52- அத்தூர்

அதிகாரம்: அத்தூர்
அருளப்பெற்ற இடம்: மக்கா | வசனங்கள்: 50

பிரிவுகள்: 2


  1. அளவற்ற அருளாளனும், மேன்மேலும் கருணை காட்டுபவனுமாகிய அல்லாஹ்வின் பெயரால் (ஓதுகின்றேன்). 
  2. நான் மலையைச்1 சான்றாக எடுத்துக் காட்டுகிறேன். 
  3. எழுதப் பெற்ற (இந்த) வேதத்தினையும்2, 
  4. (அதாவது) திறந்து வைக்கப்பட்டிருக்கும் தாள்களில்3, (எழுதப்பட்டுள்ள நூல்). 
  5. அடிக்கடி செல்லும் (க அபா) ஆலயத்தினையும்4, 
  6. உயர்த்தப்பட்டிருக்கும் கூரையையும்5, 
  7. பொங்கி எழுகின்ற கடலையும்6 (சான்றுகளாகக் காட்டிக் கூறுகிறோம்), 
  8. நிச்சயமாக உமது இறைவனின் தண்டனை நிகழ்ந்தே தீரும். 
  9. அதனைத் தடுப்பவன் எவனும் இல்லை. 
  10. அந்நாளில் மேகம் அளவு மீறி அலைமோதும்7.
  11. மலைகள், மலைக்க வைக்கும் அளவுக்கு நகர்ந்து விடும்8. 
  12. எனவே பொய்யாக்குபவர்களுக்கு அந்நாளில் அழிவு தான். 
  13. அவர்கள் வீண் பேச்சில் விளையாடுகின்றனர். 
  14. அந்நாளில் அவர்கள் நரகநெருப்பின்பால் தள்ளப்பட்டவாறு கொண்டு செல்லப்படுவர். 
  15. நீங்கள் பொய்ப்படுத்திக் கொண்டிருந்த நெருப்பு இது தான்; (என்று அவர்களுக்குச் சொல்லப்படும்). 
  16. இது மாயவித்தையோ அல்லது (இன்னும்) நீங்கள் பார்ப்பதில்லையா? 
  17. நீங்கள் இதில் நுழையுங்கள்; நீங்கள் பொறுத்துக் கொள்ளுங்கள் அல்லது பொறுத்துக் கொள்ளாமலிருங்கள். இரண்டும் உங்களுக்கு ஒன்றே. நீங்கள் செய்தவற்றிற்குத் தான் உங்களுக்குக் கூலி கொடுக்கப்படுகின்றது.(என்றும் அவர்களிடம் கூறப்படும்). 
  18. நிச்சயமாக இறையச்சமுடையவர்கள் தோட்டங்களிலும், பேரின்பத்திலும் இருப்பார்கள். 
  19. அவர்களின் இறைவன் அவர்களுக்கு வழங்குவதைக் கொண்டு அவர்கள் மகிழ்வர். அவர்களின் இறைவன் அவர்களை நரகத் தண்டனையிலிருந்து காப்பாற்றுவான். 
  20. நீங்கள் செய்து வந்த (நற்) செயல்களுக்காக மிக்க மகிழ்ச்சியுடன் உண்ணுங்கள், குடியுங்கள் (என்று அவன் கூறுவான்).
  21. அணி அணியாக வைக்கப்பட்டிருக்கும் மஞ்சங்களில் (தலையணைகளில்) சாய்ந்து அமர்ந்திருப்பார்கள். கருந்தடங் கண்களைக் கொண்ட கன்னிகளை நாம் அவர்களுக்குத் துணைவர்களாக வழங்குவோம். 
  22. எவர்கள் நம்பிக்கை கொண்டு, அவர்களின் சந்ததிகளும் நம்பிக்கையில் அவர்களைப் பின்பற்றுகிறார்களோ, அவர்களுடன் அவர்களின் சந்ததிகளையும் (மிக உயர்வான) சுவர்க்கத்தில் நாம் ஒன்று சேர்ப்போம். அவர்களது செயல்(களுக்குரிய கூலி)களுள் எதனையும் நாம் குறைக்க மாட்டோம். ஒவ்வொரு மனிதனும் தான் சம்பாதித்ததற்கு ஈடாக இருக்கின்றான். 
  23. அவர்களின் விருப்பத்திற்கேற்ப, (பலவகையான) பழத்தையும், இறைச்சியையும் நாம் அவர்களுக்கு வழங்குவோம். 
  24. அவர்கள் அங்கு ஒரு குவளையைத் தங்களுக்குள் பரிமாறிக் கொள்வர். அங்கு வீண் பேச்சோ, பாவம் செய்தலோ எதுவும் இருக்காது9. 
  25. அங்கு அவர்களுக்காக இளைஞர்கள் ஊழியம் செய்யக் காத்திருப்பார்கள். அவர்கள் நன்கு பாதுகாக்கப்பட்ட முத்துக்களைப் போன்றவர்களாக விளங்குவார்கள். 
  26. அவர்கள் ஒருவரையொருவர் நேருக்கு நேர் தங்களுக்குள் விசாரித்துக் கொண்டிருப்பர். 
  27. அவர்கள் கூறுவர்: இதற்கு முன்னர் நாம், நம் குடும்பத்தினருக்கிடையே (இருந்த போது, நமது விதியை குறித்துக்) கவலைக்குள்ளாகியிருந்தோம். 
  28. ஆனால் அல்லாஹ் நம்மீது அருள் செய்து, அனல் காற்றின் தண்டனையிலிருந்து நம்மைக் காப்பாற்றி விட்டான். 
  29. நாம் இதற்கு முன்னர் அவனிடம் வேண்டுதல் செய்து கொண்டிருந்தோம். நிச்சயமாக அவன் மிகுந்த நன்மை செய்பவனும், மேன்மேலும் கருணை காட்டுபவனுமாவான். ரு1 
  30. எனவே நீர் (மக்களுக்கு) அறிவுரை கூறிக் கொண்டிருப்பீராக. உமது இறைவனின் அருளால் நீர் குறி சொல்பவரோ; பைத்தியக்காரரோ அல்ல.
  31. அவர் ஒரு கவிஞர்; காலம் அவருக்குக் கொண்டு வரப் போகின்ற பேராபத்தை நாம் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம் என்று அவர்கள் கூறுகின்றனரா? 
  32. நீங்கள் எதிர்பார்த்துக் கொண்டிருங்கள். நானும் உங்களுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன் என்று நீர் கூறுவீராக. 
  33. இது குறித்து அவர்களது அறிவு(ம், விவேகமும்) அவர்களுக்குக் கட்டளையிடுகின்றதா? அல்லது அவர்கள் குழப்பவாதிகளான மக்களா? 
  34. அல்லது அவர் இதனை இட்டுக்கட்டிக் கூறியுள்ளார் என்று அவர்கள் கூறுகின்றனரா? அவ்வாறன்று; மாறாக அவர்கள் (இறையறிவிப்பின் மீது) அறவே நம்பிக்கை கொள்வதில்லை. 
  35. அவர்கள் உண்மை கூறுபவர்களாயின், இதற்கு நிகரான ஓர் வசனத்தை அவர்கள் கொண்டு வரட்டும். 
  36. அவர்கள் வெறுமையிலிருந்து படைக்கப்பட்டனரா? அல்லது இவர்கள் தம்மைத் தாமே படைத்தவர்களா? 
  37. அவர்கள் வானங்களையும், பூமியையும் படைத்துள்ளனரா? அவ்வாறன்று; மாறாக அவர்கள் (வானங்களையும்,பூமியையும் படைத்தவன் மீது) அறவே நம்பிக்கை கொள்வதில்லை. 
  38. அவர்களிடம் உமது இறைவனின் கருவூலங்கள் உள்ளனவா? அல்லது அவர்கள் (அவற்றின்) பாதுகாவலர்களா?  
  39. அவர்களுக்கு ஒரு ஏணி இருந்து, அதன்மூலம் (வானத்திற்கு ஏறி, இறைச் செய்திகளை) ஒட்டுக் கேட்கின்றனரா? அவ்வாறாயின் அவர்களுள் கேட்பவர் தெளிவான சான்றைக் கொண்டு வரட்டும். 
  40. அவனுக்குப் பெண் பிள்ளைகளும், உங்களுக்கு ஆண் பிள்ளைகளுமா?
  41. அல்லது நீர் அவர்களிடம் ஏதேனும் கூலி கேட்கின்றீரா? ஆகவே அவர்கள் கட(ன் சுமையி)னால் அழுத்தப்படுகின்றனரா? 
  42. மறைவானது (பற்றிய ஞானம்) அவர்களுக்கு இருக்கின்றதா? இதனால் அவர்கள் (அவ்வாறு) எழுதுகின்றனரா? 
  43. அவர்கள் (உமக்கு மாற்றமாக) ஏதாவது சதி செய்ய விரும்புகின்றனரா? ஆனால் நிராகரிப்பாளர்கள் தாம் அந்தச் சதியால் பிடிக்கப்படுவார்கள். 
  44. அல்லாஹ் அல்லாத வேறொரு கடவுள் அவர்களுக்கு உண்டா? (நினைவில் கொள்ளுங்கள்). அவர்கள் (அவனுக்கு) வைக்கின்ற இணையிலிருந்து அல்லாஹ் தூயவனாவான். 
  45. வானத்தின் ஒரு துண்டு விழுவதை அவர்கள் கண்டால், அது அடர்த்தியான ஒரு மேகம் தான் எனக் கூறுகின்றனர். 
  46. அவர்கள் தங்களுக்குரிய நாளைச் சந்திக்கும் வரை நீர் அவர்களை விட்டு விடுவீராக; அந்த நாளில் அவர்கள் இடியினால் தாக்கப்படுவர். 
  47. அந்நாளில் அவர்களின் சதித்திட்டம் அவர்களுக்குச் சிறிதும் பயனளிக்காது. மேலும் அவர்களுக்கு உதவி செய்யப்படவும் மாட்டாது. 
  48. நிச்சயமாக அநீதி இழைப்பவர்களுக்கு அதனைத் தவிர மற்றொரு தண்டனையும் உண்டு. ஆனால் அவர்களுள் பெரும்பாலார் அறிவதில்லை. 
  49. நீர் உமது இறைவனின் தீர்ப்பைப் பொறுமையுடன் எதிர்பார்ப்பீராக. ஏனென்றால் நிச்சயமாக நீர் எமது கண்களுக்கு முன்னால் (எமது பாதுகாப்பில்) இருக்கின்றீர். நீர் (தொழுகைக்காக) எழும் போது, உமது இறைவனைப் புகழ்ந்து அவனது தூய்மையை எடுத்துரைப்பீராக. 
  50. இரவு நேரத்திலும், விண்மீன்கள் மறையும் போதும் (அதாவது இரவு முடியும் தருவாயிலும்) நீர் அவனது தூய்மையினை எடுத்துரைப்பீராக. ரு2

Powered by Blogger.