21- அல் - அன்பியா

அதிகாரம்: அல் - அன்பியா
அருளப்பெற்ற இடம் : மக்கா | வசனங்கள் : 113

பிரிவுகள் : 7


  1. அளவற்ற அருளாளனும், மேன்மேலும் கருணைகாட்டுபவனுமாகிய அல்லாஹ்வின் பெயரால் (ஓதுகின்றேன்).
  2. மக்களுக்கு, அவர்களின் கேள்வி கணக்கு(கேட்கும் நேரம்) நெருங்கி விட்டது. ஆனால் அவர்கள் கவனம் செலுத்தாமல் புறக்கணிக்கின்றனர்.
  3. அவர்களிடம், அவர்களின் இறைவனிடமிருந்து ஞாபகமூட்டும் புதியதொரு போதனை எப்பொழுது வந்தாலும், அவர்கள் (அதனை) ஏளனம் செய்பவர்களாகவே செவியேற்கின்றனர்.
  4. அவர்களின் உள்ளங்கள் கவனமின்மையில் மூழ்கிக் கிடக்கின்றன. அநீதியிழைத்தவர்கள் இரகசியமாக ஆலோசனை செய்(து இவ்வாறு கூறு)கின்றனர்: இவர் உங்களைப் போன்ற ஒரு மனிதரேயாவார். எனவே நீங்கள் கண்டு கொண்டே அவருடைய ஏமாற்றுப் பேச்சுக்களுக்கு ஆளாகி விடுவீர்களா?
  5. (இவற்றைக் கேட்டு முஹம்மது (ஸல்)அவர்கள்) கூறினார்கள்: வானத்திலும், பூமியிலும் பேசப்படுவதை என் இறைவன் அறிகின்றான். அவன் நன்கு கேட்பவனும், நன்கு அறிபவனுமாவான்.
  6. ஆனால் (எதிரிகளாகிய) அவர்கள் கூறினார்கள்: (இவ்வசனங்கள்) சிதறிய கனவுகளாகும். அது மட்டுமன்று, அவர் இதை (தாமாகவே) இட்டுக்கட்டியுள்ளார். இது மட்டுமன்று, அவர் ஒரு கவிஞர். எனவே, முன்னவர்கள் (அடையாளங்களுடன்) அனுப்பப்பட்டது போன்று இவர் ஏதாவது அடையாளத்தை நம்மிடம் கொண்டு வர வேண்டும்1.
  7. இவர்களுக்கு முன்னர் நாம் அழித்து விட்ட ஊரிலுள்ளவர் எவரும் நம்பிக்கை கொண்டதில்லை. அவ்வாறிருக்க இவர்கள் நம்பிக்கை கொள்வார்களா?
  8. உமக்கு முன்னர் ஆண்களையே நாம் அவர்களுக்கு வஹி அறிவித்து (தூதராக) அனுப்பி உள்ளோம். நீங்கள் அறியாதிருந்தால் வேத(ஞான)முடையவர்களிடம் கேட்டுப் பாருங்கள்.
  9. நாம் அத் தூதர்களுக்கு உணவு உண்ணாத உடல்களை வழங்கவில்லை. அவர்கள் மிக நீண்ட காலம்2 வாழ்ந்ததுமில்லை.
  10. பின்னர் அவர்களுக்கு நாம் (நம்) வாக்குறுதியினை நிறைவேற்றினோம். எனவே நாம் அவர்களையும், நாம் நாடியவர்களையும் காப்பாற்றினோம். வரம்பு மீறியவர்களை நாம் அழித்தும் விட்டோம்.
  11. நாம் உங்களுக்கு ஒரு வேதத்தை இறக்கினோம். அதில் உங்களுக்கு நினைவூட்டுதல் உண்டு. நீங்கள் புரிந்து கொள்ள மாட்டீர்களா? ரு1
  12. அநீதியிழைத்த எத்தனையோ ஊர்களை நாம் முழுமையாக அழித்து விட்டோம். அவற்றிற்குப் பிறகு மற்றொரு சமுதாயத்தினரை உருவாக்கினோம்.
  13. (அழிவிற்குள்ளாகவிருந்த) அவர்கள் எம்முடைய தண்டனையை உணர்ந்த பொழுது, அதிலிருந்து (தப்பித்துக் கொள்வதற்காக) ஓடத் தொடங்கினார்கள்.
  14. (அப்பொழுது நாம் கூறினோம்) ஓடாதீர்கள். உங்களிடம் (உங்கள் செயல்கள் குறித்துக்) கணக்கு கேட்பதற்காக, நீங்கள் வாழ்ந்த இன்ப நலன்களின் பக்கமும், உங்கள் வீடுகளின் பக்கமும் திரும்பிச் செல்லுங்கள்.
  15. இதற்கு அவர்கள், அந்தோ! நாங்கள் (வாழ்நாள் முழுவதும்) அநீதி தான் இழைத்துக்  கொண்டிருந்தோம் என்றனர்.
  16. நாம் அவர்களை, அறுவடை செய்யப்பட்டுத் தன் பொழிவுகளை இழந்து விட்ட வயல்களைப் போன்று ஆக்கும் வரை, அவர்கள் அதனையே புலம்பிக் கொண்டிருந்தனர்.
  17. வானத்தையும், பூமியையும், அவ்விரண்டிற்கும் இடையிலுள்ளவற்றையும் வீண் விளையாட்டிற்காக நாம் படைக்கவில்லை.
  18. நாம் ஏதேனும் பொழுது போக்கினை ஏற்படுத்த விரும்பியிருந்தால், அதனை எமக்குப் பக்கத்திலேயே ஏற்படுத்தியிருப்போம்.
  19. அது மட்டுமன்று, நாம் உண்மையைப் பொய்யின் மீது வீசியெறிகின்றோம். அது அதன் தலையை உடைத்து விடுகின்றது. (பொய்யாகிய) அது உடனே வெருண்டோடி விடுகின்றது. (இறைவனைப் பற்றிய) உங்கள் (தவறான) வருணனையின் காரணமாக உங்களுக்கு அழிவு தான் ஏற்படும்.
  20. வானங்களிலும், பூமியிலுமுள்ளவர்கள் யாவரும் அவனுக்கே உரியவர்களாவர். அவனிடமுள்ளவர்கள் அவனை வணங்குவதில் பெருமையடிப்பதுமில்லை; (அதனால்) சோர்வடைவதுமில்லை.
  21. அவர்கள் இரவிலும், பகலிலும் அவனது தூய்மையினை எடுத்துரைத்துக் கொண்டிருப்பார்கள். அவர்கள் அதில் தளர்வதில்லை.
  22. அவர்கள் பூமியிலிருந்து கடவுளர்களை உருவாக்கிக் கொண்டனரா? அவர்கள் (படைப்புகளைப்) படைக்கின்றனரா?
  23. (வானம், பூமியாகிய) அவ்விரண்டிலும் அல்லாஹ்வையன்றி வேறு கடவுளர்கள் இருந்திருப்பின் அவை இரண்டும் பெருங் குழப்பத்திற்கு இரையாகி அழிந்திருக்கும்3. எனவே அரியணைக்குரிய இறைவனாகிய அல்லாஹ் எல்லாக் குறைபாடுகளிலிருந்தும், அவர்கள் கூறுபவற்றிலிருந்தும் தூய்மையானவன்.
  24. அவன் எதனைச் செய்தாலும் அதனைப் பற்றி அவன் எவருக்கும் பதில் சொல்ல வேண்டியதில்லை. ஆனால் அவர்களோ பதில் சொல்லியாக வேண்டும்.
  25. அவர்கள் அவனையன்றி வேறு கடவுளர்களை உருவாக்கிக் கொண்டனரா? நீர் கூறுக: உங்கள் சான்றைக் கொண்டு வாருங்கள். (குர்ஆனாகிய) இது என்னுடனுள்ளவர்களின் சிறப்பிற்குக் காரணமாக விளங்குகின்றது. எனக்கு முன்னுள்ளவர்களின் சிறப்பிற்கும் காரணமாக விளங்குகின்து4. ஆனால் அவர்களுள் பெரும்பாலார் உண்மையினை அறிந்து கொள்வதில்லை. எனவே அதனைப் புறக்கணிக்கின்றனர்.
  26. நாம் உமக்கு முன்னர் எத்தனை தூதர்களை அனுப்பியுள்ளோமோ அவர்களுள் ஒவ்வொருவருக்கும் நிச்சயமாக என்னைத் தவிர வணக்கத்திற்குரியவன் எவனுமில்லை. எனவே நீங்கள் என்னை (மட்டுமே) வணங்குங்கள் என்றே நாம் வஹி அறிவித்தோம்.
  27. அளவற்ற அருளாள(னான  இறைவ)ன் மகனை உருவாக்கிக் கொண்டான் என்று அவர்கள் கூறுகின்றனர். அவன் (எல்லாப் பலவீனங்களிலிருந்தும்) தூய்மையானவன். அது மட்டுமன்று (அவர்கள் எவர்களை இறைவனுடைய மகன்கள் எனக் கூறுகின்றனரோ) அவர்கள் இறைவனுடைய கண்ணியமிக்க அடியார்களாவார்கள்.
  28. அவர்கள் அவனுக்கு முந்தி பேசுவதில்லை. மேலும் அவர்கள் அவனது கட்டளைகளின் படியே செயலாற்றுகின்றனர்.
  29. அவர்களுக்கு முன்னுள்ளவற்றையும், அவர்களுக்கு பின்னுள்ளவற்றையும் அவன் அறிகின்றான். அவன் விரும்பியவருக்கேயன்றி வேறெவருக்காகவும் அவர்கள் பரிந்து பேசுவதில்லை. மேலும் அவர்கள் அவனுக்குப் பயந்து நடுங்கிக் கொண்டிருக்கின்றனர்.
  30. அவர்களுள் எவர், இறைவனையன்றி, நானும் ஒரு கடவுள் தான் எனக் கூறுகின்றனரோ அவருக்கு நாம் நரகத்தைக் கூலியாகக் கொடுப்போம். இவ்வாறே நாம் அநீதியிழைப்பவர்களுக்குக் கூலி கொடுக்கின்றோம். ரு2
  31. வானங்களும், பூமியுமாகிய இரண்டும் இறுக்கமாக மூடப்பட்டிருந்தன. பின்னர் நாம் அவற்றைப் பிரித்து திறந்து விட்டோம்5. தண்ணீரிலிருந்து உயிருள்ள ஒவ்வொரு பொருளையும் உருவாக்கினோம் என்பதனை நிராகரிப்பவர்கள் காணவில்லையா? இவ்வாறிருந்தும் அவர்கள் நம்பிக்கை கொள்ள மாட்டார்களா?
  32. பூமி அவர்களுடன் நிலைகுலைந்து விழாமல், அவர்களைத் தாங்கி நிற்பதற்காக நாம் அதில் மலைகளை அமைத்தோம். அவர்கள் (பல்வேறு இடங்களைச்) சென்றடைவதற்காக நாம் அதில் விரிவான வழிகளையும் அமைத்தோம்.
  33. வானத்தை பாதுகாப்பான கூரையாக ஆக்கினோம். எனினும், அவர்கள் அதன் அடையாளங்களைப் புறக்கணிக்கின்றனர்.
  34. அவனே இரவையும், பகலையும், சூரியனையும், சந்திரனையும் படைத்தான். இவையெல்லாம் தத்தமது சுற்றுப் பாதைகளில் தடையின்றிச் சென்று கொண்டிருக்கின்றன.
  35. உமக்கு முன்னர், எந்த மனிதருக்கும் என்றென்றும் வாழும் (மிக நீண்ட) வாழ்க்கையை நாம் வழங்கியதில்லை. எனவே நீர் மரணித்து, அவர்கள் மட்டும் என்றென்றும் (மிக நீண்ட நாள்) உயிருடன் இருப்பதா?6.
  36. ஒவ்வொருவரும் மரணத்தைச் சுவைக்கக் கூடியவரே. நாம் உங்களை நல்ல நிலையிலும், தீய நிலையிலும் சோதிப்போம். (இறுதியாக) நீங்கள் எம்மிடமே திரும்பக் கொண்டு வரப்படுவீர்கள்.
  37. நிராகரிப்பவர்கள் உம்மைக் கண்டால், உம்மை ஓர் அற்பமாகக்  கருதுகின்றனர். (மேலும் அவர்கள்): இவர் தாம் உங்கள் கடவுளர்களைப் பற்றிக் குறை கூறுகின்றாரா? (என்று கூறுகின்றனர்). ஆனால் அவர்களோ, அளவற்ற அருளாள(னாகிய இறைவ) னை நினைவு கூர்வதை மறுக்கின்றனர்.
  38. மனிதன் அவசரத்தி(ன் தன்மையி)னால் படைக்கப்பட்டுள்ளான். நான் உங்களுக்கு என் அடையாளங்களைக் காட்டுவேன். எனவே நீங்கள் (அதற்காக) அவசரப்படாதீர்கள்.
  39. மேலும் அவர்கள், ' நீங்கள் உண்மையாளர்களாயின், இந்த வாக்குறுதி எப்போது நிறைவேறும்? " என்று வினவுகின்றனர்.
  40. நிராகரிப்பவர்கள் தங்கள் முகங்களை விட்டும், முதுகுகளை விட்டும், நெருப்பை அகற்ற முடியாத அந்த நேரத்தையும், எவரிடமிருந்தும் தங்களுக்கு உதவி கிடைக்காததையும் அறிந்திருந்தால் (இந்த அளவிற்குப் பெருமையடிக்க மாட்டார்கள்).
  41. இல்லை; (அத் தண்டனை) அவர்களிடம் திடீரென்று வந்து, அவர்களைத் திகைப்படையச் செய்து விடும். ஆகவே அவர்கள் அதனைத் தடுத்து நிறுத்துவதற்கு வலிமை பெற மாட்டார்கள். மேலும் அவர்களுக்கு(ச் சிறிதும்) காலக்கெடு அளிக்கப்படமாட்டாது.
  42. உமக்கு முன்னர் தோன்றிய தூதர்களும் ஏளனம் செய்யப்பட்டனர். இதன் விளைவாக, அத்தூதர்களை ஏளனம் செய்தவர்களை அவர்கள் எதனைக் கொண்டு ஏளனம் செய்தனரோ அவையே சூழ்ந்து கொண்டன. ரு3
  43. நீர் கூறுவீராக: இரவு அல்லது பகல் வேளையில், அளவற்ற அருளாளனின் பிடியிலிருந்து உங்களைக் காப்பாற்றுபவர் யார்? ஆயினும், அவர்கள் தங்கள் இறைவனை நினைவு கூர்வதைப் புறக்கணித்துக் கொண்டிருக்கின்றனர்.
  44. நம்முடைய தண்டனையிலிருந்து அவர்களைக் காப்பாற்றும் கடவுளர்கள் அவர்களுக்கு (ஆதரவாக) இருக்கின்றனரா? (பொய்க் கடவுளர்களாகிய) அவர்களால் தங்கள் உயிர்களைக் கூடப் பாதுகாக்க முடியாது. எமக்கு எதிராக எவரும் அவர்களுடன் நட்பு கொள்ளவும் முடியாது.
  45. உண்மையில் நாம் அவர்களுக்கும், அவர்களின் மூதாதையர்களுக்கும் ஒரு நீண்ட காலம் வரை மிகுதியான வசதிகளை வழங்கியிருந்தோம். நாம் அவர்களின் நாட்டை அதன் எல்லா எல்லைகளிலிருந்தும் சிறிதாக்கிக் கொண்டே வருவதை அவர்கள் காண்பதில்லையா?7 இவ்வாறிருக்க, அவர்களால் வெற்றி பெற முடியுமா?
  46. நீர் அவர்களிடம் கூறுக: நான் உங்களை இறையறிவிப்பு மூலமே எச்சரிக்கின்றேன். எச்சரிக்கப்படும் போது செவிடர்களால் அந்தக் கூப்பிடுதலை கேட்க முடியாது.
  47. உம்முடைய இறைவனது தண்டனையின் வெப்பக்காற்று அவர்களைத் தீண்டினால், அவர்கள், ' எங்களுக்கு அழிவு தான். நாங்கள் அநீதியே இழைத்துக்  கொண்டிருந்தோம் ' என்று கட்டாயம் கூறுவர்.
  48. எவருக்கும் சிறிதும் அநீதி இழைக்காமல் இருக்க நாம் மறுமை நாளில் சரியான தராசுகளை ஏற்படுத்துவோம். (ஒரு செயல்) கடுகளவு இருந்தாலும் நாம் அதனைக் கொண்டு வருவோம். கணக்கெடுக்க நாமே போதுமானவனாவோம்.
  49. நாம் மூஸாவுக்கும், ஹாரூனுக்கும் பிரித்தறிவிக்கும் அடையாளத்தையும், ஒளியையும், இறையச்சமுடையவர்களுக்கு ஞாபகமூட்டும் போதனையையும் வழங்கினோம்.
  50. (இறையச்சமுடையவர்களாகிய) அவர்கள் தங்கள் இறைவனுக்கு மறைவாகவும் அஞ்சுவார்கள். தீர்ப்பு வழங்கும் அந்த நேரத்தைக் குறித்தும் அஞ்சுவார்கள்.
  51. (குர்ஆனாகிய) இது அருளுக்குரிய நினைவூட்டுதல் ஆகும். இதனை நாமே இறக்கினோம். இருந்தும்  நீங்கள் இதனை மறுக்கின்றீர்களா? ரு4
  52. நாம் இதற்கு முன்னர், இப்ராஹீமுக்கு, அவருக்கேற்ற நேர்வழியினையும், தகுதியினையும் வழங்கினோம். அவரைப் பற்றி நாம் நன்கு அறிந்திருந்தோம்.
  53. அவர் தம் தந்தையிடமும், தம் சமுதாயத்தினரிடமும் நீங்கள் வணங்கும் இந்த உருவங்கள் என்ன? என்று வினவினார்.
  54. அவர்கள், எங்கள் மூதாதையர்கள் இவற்றை வணங்கிக் கொண்டிருப்பதைக் கண்டோம் என்று கூறினார்கள்.
  55. அவர், அவ்வாறாயின் நீங்களும், உங்கள் மூதாதையர்களும் பகிரங்கமான வழிகேட்டில் இருந்தீர்கள் என்றார்.
  56. அவர்கள், நீர் எங்களிடம் உண்மையைக் கொண்டு வந்துள்ளீரா? அல்லது நீர் எங்களுடன் விளையாடுகிறீரா? என்று கூறினர்.
  57. அவர் கூறினார்: உண்மையிலேயே வானங்களையும், பூமியையும் படைத்த அவற்றின் இறைவனே உங்கள் இறைவன். இதற்கு நான் சாட்சியாக இருக்கின்றேன் என்றார்.
  58. அல்லாஹ் மேல் ஆணையாக! நீங்கள் புறமுதுகு காட்டித் திரும்பிச் செல்லும் போது, நான் உங்கள் சிலைகளுக்கு எதிராக நிச்சயமாக ஒரு திட்டம் வகுப்பேன்.
  59. பின்னர் அவர், அவர்கள் (மீண்டும் ஒரு தடவை) அதனிடம் வருவதற்காக, அவைகளுள் (அச் சிலைகளுள்) பெரியதைத் தவிர, மற்றெல்லாவற்றையும் துண்டு துண்டாக உடைத்து விட்டார்.
  60. இதற்கு அவர்கள் கூறினர்: நம் கடவுளர்களை இவ்வாறு செய்தவர் யார்? நிச்சயமாக இதனைச் செய்தவர் அநீதியிழைப்பவர்களைச் சார்ந்தவராவார்.
  61. (அப்போது மற்றுஞ்சிலர்) கூறினர்: இப்ராஹீம் என்றழைக்கப்படுகின்ற வாலிபர் ஒருவர் (நம் கடவுளர்களாகிய) இவர்களைப் பற்றிக் குறைத்துப் பேசியதை நாங்கள் கேட்டோம்.
  62. (இது கேட்டு, சமுதாயத்தின் தலைவர்கள்) கூறினர்: (அவ்வாறாயின் அவருக்கெதிராக) சாட்சி அளிக்க அவரை மக்களின் கண் முன் அழைத்து வாருங்கள்.
  63. (பின்னர்) அவர்கள் கூறினர். இப்ராஹீமே! நீர் தாம் எங்கள் கடவுளர்களை இவ்வாறு செய்தீரா?
  64. அவர் கூறினார்: நிச்சயமாக ஒருவர்8 இதனைச் செய்துள்ளார். அவர்களுள் ' பெரிய கடவுள்' இதோ இருக்கின்றார். அவரால் பேச முடியுமாயின், அவரிடமே கேட்டுப் பாருங்கள்.
  65. எனவே, அவர்கள் தங்கள் தலைவர்களை நோக்கி9 நிச்சயமாக நீங்கள் தாம் அநீதியிழைப்போர் என்றனர்.
  66. அவர்கள் தலைகுனிவிற்கு ஆளாக்கப்பட்டனர். (அதாவது, பதிலளிக்க இயலாதவர்களாக ஆக்கப்பட்டனர். பின்னர் அவர்கள்) இவர்கள் (இக் கடவுளர்கள்) பேசுவதில்லை என்பதைத் தான் நீர் நன்கு அறிவீரே என்றனர்.
  67. அதற்கு (இப்ராஹீம்) கூறினார்: அவ்வாறாயின் உங்களுக்கு எந்த நன்மையையோ, தீமையையோ செய்ய முடியாத ஒன்றையா, நீங்கள் அல்லாஹ்வை விட்டு விட்டு வணங்குகிறீர்கள்?
  68. உங்கள் மீது அந்தோ பரிதாபம்! அல்லாஹ்வையன்றி நீங்கள் எதனை வணங்குகின்றீர்களோ அவற்றின் மீதும் பரிதாபம். நீங்கள் சிந்தித்துப் பார்ப்பதில்லையா?
  69. (இது கேட்டு கோபமடைந்த அவர்கள்) நீங்கள் எதனையாவது செய்ய நாடினால், இவரை எரித்து உங்கள் கடவுளர்களுக்கு உதவி செய்யுங்கள் என்று கூறினார்.
  70. அப்போது நாம், நெருப்பே! நீ இப்ராஹீமுக்காக குளிர்ந்து சாந்தி நிறைந்ததாகி விடு என்றோம்.
  71. அவர்கள் அவருக்குத் தீது செய்ய விரும்பினார்கள். ஆனால் நாம் அவர்களை பேரிழப்புக்கு ஆளாக்கி விட்டோம். 
  72. நாம் அவரையும், லூத்தையும் காப்பாற்றி, ஒரு நாட்டிற்குக் கொண்டு சென்றோம். அதில் எல்லா மக்களுக்காகவும் அருள் செய்திருந்தோம்.
  73. மேலும் நாம் அவருக்கு இஸ்ஹாக்கையும், பேரராகிய யாகூப்பையும் வழங்கினோம். அவர்களெல்லாரையும் நாம் நல்லவர்களாக ஆக்கினோம்.
  74. நாம் அவர்களை (மக்களின்) தலைவர்களாக ஆக்கினோம். அவர்கள் நமது கட்டளை மூலம் அவர்களுக்கு நேர்வழி காட்டினர். நாம்,  அவர்களுக்கு நற்செயல்களைச் செய்யுமாறும், தொழுகையை நிலைநாட்டுமாறும், ஸக்காத்து கொடுக்குமாறும் வஹியின் மூலம் அறிவித்தோம். அவர்கள் யாவரும் எம்மை வணங்கும் அடியார்களாகவே விளங்கினர்.
  75. நாம் லூத்துக்கு (மக்களிடையே தீர்ப்பு வழங்குவதற்கான) ஞானத்தையும்10, அறிவையும் வழங்கினோம். மிகவும் தீய செயலைச் செய்து வந்த நகரத்திலிருந்து நாம் அவரைக் காப்பாற்றினோம். அ(வருடைய நகரில் வசித்த)வர்கள் கட்டுப்பாட்டை மீறிய, மிகவும் தீய சமுதாயத்தினராக இருந்தனர்.
  76. நாம் அவரை நம் கருணையில் நுழையச் செய்தோம். அவர் எம்முடைய நல்லடியார்களைச் சார்ந்தவராக இருந்தார். ரு5
  77. (இப்ராஹீமுடைய நிகழ்ச்சிக்கு) முன்னர் நூஹ்(எம்மை) அழைத்த போது, நாம் அவருடைய பிரார்த்தனையை ஏற்று நாம் அவரையும், அவரது குடும்பத்தினரையும் பெருந்துன்பத்திலிருந்து காப்பாற்றினோம்.
  78. எம்முடைய அடையாளங்களைப் பொய்ப்படுத்திய அவருடைய சமுதாயத்தினருக்கு எதிராக, நாம் அவருக்கு உதவி செய்தோம். அவர்கள் மிகவும் தீய சமுதாயத்தினராக இருந்தனர். எனவே நாம் அவர்களெல்லாரையும் மூழ்கடித்து விட்டோம்.
  79. மேலும், தாவூதையும், சுலைமானையும் நினைத்துப் பார்ப்பீராக! ஒரு வயலை சமுதாயப் பொதுமக்கள்11 விழுங்கிக் கொண்டிருந்த போது, அவ்விருவரும் அது குறித்துத் தீர்ப்பு வழங்கிக் கொண்டிருக்கும் வேளையில், அவர்களின் தீர்ப்புக்கு நாமே சாட்சியாக இருந்தோம்.
  80. பிரச்சனையின் உண்மையை நாம் சுலைமானுக்குத் தெளிவுபடுத்தினோம். நாம் அவர்கள் எல்லோருக்கும் தீர்ப்பு வழங்குவதற்கான ஞானத்தையும், அறிவையும் வழங்கினோம். மேலும் நாம் மலைவாசிகளையும், பறவைகளையும் தாவூதுடன் பணியாற்ற வைத்தோம். அவர்களெல்லாரும், இறைவனது தூய்மையினை எடுத்துரைத்துக் கொண்டிருந்தனர். இவற்றையெல்லாம் நாமே செய்தோம்.
  81. உங்கள் போரில் உங்களைக் காப்பாற்றுவதற்காக நாம் அவருக்குக் கவச ஆடையினைத் தயாரிக்கக் கற்றுக் கொடுத்தோம். எனவே நீங்கள் நன்றி செலுத்துபவர்களாக இருப்பீர்களா?
  82. நாம் வேகமான காற்றையும், சுலைமானுக்குப் பணியாற்ற வைத்தோம். அது அவரது கட்டளைக்கு ஏற்ப, நாம் அருள் புரிந்த பூமியை நோக்கி வீசியது12. எல்லாவற்றையும் நாம் அறிவோம்.
  83. கலகம் செய்பவர்களுள்13 அவருக்காகக் கடல்களில் முத்துக் குளிப்பவர்களும், இது மட்டுமன்றி வேறு பணி செய்பவர்களும் இருந்தனர். நாம் அவர்களைக் கண்காணிப்பவராக இருந்தோம்.
  84. மேலும் அய்யூப் தம் இறைவனை அழைத்துத் துன்பம் என்னைப் பற்றிக் கொண்டது. இறைவா! நீ கருணை காட்டுபவர்கள் எல்லோரையும் விட, மிக அதிகமாகக் கருணை காட்டுபவனாவாய் எனக் கூறினார்.
  85. எனவே நாம் அவரது வேண்டுதலை ஏற்று, அவருக்கு ஏற்பட்டிருந்த துன்பத்தை அகற்றினோம். அவருக்கு அவருடைய குடும்பத்தினரையும் வழங்கினோம். எம்மிடத்திலிருந்து கருணையாக அவர்களைப் போன்று மேலும் வழங்கினோம். இந்த நிகழ்ச்சியினை, வணங்குபவர்களுக்கு ஓர் அறிவுரையாக ஆக்கினோம்.
  86. மேலும் இஸ்மாயீல், இத்ரீஸ், துல்கிஃப்லு ஆகியவர்களையும் (நினைத்துப் பார்ப்பீராக). இவர்களெல்லாரும் பொறுமையாளர்களாக விளங்கினர்.
  87. நாம் இவர்களெல்லாரையும் எம் கருணையில் நுழையச் செய்தோம். இவர்கள் யாவரும் நல்லவர்களாக விளங்கினர்.
  88. துன்னூன் (ஆகிய யூனுஸ்) கோபத்துடன் சென்ற நேரத்தை(யும் நினைத்துப் பார்ப்பீராக). நம் தீர்ப்பு அவரைப் பிடித்துக் கொள்ளாது என அவர் எண்ணினார். எனவே அவர் துன்ப வேளையில் (நம்மை) அழைத்து, உன்னையன்றி வணக்கத்திற்குரியவன் எவனுமில்லை. நீ தூய்மையானவன்; நிச்சயமாக நான் அநீதியிழைப்பவர்களைச் சார்ந்தவனாக இருந்தேன் என்றார்.
  89. எனவே நாம் அவரது பிரார்த்தனையை ஏற்று, துயரத்திலிருந்து அவரைக் காப்பாற்றினோம். இவ்வாறே நாம் நம்பிக்கை கொண்டவர்களைக் காப்பாற்றி வருகின்றோம்.
  90. ஸக்கரிய்யா தமது இறைவனை அழைத்து: என் இறைவா! என்னைத் தனித்தவனாக விட்டு விடாதிருப்பாயாக. வாரிசாக இருப்பவர்களுள் நீ மிகச்சிறந்தவனாவாய் என்று கூறிய நேரத்தை(யும் நினைவு கூர்வீராக).
  91. நாம் அவரது பிரார்த்தனையை ஏற்று, அவருக்கு யஹ்யாவை வழங்கினோம். அவருடைய மனைவியை அவருக்காக உடல் நலமுள்ளவராக்கினோம். அவர்களெல்லாரும் நல்லவற்றைச் செய்வதில் ஒருவரையொருவர் முந்திக் கொண்டிருந்தனர். நம்பிக்கையுடனும், பயத்துடனும் எம்மை அழைத்தனர். எமக்காகப் பணிவான வாழ்க்கையை நடத்தினர்.
  92. தம் கற்பைக் காப்பாற்றிக் கொண்ட அப்பெண்ணையும் (நினைத்துப் பார்ப்பீராக). நாம் அவருக்கு நமது வஹியை வழங்கி அருள் புரிந்தோம். அவரையும், அவருடைய மகனையும் உலகிற்கு ஓர் அடையாளமாக்கினோம்.
  93. உங்களுடைய இந்தச் சமுதாயத்தினர் ஒரே சமுதாயத்தினராவர். நான் உங்கள் இறைவனாவேன். எனவே நீங்கள் என்னையே வணங்குங்கள்.
  94. (நபிமார்களின் எதிரிகளாகிய) அவர்கள் தங்கள் மார்க்கத்தைத் தங்களுக்குள்ளே துண்டு துண்டாக்கி(த் தங்களுக்கு ஏற்ற பகுதிகளை எடுத்து)க் கொண்டனர்15. (ஆனால்) அவர்கள் யாவரும் எம்மிடமே திரும்பி வரக்கூடியவர்களாவர். ரு6
  95. எனவே நம்பிக்கை கொண்டவராய் இருக்கும் நிலையில், நற்செயல்களைச் செய்வோரின் முயற்சி வீணாவதில்லை. நாம் அதைப் (நற்செயல்களைப்) பதிவு செய்வோம்.
  96. ஏதேனும் ஓர் ஊரை நாம் அழித்து விட்டால், அவ்வூரில் வாழ்ந்து வந்தவர்கள் இவ்வுலகிற்குத் திரும்ப வர மாட்டார்கள் என்பது விதிக்கப்பட்டுள்ளது.
  97. இறுதியில் யாஜூஜூம், மாஜூஜூம் திறந்து விடப்படும் பொழுது அவர்கள் எல்லாக் குன்றுகளையும், கடல் அலைகளையும் தாண்டி உலகில் பரவி விடுவர்16.
  98. (இறைவனது ) உண்மையான வாக்குறுதி நெருங்கி விடும் போது நிராகரிப்பவர்களின் திறந்த கண்கள் திறந்தவாறே இருந்து விடும்17. (மேலும் அவர்கள் கூறுவார்கள்): எங்கள் மீது பரிதாபமே! நாங்கள் இந்த நாளைக் குறித்து முற்றிலும் கவனமற்றவர்களாகவே இருந்து வந்தோம். அது மட்டுமன்றி, நாங்கள் அநீதியிழைப்பவர்களாக இருந்தோம்.
  99. (அப்போது இவ்வாறு கூறப்படும்): நீங்களும், அல்லாஹ்வையன்றி நீங்கள் வணங்குபவையனைத்தும் நரகத்தின் விறகுகளே18. நீங்களெல்லாரும் அதில் நுழைவீர்கள்.
  100. அவர்கள் உண்மையிலேயே கடவுளர்களாக இருந்திருப்பின், அவர்கள் நரகத்திற்கு வந்திருக்க மாட்டார்கள். அவர்களெல்லாரும் அதில் நீண்ட காலம் வீழ்ந்து கிடப்பார்கள்.
  101. அதில் அவர்களுக்கு அழுகையின் புலம்பல் (மட்டுமே) இருக்கும். அவர்கள் அதில் (வேறெதையும்) கேட்க மாட்டார்கள்.
  102. நன்மை கிடைக்கும் என்ற நற்செய்தியினை ஏற்கனவே எம்மிடமிருந்து பெற்றவர்கள், அதிலிருந்து (நரகத்திலிருந்து) வெகு தொலைவில் விலகியே இருப்பார்கள்.
  103. அவர்கள் அதன் சப்தத்தைக் கூடக் கேட்க மாட்டார்கள். தங்கள் உள்ளம் விரும்பும் நிலையிலே அவர்கள் என்றென்றும் இருப்பர்.
  104. பெருந்துன்பங்கூட அவர்களைக் கவலைக்குள்ளாக்காது. மேலும் மலக்குகள் அவர்களைச் சந்திப்பார்கள். இது உங்களுக்கு வாக்களிக்கப்பட்ட உங்கள் நாளாகும் (என்று அவர்கள் கூறுவார்கள்).
  105. எழுதப்பட்ட பத்திரச் சுருளை சுருட்டிக் கொள்வது போன்று, நாம் வானத்தைச் சுருட்டும் நாளில் முதன்முறை நாம் உங்களைப் படைக்கத் தொடங்கியது போன்று திரும்பவும் அதனைச் செய்வோம்19. இது, நாம் கடமையாகக் கொண்டுள்ள வாக்குறுதியாகும். நிச்சயமாக நாம் அவ்வாறு செய்வோம்.
  106. (தாவூதின்) சங்கீதத்தில், சில அறிவுரைகளைக் கூறியதன் பின்னர் (புனித) பூமிக்கு என்னுடைய நல்லடியார்கள் வாரிசுகளாவார்கள் என்று வரைந்துள்ளோம்.
  107. (இறைவனை) வணங்கும் சமுதாயத்தினருக்கு இ(வ்விஷயத்)தில் ஒரு தூதுச் செய்தி உள்ளது20.
  108. நாம் உம்மை அனைத்து உலகங்களுக்கும் ஓர் அருளாகவே அனுப்பினோம்21.
  109. நீர் கூறுவீராக: உங்கள் இறைவன் ஒருவனே என்று தான் எனக்கு வஹி அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே நீங்கள் கட்டுப்படுவீர்களா?
  110. அவர்கள் புறக்கணித்து விட்டால், நீர் அவர்களிடம் கூறுவீராக. நான் உங்கள் எல்லோருக்கும் ஒன்றுபோல் எச்சரிக்கை செய்து விட்டேன். உங்களுக்கு வாக்களிக்கப்பட்டது அண்மையில் இருக்கிறதா அல்லது தொலைவில் இருக்கிறதா என்பது எனக்குத் தெரியாது.
  111. இறைவன், நீங்கள் பேச்சில் வெளிப்படுத்துவதையும் அறிகின்றான். நீங்கள் மறைத்து வைப்பதையும் அறிகின்றான்.
  112. அது ஒருவேளை உங்களுக்குச் சோதனையாகவும், குறிப்பிட்ட ஒரு காலம் வரை பயனளிப்பதாகவும் இருக்கலாம் என்பதும் எனக்குத் தெரியாது.
  113. (இந்த இறையறிவிப்பு வந்ததும் இறைத்தூதர்) கூறினார்கள்: என் இறைவா! நீ உண்மைக்கேற்ப தீர்ப்பளிப்பாயாக22. எங்கள் இறைவன் அளவற்ற அருளாளனாவான். (நிராகரிப்பவர்களே!) நீங்கள் கூறுபவற்றிற்கு எதிராக அவனிடமே உதவி கோரப்படுகின்றது. ரு7
Powered by Blogger.