67- அல்முல்க்

அதிகாரம்: அல்முல்க்
அருளப்பெற்ற இடம்: மக்கா | வசனங்கள்: 31

பிரிவுகள்: 2

  1. அளவற்ற அருளாளனும், மேன்மேலும் கருணை காட்டுபவனுமாகிய அல்லாஹ்வின் பெயரால் (ஓதுகின்றேன்). 
  2. ஆட்சி எவன் கையில் உள்ளதோ அந்த இறைவன் மிகப்பெரும் அருளுக்குரியவனும், எல்லாவற்றிற்கும் பேராற்றல் உடையவனுமாவான். 
  3. உங்களுள் எவர் சிறந்த செயல்களை உடையவர் என்பதைச் சோதிப்பதற்காக அவன் மரணத்தையும், வாழ்வையும் படைத்துள்ளான். அவன் வல்லமை மிக்கவனும், மிக்க மன்னிப்பவனுமாவான். 
  4. அவனே ஏழு வானங்களையும் அடுக்கடுக்காகப் படைத்துள்ளான். அளவற்ற அருளாள(னான இறைவ)னது படைப்பில் உம்மால் எந்தக் குறைபாட்டையும் காண இயலாது. மீண்டும் பார்ப்பீராக! (அதில்) ஏதேனும் குறைபாடு உமக்குத் தெரிகிறதா? 
  5. பின்னர் நீர் மீண்டும் மீண்டும் (துருவித் துருவிப்) பார்ப்பீராக; இறுதியில் உமது பார்வை தோல்வியடைந்து, களைப்படைந்தவாறு உம்மிடமே திரும்பி விடும். 
  6. நிச்சயமாக நாம் கீழ்வானத்தை விளக்குகளைக் கொண்டு அழகுபடுத்தி, ஷைத்தான்களை விரட்டும் கருவிகளாக அவற்றை அமைத்து, அவர்களுக்காக சுடர்விட்டெரியும் நெருப்புத் தண்டனையை ஆயத்தப்படுத்தியுள்ளோம. 
  7. மேலும் தங்கள் இறைவனை மறுப்பவர்களுக்கு நரகத் தண்டனை உண்டு. அது மிகமிகக் கெட்ட சேருமிடமாகும். 
  8. அதில் அவர்கள் எறியப்படும் போது, அது கொதித்துக் கொண்டிருப்பது போல் அதன் பேரிரைச்சலை அவர்கள் கேட்பார்கள்1. 
  9. அது கோபத்தால் வெடித்தே விடலாம். (அநீதியிழைத்தவர்களின்) ஏதேனும் ஒரு கூட்டத்தினர் அதில் எறியப்படும் பொழுதெல்லாம், அதன் காவலர் அவர்களிடம், எச்சரிப்பவர் எவரும் உங்களிடம் வரவில்லையா? என்று கேட்பார். 
  10. ஆம்; நிச்சயமாக எச்சரிப்பவர் ஒருவர் வந்தார். ஆனால் நாங்கள் அவரைப் பொய்ப்படுத்தி, அல்லாஹ் எதனையும் இறக்கவில்லை; நீங்கள் பெரும் வழிகேட்டில் தான் இருக்கின்றீர்கள் என்று கூறினோம் என அவர்கள் கூறுவர்.
  11. மேலும் அவர்கள், நாங்கள் செவிசாய்த்திருந்தால் அல்லது அறிவுடைமையைப் பெற்றிருந்தால் நாங்கள் ஒருபோதும் சுடர்விட்டெரியும் நெருப்பிற்குரியவர்களுக்கிடையே இருந்திருக்க மாட்டோம் எனக் கூறுவர். 
  12. இவ்வாறாக, அவர்கள் தங்கள் பாவங்களை ஒப்புக் கொள்வார்கள். எனவே, சுடர்விட்டெரியும் நெருப்பிற்குரியவர்கள் சாபத்திற்குள்ளாக்கப்படுவார்கள். 
  13. நிச்சயமாகத் தங்கள் இறைவனுக்கு மறைமுகமாக அஞ்சுபவர்களுக்கு மன்னிப்பும், பெரும் நற்பலனும் உண்டு. 
  14. நீங்கள் கூறுவதை மறைத்தாலும், அதனை நீங்கள் வெளிப்படையாகக் கூறினாலும், அவன் (உங்கள்) நெஞ்சங்களிலுள்ளவற்றை நன்கு அறிகின்றான். 
  15. (உங்களைப்)படைத்தவன் (அதனை) அறியமாட்டானா? அவன் மிக நுட்பமான அனைத்தையும் அறிந்தவனும், நன்கு தெரிந்திருப்பவனுமாவான். ரு1 
  16. அவனே உங்களுக்காகப் பூமியை வாழ்வதற்குத் தகுந்த முறையில் ஆக்கியுள்ளான். எனவே நீங்கள் அதன் பரந்த வழிகளில் (எங்கு விரும்பினாலும்) செல்லுங்கள்; மேலும் அவனது உணவிலிருந்து உண்ணுங்கள். மேலும் அவனிடமே உயிர் பெற்றெழுந்து செல்ல வேண்டியதுள்ளது. 
  17. வானத்திலிருப்பவனைப் பற்றி, அவன் உங்களைப் பூமியில் அமிழ்ந்து விடுமாறு செய்யமாட்டானென்று நீங்கள் அச்சமற்றிருக்கின்றீர்களா? இதோ! அது (அதாவது பூமி) சுற்றிக் கொண்டிருப்பதைப் பார். 
  18. வானத்திலிருப்பவனைப் பற்றி, அவன் உங்கள் மீது கல்மாரியைப் பொழியமாட்டானென்று நீங்கள் அச்சமற்று இருக்கின்றீர்களா? பின்னர் நீங்கள் எனது எச்சரிக்கை எவ்வாறு (கொடியதாக) இருந்ததென்பதைத் தெரிந்து கொள்வீர்கள். 
  19. நிச்சயமாக, இவர்களுக்கு முன்னிருந்தவர்களும் (எம் தூதர்களைப்) பொய்ப்படுத்தினர். பின்னர் எனது தண்டனை எவ்வாறு (கடினமானதாக) இருந்தது? (என்பதனை அவர்கள் காணவில்லையா?) 
  20. அவர்கள் தங்களுக்கு மேல் பறவைகளை, அவை தம் இறக்கைகளை அசைக்காமல் விரித்துக் கொண்டிருப்பதையும், பின்னர் (இரையின் மீது துரிதமாக இறங்குவதற்காக அவற்றைச்) சுருக்கிக் கொண்டிருப்பதையும் பார்க்கவில்லையா? அளவற்ற அருளாள(னாகிய இறைவ)னே அவற்றை நிறுத்தி வைக்கின்றான்2. நிச்சயமாக அவன் எல்லாவற்றையும் நன்கு பார்க்கின்றான்.
  21. உங்கள் படையினர்களான அவர்களால், அளவற்ற அருளாள(னான இறைவ)னுக்கு எதிராக உங்களுக்கு உதவி செய்ய இயலுமா? நிராகரிப்பவர்கள் ஏமாற்றத்திற்கே ஆளாகியுள்ளனர்.
  22. அவன் தனது உணவை (அதாவது உணவளித்தலை) நிறுத்தி விட்டால், உங்களுக்கு (வேறு) எவன் உணவளிப்பான்? உண்மையிலேயே அவர்கள் வெறுப்பதிலும், எதிர்ப்பதிலும் மிக அதிகமாகப் பிடிவாதம் கொள்கின்றனர். 
  23. என்ன? முகங்குப்புற விழுந்து செல்பவன் மிகவும் நேரான வழியில் இருக்கிறானா? அல்லது நேரான பாதையில் நிமிர்ந்து செல்பவனா? 
  24. நீர் கூறுவீராக! அவனே உங்களைப் படைத்து, உங்களுக்காகக் காதுகளையும், கண்களையும், உள்ளங்களையும் உண்டு பண்ணினான். (ஆனால்) நீங்கள் அறவே நன்றி செலுத்துவதில்லை. 
  25. நீர் கூறுவீராக: அவனே உங்களைப் பூமியில் பல்கிப் பெருகச் செய்தான். மேலும் அவனிடமே நீங்கள் ஒன்றுதிரட்டப்படுவீர்கள். 
  26. நீங்கள் உண்மையாளர்களாயின், இந்த வாக்குறுதி எப்பொழுது (நிறைவேறும்) என்று அவர்கள் கூறுகின்றனர். 
  27. நீர் கூறுவீராக! அதனைப் பற்றிய ஞானம் அல்லாஹ்விடம் தான் உள்ளது. நான் மிகத் தெளிவான எச்சரிப்பவனேயாவேன். 
  28. அவர்கள் அதனை அருகில் காணும் போது, நிராகரிப்பவர்களின் முகங்கள் ஆழ்ந்த துக்கத்தால் தாக்கப்பட்டதாகி விடும். (அப்போது) அவர்களிடம் நீங்கள் தொடர்ந்து கேட்டு வந்தது இதுதான் என்று கூறப்படும். 
  29. நீர் கூறுவீராக: என்னையும், என்னுடன் உள்ளவர்களையும் அல்லாஹ் அழித்து விட்டால்3, அல்லது அவன் எங்களுக்கு கருணை காட்டினால், வேதனையளிக்கக்கூடிய தண்டனையிலிருந்து நிராகரிப்பவர்களைப் பாதுகாப்பவர் யார் என்பதை நீங்கள் எனக்குக் கூறுங்கள். 
  30. நீர் கூறுவீராக: அவன் அளவற்ற அருளாளனாவான்; அவனிடம் நாங்கள் நம்பிக்கை கொண்டுள்ளோம். மேலும் அவனிடமே நாங்கள் நம்பிக்கை வைத்துள்ளோம். எனவே தெளிவான வழிகேட்டில் இருப்பவர் யார் என்பதை நீங்கள் விரைவில் தெரிந்து கொள்வீர்கள்.
  31. நீர் கூறுவீராக: உங்களுடைய நீர் (வீழ்ச்சி பூமியின் ஆழத்தில்) மறைந்து போய்விட்டால், பின்னர் பாய்ந்தோடும் (தூய்மையான) தண்ணீரை உங்களுக்குக் கொண்டு வருபவன் எவன்? என்பதை நீங்கள் எனக்குக் கூறுங்கள். ரு2
Powered by Blogger.