44- அத்துகான்

அதிகாரம்: அத்துகான்
அருளப்பெற்ற இடம்: மக்கா | வசனங்கள்: 60

பிரிவுகள்: 3


  1. அளவற்ற அருளாளனும், மேன்மேலும் கருணை காட்டுபவனுமாகிய அல்லாஹ்வின் பெயரால் (ஓதுகின்றேன்). 
  2. ஹா-மீம். மிகுந்த புகழுக்குரியவன்; மிகுந்த மேன்மைக்குரியவன். (ஆகிய இறைவனிடமிருந்து இவ்வதிகாரம் இறங்கியுள்ளது). 
  3. தன் கருத்தைத் தெளிவாக விளக்குகின்ற இவ்வேதத்தின் மேல் ஆணையாக! (அதாவது நாம் இவ்வுண்மைக்குச் சான்றாக இக்குர்ஆனையே முன் வைக்கின்றோம்). 
  4. நிச்சயமாக நாம் இதனை அருளுக்குரிய ஓர் இரவில் இறக்கினோம். நிச்சயமாக நாம் (தவறான வழியில் செல்பவர்களை எப்போதும்) எச்சரிக்கை செய்தே வருகிறோம். 
  5. அதில்1 ஒவ்வொரு ஞானமிக்கக்  கட்டளையும், திட்டவட்டமாகக் காட்டப்பட்டுள்ளது2. 
  6. எமது கட்டளையினால்3 (அவ்வாறு பிரித்துக் காட்டப்பட்டுள்ளது) நிச்சயமாக நாம் எப்போதும் தூதர்களை அனுப்பியே வந்தோம். 
  7. இது, உமது இறைவனிடமிருந்து வந்த கருணையாகும்4. நிச்சயமாக அவன் நன்கு கேட்பவனும், நன்கு அறிபவனுமாவான். 
  8. நீங்கள் நம்பிக்கை கொண்டிருப்பின், (அவன்) வானங்கள், பூமி மற்றும் அவ்விரண்டிற்கும் இடையிலுள்ளவற்றின் இறைவன் ஆவான். 
  9. அவனையன்றி வணக்கத்திற்குரியவர் எவரும் இல்லை. அவனே உயிரை அளிக்கவும், மரணத்தைத் தரவும் செய்கின்றான். அவன், உங்கள் இறைவனும், உங்கள் முந்தைய மூதாதையர்களின் இறைவனுமாவான். 
  10. இருந்தும், அவர்கள் ஐயத்தில் விளையாடுகின்றனர்.
  11. எனவே தெளிவான புகை ஒன்றை வானம் கொண்டு வரும் நாளை நீர் எதிர்பார்ப்பீராக5. 
  12. அது, மக்கள் எல்லோர் மேலும் நிழலை உண்டு பண்ணும். இது வேதனையளிக்கக்கூடிய தண்டனையாகும். 
  13. (மக்கள் அதனைக் கண்டு கதறுவர்) எங்கள் இறைவா! இத்தண்டனையை எங்களை விட்டு அகற்றி விடுவாயாக! நிச்சயமாக நாங்கள் நம்பிக்கை கொள்கின்றோம். 
  14. அறிவுரைகள் அவர்களுக்கு எவ்வாறு தான் பலனளிக்கும்? (ஏனெனில், உண்மையைத்) தெளிவாக விளக்கும் ஒரு தூதர் ஏற்கனவே அவர்களிடம் வந்துள்ளார். 
  15. இருப்பினும், அவர்கள் அவரைப் புறக்கணித்து விட்டு, இவர் எவராலோ கற்பிக்கப்பட்ட பைத்தியக்காரர் என்று கூறினார்கள். 
  16. சிறிது நேரத்திற்காக நாம் அத்தண்டனையை அகற்றுவோம். ஆனால், நிச்சயமாக நீங்கள் (அதே நிராகரிப்பின்பால்) திரும்புவீர்கள். 
  17. நாம் (உங்களை) மிகவும் வலுவான பிடியால் பிடிக்கும் நாளில், நிச்சயமாக நாம் சரியான முறையில் பழி வாங்குவோம் (என்பதனை நீங்கள் அறிந்து கொள்வீர்கள்). 
  18. நாம் இவர்களுக்கு முன்னர் ஃபிர்அவ்னின் சமுதாயத்தினரைச் சோதித்தோம். அவர்களிடம் கண்ணியத்திற்குரிய ஒரு தூதர் வந்தார். 
  19. (அவர், அவர்களிடம் கூறினார்): அல்லாஹ்வின் அடியார்களை நீங்கள் என்னிடம் ஒப்படைத்து விடுங்கள். நிச்சயமாக நான் உங்களுக்கு நம்பிக்கையில் உண்மையான ஒரு தூதராவேன்; 
  20. அல்லாஹ்வை எதிர்ப்பதில் நீங்கள், உங்களை உயர்த்திக் கொள்ளாதீர்கள். நிச்சயமாக நான், உங்களிடம் தெளிவான சான்றுடன் வந்துள்ளேன்;
  21. என்னை நீங்கள் (அவசரப்பட்டு) கல்லெறிந்து கொன்று விடாதிருப்பதற்காக, என் இறைவனும், உங்கள் இறைவனுமாகிய அவனிடம் நான் பாதுகாப்புக் கோருகிறேன்; 
  22. நீங்கள் என்னை நம்பவில்லையாயின், நீங்கள் என்னை முற்றிலும் தனியாக விட்டு விடுங்கள். 
  23. பின்னர் அவர், இவர்கள் பாவம் செய்யும் சமுதாயத்தினராக இருக்கின்றனர் என்று கூறித் தம் இறைவனை வேண்டினார். 
  24. (அப்போது இறைவன் கூறினான்:) நீர் என் அடியார்களை இரவோடு இரவாக (இந்த நாட்டிலிருந்து) அழைத்துச் செல்வீராக. ஏனெனில் நீங்கள் பின்தொடரப்படுவீர்கள். 
  25. கடல் தாழ்ந்து அமைதியாக இருக்கும் வேளையில், நீர் அதனை (உமக்குப் பின்னால்) விட்டு விடுவீராக. நிச்சயமாக அவர்கள் மூழ்கடிக்கப்பட வேண்டிய படையினராவர். 
  26. அவர்கள் தங்களுக்குப் பின்னர் எத்தனையோ தோட்டங்களையும், நீரூற்றுக்களையும் விட்டுச் சென்றனர்! 
  27. வயல்களையும், கண்ணியத்திற்குரிய இடங்களையும்; 
  28. அவர்கள் மகிழ்ச்சியடைந்நு கொண்டிருந்த சுகபோகங்களையும்( விட்டுச் சென்றனர்). 
  29. இவ்வாறே நிகழ்ந்தது. நாம் இவை எல்லாவற்றிற்கும் மற்றொரு சமுதாயத்தினரை வாரிசாக ஆக்கினோம்6. 
  30. வானமும், பூமியும் அவர்களுக்காக அழவில்லை7. அவர்களுக்குக் காலக்கெடு அளிக்கப்படவுமில்லை. ரு1
  31. இஸ்ராயீலின் மக்களை இழிவான தண்டனையிலிருந்து நாம் காப்பாற்றினோம். 
  32. (அதாவது) ஃபிர்அவ்னிடமிருந்து. நிச்சயமாக அவன் மிக்க கர்வம் கொண்டவனாகவும், வரம்பு மீறி நடப்பவர்களைச் சேர்ந்தவனாகவும் இருந்தான். 
  33. நாம் (அவர்களது தகுதியைத்) தெரிந்து கொண்டு (அவர்களின் காலத்திலுள்ள) எல்லாச் சமுதாயங்களுக்கும் மேலாக அவர்களைத் தேர்ந்தெடுத்தோம். 
  34. தெளிவானதொரு சோதனையைக் கொண்ட பல அடையாளங்களை நாம் அவர்களுக்கு வழங்கினோம். 
  35. நிச்சயமாக இவர்கள் கூறுகின்றனர்: 
  36. நமக்கு முதல் மரணத்தையன்றி வேறெந்த மரணமும் இல்லை; நாம் மீண்டும் எழுப்பப்படவும் மாட்டோம்; 
  37. எனவே, நீங்கள் உண்மை சொல்பவர்களாயின், எங்கள் மூதாதையர்களை (திரும்பக்) கொண்டு வந்து காட்டுங்கள். 
  38. அவர்கள் சிறந்தவர்களா? அல்லது துப்பா (என்னும்) சமுதாயத்தினரும், இவர்களுக்கு முன்னிருந்தவர்களுமா? (சிறந்தவர்கள்). அவர்களெல்லாம் குற்றம் செய்பவர்களாக இருந்ததனால், நாம் அவர்களை அழித்து விட்டோம். 
  39. நாம் வானங்களையும், பூமியையும் மற்றும் அவ்விரண்டிற்கிடையிலுள்ளவற்றையும் விளையாட்டிற்காகப் படைக்கவில்லை. 
  40. நாம் அவற்றை நிலையான ஒரு நோக்கத்திற்காகவே படைத்தோம். ஆனால் அவர்களுள் பெரும்பாலார் அறிவதில்லை.
  41. நிச்சயமாக தீர்ப்பு நாள் அவர்கள் எல்லோருக்கும் குறிப்பிட்ட நேரமாகும். 
  42. அந்நாளில் நண்பர் எவரும், எந்த நண்பருக்கும் அறவே பயன்பட மாட்டார். அவர்கள் உதவி செய்யப்படவும் மாட்டார்கள். 
  43. ஆனால் எவருக்கு அல்லாஹ் கருணை காட்டுவானோ அவரைத் தவிர. நிச்சயமாக அவன் வல்லமையுள்ளவனும், மேன்மேலும் கருணை காட்டுபவனுமாவான். ரு2 
  44. நிச்சயமாக கள்ளி மரம்8 
  45. பாவிகளின் உணவாகும். 
  46. உருகிய செம்பைப் போன்று அது (அவர்களது) வயிறுகளில் கொதிக்கும். 
  47. சுடுவெந்நீர் கொதிப்பது போல். 
  48. (நாம் வானவர்களுக்குக் கட்டளையிடுவோம்) நீங்கள் அவனைப் பிடித்துச் சுடர்விட்டெரியும் நெருப்பின் மையத்திற்கு இழுத்துச் செல்லுங்கள்; 
  49. பின்னர் தண்டனையாகத் தரப்படும் கொதிக்கும் நீரை அவனது தலை மேல் ஊற்றுங்கள். 
  50. (நாம் அவனிடம் கூறுவோம்: இத் தண்டனையை) நீ சுவைத்துப் பார்; நீ வல்லமையுள்ளவனும், கண்ணியத்திற்குரியவனும் ஆயிற்றே! (நீ அவ்வாறே உன்னைப் பற்றி நினைத்துக் கொண்டிருந்தாய்).
  51. நீங்கள் ஐயம் கொண்டிருந்தது நிச்சயமாக இதுவே. (என்றும் நாம் கூறுவோம்). 
  52. நிச்சயமாக இறையச்சமுடையோர் பாதுகாப்பான இடத்தில் இருப்பார்கள். 
  53. தோட்டங்கள், நீரூற்றுக்கள் ஆகியவற்றிற்கிடையே (இருப்பார்கள்). 
  54. அவர்கள் மெல்லிய பட்டாடையும், கனமான பட்டாடையும் அணிந்து, ஒருவரையொருவர் நோக்கியவாறு அமர்ந்திருப்பார்கள். 
  55. (அது) அவ்வாறே (இருக்கும்) அகன்ற, கருமை நிறக் கண்களைக் கொண்ட அழகிய இணைகளை நாம் அவர்களுக்குத் துணைவர்களாக வழங்குவோம். 
  56. அவர்கள் அவற்றில் எல்லாவகையான பழங்களையும் வரவழைப்பர்; மேலும் அமைதியுடன் வாழ்ந்து வருவர். 
  57. முதல் மரணத்தைத் தவிர, அவர்கள் அவற்றில் வேறெந்த மரணத்தையும் சுவைக்க மாட்டார்கள். கொழுந்து விட்டெரியும் நெருப்புத் தண்டனையிலிருந்து அவன் அவர்களைக் காப்பாற்றுவான்; 
  58. (இதுவும்) உமது இறைவனிடமிருந்துள்ள அருளாகும். இது ஒரு மகத்தான வெற்றியாகும். 
  59. அவர்களின் அறிவுரையினைப் பெறுவதற்காக நாம் இதனை (குர்ஆனை) உமது மொழியில் எளிதாக்கியுள்ளோம். 
  60. எனவே நீர் எதிர்பார்த்திருப்பீராக; அவர்களும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர். ரு3
Powered by Blogger.