத்திருக்குமாறும் செய்கின்றான். எல்லாச் சட்டங்களுக்கும் அடிப்படை மூலாதாரம் அவனிடமே உள்ளது.
  41. (தண்டனையைக் குறித்து) நாம் அவர்களுக்கு அளித்த வாக்குறுதியின் ஒரு பகுதியினை (உம் வாழ்நாளில் நினைவுபடுத்தி) உமக்குக் காட்டினாலோ, நாம் உமக்கு (அந்த நேரத்திற்கு முன்னரே) மரணத்தைத் தந்துவிட்டாலோ (இரண்டும் ஒன்றே. ஏனெனில்) தூதுச் செய்தியை தெரிவிப்பது மட்டுமே உம்மீது ( பொறுப்பாக) உள்ளது. (அவர்களிடம்) கேள்வி, கணக்குக் கேட்பது எம்முடைய பொறுப்பேயாகும்.
  42. நாம் (அவர்களின்) நிலத்தை அதன் எல்லைகளிலிருந்தும் சுருக்கிக் கொண்டே வருவதை அவர்கள் கண்டதில்லையா? மேலும், அல்லாஹ்வே தீர்ப்பு வழங்குகின்றான். அவனது தீர்ப்பை மாற்றுபவர் எவருமில்லை. மேலும், அவன் விரைவில் கணக்கெடுப்பவனாவான்.
  43. இவர்களுக்கு முன்னிருந்தவர்களும் திட்டங்கள் தீட்டினர். ஆனால், (நிறைவேறும்) திட்டங்கள் அனைத்தும் அல்லாஹ்விற்கே உரியன. ஒவ்வொரு மனிதனும் செய்வதனை அவன் அறிகின்றான். வரவிருக்கின்ற அந்த வீட்டின் (நல்ல) முடிவு எவருக்குரியதாகும் என்பதை அந்த நிராகரிப்போர் விரைவில் அறிவர்.
  44. (உம்மை) நிராகரித்தவர்கள், நீர் (அல்லாஹ்வின்) தூதர் அல்ல எனக் கூறுகின்றனர். நீர் அவர்களிடம், எனக்கும், உங்களுக்குமிடையில் அல்லாஹ் போதுமான சாட்சியாக இருக்கின்றான். (இவ்வாறே தூய்மையான) இந்த வேதத்தின் ஞானம் எவரிடம் (வந்து) உள்ளதோ அவரும் (சாட்சியாக இருக்கின்றார்) எனக் கூறுவீராக. ரு6
Powered by Blogger.