68- அல்கலம்

அதிகாரம்: அல்கலம்
அருளப்பெற்ற இடம்: மக்கா | வசனங்கள்: 53

பிரிவுகள்: 2

  1. அளவற்ற அருளாளனும், மேன்மேலும் கருணை காட்டுபவனுமாகிய அல்லாஹ்வின் பெயரால் (ஓதுகின்றேன்). 
  2. மைக்கூடு, எழுதுகோல், அவர்கள் எழுதுவது ஆகியவை மேல் ஆணையாக1. 
  3. நீர் உமது இறைவனது அருளால், பைத்தியக்காரர் அல்லர். 
  4. நிச்சயமாக ஒருபோதும் முடிவடையாத நற்பலன் உமக்கு (இறைவனிடத்தில்) உண்டு2. 
  5. நிச்சயமாக நீர் மிகவும் உயர்வான நல்லொழுக்கத்தைப் பெற்றுள்ளீர்3. 
  6. விரைவில் நீரும் கண்டு கொள்வீர்; அவர்களும் கண்டு கொள்வார்கள். 
  7. உங்களுள் எவர் (பைத்தியத்தால்) துன்பத்திற்குள்ளாக்கப்பட்டுள்ளார் (என்பதைக் கண்டு கொள்வார்). 
  8. அவனது வழியை விட்டுத் தவறித் செல்பவனை நிச்சயமாக உம் இறைவன் நன்கு அறிகின்றான்; (நேரான) வழிகாட்டலைப் பின்பற்றுபவர்களையும் அவன் நன்கு அறிகின்றான். 
  9. எனவே, (உண்மையைப்) பொய்யாக்குபவர்களின் விருப்பங்களுக்கு நீர் இணங்காதீர். 
  10. தாம் இணங்கிச் செல்ல வேண்டுமாயின், நீரும் இணங்கிச் செல்ல வேண்டுமென்று அவர்கள் விரும்புகின்றனர்.
  11. ஆணையிடுகின்ற எந்த இழிந்தவனையும் நீர் பின்பற்ற வேண்டாம். 
  12. அவன் புறங்கூறுபவன்; அவதூறு கூறித் திரிபவன், 
  13. நன்மையைத் தடுப்பவன்; வரம்பு மீறுபவன்; பாவம் செய்பவன். 
  14. தீய குணமுடையவன்; இதற்கு மேலாக நெறிதவறிப் பிறந்தவன். 
  15. இதற்குக் காரணம், அவன் செல்வங்களையும், குழந்தைகளையும் உடையவனாக இருப்பதேயாகும். 
  16. அவனுக்கு எம் வசனங்கள் ஓதிக் காட்டப்படும் போது, இவை முன்னோர்களின் கட்டுக்கதைகளேயாகும் என்று அவன் கூறுகின்றான். 
  17. விரைவில் நாம் அவனது மூக்கில்  களங்கத்தை ஏற்படுத்துவோம். 
  18. தோட்டத்தின் சொந்தக்காரர்களை4 நாம் சோதனைக்கு ஆளாக்கியது போன்று, நிச்சயமாக நாம் இவர்களைச் சோதனைக்கு ஆளாக்குவோம். தாங்கள் கட்டாயம் அதனுடைய (பழங்கள் எல்லா)வற்றையும் காலையில் பறிக்க வேண்டும் என்று அவர்கள் சத்தியம் செய்து கொண்டனர். 
  19. மேலும் (இறைவன் நாடினால் என்று) அவர்கள் அல்லாஹ்வை நினைவு கூறவில்லை. 
  20. பின்னர் அவர்கள் தூங்கிக் கொண்டிருந்த போது, உமது இறைவனிடமிருந்து தண்டனை ஒன்று அதற்கு இறங்கியது.
  21. காலையில் அது பழங்கள் பறிக்கப்பட்ட தோட்டம் போன்று காணப்பட்டது5. 
  22. எனவே அவர்கள் அதிகாலையிலேயே ஒருவரையொருவர் அழைத்து, 
  23. நீங்கள் பழங்களைப் பறிக்க வேண்டுமாயின், அதிகாலையிலேயே உங்கள் வயலுக்குச் செல்லுங்கள் (என்றனர்). 
  24. ஆகவே, அவர்கள் ஒருவருடன் ஒருவர் மெதுவாகப் பேசிக் கொண்டே சென்றனர். 
  25. எந்த ஏழையும் உங்களிடம் (அனுமதி பெறாமல்) இன்றைய தினம் அதில் நுழைந்து விடக்கூடாது என்றனர். 
  26. (இவ்வாறு) கருமித்தனம் செய்ய வேண்டுமென்று தீர்மானித்துக் கொண்டு அவர்கள் அதிகாலையில் சென்றனர். 
  27. ஆனால் அவர்கள் அதனைக் கண்ட போது; நிச்சயமாக நாம் (வழி) தவறி விட்டோம் என்று கூறினர். 
  28. அவ்வாறன்று, மாறாக, உண்மையிலேயே நாம் (எல்லாவற்றையும்) முற்றிலும் இழந்து விட்டோம் என்று அவர்கள் கூறினர். 
  29. அவர்களுள் சிறந்தவர், நீங்கள் ஏன் இறைவனின் தூய்மையினை எடுத்துரைப்பதில்லை என்று நான் உங்களிடம் கூறவில்லையா? என்றார். 
  30. நம் இறைவன் (எல்லாக் குறைபாடுகளையும் விட்டுத்) தூய்மையானவனாவான்; நிச்சயமாக நாம் அநீதியிழைப்பவர்களாக இருக்கின்றோம் என்று அவர்கள் கூறினர்.
  31. பின்னர் அவர்கள் ஒருவரையொருவர் இகழ்ந்தவாறு, அவர்களுள் சிலர், மற்றுஞ்சிலரிடம் திரும்பினர். 
  32. மேலும்: நமக்கு அழிவு தான்! நிச்சயமாக நாம் கிளர்ச்சியாளர்களாக இருந்தோம் என்று அவர்கள் கூறினர். 
  33. (நாம் கழிவிரக்கம் கொண்டால்) நம் இறைவன் இதனை விடச் சிறந்த (தோட்டத்)தை நமக்குத் தந்து விடலாம்7. நிச்சயமாக நாம் நம் இறைவனிடம் பணிவுடன் மன்றாடுவோம். 
  34. (இவ்வுலகத்) தண்டனை அவ்வாறானதேயாகும். மறுமையின் தண்டனையோ மிகப் பெரியதாகும். அவர்கள் அறிந்திருக்க வேண்டுமே! ரு1 
  35. நிச்சயமாக, இறையச்சமுடையோருக்கு அவர்களின் இறைவனிடம் பேரின்பத் தோட்டங்கள் உள்ளன. 
  36. குற்றவாளிகளை (நாம் நடத்துவதைப்) போன்று, (எமக்குக்) கட்டுப்பட்டு நடப்பவர்களை நாம் நடத்துவோமா? 
  37. உங்களுக்கு என்ன நேர்ந்து விட்டது? நீங்கள் எவ்வாறு தீர்ப்பளிக்கின்றீர்கள்! 
  38. உங்களுக்கு ஒரு வேதம் இருக்கிறதா? அதில் நீங்கள் (இதனை) படிக்கிறீர்களா? 
  39. அதாவது நீங்கள் விரும்புவதெல்லாம் கிடைக்கும் என அதில் இருக்கிறதா? 
  40. அல்லது நீங்கள் உத்தரவிடுவதெல்லாம் நிச்சயமாக உங்களுக்குக் கிடைக்குமென்று, மறுமை நாள் வரை எம்மீது கடமையான ஏதேனும் உடன்படிக்கையை நீங்கள் பெற்றுள்ளீர்களா?
  41. அவர்களுள் அதற்குப் பொறுப்பாளர் யார் என்று நீர் அவர்களிடம் கேட்பீராக. 
  42. அல்லது (இறைவனுக்கு) இணையானவர்கள் அவர்களுக்கு இருக்கின்றனரா? அவர்கள் உண்மையாளர்களாயின், அவர்களால் (இறைவனுக்கு) இணையாக்கப்பட்டவர்களை அவர்கள் கொண்டு வரட்டும். 
  43. உண்மை வெளிப்படுத்தப்படும் நாளில், சிரம்பணிந்து வணங்குவதற்காக அவர்கள் அழைக்கப்படுவார்கள். ஆனால், அவர்கள் (அதற்கான) ஆற்றல் பெற்றிருக்க மாட்டார்கள். 
  44. அவர்களின் கண்கள் கீழ்நோக்கியவாறு இருக்கும். அவர்களை இழிவு சூழ்ந்து கொண்டிருக்கும். அவர்கள் நலமாக இருந்த போது, சிரம்பணிந்து வணங்குவதற்காக உண்மையிலேயே அவர்கள் அழைக்கப்பட்டனர். (ஆனால் அவர்கள் அதற்குக் கீழ்ப்படியவில்லை). 
  45. எனவே நீர் என்னையும், இவ்வசனத்தை பொய்யாக்குபவர்களையும் விட்டு விடுவீராக. நாம் அவர்களை, அவர்கள் அறியாத இடத்திலிருந்து படிப்படியாக (அழிவின் பக்கம்) இழுப்போம். 
  46. நான் அவர்களுக்கு காலக்கெடு வழங்குகின்றேன். (ஏனென்றால்) என் திட்டம் மிக்க வலுவானது. 
  47. நீர் அவர்களிடம் ஏதேனும் கூலி கேட்கின்றீரா? ஆகவே அவர்கள் கடன்சுமையினால் அழுத்தப்படுகின்றனரா? 
  48. மறைவானதைப் பற்றிய ஞானம் அவர்களுக்கு இருக்கிறதா? அதனை அவர்கள் எழுதிக் கொண்டிருக்கின்றார்களா? 
  49. எனவே நீர் உமது இறைவனின் கட்டளையி(னை நிறைவேற்றுவதி)ல் நிலைத்திருப்பீராக. மீன் (விழுங்கிய) மனிதரைப் போன்று நீர் ஆகி விடாதிருப்பீராக!8 அவர் (தம் இறைவனை) அழைத்த போது, அவர் ஆழ்ந்த கவலை கொண்டிருந்தார். 
  50. அவரது இறைவனிடமிருந்து ஓர் அருள் அவரைச் சென்றடையாமல் இருந்திருப்பின், நிச்சயமாக அவர் திறந்த நிலப்பரப்பில் எறியப்பட்டிருப்பார். மேலும் அவர் (தம் மக்களால்) குற்றம் சாட்டப்பட்டிருப்பார்.
  51. ஆனால் அவரது இறைவன் அவரைத் தேர்ந்தெடுத்து, நல்லடியார்களைச் சேர்ந்தவராக அவரை ஆக்கினான். 
  52. நிராகரிப்பவர்கள், நினைவூட்டக் கூடியதை செவியேற்ற போது, (கோபம் நிறைந்த) தங்கள் பார்வைகளால் உம்மை (இறைவனால் உமக்கு வழங்கப்பட்ட பதவியிலிருந்து) விரட்டி விட இருந்தனர். மேலும் அவர்கள், நிச்சயமாக இவர் பைத்தியக்காரர் எனக் கூறுகின்றனர். 
  53. ஆனால் (குர்ஆனாகிய) இது எல்லா உலகங்களுக்கும் நினைவூட்டக் கூடியதேயாகும்9.
Powered by Blogger.