அதிகாரம்: அல்ஹாக்க
அருளப்பெற்ற இடம் : மக்கா | வசனங்கள்: 53
பிரிவுகள்: 2


  1. அளவற்ற அருளாளனும், மேன்மேலும் கருணை காட்டுபவனுமாகிய அல்லாஹ்வின் பெயரால் (ஓதுகின்றேன்). 
  2. நிச்சயம் நிகழக் கூடியது! 
  3. நிச்சயம் நிகழக் கூடியது என்ன? (என்பது உங்களுக்குத் தெரியுமா?) 
  4. மேலும் நிச்சயம் நிகழக் கூடியது என்னவென்று உமக்கு அறிவித்தது எது? 
  5. ஸமூது (இனத்தினரு)ம், ஆது (இனத்தினரு)ம் தகர்த்து விடக்கூடிய பேராபத்தைப் பொய்ப்படுத்தினர். 
  6. எனவே ஸமூது (இனத்தினர்) மிகக் கடுமையான ஒரு தண்டனையைக் கொண்டு அழிக்கப்பட்டனர். 
  7. மேலும் ஆது (இனத்தினர்) தொடர்ந்து வீசிய கடுமையான புயற்காற்றைக் கொண்டு அழிக்கப்பட்டனர். 
  8. அது அவர்களுக்கு எதிராகத் தொடர்ந்து ஏழு இரவுகளும், எட்டுப் பகல்களும் (வீசும்படிப்) பணிக்கப்பட்டது. எனவே அதில் அவர்கள், வீழ்ந்து கிடக்கும் பேரீச்ச மரங்களின் வெற்றுத் தண்டுகள் போன்று முற்றிலும் வீழ்த்தப்பட்டவர்களாக, நீர் அம்மக்களைக் காண்கிறீர். 
  9. (செவியேற்பவரே!) அவர்களுள் எவராவது எஞ்சியிருப்பதை நீர் காண்கின்றீரா? 
  10. ஃபிர்அவ்னும், அவனுக்கு முன்னிருந்தவர்களும், மேலும் கவிழ்க்கப்பட்ட நகரங்க(ளுக்குரிய லூத்துவின் சமுதாயத்தினர்க)ளும் பாவங்கள் செய்து வந்தனர்.
  11. அவர்கள் தங்கள் இறைவனின் தூதருக்கு மாறு செய்தனர். எனவே அவன் அவர்களை, எப்பொழுதும் பெருகிக் கொண்டேயிருக்கும் தண்டனையைக் கொண்டு பிடித்தான். 
  12. (நூஹ்வின் காலத்தில்) தண்ணீர் மேலே உயர்ந்த போது, நாம் உங்களைக் கப்பலில் ஏற்றினோம். 
  13. இதனை நாம் உங்களுக்கு ஒரு நினைவூட்டுதலாக ஆக்கவும்1, ஞாபகத்தில் வைத்துக் கொள்ளும் காதுகள் இதனை ஞாபகத்தில் கொள்ளவுமே செய்தோம். 
  14. எக்காளத்தில் (வேகமான) ஒரே ஒரு காற்று ஊதப்படும் போது2, 
  15. மேலும் பூமியும், மலைகளும் புரட்டப்பட்டு, ஒரே ஒரு மோதலில் அவை தூள் தூளாக ஆக்கப்படும்3. 
  16. அந்நாளில் (அந்தப் பெரும்) நிகழ்ச்சி நேரிடும்4. 
  17. வானம் பிளந்து விடும்5. அந்நாளில் அது முற்றிலும் நைந்ததாகி விடும். 
  18. வானவர்கள் அதன் விளிம்புகளில் (நின்று கொண்டு) இருப்பார்கள்6. அந்நாளில் உமது இறைவனது அரியணையை எட்டுபேர்7 சுமந்து கொண்டிருப்பார்கள். 
  19. அந்நாளில் நீங்கள் (இறைவன் முன்) கொண்டு வரப்படுவீர்கள். உங்கள் இரகசியங்களுள் எதுவும் மறைந்ததாக இருக்காது8. 
  20. பின்னர் எவரது வலக்கையில் அவருடைய (செயல்களின்) பதிவேடு கொடுக்கப்படுமோ அவர் (மற்றவர்களிடம்) கூறுவார். வாருங்கள்; என் பதிவேட்டைப் படித்துப் பாருங்கள்; 9
  21. எனக்குரிய கேள்வி கணக்கை நான் சந்திப்பேன் என்று நிச்சயமாக நான் உறுதி கொண்டிருந்தேன்10. 
  22. எனவே அவர் மிக இன்பமான வாழ்வை அனுபவிப்பார். 
  23. உயர்வான தோட்டத்தில், 
  24. அதன் பழக்குலைகள் (எளிதில் எட்டக்கூடியதாக) அருகில் இருக்கும். 
  25. கடந்த நாட்களில், நீங்கள் செய்த (நற்) செயல்களின் விளைவாக மகிழ்ச்சியுடன் உண்ணுங்கள்; அருந்துங்கள் (என அவர்களிடம் கூறப்படும்). 
  26. ஆனால் தனது (செயல்களின்) பதிவேடு தனது இடக்கையில் கொடுக்கப்படுபவன் கூறுவான்: அந்தோ! எனது பதிவேடு தரப்படாமல் இருந்திருக்க வேண்டுமே!  
  27. மேலும் எனக்குரிய (கேள்வி) கணக்கு என்னவென்று நான் அறியாமல் இருந்திருக்க வேண்டுமே! 
  28. அந்தோ! அ(ம் மரணமான)து என்னை முற்றிலும் அழித்திருக்க வேண்டுமே! 
  29. என் செல்வம் (இன்று) எனக்கு எந்தப் பயனையும் அளிக்கவில்லை; 
  30. எனது அதிகாரம் என்னை விட்டுச் சென்று விட்டது.
  31. (அப்பொழுது இறைவன் வானவர்களிடம் கூறுவான்:) நீங்கள் அவனைப் பிடித்து, அவனுக்கு விலங்கிடுங்கள்; 
  32. பின்னர் அவனை நரகத்தில் எறிந்து விடுங்கள். 
  33. அடுத்து, எழுபது முழ நீளமுள்ள11 சங்கிலியால் அவனைக் கட்டுங்கள்: 
  34. நிச்சயமாக அவன் மகத்துவமிக்க அல்லாஹ்விடம் நம்பிக்கை கொள்ளவில்லை. 
  35. ஏழைகளுக்கு உணவளிக்க அவன் தூண்டவுமில்லை. 
  36. எனவே இன்று அவனுக்கு இங்கு எந்த நண்பனும் இருக்கமாட்டான்12. 
  37. கழிவுப்பொருள்களைத் தவிர அவனுக்கு வேறெந்த உணவும் இல்லை. 
  38. குற்றவாளிகளே அதனை உண்பார்கள். ரு1 
  39. எனவே நீங்கள் பார்ப்பதை நான் (என் கூற்றிற்குச்) சான்றாகக் காட்டுகிறேன். 
  40. மேலும், நீங்கள் பார்க்காததும் (அதாவது உள், வெளி நிலைகளும் இதற்கு சான்றாகும்).
  41. நிச்சயமாக (க் குர்ஆனாகிய) இது மதிப்பிற்குரிய ஒரு தூதரின் (மூலம் கொண்டு வரப்பட்ட ) வசனமாகும். 
  42. இது ஒரு கவிஞரின் வசனமன்று; ஆனால் நீங்கள் அறவே நம்பிக்கை கொள்வதில்லை. 
  43. இது குறி சொல்பவரின் வசனமும் அன்று, ஆனால் நீங்கள் அறவே புரிந்து கொள்வதில்லை. 
  44. இது உலகங்களின் இறைவனிடமிருந்து இறக்கப்பட்டதாகும். 
  45. அவர் எந்தச் சொல்லையேனும் பொய்யான வெளிப்பாடாக எம்மீது சுமத்தியிருந்தால்13, 
  46. நிச்சயமாக நாம் அவரை எம் வலக்கையால் பிடித்திருப்போம். 
  47. பின்னர் நிச்சயமாக நாம் அவருடைய கழுத்துப் பெருநரம்புக் குழாயைத் துண்டித்திருப்போம். 
  48. உங்களுள் எவராலும் அவரை (எம்முடைய தண்டனையிலிருந்து) காப்பாற்ற இயலாது. 
  49. நிச்சயமாக (க் குர்ஆனாகிய) இது, இறையச்சமுடையவர்களுக்கு நினைவூட்டுதலாகும். 
  50. உங்களுள் (இதனை) பொய்ப்படுத்துபவர்களும் உள்ளனர் என்பதனை நிச்சயமாக நாம் அறிவோம்.
  51. நிச்சயமாக, இது நிராகரிப்பவர்களை மலைக்கச் செய்யும் ஒன்றாகும்14. (என்பதையும் நாம் அறிவோம்). 
  52. நிச்சயமாக இது உறுதியான உண்மையாகும். 
  53. எனவே நீர் மகத்தான உம் இறைவனது  பெயரைக் கொண்டு அவனது தூய்மையினை எடுத்துரைப்பீராக. ரு2

Powered by Blogger.