அதிகாரம்: அத் தக்வீர்
அருளப்பெற்ற இடம்
: மக்கா | வசனங்கள்: 30
பிரிவுகள்: 1
- அளவற்ற அருளாளனும் மேன்மேலும் கருணை காட்டுபவனுமாகிய அல்லாஹ்வின் பெயரால் (ஓதுகின்றேன்).
- சூரியன் மூடப்படும் பொழுது,
- நட்சத்திரங்கள் மங்கலானவையாகி விடும் போது,
- மலைகள் அகற்றப்படும் பொழுது,
- பத்து மாதம் கருக் கொண்ட பெண் ஒட்டகங்கள் கைவிடப்படும் பொழுது,
- விலங்குகள் ஒன்று சேர்க்கப்படும் பொழுது,
- கடல்கள் (அல்லது ஆறுகள் ஒன்று மற்றொன்றில்) பாயச் செய்யப் படும் பொழுது,
- (பல்வேறு இன) மக்கள் ஒன்று சேர்க்கபடும் பொழுது,
- உயிருடன் புதைக்கப்படும் பெண் குழந்தை பற்றிக் கேள்வி கேட்கப்படும் பொழுது,
- என்ன குற்றத்திற்காக அவள் கொல்லப்பட்டாள்?
- நூல்கள் விரிவாகப் பரப்பப்படும் பொழுது,
- வானத்தின் தோல் உரிக்கப் படும் பொழுது,
- நரகம் சுடர்விட்டெரியுமாறு செய்யப்படும் பொழுது,
- சுவர்க்கம் நெருக்கமாக ஆக்கப்படும் பொழுது,
- பின்னர் ஒவ்வோர் ஆன்மாவும் தான் கொண்டு வந்திருப்பதை அறிந்து கொள்ளும்.
- (நீங்கள் நினைப்பது போன்று) அன்று. பின் வாங்குபவற்றையும் நான் சாட்சியாகக் கூறுகின்றேன்.
- முன்னால் சென்று பின்னர் மறைந்து கொள்பவற்றையும் (நான் சாட்சியாகக் கூறுகின்றேன்).
- முடிவடையப் போகும் இரவையும்
- மூச்சு விடத் தொடங்கும் விடியற்காலையையும் (நான் சாட்சியாக்கிக் கூறுகின்றேன்:)
- நிச்சயமாக (க் குர்ஆனாகிய) இது, மகிமைக்குரிய ஒரு தூதரின் வசனமாகும்.
- அவர் வலிமையுடையவரும், அரியணைக்குரிய (இறை)வனிடத்தில் மாபெரும் பதவியைப் பெற்றவரும்,
- கீழ்படிதலுக்கு உரியவரும் அவ்வாறே நம்பிக்கைக் குரியவருமாவார்.
- உங்களுடைய தோழர் பைத்தியக்காரர் அல்லர்.
- மேலும் நிச்சயமாக அவர் அவனைத் தெளிவான அடிவானத்தில் கண்டார்.
- மறைவானதைப் பற்றி அறிவிப்பதில் அவர் கருமித்தனமுள்ளவர் அல்லர்.
- இது விரட்டப்பட்ட ஷைத்தானின் வார்த்தையுமன்று.
- எனவே, (இவ்வாறிருந்தும்) நீங்கள் எங்கே செல்கின்றீர்கள்?
- இது உலகமனைத்திற்கும் நினைவூட்டக் கூடியதேயாகும்.
- (குறிப்பாக) உங்களுள் நேரான வழியில் செல்ல விரும்புவோருக்காக.
- அதே வேளையில் உலகங்களுக்கெல்லாம் இறைவனாகிய அல்லாஹ்வின் விருப்பத்திற்கேற்பவேயன்றி நீங்கள் அவனை விரும்புவதில்லை. ரு1