37- அஸ்-ஸாஃப்ஃபாத்

அதிகாரம்: அஸ்-ஸாஃப்ஃபாத்
அருளப்பெற்ற இடம்: மக்கா | வசனங்கள்: 183

பிரிவுகள்: 5

அதிகாரம்: அஸ்-ஸாஃப்ஃபாத்
அருளப்பெற்ற இடம்: மக்கா | வசனங்கள்: 183

பிரிவுகள்: 5



  1. அளவற்ற அருளாளனும், மேன்மேலும் கருணைகாட்டுபவனுமாகிய அல்லாஹ்வின் பெயரால் (ஓதுகின்றேன்). 
  2. (உண்மையின் பகைவர்களை எதிர்த்து) அணியணியாக நிற்போரைச்1 சான்றாகக் காட்டுகிறேன். 
  3. மேலும் தீமை செய்வோரைக் கண்டிப்பவர்களையும், 
  4. (இறைவனை) நினைவூட்டக் கூடியதை (குர்ஆனை) ஓதுகின்றவர்களையும், 
  5. நிச்சயமாக உங்களின் வணக்கத்திற்குரியவன் ஒருவனேயாவான் (என்பதற்குச் சான்றாகக் காட்டுகிறேன்). 
  6. அவன் வானங்களுக்கும், பூமிக்கும், அவற்றிற்கு இடையிலுள்ளவற்றிற்கெல்லாம் இறைவன்; சூரியன் உதிக்கும் இடங்களுக்கும் இறைவன். 
  7. கீழ்வானத்தை நட்சத்திரங்களின் அலங்காரத்தைக் கொண்டு நாம் அழகுபடுத்தி வைத்துள்ளோம். 
  8. நாம் அதனை வரம்பு மீறும் எல்லா ஷைத்தானிடமிருந்தும் காப்பாற்றியும் உள்ளோம். 
  9. வானங்களிலுள்ள பெருந்தகைகளின்2 செய்திகளை அவர்கள் கேட்பதில்லை. மேலும் எல்லாப் பக்கங்களிலிருந்தும் அவர்கள் தாக்கப்படுகின்றனர்3. 
  10. அவர்கள் அகற்ற(வும்) படுகின்றனர். மேலும் அவர்களுக்கு நிலையான தண்டனை உண்டு.
  11. ஆனால் ஒருவன் (ஏதாவதொன்றைப்) பறித்துச் சென்றால், அவனை எரிகற்கள் பின்தொடர்கின்றன4. 
  12. எனவே நீர் அவர்களிடம், அவர்களின் படைப்பு கடினமானதா அல்லது நாம் படைத்துள்ளவையா? என்று கேட்பீராக. நிச்சயமாக நாம் அவர்களை ஒட்டும் களிமண்ணால் படைத்துள்ளோம். 
  13. உண்மையில் (அவர்களின் பேச்சைக் கேட்டு) நீர் வியப்படைகிறீர். (உம் பேச்சைக் கேட்டு) அவர்கள் ஏளனம் செய்கின்றனர். 
  14. அவர்களுக்கு அறிவுரை கூறப்பட்டால், அவர்கள் கவனம் செலுத்துவதில்லை. 
  15. அவர்கள் எந்த ஓர் அடையாளத்தைக் காணும் போதும் (அதனை) ஏளனமாகக் கருதுகின்றனர். 
  16. மேலும் அவர்கள் இது தெளிவான மாயவித்தையே என்று கூறுகின்றனர். 
  17. என்ன! நாங்கள் மரணமடைந்து, மண்ணாகவும், எலும்புகளாகவும் ஆகி விடும் போது, நாங்கள் (மீண்டும்) எழுப்பப்படுவோமா? 
  18. எங்களுடைய சென்ற கால மூதாதையர்களுமா(எழுப்பப்படுவர்?). 
  19. நீர் கூறுவீராக: ஆம்; மேலும் நீங்கள் இழிவடைந்தவராகி விடுவீர்கள். 
  20. அது ஒரே ஒரு அதட்டலேயாகும். உடனே அவர்கள் (உயிர் பெற்று) பார்க்கத் தொடங்கி விடுவர்.
  21. எங்கள் மீது அந்தோ பரிதாபம்! இதுவே தீர்ப்பு வழங்கும் நாள் என்று அவர்கள் கூறுவார்கள். 
  22. நீங்கள் மறுத்து வந்த தீர்ப்பு நாள் இதுவே (எனக் கூறப்படும்). ரு1 
  23. அநீதியிழைத்தவர்களையும், அவர்களின் தோழர்களையும், அவர்கள் வணங்கி வந்தவர்களையும் ஒன்று திரட்டுங்கள் (என நாம் வானவர்களிடம் கட்டளையிடுவோம்). 
  24. (அதாவது) அல்லாஹ்வையன்றி (அவர்கள் வணங்கி வந்தவர்களை). மேலும், அவர்களை நரகின் வழியில் அழைத்துச் செல்லுங்கள். 
  25. பின்னர், அவர்களை (அங்கு) நிறுத்தி விடுங்கள். (ஏனெனில்) நிச்சயமாக அவர்கள் கேள்வி கேட்கப்படுவார்கள். 
  26. நீங்கள் ஒருவருக்கொருவர் உதவாமலிருக்க உங்களுக்கு என்ன நேர்ந்தது?(என்று அவர்களிடம் கேட்கப்படும்). 
  27. அதுமட்டுமின்றி, அந்நாளில் அவர்கள் முற்றிலும் சரணடைந்து விடுவார்கள். 
  28. சிலர், சிலரை நோக்கி விவாதிப்பவராகத் திரும்புவார்கள். 
  29. நிச்சயமாக நீங்கள் எங்களிடம் வலப்பக்கத்திலிருந்து வந்தீர்கள் என்று அவர்கள் கூறுவர்5. 
  30. மற்றவர்கள் கூறுவார்கள்: அவ்வாறன்று; நீங்கள் நம்பிக்கை கொள்வோராகவே இருக்கவில்லை.
  31. உங்கள் மீது எங்களுக்கு எந்த அதிகாரமும் இருந்ததில்லை; மாறாக, நீங்களே வரம்பு மீறிய சமுதாயத்தினராக இருந்தீர்கள். 
  32. எனவே நிச்சயமாக நாம் (தண்டனையைச்) சுவைத்தாக வேண்டும் என்ற நம் இறைவனின் வாக்கு நமக்கெதிராக உண்மையாயிற்று. 
  33. நாங்களே வழிகேட்டில் இருந்ததனால், நாங்கள் உங்களையும் வழி தவறச் செய்தோம். 
  34. நிச்சயமாக அவர்கள் எல்லோரும் அந்நாளில் தண்டனையில் பங்காளிகளாவார்கள். 
  35. நிச்சயமாக நாம் குற்றவாளிகளுடன் இவ்வாறே நடந்து கொள்கின்றோம். 
  36. ஏனெனில், அல்லாஹ்வையன்றி வேறெவரும் வணக்கத்திற்குரியவர் இல்லை என்று அவர்களிடம் கூறப்பட்ட பொழுது, அவர்கள் கர்வம் கொண்டிருந்தனர். 
  37. மேலும் பைத்தியம் பிடித்த ஒரு கவிஞருக்காக நாங்கள் எங்கள் கடவுளரை விட்டு விடுவோமா என்று கூறினர். 
  38. அவ்வாறன்று; மாறாக, அவர் (ஹஸ்ரத் முஹம்மது நபி) உண்மையுடன் வந்து எல்லா தூதர்களையும் மெய்ப்படுத்தியுள்ளார். 
  39. (நிராகரித்தவர்களே!) நிச்சயமாக நீங்கள் வேதனையளிக்கக் கூடிய தண்டனையைச் சுவைக்கப் போகிறீர்கள். 
  40. நீங்கள் செய்தவற்றிற்கே உங்களுக்குக் கூலி கொடுக்கப்படும்.
  41. அல்லாஹ்வின் தேர்ந்தெடுக்கப்பட்ட அடியார்களைத் தவிர, (அவர்களுக்கு வேதனையளிக்கக் கூடிய தண்டனை அளிக்கப்படுவதில்லை). 
  42. இத்தகையோருக்கு அறியப்பட்ட உணவு உண்டு6. 
  43. (அதாவது) பழங்கள்7; மேலும் அவர்கள் கண்ணியம் அளிக்கப்படுவார்கள். 
  44. அருள் நிறைந்த தோட்டங்களில், 
  45. (அவர்கள்) ஒருவரையொருவர் நோக்கியவாறு மஞ்சங்களில் அமர்ந்திருப்பார்கள். 
  46. நீரூற்றின் தண்ணீர் நிரப்பப்பட்ட குவளைகள் அவர்களுக்கு வழங்கப்படும். 
  47. (அந்த ஊற்று) வெண்மையானது(ம்), அருந்துபவர்களுக்கு இன்சுவை அளிக்கக் கூடியது(மாகும்). 
  48. அதில் போதை இருக்காது. மேலும் அதனால் அவர்கள் மதியிழந்து விடவும் மாட்டார்கள். 
  49. அவர்களுடன் கீழ்நோக்கிய பார்வையுடைய, பெரிய கண்களையுடைய பெண்கள் இருப்பார்கள். 
  50. அவர்கள் மூடப்பட்ட முட்டை8 களைப் போன்றவர்களாக இருப்பர்.
  51. பின்னர் அவர்களுள் சிலர், சிலரை நோக்கி கேள்வி கேட்டவராய் இருப்பார்கள். 
  52. அவர்களுள் ஒருவர் கூறுவார்: எனக்கு ஒரு தோழன் இருந்தான்; 
  53. நிச்சயமாக (மறுமையில் எழுப்பப்படுவதை) நம்புபவர்களைச் சேர்ந்தவனா நீயும்? என்று அவன் கூறி வந்தான். 
  54. நாங்கள் மரணமடைந்து, மண்ணாகவும், எலும்புகளாகவும் ஆகி விடும் போது, நிச்சயமாக எங்களுக்கு (எங்கள் செயல்களுக்குரிய) கூலி கொடுக்கப்படுமா? 
  55. நீங்கள் (அவனை) எட்டிப் பார்ப்பீர்களா என்று அவர் (நம்பிக்கையாளர்) வினவுவார். 
  56. பின்னர் அவரே(அவனைப் பற்றித் தெரிந்து கொள்ள) முயன்று, நகரத்தின் நடுவில் அவனைக் காண்பார். 
  57. (அடுத்து) அவர் (அவனிடம்) கூறுவார்: அல்லாஹ்வின் மேல் ஆணையாக, நீ என்னையும் அழிவிற்குள்ளாக்கவே பார்த்தாய். 
  58. என் இறைவனது அருள் இல்லாமல் இருந்திருப்பின், நானும் இன்று (நரகத்திற்குக்) கொண்டு வரப்பட்டவர்களைச் சேர்ந்தவனாக இருந்திருப்பேன். 
  59. (இன்னொரு முறை) நாம் மரணமடைபவர்கள் அல்லவா?9 
  60. நமது இம் முதல் மரணத்தைத் தவிர மேலும் நாம் தண்டிக்கப்படுபவர்கள் அல்லவா?
  61. நிச்சயமாக, இதுவே மகத்தான வெற்றியாகும். 
  62. செயலாற்றுவோர் இது போன்ற நிலையை அடையவே முயல வேண்டும். 
  63. விருந்தோம்பலில் சிறந்தது இதுவா? அல்லது கள்ளி மரமா? 
  64. நிச்சயமாக நாம் அதனை அநீதி இழைப்போருக்கு ஒரு சோதனையாக ஆக்கியுள்ளோம். 
  65. அது நரகத்தின் அடிப்பகுதியிலிருந்து வெளிவரும் ஒரு மரமாகும். 
  66. அதன் பழம் பாம்புகளின் தலைகளைப் போன்றிருக்கும். 
  67. அவர்கள் அதனை உண்டு, அதைக் கொண்டு தங்கள் வயிற்றை நிரப்பிக் கொள்வார்கள். 
  68. பின்னர் இன்னும் (குடிப்பதற்காக) மிக அதிகமாகக் கொதிக்கும் நீர்க்கலவையும் அவர்களுக்கு உண்டு. 
  69. பின்னர், நிச்சயமாக அவர்கள் திரும்பிச் செல்வது நரகத்திற்கே. 
  70. நிச்சயமாக அவர்கள் தம் மூதாதையர்களை வழி தவறியவர்களாகக் கண்டனர்.
  71. இவர்கள், அவர்களின் அடிச்சுவடுகளில் விரைந்தனர். 
  72. இவர்களுக்கு முன்னர், முற்காலத்து மக்களுள் பெரும்பாலார் வழி தவறியிருந்தனர். 
  73. நாம் அவர்களுக்கிடையே எச்சரிக்கையாளர்களை அனுப்பியுள்ளோம். 
  74. எனவே, எச்சரிக்கை செய்யப்பட்டவர்களின் முடிவு எவ்வாறு (தீயதாக) ஆயிற்று என்பதனைப் பார்ப்பீராக. 
  75. அல்லாஹ்வின் தேர்ந்தெடுக்கப்பட்ட அடியார்களைத் தவிர. ரு2 
  76. நிச்சயமாக நூஹ் எம்மை அழைத்தார். (வேண்டுதலுக்கு) நாம் மிகச்சிறந்த பதிலளிப்பவன் ஆவோம். 
  77. நாம் அவரையும், அவருடைய குடும்பத்தினரையும் பெருங் கவலையிலிருந்து காப்பாற்றினோம். 
  78. நாம் அவரது சந்ததிகளை (உலகில்) நிலைத்திருக்கச் செய்தோம். 
  79. நாம் அவ(ரது நற்பெ)ரைப் பின்னர் தோன்றிய வழித் தோன்றல்களுக்கிடையே நிலைத்திருக்குமாறு செய்தோம். 
  80. எல்லாச் சமுதாயங்களிடமிருந்தும் நூஹ்வுக்குச் சாந்தி(யின் வேண்டுதல்) கிடைக்கின்றது.
  81. நிச்சயமாக நாம் நன்மை செய்பவர்களுக்கு இவ்வாறே நற்பலன் வழங்குகின்றோம். 
  82. நிச்சயமாக அவர் நம்பிக்கை கொண்ட எமது அடியார்களைச் சேர்ந்தவராக விளங்கினார். 
  83. பின்னர் நாம் மற்றவர்களை மூழ்கடித்து விட்டோம். 
  84. நிச்சயமாக இப்ராஹீ(மு)ம் அவரது கூட்டத்தைச் சேர்ந்தவராகவே விளங்கினார். 
  85. அவர் தமது இறைவனிடம் தூய உள்ளத்துடன் வந்தபோது; 
  86. அவர் தமது தந்தையிடமும், தமது சமுதாயத்தினரிடமும், நீங்கள் எதனை வணங்குகின்றீர்கள்? என்று கேட்டார். 
  87. அல்லாஹ்வையன்றிப் பொய்(யானவற்றைத் தவிர வேறொன்றுமில்லாத கற் பனை)க் கடவுள்களை நீங்கள் விரும்புகின்றீர்களா? 
  88. எனவே உலகங்களின் இறைவனைப் பற்றி உங்கள் எண்ணம் என்ன? (என்று கேட்டார்).
  89. பின்னர் அவர் நட்சத்திரங்களை ஒரு பார்வை பார்த்தார். 
  90. நிச்சயமாக நான் நோயாளியாகப் போகிறேன் என்றார்10.
  91. எனவே அவர்கள், அவரை விட்டு விலகி திரும்பிச் சென்று விட்டனர். 
  92. பின்னர் அவர் அவர்களின் கடவுள்களிடம் இரகசியமாகச் சென்று கேட்டார்: (அவர்களைப் பார்த்து) நீங்கள் எதையும் சாப்பிடுவதில்லையா? 
  93. நீங்கள் பேசாமலிருக்க உங்களுக்கு என்ன நேர்ந்தது? 
  94. பிறகு அவர் ரகசியமாக தமது வலக்கையால் அவற்றை வலுவாகத் தாக்கினார். 
  95. பின்னர் அம் மக்கள் அவரிடம் விரைந்து வந்தனர். 
  96. (இப்ராஹீம் அவர்களிடம்) நீங்களே செதுக்கிக் கொண்டவற்றை நீங்கள் வணங்குகின்றீர்களா? 
  97. ஆனால் அல்லாஹ் தான் உங்களையும், நீங்கள் செய்வதையும் படைத்துள்ளான் என்றார்11. 
  98. நீங்கள் அவனுக்காக ஒரு சுவரை எழுப்புங்கள், (அதில் நெருப்பை மூட்டுங்கள்). பின்னர் அவனை நெருப்பில் எறிந்து விடுங்கள் என்று அவர்கள் கூறினர். 
  99. இவ்வாறு அவர்கள், அவருக்கு எதிராகத் (தீய) திட்டம் ஒன்றை நாடினர். ஆனால் நாம் அவர்களை மிக்க இழிவடைந்தவர்களாக்கி விட்டோம். 
  100. நான் என் இறைவனிடம் செல்கிறேன்; நிச்சயமாக அவன் எனக்கு வழி காட்டுவான் என்று அவர் கூறினார்.
  101. என் இறைவா! நீ எனக்கு நல்ல சந்ததியைத் தந்தருள்வாயாக ( என்று அவர் வேண்டினார்). 
  102. எனவே பொறுமைமிக்க ஒரு மகனைப் பற்றிய நற்செய்தியினை நாம் அவருக்கு வழங்கினோம். 
  103. அவன், அவருடன் வேகமாக நடந்து செல்வதற்குரிய வயதை அடைந்த போது, என்னருமை மகனே! நான் உன்னை அறுப்பதை(ப் போன்று) ஒரு கனவில் கண்டேன்12; எனவே (அதனைப் பற்றி) உன் கருத்து என்னவென்பதை நீ முடிவு செய், என்று அவர் கூறினார். (அதற்கு) என் தந்தையே! உமக்குக் கட்டளையிடப்பட்டவாறு நீர் செய்வீராக; அல்லாஹ் நாடினால், நீர் என்னை (எனது நம்பிக்கையில்) நிலைத்திருப்பவனாகவே காண்பீர் என்று அவர் கூறினார். 
  104. அவ்விருவரும் (இறைவனது விருப்பத்திற்குக்) கீழ்ப்படிந்து, அவர், அவனை முகங்குப்புறக் கிடத்திய போது 13, 
  105. நாம் அவரை, இப்ராஹீமே! என அழைத்தோம். 
  106. நிச்சயமாக நீர் அக்கனவை நிறைவேற்றி விட்டீர்; நிச்சயமாக நாம், நன்மை செய்பவர்களுக்கு இவ்வாறே நற்பலனை வழங்குகின்றோம்14 (என்று கூறினோம்).  
  107. நிச்சயமாக இது மிகத்தெளிவான ஒரு சோதனையாக இருந்தது. 
  108. (இஸ்மாயீலாகிய) அவரை ஒரு பெரும் தியாகத்தின் மூலம் நாம் விடுவித்தோம்15. 
  109. மேலும் நாம் அவ(ரது நற்பெய)ரைப் பின்னர் தோன்றிய சமுதாயங்களுக்கிடையே நிலைத்திருக்குமாறு செய்தோம். 
  110. இப்ராஹீமுக்குச் சாந்தி உண்டாவதாக!
  111. நாம், நன்மை செய்பவர்களுக்கு இவ்வாறே நற்பலன் வழங்குகின்றோம். 
  112. நிச்சயமாக அவர் நம்பிக்கை கொண்ட எமது அடியார்களைச் சார்ந்தவராக இருந்தார். 
  113. நபியாகவும், நல்லவர்களைச் சேர்ந்தவராகவும் விளங்கிய இஸ்ஹாக்கைப் பற்றிய நற்செய்தியினை நாம் அவருக்கு வழங்கினோம். 
  114. நாம் அவருக்கும், இஸ்ஹாக்கிற்கும் அருட்களை வழங்கினோம். அவ்விருவரது வழித்தோன்றல்களுள் சிலர் நன்மை செய்பவர்களாகவும், மற்றுஞ் சிலர் தங்களுக்கே தெளிவாகக் கொடுமை செய்பவர்களாகவும் இருக்கின்றனர். ரு3 
  115. மேலும் மூஸாவுக்கும், ஹாரூனுக்கும் நாம் பேரருள் செய்தோம். 
  116. நாம் அவ்விருவரையும், அவர்களின் சமுதாயத்தினரையும் பெரும் துயரத்திலிருந்து காப்பாற்றினோம். 
  117. நாம் அவர்களுக்கு உதவி செய்தோம். எனவே அவர்களே வெற்றி பெற்றவர்களாய் விளங்கினர். 
  118. (கட்டளைகளைத்) தெளிவாக விளக்கும் ஒரு வேதத்தை நாம் அவர்களுக்கு வழங்கினோம். 
  119. நாம் அவர்களுக்கு நேரான வழியைக் காட்டினோம். 
  120. நாம் அவ(ரது நற்பெய)ரைப் பின்னர் தோன்றியவர்களுக்கிடைநே நிலைத்திருக்குமாறு செய்தோம்.
  121. மூஸாவுக்கும், ஹாரூனுக்கும் சாந்தி உண்டாவதாக! 
  122. நிச்சயமாக நாம் நன்மை செய்பவர்களுக்கு இவ்வாறே கூலி வழங்குகின்றோம். 
  123. நிச்சயமாக அவ்விருவரும் நம்பிக்கை கொண்ட எமது அடியார்களைச் சேர்ந்தவர்களாகவே விளங்கினர். 
  124. நிச்சயமாக இல்யாஸு(ம்) தூதர்களைச் சேர்ந்தவராக விளங்கினார். 
  125. அவர் தம் சமுதாயத்தினரிடம், நீங்கள் இறைவனுக்கு அஞ்சி நடக்க மாட்டீர்களா? என்று கூறிய நேரத்தை நினைத்துப் பார்ப்பீராக! 
  126. நீங்கள் ப அல் எனும் சிலையை அழைத்து, படைப்போருள் மிகச்சிறந்த(வனான இறை)வனை விட்டு விடுகிறீர்களா? 
  127. (அல்லாஹ்வே) உங்கள் இறைவனும், உங்கள் முந்தைய மூதாதையர்களுக்கும் இறைவனுமாவான்(என்றார்). 
  128. ஆனால் அவர்கள் அவரைப் பொய்ப்படுத்தினர். எனவே நிச்சயமாக அவர்கள் (தண்டனை வழங்கப்படுவதற்காகக்) கொண்டு வரப்படுவர். 
  129. தேர்ந்தெடுக்கப்பட்ட அல்லாஹ்வின் அடியார்களைத் தவிர. (இவர்கள் அதற்காகக் கொண்டு வரப்படமாட்டார்கள்). 
  130. நாம் அவ(ரது நற்பெய)ரைப் பின்னர் தோன்றிய வழித்தோன்றல்களுக்கிடையே நிலைத்திருக்குமாறு செய்தோம்.
  131. இல்யாஸீனுக்கு என்றும் சாந்தி உண்டாவதாக!16 
  132. நிச்சயமாக நாம் நன்மை செய்பவர்களுக்கு இவ்வாறே கூலி வழங்குகின்றோம். 
  133. நிச்சயமாக அவர் நம்பிக்கை கொண்ட எமது அடியார்களைச் சேர்ந்தவராக விளங்கினார். 
  134. நிச்சயமாக லூத்து(ம்) தூதர்களைச் சேர்ந்தவராக விளங்கினார். 
  135. நாம் அவரையும், அவர் குடும்பத்தினர் யாவரையும் காப்பாற்றிய நேரத்தை நினைத்துப் பார்ப்பீராக! 
  136. பின்தங்கி விடுவோரைச் சேர்ந்த ஒரு கிழவியைத் தவிர. 
  137. பின்னர் மற்றவர்களை முற்றிலும் அழித்து விட்டோம். 
  138. மேலும் நிச்சயமாக நீங்கள் காலையில் அவர்(களின் ஊர்)களைக் கடந்து செல்கிறீர்கள். 
  139. மாலையிலும் (கடந்து செல்கிறீர்கள்)17. பின்னர் நீங்கள் ஏன் அறிந்து கொள்வதில்லை. ரு4 
  140. நிச்சயமாக யூனுஸு(ம்) தூதர்களைச் சார்ந்தவராக விளங்கினார்.
  141. நிரப்பப்படவிருந்த கப்பலுக்கு அவர் விரைவாகச் சென்ற நேரத்தை (நினைத்துப் பாருங்கள்). 
  142. (கடல் கொந்தளிப்பு ஏற்பட்டு கப்பல் மூழ்கவிருந்த நேரத்தில்) அவர்கள் சீட்டுக் குலுக்கிப் போட்டனர். (அதில் அவரது பெயர் வந்ததனால்) அவர் கப்பலிலிருந்து கடலில் எறியப்படுபவராகி விட்டார். 
  143. அவர் தம்மை (நினைத்து) வருந்திக் கொண்டிருந்த வேளையில் ஒரு மீன் அவரை விழுங்கி விட்டது. 
  144. அவர் (இறைவனது) தூய்மையினை எடுத்துரைப்பவர்களைச் சேர்ந்தவராக இல்லாமலிருந்திருப்பின், 
  145. அவர் எழுப்பப்படும் நாள் வரை அதன் வயிற்றில் இருந்திருப்பார். (அவர் மரணமடைந்திருப்பார்). 
  146. பின்னர் நாம் அவரை ஒரு வெட்டவெளி நிலப்பரப்பில் எறிந்தோம்18. அப்பொழுது அவர் நோயுற்றவராக இருந்தார். 
  147. நாம் அவருக்குப் பக்கத்தில் ஒரு சுரைச் செடியை முளைக்கச் செய்தோம். 
  148. நாம் அவரை ஒரு இலட்சம் அல்லது அதனை விட மிகுதியானவர்களுக்குத் தூதராக அனுப்பி வைத்தோம். 
  149. அவர்கள் (எல்லோரும்) நம்பிக்கை கொண்டனர். எனவே நாம் அவர்களை ஒரு (நீண்ட) காலம் வரை உலகப் பயன் அடையச் செய்தோம். 
  150. இப்பொழுது நீர் (நிராகரிப்பவர்களாகிய) அவர்களிடம், அவர்களுக்கு ஆண் மக்கள் இருக்க, உமது இறைவனுக்கு மட்டும் பெண் மக்களா என்று கேட்பீராக.
  151. அல்லது அவர்கள் சாட்சிகளாக இருக்க, நாம் வானவர்களைப் பெண்களாகப் படைத்துள்ளோமா? 
  152. நன்றாகக் கேளுங்கள். அவர்களின் பொய்களில் இக்கூற்றும் ஒன்றாகும். 
  153. (அதாவது) அல்லாஹ் (பிள்ளைகளைப்) பெற்றுள்ளான் (என்பது). நிச்சயமாக அவர்கள் பொய்யர்களே. 
  154. அவன் ஆண் மக்களை விட, பெண் மக்களைத் தேர்ந்தெடுத்துக் கொண்டானா?19 
  155. உங்களுக்கு என்ன நேர்ந்து விட்டது? நீங்கள் எவ்வாறு தீர்ப்பு கூறுகின்றீர்கள்? 
  156. நீங்கள் சிந்திக்க மாட்டீர்களா? 
  157. அல்லது உங்களிடம் ஏதேனும் தெளிவான சான்று உள்ளதா? 
  158. நீங்கள் உண்மையாளர்களாயின், உங்கள் வேதத்தைக் கொண்டு வாருங்கள். 
  159. அவர்கள் அவனுக்கும், ஜின்களுக்கும் இடையே உறவை ஏற்படுத்துகின்றனர். ஆனால் (தீர்ப்பளிக்கப்படுவதற்காக இறைவன் முன்) தாங்கள் கொண்டு செல்லப்படுபவர் என்று ஜின்கள் நன்கு தெரிந்திருக்கின்றனர். 
  160. அவர்கள் கூறுபவற்றிலிருந்து அல்லாஹ் தூயவன்.
  161. அல்லாஹ்வின் களங்கமற்ற அடியார்களைத் தவிர. ( அவர்கள் அவ்வாறு செய்வதில்லை).  
  162. நிச்சயமாக நீங்களும், நீங்கள் வணங்குபவைகளும்; 
  163. உங்களுள் எவராலும் (எவரையும்) அவனுக்கெதிராக வழிகெடுக்க முடியாது. 
  164. நரகில் நுழைய வேண்டியவர்களைத் தவிர. 
  165. (நீர் கூறுவீராக) எங்கள் எல்லோருக்கும் குறிப்பிட்ட ஓர் இடம் உண்டு. 
  166. நிச்சயமாக நாங்கள் எல்லோரும் (இறைவன் முன்) அணி வகுத்து நிற்பவர்களாவோம்20. 
  167. நிச்சயமாக நாங்கள் (இறைத்) தூய்மையினை எடுத்துரைப்பவர்களுமாவோம். 
  168. இவர்கள் (மக்காவாசிகள் இவ்வாறு) கூறியே வந்தனர். 
  169. முன் சென்றவர்களிடம் (வந்ததைப் ) போன்று எங்களிடமும் தூதர்21 வந்திருந்தால், 
  170. நாங்கள் அல்லாஹ்வின் நல்லடியார்களைச் சேர்ந்தவராக இருந்திருப்போம்.
  171. ஆனால் (அவர், அவர்களிடம் வந்தபோது) அவரை, அவர்கள் நிராகரித்து விட்டனர். எனவே அவர்கள் (தங்கள் முடிவை) விரைவில் அறிந்து கொள்வர். 
  172. தூதர்களாகிய நம் அடியார்களைக் குறித்து நம் தீர்ப்பு ஏற்கனவே நிகழ்ந்து விட்டது. 
  173. (அதாவது) நிச்சயமாக அவர்களுக்கே உதவி அளிக்கப்படும். 
  174. (மேலும்) எமது படையின(ராகிய நம்பிக்கையாள)ர்களே கட்டாயம் வெல்வர். 
  175. எனவே நீர் சிறிது காலம் அவர்களிடமிருந்து விலகி விடுவீராக. 
  176. மேலும் நீர் அவர்களை நன்கு பார்த்துக் கொண்டிருப்பீராக. அவர்களும் விரைவில் (தங்கள் முடிவைக்) கண்டு கொள்வர். 
  177. அவர்கள் நமது தண்டனை பெற அவசரப்படுகிறார்களா? 
  178. ஆனால் அது அவர்களது முற்றத்தில் இறங்கும் போது, எச்சரிக்கப்பட்டவர்களுக்கு அது தீய விடியற்காலையாக இருக்கும். 
  179. எனவே நீர் சிறிது காலம் அவர்களை விட்டு விலகி விடுவீராக. 
  180. மேலும் நீர் நன்கு பார்த்துக் கொண்டிருப்பீராக. நிச்சயமாக அவர்களும் (தங்கள் முடிவைக்) கண்டு கொள்வர்.
  181. கண்ணியமிகு இறைவனாகிய உமது இறைவன் அவர்கள் கூறுபவற்றிலிருந்து தூயவனாவான். 
  182. தூதர்களுக்கு என்றென்றும் சாந்தி நிலவுவதாக! 
  183. உலகங்களுக்கெல்லாம் இறைவனாகிய அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும்! ரு5
Powered by Blogger.