50- காஃப்

அதிகாரம்: காஃப்
அருளப்பெற்ற இடம்: மக்கா | வசனங்கள்: 46

பிரிவுகள்: 3

  1. அளவற்ற அருளாளனும், மேன்மேலும் கருணை காட்டுபவனுமாகிய அல்லாஹ்வின் பெயரால் (ஓதுகின்றேன்). 
  2. காஃப்- (பேராற்றல் கொண்ட இறைவன் இவ்வதிகாரத்தை இறக்கியுள்ளான்). மேன்மைக்குரிய குர்ஆன் மேல் ஆணையாக! (அதாவது, இவ்வதிகாரத்தின் உண்மைக்கு குர்ஆனைச் சான்றாகக் காட்டுகிறோம்). 
  3. அவர்களிலிருந்தே எச்சரிப்பவர் ஒருவர் அவர்களிடம் வந்துள்ளார் என்று அவர்கள் வியப்படைகின்றனர். இது புதுமையான ஒன்றேயாகும் என்று நிராகரிப்பவர்கள் கூறுகின்றனர். 
  4. என்ன! நாங்கள் மரணமடைந்து, மண்ணாகி விடும் போதா (மீண்டும் எழுப்பப்படுவோம்?) இது (பகுத்தறிவிற்கு) மிகத் தொலைவிலான ஒரு திரும்புதலாகும் (என்றும் அவர்கள் கூறுகின்றனர்). 
  5. பூமி அவர்களுள் எதனைக் குறைக்கிறதோ அதனை(யும், எதனை அதிகமாக்குகின்றதோ அதனையும்) நாம் அறிவோம்1. (எல்லாவற்றையும்) பாதுகாக்கின்ற ஒரு நூல் எம்மிடம் உள்ளது. 
  6. ஆனால், அவர்களிடம் உண்மை வந்த போது, அவர்கள் அதனை ஏற்க மறுத்தனர். எனவே அவர்கள் குழப்ப நிலைக்கு ஆளாகி விட்டனர். 
  7. அவர்களுக்கு மேலுள்ள வானத்தை நாம் எவ்வாறு அமைத்து, அதனை அலங்கரித்துள்ளோம் என்பதையும், அதில் எந்தப் பிளவும் இல்லாதிருப்பதையும் அவர்கள் காணவில்லையா? 
  8. பூமியை நாம் விரிவுபடுத்தி, அதில் உறுதியான மலைகளை அமைத்துள்ளோம். மேலும் ஒவ்வொரு வகையான அழகிய இணைகளையும் அதில் நாம் வளரச் செய்தோம். 
  9. (இறைவனிடம்) திரும்பும் ஒவ்வொரு அடியாருக்கும் இதில் (ஞான) ஒளியும், நினைவூட்டலும் உண்டு. 
  10. நாம் வானத்திலிருந்து அருளுக்குரிய தண்ணீரை இறக்கி, பின்னர் அதனைக் கொண்டு தோட்டங்களையும், அறுவடையாகும் தானியத்தையும் உற்பத்தி செய்கிறோம்.
  11. ஒன்றின் மேல் ஒன்றாக அடுக்கப்பட்ட குலைகளைக் கொண்ட உயரமான பேரீச்ச மரங்களையும் (உற்பத்தி செய்கிறோம்). 
  12. (எமது) அடியார்களுக்கு உணவாக (அவற்றை ஆக்கியுள்ளோம்). மேலும் அதன் மூலம் மரணமடைந்த நிலத்தை உயிர்ப்பிக்கின்றோம். (மரணத்திற்குப் பின்னர்) உயிர் பெற்றெழுவதும் இவ்வாறேயாகும். 
  13. இவர்களுக்கு முன்னர் நூஹ்வின் சமுதாயத்தினரும், கிணற்றுக்குரியவர்களும்,ஸமூதும் பொய்யாக்கினர். 
  14. ஆதும், ஃபிர்அவ்னும், லூத்துவின் சகோதரர்களும், 
  15. காட்டில் வாழும் மக்களும், (எமன் நாட்டு மக்களாகிய) துப்பா சமுதாயத்தினரும் (உண்மையை ஏற்க மறுத்து) அவர்கள் எல்லோரும் எம் தூதர்களைப் பொய்யாக்கினர். இதனால் (அவர்கள்) எம்மால் பயமுறுத்தப்பட்ட தண்டனைக்கு ஆளானார்கள். 
  16. முதன்முறை படைப்பினால் நாம் களைப்படைந்து விட்டோமா? இல்லை; மாறாக, அவர்கள் புதிய படைப்பைக் குறித்துக் குழம்பிய நிலையில் உள்ளனர். ரு1 
  17. நிச்சயமாக நாம் மனிதனைப் படைத்தோம். மேலும் அவனுடைய உள்ளம் (அவனிடம்) முணுமுணுப்பதையும் நாம் அறிவோம். நாம் அவனுக்கு,  (அவனது) உயிர் நாடியை விட மிக அருகில் உள்ளோம். 
  18. (வானவர்களுள் ஒருவர் அவனது) வலப்பக்கத்திலும், (மற்றொருவர் அவனது) இடப்பக்கத்திலும் அமர்ந்து, (எல்லாவற்றையும்) பதிவு செய்யும் இருவர் பதிவு செய்கின்ற போது, 
  19. அவன் எந்த வார்த்தையைக் கூறினாலும், பாதுகாக்கும் வானவர் (அதனைப் பதிவு செய்வதற்கு) அவனிடம் ஆயத்தமாகவே இருக்கின்றார். 
  20. மரண மயக்கம் நிச்சயமாக வரும். (அப்போது நாம் அவனிடம்) நீ எதிலிருந்து தப்பித்துக் கொள்ளக் கருதினாயோ அது இதுதான் (என்று கூறுவோம்).
  21. மேலும் எக்காளம் ஊதப்படும். அதுவே வாக்களிக்கப்பட்ட நாளாகும். 
  22. ஒவ்வொரு ஆன்மாவும், அதனுடன் ஒட்டி வருபவர் ஒரு(வான)வரும், சாட்சி கூறுபவர் ஒரு(வான)வரும் (இருக்கும் நிலையில்) வந்து விடும். 
  23. (பின்னர் நாம் கூறுவோம்): நீ இது (இந்த நாள்) குறித்துக் கவனமற்றிருந்தாய். இப்பொழுது நாம் உன் திரையை, உன்னை விட்டு அகற்றி விட்டோம். இன்று உன் பார்வை மிக்க கூர்மையானதாக இருக்கிறது. 
  24. இதோ (அவனது சொல், செயல்களைப் பற்றிய குறிப்பு) என்னிடம் தயாராக உள்ளது என்று அவனுடன் இருப்பவர் கூறுவார்2. 
  25. (அவனுடன் இருந்த இருவரிடமும் நாம் கூறுவோம்:) நிராகரிப்போர் எல்லோரையும், உண்மையின் பகைவர்களையும் நகரில் எறியுங்கள். 
  26. நன்மையைத் தடுப்பவனையும், வரம்பு மீறுபவனையும், ஐயம் கொள்பவனையும் (எறியுங்கள்). 
  27. இவன் அல்லாஹ்வுடன் வேறு கடவுளை ஏற்படுத்திக் கொண்டான். எனவே அவனைக் கடுந்தண்டனையில் எறியுங்கள். 
  28. அவனுடைய கூட்டாளி கூறுவான்: எங்கள் இறைவா! நான் அவனை வரம்பு மீறச் செய்யவில்லை. மாறாக, அவனே வழிகேட்டில் நெடுந்தொலைவு சென்று விட்டான். 
  29. அ(தற்கு இறை)வன் கூறுவான்: என் முன்னிலையில் நீங்கள் சண்டையிடாதீர்கள். நான் ஏற்கனவே தண்டனை பற்றிய எச்சரிக்கையை உங்களுக்கு அனுப்பி விட்டேன். 
  30. எந்த வாக்கும் என் முன்னிலையில் மாற்றப்படுவதில்லை3. நான் என் அடியார்களுக்குச் சிறிதளவு கூட அநீதியிழைப்பதுமில்லை. ரு2
  31. அந்நாளில் நாம் நரகத்திடம், நீ நிரம்பி விட்டாயா? என்று கேட்போம். அதற்கு இன்னும் இருக்கிறதா? என்று அது பதிலளிக்கும். 
  32. இறையச்சமுடையவர்களுக்குச் சுவர்க்கம் தொலைவில் இல்லாமல், மிக அருகில் கொண்டு வரப்படும்4. 
  33. உங்களுள் (இறைவனிடம்) குனிந்தவராய் (தம் செயல்களைச் சரியாகப்) பாதுகாத்து வந்த ஒவ்வொருவருக்கும் வாக்களிக்கப்பட்டது இதுவே.(என்று அவர்களிடம் கூறப்படும்). 
  34. எவர், அளவற்ற அருளாளனுக்குத் தனிமையில் அஞ்சி, கழிவிரக்கம் கொண்ட உள்ளத்துடன் (அவனிடம்) வருவார்களோ 
  35. அவர்களிடம், நீங்கள் இதில் சாந்தியுடன் நுழையுங்கள். இது நிலையான நாளாகும் (என்றும் கூறப்படும்). 
  36. அவர்கள் விரும்புவதெல்லாம் அதில் அவர்களுக்குக் கிடைக்கும். (அவர்களுக்கு வழங்குவதற்கு) அதைவிட மிகுதியாகவும் எம்மிடம் உள்ளது. 
  37. இவர்களுக்கு முன்னர், இவர்களை விடவும் வலிமை வாய்ந்தவர்களாக இருந்த எத்தனையோ சமுதாயங்களை நாம் அழித்து விட்டோம். (அவர்களிடம் தண்டனை வந்தபோது, அதிலிருந்து தப்பித்துக் கொள்வதற்காக) அவர்கள் நாடுகளில் சுற்றித் திரிந்தனர். (இறைத் தண்டனையிலிருந்து தப்புவதற்கு) புகலிடம் எதுவும் அவர்களுக்கு இருந்ததா? 
  38. (சிந்திக்கும்) உள்ளத்தைப் பெற்றிருப்பவருக்கு, அல்லது செவிசாய்த்துச் சிந்தனை செய்பவருக்கு நிச்சயமாக இதில் அறிவுரை உள்ளது. 
  39. நிச்சயமாக நாம் வானங்களையும், பூமியையும், அவற்றிற்கிடையிலுள்ள எல்லாவற்றையும் ஆறு காலகட்டங்களில் படைத்தோம். எமக்கு எந்தக் களைப்பும் ஏற்பட்டதில்லை5. 
  40. எனவே நீர் அவர்கள் கூறுவதைப் பொறுத்துக் கொண்டு, சூரியன் தோன்றுவதற்கு முன்னும், அது மறைவதற்கு முன்னும் நீர் உமது இறைவனைப் புகழ்ந்து, அவனது தூய்மையினை எடுத்துரைப்பீராக.
  41. இரவு நேரத்திலும் அவனது தூய்மையினை எடுத்துரைப்பீராக. (குறிப்பிட்ட) வணக்கங்களுக்குப் பிறகும் (நீர் அவ்வாறே செய்வீராக). 
  42. கேட்பீராக! ஒருநாள், அழைப்பவர் அருகிலுள்ள இடத்திலிருந்து6 அழைப்பார். 
  43. அந்நாளில் நிறைவேறக்கூடிய, தண்டனைக்குரிய ஒலியை அவர்கள் கேட்பார்கள். மேலும் அது (உயிர்பெற்று) வெளியேறும் நாளாகும். 
  44. நிச்சயமாக உயிரளிப்பதும், மரணத்தைத் தருவதும் நாமே! மேலும், திரும்பி வர வேண்டியதும் எம்மிடமே! 
  45. அந்நாளில் அவர்க(ளின் தீய செயல்க)ளால் பூமி பல பகுதிகளாகப் பிளந்து, அவர்கள் மிக விரைவாக வெளிப்படுவர்7. ஒன்றுதிரட்டுதலான இது எமக்கு மிக எளிதே. 
  46. அவர்கள் கூறுபவற்றை நாம் நன்கறிவோம். நீர் அவர்களை எவ்விதத்திலும் கட்டாயப்படுத்துவதற்காக நியமிக்கப்படவில்லை.  எனவே நீர் எனது எச்சரிக்கைக்கு அஞ்சுபவருக்குக் குர்ஆனைக் கொண்டு அறிவுரை கூறுவீராக. ரு3
Powered by Blogger.