78- அல்-நபா

அதிகாரம் அல்-நபா
அருளப் பெற்ற இடம்: மக்கா | வசனங்கள்: 41

பிரிவுகள்: 2


  1. அளவற்ற அருளாளனும் மேன்மேலும் கருணை காட்டுபவனுமாகிய அல்லாஹ்வின் பெயரால் (ஓதுகின்றேன்).
  2. இவர்கள் எதைப்பற்றி ஒருவரையொருவர் கேள்வி கேட்கின்றனர்?.
  3. மகத்தான ஒரு நிகழ்ச்சியின் செய்தியைப் பற்றி(யா?).
  4. அதைப்பற்றி அவர்கள் கருத்து வேற்றுமை கொண்டிருக்கின்றனர்.
  5. ஆம் (உண்மை அவர்களின் கொள்கைகளுக்கு மாற்றமானதாகும்.) விரைவில் அவர்கள் அறிந்து கொள்வர்.
  6. ஆம் மீண்டும் (நாம் கூறுகிறோம் உண்மை அவர்களின் கொள்கைகளுக்கு மாற்றமானது தான்.) விரைவில் அவர்கள் அறிந்து கொள்வர்.
  7. நாம் பூமியைப் படுக்கையாக ஆக்கவில்லையா?
  8. மலைகளை முலைகளாகவும்  ஆக்கவில்லையா?
  9. மேலும் நாம் உங்களை இணைகளாகப் படைத்துள்ளோம்.
  10. மேலும் உங்கள் தூக்கத்தை நாம் ஓய்விற்குரியதாக ஆக்கியுள்ளோம்.
  11. மேலும் இரவை நாம் ஒரு போர்வையாக ஆக்கியுள்ளோம்.
  12. மேலும் பகலை நாம் வாழ்வி(ன் செயல்பாட்டி)ற்குரியதாக ஆக்கியுள்ளோம்.
  13. மேலும் வலிமை வாய்ந்த (வானங்கள்) ஏழை உங்களுக்கு மேல் நாம் அமைத்தோம்.
  14. மேலும் நாம் சூரியனை ஒளிமயமான ஒரு விளக்காக ஆக்கியுள்ளோம்.
  15. கொட்டும் மேகங்களிலிருந்து மிகுதியாக பொழிந்து கொண்டிருக்கும் தண்ணீரை நாம் இறக்குகின்றோம்.
  16. அதனைக் கொண்டு தானியத்தையும், தாவர வகையையும், வெளிப்படுத்துவதற்காக
  17. செழித்தோங்கி வளரும் தோட்டங்களையும் நாம் (அதனை இறக்குகின்றோம்). 
  18. நிச்சயமாக தீர்ப்பு நாளிற்கு குறிப்பிட்ட ஒரு நேரம் உண்டு.
  19. அந்நாளில் எக்காளம் ஊதப்படும்.  அப்போது நீங்கள் திரள் திரளாக வருவீர்கள்.
  20. வானம் திறக்கப்பட்டு (எல்லாம்) கதவுகளாக ஆகிவிடும்.
  21. மலைகள் அகற்றப்பட்டு அவை கானல் நீர் (போன்று) ஆகிவிடும்.
  22. நிச்சயமாக நரகம் (அவர்களைத்) தாக்க பதுங்கியிருக்கிறது.
  23. அது கட்டுப்பட்டு நடக்காதவர்களுக்குத் தங்குமிடமாகும்.
  24. அவர்கள் அதில் பல வருடங்கள் தங்கியிருப்பார்கள்.
  25. கொதிநிலை சூட்டையும், கடுங்குளிச்சியையும் அன்றி
  26. அவர்கள் அதில் எந்த குளிர்ச்சியையோ நீரையோ சுவைக்கமாட்டார்கள்.
  27. (இதுவே அவர்களுக்கான) பொருத்தமான கூலி. (ஆகும்).
  28. நிச்சயமாக அவர்கள் எந்த கேள்வி கணக்கையும் பற்றி பயந்ததில்லை.
  29. மேலும் எம் அடையாளங்களை வன்மையாக பொய்யாக்கினர்.
  30. நாம் எல்லாவற்றையும் ஒரு நூலில் (முழுமையாகப்) பதிவு செய்து வைத்துள்ளோம்.
  31. எனவே நீங்கள் (தண்டனையைச்) சுவையுங்கள்; நாம் உங்களுக்குத் தண்டனையைத் தவிர வேறெதனையும் அதிகமாக்கமாட்டோம். ரு1
  32. நிச்சயமாய இறையச்சமுடையவர்களுக்கு வெற்றி (விதிக்கப்பட்டு) உள்ளது.
  33. (அதாவது சுவர் எழுப்பி அடைக்கப்பட்ட) தோட்டங்களும் திராட்சை(க்கொடி) களும்.
  34. ஒத்த வயதுடைய வாலிபப் பெண்களும்.
  35. வழிந்தோடும் கோப்பைகளும் (அவர்களுக்கு உண்டு).
  36. மேலும், அவர்கள் அதில் வீண் பேச்சையோ பொய்யையோ கேட்க மாட்டார்கள்.
  37. (இது) கணக்கிற்கேற்ற பரிசாக உம்முடைய இறைவனிடமிருந்து கிடைக்கும் நற்பலன் (ஆகும்).
  38. வானங்கள், பூமி, அவ்விரண்டிற்குமிடையிலுள்ளவை ஆகியவற்றிற்கெல்லாம் இறைவன், அளவற்ற அருளாளன்.  (அவனது அனுமதியின்றி) அவனிடம் பேசுவதற்கான ஆற்றல் அவர்களுக்கு இல்லை.
  39. அந்நாளில் முழுமை பெற்ற ஆவியும், வானவர்களும் அணி வகுத்து நிற்பார்கள்.  அளவற்ற அருளாளனாகிய (இறை)வன் எவருக்கு அனுமதியளிக்கின்றானோ, மேலும் எவர் சரியானதை மட்டும் பேசுவாரோ அவரைத் தவிர, மற்றவர்கள் பேசமாட்டார்கள்.
  40. அது உண்மைக்குரிய நாளாகும்.  எனவே விரும்புபவர், தமது இறைவனிடம் புகலிடம் தேடிக்கொள்ளட்டும்.
  41. நிச்சயமாக நாம் உங்களை நெருங்கியிருக்கும் தண்டனையைப் பற்றி எச்சரித்துள்ளோம்.  அந்நாளில் மனிதன். தனது கைகள் முன்னால் அனுப்பியுள்ளதைக் காண்பான்.  அந்தோ! நான் வெறும் மண்ணாக இருந்திருக்க வேண்டாமா? என்று நிராகரிப்பவன் கூறுவான். ரு2

Powered by Blogger.