51- அஸ் ஸாரியாத்

அதிகாரம்: அஸ் ஸாரியாத்
அருளப்பெற்ற இடம்: மக்கா | வசனங்கள்: 61

பிரிவுகள்: 3


  1. அளவற்ற அருளாளனும், மேன்மேலும் கருணை காட்டுபவனுமாகிய அல்லாஹ்வின் பெயரால் (ஓதுகின்றேன்). 
  2. வன்மையாகச் சிதறடிக்கும் காற்றுகளை சான்றாகக் காட்டுகிறோம். 
  3. பின்னர் அவை (மழையின்) சுமையைச் சுமக்கின்றன. 
  4. பின்னர் மெதுவாகச் செல்கின்றன. 
  5. பின்னர் (எமது) கட்டளையின் படி கடமையை நிறைவேற்றுகின்றன. 
  6. உங்களுக்கு அளிக்கப்பட்ட வாக்குறுதி நிச்சயமாக உண்மையானதே1. 
  7. (நற்பலன், தண்டனை குறித்த) தீர்ப்பு நிச்சயமாக நிகழ்ந்தே தீரும். 
  8. வழித்தடங்களைக் கொண்ட வானத்தின் மேல் ஆணையாக2. (அதாவது மேற்குறிப்பிட்டதன் உண்மைக்கு இதனைச் சான்றாகக் காட்டுகிறோம்). 
  9. நிச்சயமாக நீங்கள் (உங்கள்) பேச்சில் முரண்பட்டவர்களாக இருக்கிறீர்கள். 
  10. எவன் திரும்பி விடுகின்றானோ, அவனே அதிலிருந்து திருப்பி விடப்படுகின்றான்.
  11. பொய்யர்களுக்கு அழிவே! 
  12. அவர்கள் (அறியாமையின்) அடிமட்டத்தில் இருக்கும் கவனமற்றவராவார்கள். 
  13. தீர்ப்பு நாள் எப்போது வரும் என்று அவர்கள் வினவுகின்றனர். 
  14. அவர்கள் நரக நெருப்புக்கு ஆளாகும் நாளே (என்று நீர் கூறுவீராக). 
  15. உங்கள் தீங்கை நீங்கள் சுவைத்துப் பாருங்கள். நீங்கள் அவசரப்பட்டுக் கொண்டிருந்த (தண்டனையான)து இது தான் (என்று கூறப்படும்). 
  16. நிச்சயமாக இறையச்சமுடையோர் தோட்டங்களிலும், நீரூற்றுக்களிலும் இருப்பார்கள். 
  17. அவர்களின் இறைவன், அவர்களுக்கு வழங்குவதை அவர்கள் பெறுவார்கள். ஏனெனில் அவர்கள் இதற்கு முன்னரே நன்மை செய்து வந்தனர். 
  18. அவர்கள் இரவு நேரத்தில் குறைவாகவே துயில் கொண்டனர். 
  19. விடியற்காலையில் அவர்கள் பாவமன்னிப்புக் கோரி வந்தனர். 
  20. அவர்களின் செல்வத்தில், கேட்பவருக்கும், ஆதரவற்றவருக்கும் ஒரு பங்கு இருந்தது.
  21. உறுதியான நம்பிக்கை கொண்டவர்களுக்குப் பூமியில் பல அடையாளங்கள் உள்ளன. 
  22. உங்களுக்குள்ளாகவும் (பல அடையாளங்கள் உள்ளன), நீங்கள் பார்ப்பதில்லையா? 
  23. உங்களுக்குரிய உணவும், உங்களுக்கு வாக்களிக்கப்பட்டவையும் வானத்தில் இருக்கின்றன. 
  24. வானம், பூமி ஆகியவற்றின் இறைவன் மேல் ஆணையாக! நிச்சயமாக இ(ந்தக்  குர்ஆனான)து நீங்கள் பேசுவது போன்று உண்மையானதேயாகும். ரு1 
  25. இப்ராஹீமுடைய கண்ணியத்திற்குரிய விருந்தினரின் செய்தி உமக்குக் கிடைத்ததா? 
  26. அவர்கள், அவரிடம் வந்து (உமக்குச்) சாந்தி (உண்டாவதாக) என்று கூறியபோது, அவர் (உங்களுக்கும்) சாந்தி (உண்டாவதாக) என்றார். (அவர்கள் யாவரும்) அறிமுகமில்லாதவர்களாக இருந்தனர். 
  27. பின்னர் அவர் நிதானமாகத் தம் குடும்பத்தினரிடம் சென்று, கொழுத்த கன்றுக் குட்டியொன்றைக் கொண்டு வந்து, 
  28. அதனை அவர்களின் முன் வைத்து, நீங்கள் சாப்பிட மாட்டீர்களா? என்றார். 
  29. அவருக்கு அவர்களைப் பற்றிய ஓர் அச்ச உணர்வு ஏற்பட்டது. (இதனைப் புரிந்து கொண்ட) அவர்கள், 'நீர் அஞ்ச  வேண்டாம்' என்று கூறி, அவருக்கு அறிவுள்ள ஒரு மக(ன் பிறக்கவிருப்பத)னைப் பற்றி நற்செய்தியினை அவர்கள் கூறினர். 
  30. பின்னர் அவருடைய மனைவி, முகத்தில் வெட்கத்தின் அறிகுறிகளுடன் முன்னால் வந்து, தமது முகத்தில் அடித்து மலடியான ஒரு கிழவி(யாக நான் இருக்கின்றேன்) என்றார்.
  31. அவ்வாறே உமது இறைவன் கூறியுள்ளான்; நிச்சயமாக அவன் நுட்பமான ஞானமுள்ளவனும், நன்கு அறிபவனுமாவான் என்று அவர்கள் கூறினர். 
  32. தூதர்களே! இப்போது உங்கள் (வருகையின்) நோக்கம் என்ன? என்று (இப்ராஹீம்) கேட்டார். 
  33. இதற்கு அவர்கள் கூறினர்: நாங்கள் குற்றவாளிகளான சமுதாயத்தினரிடம் அனுப்பப்பட்டுள்ளோம். 
  34. களி மண்ணாலான கற்களை நாங்கள் அவர்கள் மீது பொழிவதற்காக ( அனுப்பப்பட்டுள்ளோம்)3. 
  35. (அக் கற்கள்) வரம்பு மீறி நடந்தவர்களுக்கு(த் தண்டனைக்கென) உமது இறைவனிடம் அடையாளமிடப்பட்டுள்ளவையாகும். 
  36. அங்கிருந்த நம்பிக்கையாளர்களை (அதிலிருந்து) நாங்கள் வெளியேற்றி விட்டோம். 
  37. நாங்கள் அங்கு (எமக்குக்) கட்டுப்பட்டவர்களின் ஒரே ஒரு வீட்டையே கண்டோம். 
  38. வேதனையளிக்கக்கூடிய தண்டனைக்கு அஞ்சுபவர்களுக்காக நாங்கள் அங்கு ஓர் அடையாளத்தை விட்டு வைத்துள்ளோம். 
  39. மூஸாவி(ன் நிகழ்ச்சியி)லும் (பல அடையாளங்கள் உள்ளன). (அதாவது) நாம் அவரை ஃபிர்அவ்னிடம் தெளிவான சான்றுடன் அனுப்பிய போது, 
  40. அவன் தனது கர்வத்தினால் (மூஸாவைப்) புறக்கணித்து, (அவர்) ஒரு மந்திரவாதி அல்லது பைத்தியக்காரன் என்றான்.
  41. எனவே நாம் அவனையும், அவனது படைகளையும் பிடித்து, அவர்கள் எல்லோரையும் கடலில் எறிந்து விட்டோம். மேலும் அவன் (இன்றும்) பழிக்கப்படுகிறான். 
  42. ஆதுவின் (நிகழ்ச்சியி)லும் (பல அடையாளங்கள் உள்ளன. குறிப்பாக) அழிவிற்குள்ளாக்கும் காற்றை அவர்களிடம் நாம் அனுப்பிய போது, 
  43. அது எதன் மீது வீசியதோ, அதனையெல்லாம் சிதைந்து போன எலும்பைப் போன்று ஆக்காமல் விட்டதில்லை. 
  44. ஸமூதுவி(ன் நிகழ்ச்சியி)லும் (பல அடையாளங்கள் உள்ளன. குறிப்பாக அவருடைய சமுதாயத்திடம்) நீங்கள் சிறிது காலம் பயனடையுங்கள் என்று கூறப்பட்ட போது4, 
  45. அவர்கள் தங்கள் இறைவனின் கட்டளையை மீறி நடந்தனர். எனவே, அவர்கள் பார்த்துக் கொண்டிருக்கும் போதே இடி முழக்கம் அவர்களைப் பற்றிக் கொண்டது. 
  46. அவர்கள் எழுந்து நிற்கவும் இயலாதவர்களாகி விட்டார்கள்; அவர்களால் உதவி பெறவும் முடியவில்லை. 
  47. இவர்களுக்கு முன்னர் நூஹ்வின் சமுதாயத்தினரையும் (நாம் அழித்து விட்டோம்). அவர்கள் கட்டுப்படாத சமுதாயத்தினராக இருந்தனர். ரு2 
  48. நாம் வானத்தை வல்லமையினால் உருவாக்கினோம். நிச்சயமாக நாம் விரிவுபடுத்துவதற்கு ஆற்றல் பெற்றுள்ளோம். 
  49. பூமியையும் நாம் விரித்துள்ளோம். (பொருட்களை) நாம் எவ்வளவு அழகாகத் தயாரிக்கின்றோம். 
  50. நீங்கள் போதனை பெறுவதற்காக ஒவ்வொரு பொருளையும் நாம் இணைகளாகப் படைத்துள்ளோம்.
  51. எனவே நீங்கள் அல்லாஹ்வின்பால் விரைந்து செல்லுங்கள். நிச்சயமாக நான் உங்களுக்காக அவனிடமிருந்து (வந்த) தெளிவான எச்சரிப்பவன் ஆவேன். 
  52. அல்லாஹ்வுடன் வேறெந்தக் கடவுளையும் நீங்கள் ஏற்படுத்தாதீர்கள். நிச்சயமாக நான் உங்களுக்காக அவனிடமிருந்து (வந்த)  தெளிவான எச்சரிப்பவன் ஆவேன். 
  53. இவ்வாறே இவர்களுக்கு முன்னிருந்தவர்களிடம் வந்த தூதர்களை மந்திரவாதிகள் அல்லது பைத்தியக்காரர்கள் என்றே அவர்கள் கூறினர். 
  54. அவர்கள் இதனை ஒருவருக்கொருவர் மரபுரிமையாகப் பெற்றுக் கொண்டனரா?5. அவ்வாறன்று; மாறாக, அவர்கள் யாவரும் குழப்பம் செய்யும் சமுதாயத்தினராவர். 
  55. எனவே நீர் அவர்களிடமிருந்து விலகி விடுவீராக. உம்மீது எந்தப் பழியும் இருக்காது. 
  56. நீர் நினைவூட்டிக் கொண்டேயிருப்பீராக. ஏனென்றால் நினைவூட்டுவது நம்பிக்கை கொண்டிருப்பவர்களுக்குப் பயனளிக்கின்றது. 
  57. நான் ஜின்களையும், மனிதர்களையும் என்னை வணங்குவதற்காகவே படைத்துள்ளேன். 
  58. நான் அவர்களிடம் வாழ்க்கைக்குத் தேவையான எதையும் நாடுவதில்லை; அவர்கள் எனக்கு உணவளிக்க வேண்டுமென்றும் நான் நாடுவதில்லை. 
  59. நிச்சயமாக அல்லாஹ் எல்லோருக்கும் உணவளிப்பவனும், ஆற்றல் மிக்க வல்லவனுமாவான். 
  60. அநீதியிழைத்தவர்கள் தங்கள் தோழர்களு(டைய குற்றத்து) க்குரிய பங்கைப் போன்று, தாங்களும் தங்கள் பங்கைச் சம்பாதித்துள்ளனர். எனவே (தண்டனையை) விரைவுபடுத்துமாறு அவர்கள் என்னிடம் கோர வேண்டாம்.
  61. நிராகரிப்பவர்களுக்கு வாக்களிக்கப்பட்ட அவர்களுடைய நாளில், அவர்களுக்கு அழிவு தான். ரு3.

Powered by Blogger.