36- யாஸீன்

அதிகாரம் : யாஸீன்
அருளப்பெற்ற இடம் : மக்கா | வசனங்கள் : 84

பிரிவுகள் : 5



  1. அளவற்ற அருளாளனும், மேன்மேலும் கருணை காட்டுபவனுமாகிய அல்லாஹ்வின் பெயரால் (ஓதுகின்றேன்).
  2. தலைவரே1. 
  3. (நாம்) ஞானம் நிறைந்த குர்ஆனை (நீர் தலைவரென்பதற்கு) சான்றாக வழங்குகிறோம்2. 
  4. நிச்சயமாக நீர் தூதர்களைச் சேர்ந்த (ஒரு)வர். 
  5. (நீர்) நேரான வழியில் (இருக்கின்றீர்). 
  6. (இது) வல்லோனும், மேன்மேலும் கருணைகாட்டுபவனுமாகிய (இறை)வனால் இறக்கப்பட்டதாகும். 
  7. எச்சரிக்கை செய்யப்படாத மூதாதையரைக் கொண்ட மக்களுக்கு நீர் எச்சரிக்கை செய்வதற்காக (இது அருளப்பட்டுள்ளது). மேலும் அவர்கள் கவனமற்றவர்களாவார்கள். 
  8. நிச்சயமாக (நம்) வாக்கு3 அவர்களுள் பெரும்பாலார் குறித்து, உண்மையாயிற்று. ஏனெனில் அவர்கள் நம்பிக்கை கொள்வதில்லை. 
  9. நாம் அவர்களின் கழுத்துக்களில் விலங்குகளை4 மாட்டியுள்ளோம். அவை (அவர்களின்) தாடை வரை உள்ளன. அதனால் அவர்களுடைய தலைகள் பின்னால் தள்ளப்படுகின்றன. 
  10. நாம் அவர்களுக்கு முன்னால் ஒரு தடையை ஏற்படுத்தியுள்ளோம். அவர்களுக்குப் பின்னாலும் ஒரு தடையை (ஏற்படுத்தியுள்ளோம்)5. நாம் அவர்களை மூடியுள்ளோம். எனவே அவர்களால் பார்க்க முடிவதில்லை.
  11. நீர் அவர்களுக்கு எச்சரிக்கை செய்வதும், எச்சரிக்கை செய்யாதிருப்பதும் சமமானதே. அவர்கள் நம்பிக்கை கொள்ளமாட்டார்கள். 
  12. நல்லுபதேசத்தைப் பின்பற்றி, அளவற்ற அருளாளனாகிய(இறை)வனுக்குத் தனிமையில் அஞ்சுபவருக்கு மட்டுமே உம்மால் எச்சரிக்கை செய்ய முடியும். எனவே நீர் அவருக்கு மன்னிப்பையும், கண்ணியமான நற்பலன் பற்றிய நற்செய்தியையும் வழங்குவீராக. 
  13. நிச்சயமாக நாமே மரணமடைந்தவர்களுக்கு உயிர் கொடுக்கிறோம். மேலும் அவர்கள் முன்னே அனுப்புபவற்றையும், அவர்கள் பின்னால் விட்டுச் செல்பவற்றையும் பதிவு செய்கிறோம்; தெளிவான ஒரு பதிவேட்டில் ஒவ்வொன்றையும் பதிவு செய்துள்ளோம்.  
  14. ஒரு நகர மக்களின் எடுத்துக்காட்டை நீர் அவர்களுக்கு விளக்குவீராக. அவர்களிடம் தூதர்கள் வந்தபோது; 
  15. (அதாவது) நாம் அவர்களிடம் இரண்டு தூதர்களை அனுப்பினோம்; அவ்விருவரையும் அவர்கள் பொய்யாக்கினர். எனவே மூன்றாவது ஒருவரைக் கொண்டு, அவ்விரு தூதர்களையும் நாம் வலிமைப்படுத்தினோம். எனவே நிச்சயமாக நாங்கள், உங்களிடம் தூதர்களாக அனுப்பப்பட்டுள்ளோம் என்று அவர்கள் கூறினர். 
  16. (அதற்குப் பதிலாக) நீங்கள் எங்களைப் போன்ற மனிதர்களேயாவீர்கள் என்றும், அளவற்ற அருளாளனாகிய (இறை)வன் எதனையும் இறக்கவில்லை; நீங்கள் பொய்யையே கூறுகின்றீர்கள் என்றும் அவர்கள் கூறினர். 
  17. அவர்கள் கூறினர்: நிச்சயமாக நாங்கள் உங்களிடம் தூதர்களாக அனுப்பப்பட்டுள்ளோம் என்பதை எங்கள் இறைவன் அறிவான்;  
  18. எங்கள் பணி, தூதுச் செய்தியினைத் தெளிவாக எட்ட வைப்பது மட்டுமேயாகும். 
  19. நிச்சயமாக நாங்கள், உங்களைக் கெட்ட சகுனமாகக் கருதுகிறோம். நீங்கள் விலகிக் கொள்ளவில்லையாயின், நிச்சயமாக நாங்கள், உங்களைக் கல்லெறிந்து கொன்று விடுவோம். மேலும் எங்களிடமிருந்து, உங்களுக்கு வேதனையளிக்கும் தண்டனை கிடைக்கும் என்று அவர்கள் கூறினர். 
  20. (அதற்கு அத் தூதர்கள்): உங்கள் கெட்ட சகுனம் உங்களுடனே இருக்கும். உங்களுக்கு அறிவுரை கூறப்படுவதனாலா? (நீங்கள் இதனைக் கூறுகின்றீர்கள்). அவ்வாறன்று. மாறாக, நீங்கள் வரம்புகளை மீறும் சமுதாயத்தினராக இருக்கின்றீர்கள் என்று கூறினர்.
  21. அந்த நகரத்தின் தொலைவிலுள்ள பகுதியிலிருந்து ஒருவர் விரைந்து வந்து, என் சமுதாயத்தினரே! தூதர்களைப் பின்பற்றுங்கள் என்றார். 
  22. உங்களிடம் எந்தக் கூலியும் கேட்காதவர்களும், நேர்வழி பெற்றவர்களுமாகிய இவர்களைப் பின்பற்றுங்கள். 
  23. என்னைப் படைத்தவனை நான் வணங்காமலிருக்க, எனக்கு என்ன நேர்ந்தது? மேலும் அவனிடமே நீங்கள் திரும்பக் கொண்டு செல்லப்படுவீர்கள். 
  24. அவனையன்றி, மற்றவர்களை நான் கடவுளராக எடுத்துக் கொள்வேனா? அளவற்ற அருளாள(னாகிய இறைவ)ன் எனக்கு எந்தத் தீங்கையாவது நாடினால், அவர்களின் பரிந்துரை எனக்கு எந்தப் பயனையும் அளிக்காது; அவர்களால் (அத் தீங்கிலிருந்து) என்னைக் காப்பாற்றவும் இயலாது. 
  25. அந்நிலையில் நிச்சயமாக நான் தெளிவான வழிகேட்டில் இருப்பேன். 
  26. நான், உங்கள் இறைவனிடம் நம்பிக்கை கொண்டுள்ளேன். எனவே நான் சொல்வதைக் (கவனமாகக்) கேளுங்கள். 
  27. (அப்பொழுது அவரிடம்) நீர் சுவர்க்கத்தில் நுழைவீராக என்று கூறப்பட்டது. இதற்கு அவர் கூறினார்: அந்தோ! என் சமுதாயம் அறிந்திருக்க வேண்டுமே! 
  28. அதாவது என் இறைவன் எவ்வாறு என்னை மன்னித்து, என்னைக் கண்ணியத்திற்குரியவர்களைச் சேர்ந்தவனாக ஆக்கியுள்ளான் (என்பதனைத் தெரிந்திருக்க வேண்டுமே). 
  29. நாம் அவருக்குப் பின்னர், அவரது சமுதாயத்தினருக்கெதிராக வானத்திலிருந்து எந்தப் படையையும் இறக்கவில்லை; (அவ்வாறான படையை) நாம் இறக்குவதுமில்லை. 
  30. பயங்கரமான ஒரு தண்டனையே (அவர்களுக்கு) வந்தது. அந்தோ! அவர்கள் அழிந்தே விட்டனர்.
  31. (நிராகரிக்கும்) அடியார்களின் பரிதாபமே! எந்தத் தூதர் அவர்களிடம் வந்தாலும், அவர்கள் அவரை ஏளனத்திற்குள்ளாக்கவே செய்கின்றனர். 
  32. இவர்களுக்கு முன்னர் எத்தனையோ தலைமுறையினர்களை நாம் அழித்திருப்பதையும், ஒருபோதும் அவர்கள் இவர்களிடம் திரும்பி வராமலிருப்பதையும் இவர்கள் காணவில்லையா? 
  33. மேலும் அவர்கள் எல்லோரும் ஒன்று திரட்டப்பட்டு, நிச்சயமாக எம்மிடம் கொண்டு வரப்படுவர். ரு2 
  34. இறந்த பூமி(யும்) அவர்களுக்கு ஓர் அடையாளம் ஆகும். நாம் அதற்கு உயிர் கொடுத்து, அதிலிருந்து தானியத்தை வெளிப்படுத்தினோம். எனவே அவர்கள் அதிலிருந்து உண்கின்றனர். 
  35. நாம் அதில் பேரீச்சை மரங்களையும், திராட்சைகளையும் கொண்ட தோட்டங்களை அமைத்து, அதில் நீரூற்றுக்களை பீரிடச் செய்தோம். 
  36. அவர்கள் அதன் பழங்களிலிருந்து உண்பதற்காக (நாம் அவ்வாறு செய்தோம்). அ(த் தோட்டத்)தை அவர்களின் கைகள் (வளரச்) செய்யவில்லை. அவ்வாறிருந்தும் அவர்கள் நன்றி செலுத்த மாட்டார்களா? 
  37. பூமி முளைக்கச் செய்வதையும், அவர்களையும், இன்னும் அவர்கள் அறியாதவற்றையும் எல்லாம் இணைகளாகப் படைத்தவன் தூயவன் ஆவான். 
  38. இரவு(ம்) அவர்களுக்கு ஓர் அடையாளமாகும். இதிலிருந்து நாம், பகலை இழுத்துக் கொள்கிறோம். அதற்குப் பின்னர் அவர்கள் இருளில் மூழ்கி விடுகின்றனர். 
  39. சூரியன், அதற்கெனக் குறித்த வரையறைக்குள் இயங்கிக் கொண்டிருக்கிறது. இது, வல்லோனும், ஞானமிக்கோனுமாகிய (இறை)வன் ஏற்படுத்திய திட்டமாகும். 
  40. மேலும் சந்திரனை, ஒரு முதிர்ந்த கிளை6 போலாகித் திரும்பி வருமளவுக்குப் பல நிலைகளை அதற்கு ஏற்படுத்தியுள்ளோம்.
  41. சூரியனால், சந்திரனை அணுக முடியாது. அவ்வாறே இரவால் பகலை முந்தவும் முடியாது. அவை எல்லாம் ஒரு சுற்றுப்பாதையில் தடையின்றி மிதக்கின்றன7. 
  42. (சுமை) நிரப்பப்பட்ட கப்பலில் நாம் அவர்களின் வழித்தோன்றலை எடுத்துச் செல்வதும் அவர்களுக்கு ஓர் அடையாளமாகும். 
  43. அவர்கள் பயணம் செய்ய அவர்களுக்கு அது போன்றவற்றை (இன்னும்) நாம் உருவாக்குவோம் 8. 
  44. நாம் விரும்பியிருந்தால், அவர்களை மூழ்கடித்துக் கொன்றிருப்போம். அப்போது (அவர்களது) முறையீட்டைக் கேட்பவர் எவரும் அவர்களுக்கு இருக்க மாட்டார்; அவர்கள் காப்பாற்றப்பட்டிருக்கவும்  மாட்டார்கள். 
  45. எம்மிடமிருந்துள்ள கருணையினாலன்றி, (அவர்கள் காப்பாற்றப்பட்டிருக்க மாட்டார்கள்). மேலும் அது சிறிது காலப் பயனே ஆகும். 
  46. உங்களுக்குக் கருணை காட்டப்படும் பொருட்டு, எதிரில் உள்ளவற்றிலிருந்தும் (வேண்டுதல் மூலமும்), பின்னுள்ளவற்றிலிருந்தும் (கழிவிரக்கம் மூலமும்) உங்களைக் காத்துக் கொள்ளுங்கள் என்று அவர்களிடம் கூறப்படும் பொழுது (அவர்கள் விலகிச் செல்கின்றனர்).  
  47. அவர்களது இறைவனிடமிருந்துள்ள அடையாளங்களில், எந்த அடையாளம் அவர்களிடம் வந்தாலும் அதனை அவர்கள் புறக்கணிக்கவே செய்கின்றனர். 
  48. அல்லாஹ் உங்களுக்கு வழங்கியதிலிருந்து செலவு செய்யுங்கள் என்று அவர்களிடம் கூறப்பட்டால், நிராகரிப்பவர்கள் நம்பிக்கை கொண்டவர்களிடம், அல்லாஹ் விரும்பியிருந்தால், அவன் எவர்களுக்கு உணவளித்திருப்பானோ அவர்களுக்கு நாங்கள் உணவளிக்க வேண்டுமா? நீங்கள் தெளிவான வழிகேட்டிலேயே இருக்கின்றீர்கள் என்று கூறுகின்றனர். 
  49. நீங்கள் உண்மையாளர்களாயின் (தண்டனையைப் பற்றிய) அந்த வாக்குறுதி எப்போது (நிறைவேற்றப்படும்) என்று அவர்கள் கூறுகின்றனர். 
  50. அவர்கள் வாக்குவாதம் செய்து கொண்டிருக்கும் வேளையில், அவர்களைப் பற்றிக் கொள்ளும் ஒரே (ஒரு) தண்டனையைத் தான் அவர்கள் எதிர்பார்க்கின்றனர்.
  51. அப்பொழுது அவர்களால் மரண சாசனம் கூறவும் இயலாது; அவர்களால் தங்கள் குடும்பத்தினரிடம் திரும்பி வரவும் இயலாது. ரு3 
  52. மேலும் எக்காளம் ஊதப்படும். உடனே அவர்கள் கல்லறைகளிலிருந்து (வெளியேறி) தங்கள் இறைவனிடம் விரைந்து செல்வார்கள். 
  53. எங்களுக்கு அழிவு தான்! எங்கள் கல்லறைகளிலிருந்து எங்களை எழுப்பியது யார்? என்று அவர்கள் (ஒருவர், மற்றவரிடம்) கூறுவார்கள். இது அளவற்ற அருளாளனின் வாக்குறுதியாகும். தூதர்கள் உண்மையே கூறினர் (என்றும் அவர்கள் கூறுவர்). 
  54. இது ஒரு திடீர் தண்டனையே! இதன் காரணமாக உடனே அவர்கள் எல்லோரும் எம்மிடம் கொண்டு வரப் படுவார்கள். 
  55. அந்நாளில், எந்த ஆன்மாவுக்கும் சிறிதளவு கூட அநீதி இழைக்கப்படமாட்டாது; உங்கள் செயல்களுக்கேற்பவே உங்களுக்குக் கூலி கொடுக்கப்படும். 
  56. நிச்சயமாக அந்நாளில் சுவர்க்கத்திற்குரியவர்கள், (இறை நினைவில்) மூழ்கி மகிழ்வார்கள். 
  57. அவர்களும், அவர்களின் இணைகளும் (இறைவனின் கருணை) நிழலில் மஞ்சங்களில் சாய்ந்து அமர்ந்திருப்பார்கள். 
  58. அதில் அவர்களுக்குப் பழங்கள் உண்டு; அவர்கள் கேட்பதெல்லாம் அவர்களுக்குக் கொடுக்கப்படும். 
  59. மேன்மேலும் கருணை காட்டும் இறைவனிடமிருந்து வாழ்த்தாக  அவர்களுக்கு ஸலாம் கூறப்படும். 
  60. குற்றவாளிகளே!  இன்று நீங்கள் (நம்பிக்கையாளர்களை விட்டு) விலகி விடுங்கள் (என்றும் நாம் கூறுவோம்).
  61. ஆதமின் மக்களே! நீங்கள் ஷைத்தானை வணங்கக் கூடாது என்று நான் உங்களைக் கட்டுப்படுத்தவில்லையா? ஏனென்றால் நிச்சயமாக அவன் உங்களுக்கு வெளிப்படையான பகைவனாவான்; 
  62. மேலும் நீங்கள் என்னையே வணங்க வேண்டும்; இதுவே நேரான வழி (என்று நான் கட்டுப்படுத்தவில்லையா?) 
  63. (ஷைத்தானாகிய) அவன் உங்களுள் ஒரு பெரும் கூட்டத்தினரை வழி தவறச் செய்து (அழித்து) விட்டான். நீங்கள் புரிந்து கொள்ளவில்லையா? 
  64. உங்களுக்கு வாக்களிக்கப்பட்டு வந்த நரகம் இது தான். 
  65. நீங்கள் நிராகரித்ததனால் இன்று இதில் நுழையுங்கள். 
  66. இன்று நாம் அவர்களின் வாய்களில் முத்திரையிட்டு விடுவோம். அவர்களின் கைகள் எம்மிடம் பேசும். அவர்கள் செய்து கொண்டிருந்ததைப் பற்றி அவர்களின் கால்கள் சாட்சி கூறும். 
  67. நாம் விரும்பியிருந்தால் அவர்களின் கண்களைக் குருடாக்கியிருப்போம். பின்னர் அவர்கள் (பார்வையின்றி) ஒரு வழியைத் தேடிச் சென்றிருப்பார்கள். ஆனால் இந்நிலையில் அவர்கள் (உண்மையான வழியை) எவ்வாறு காண்பார்கள்? 
  68. நாம் விரும்பியிருந்தால், அவர்களின் இடங்களிலேயே அவர்களின் நிலைகளை மாற்றியிருப்போம். பின்னர் அவர்களால் முன்னோக்கிச் செல்லவோ, திரும்பிச் செல்லவோ இயலாது. ரு4 
  69. நாம் எவருக்கு நீண்ட ஆயுளை வழங்குகின்றோமோ அவரது உடல் வலிமையைக் குன்றச் செய்கின்றோம். அவர்கள் அறிந்து கொள்ள வேண்டாமா? 
  70. அவருக்கு (அதாவது முஹம்மது நபிக்கு) நாம் கவிதை இயற்றக் கற்றுக் கொடுக்கவில்லை. அது அவர் (உயர் தகுதி)க்கு ஏற்றதுமன்று. இது ஓர் அறிவுரையும், (சான்றுகளுடன்) விளக்கும் (மீண்டும், மீண்டும் ஓதக்கூடிய) குர்ஆனுமே ஆகும்.
  71. (இது) உயிருள்ளவருக்கு எச்சரிக்கை செய்வதற்காகவும், நிராகரிப்பவர்களைக் குறித்து அல்லாஹ்வின் வாக்கு நிறைவேற்றப்படுவதற்காகவும் (அவற்றை தெளிவாக விளக்குகின்றது). 
  72. எமது கைகள் உருவாக்கியவற்றுள் நாம் அவர்களுக்காகப் படைத்த கால்நடைகளை அவர்கள் காண்பதில்லையா? அவர்கள் அதற்கு உரிமை(யும்) கொண்டாடுகின்றனர். 
  73. நாம் அவற்றை, அவர்களுக்குக் கட்டுப்படச் செய்துள்ளோம். எனவே அவர்கள், அவற்றுள் சிலவற்றில் பயணம் செய்கின்றனர். இன்னும் சிலவற்றை உண்கின்றனர். 
  74. அவற்றில் அவர்களுக்கு (பிற) பயன்களும், குடிக்கக் கூடியவையும் இருக்கின்றன. எனவே அவர்கள் நன்றி செலுத்த வேண்டாமா? 
  75. தாங்கள் உதவி செய்யப்படலாமென்று அவர்கள் அல்லாஹ்வையன்றி (வேறு) கடவுளர்களை உருவாக்கிக் கொண்டனர். 
  76. அவர்களால், அவர்களுக்கு எந்த உதவியும் செய்ய இயலாது; மேலும் அவர்கள் (அவர்களின் இறைவன் முன்) படையாகக் கொண்டு வரப்படுவர். 
  77. எனவே, அவர்களின் பேச்சு உம்மைத் துயரத்திற்குள்ளாக்க வேண்டாம். அவர்கள் மறைப்பதையும், வெளிப்படுத்துவதையும் நிச்சயமாக நாம் அறிவோம். 
  78. நாம் மனிதனைக் (கேவலம்) ஒரு விந்துத் துளியிலிருந்து படைத்திருப்பதை அவன் பார்க்கவில்லையா? பின்னர் அவன் வெளிப்படையான சச்சரவு செய்பவனாகி விடுகின்றான். 
  79. அவன் நமக்கு உவமைகளை எடுத்துக் கூறுகிறான்: மேலும் தனது பிறப்பை மறந்து விடுகின்றான். எலும்புகள் உக்கி, அழிந்து விடும் போது அவற்றிற்கு உயிர் கொடுப்பவன் எவன்? என்று அவன் கூறுகின்றான். 
  80. நீர் கூறுவீராக: அவற்றை முதல் தடவை படைத்தவனே அவற்றிற்கு உயிர் கொடுப்பான். படைக்கப்பட்ட ஒவ்வொன்றி(ன் நிலையி) னைப் பற்றியும் அவன் நன்கு அறிவான்.
  81. (அவன்) உங்களுக்காகப் பசுமையான மரத்திலிருந்து நெருப்பை உற்பத்தி செய்தான்; எனவே நீங்கள் அதிலிருந்து (நெருப்பை) மூட்டிக் கொள்கின்றீர்கள். 
  82. வானங்களையும், பூமியையும் படைத்த அவன், அவர்களைப் போன்ற படைப்பைப் படைப்பதற்கு ஆற்றல் பெற்றவனில்லையா? ஆம்; அவன் ஒப்புயர்வற்ற படைப்பவனும், நன்கு அறிபவனுமாவான். 
  83. நிச்சயமாக அவன் ஒன்றை நாடினால், ' ஆகுக' என்று கட்டளையிட்டதும், அது ஆ(கத் தொடங்)கி விடுகிறது. 
  84. எவனது கையில் எல்லாவற்றின் ஆட்சியும் உள்ளதோ அவன் தூயவன். அவனிடமே நீங்கள் எல்லோரும் திரும்பிக் கொண்டு செல்லப்படுவீர்கள். ரு5

Powered by Blogger.