54- அல்கமர்

அதிகாரம்: அல்கமர்
அருளப்பெற்ற இடம்: மக்கா | வசனங்கள்: 56

பிரிவுகள்: 3


  1. அளவற்ற அருளாளனும், மேன்மேலும் கருணை காட்டுபவனுமாகிய அல்லாஹ்வின் பெயரால் (ஓதுகின்றேன்). 
  2. (அரேபியாவின் அழிவிற்குரிய) அந்த நேரம் நெருங்கி விட்டது; சந்திரன் பிளந்து விட்டது1. 
  3. அவர்கள் ஓர் அடையாளத்தைக் கண்டால், புறக்கணித்து விட்டு, இது தொடர்ந்து நடந்து வரும் ஒரு மாய வித்தையேயாகும் என்பர்2. 
  4. அவர்கள் (தூதரைப்) பொய்யாக்கித் தங்களுடைய சொந்த விருப்பங்களைப் பின்பற்றுகின்றனர். ஆனால் நிச்சயமாக (இறைவனது) ஒவ்வொரு கட்டளையும் நிகழ்ந்தே தீரும். 
  5. கடுமையான எச்சரிக்கையைக் கொண்ட முன்னறிவிப்புகள் பற்றி ஏற்கனவே அவர்களிடம் கூறப்பட்டது. 
  6. (மேலும் அவை) முழுமையான ஞானத்தையும் கொண்டிருந்தன. ஆனால் அந்த எச்சரிக்கைகள் (அவர்களுக்கு) எந்தப் பயனையும் அளிக்கவில்லை. 
  7. எனவே நீர் அவர்களை விட்டு விலகி விடுவீராக. வெறுப்பூட்டும் ஒன்றன்பால் (தண்டனையின் பக்கம்) அழைப்பவர் அவர்களை அழைக்கும் நாளில், 
  8. அவர்களது கண்கள் கீழ்நோக்கியவாறு இருக்கும். அவர்கள் சிதறிக் கிடக்கும் வெட்டுக் கிளிகள் போன்று (தங்கள்) கல்லறைகளிலிருந்து3 வெளியேறி, 
  9. அழைப்பவரை நோக்கி விரைந்தோடுவர். இது கடினமான நாள் என்று நிராகரிப்போர் கூறுவர். 
  10. இவர்களுக்கு முன்னர் நூஹின் சமுதாயத்தினர் (தூதரைப்) பொய்யாக்கினர். அவர்கள் எமது அடியாரைப் பொய்யாக்கி, (இவர்) ஒரு பைத்தியக்காரர் (நம் கடவுளரால்) வெறுத்துத் தள்ளப்பட்ட ஒருவர் என்றனர்.
  11. எனவே அவர் 'நான் தோற்கடிக்கப்பட்டுள்ளேன்; எனவே, நீ (எனக்கு) உதவி செய்(ய வரு) வாயாக' என்று தம் இறைவனை வேண்டினார். 
  12. இதன் காரணமாக நாம் வேகமாகக் கொட்டும் தண்ணீரைக் கொண்டு வானத்தின் வாயில்களைத் திறந்து விட்டோம். 
  13. நாம் பூமியின் நீரூற்றுக்களையும் பாய்ந்தோடச் செய்தோம்.  எனவே (இரு வகை) தண்ணீரும் முடிவெடுக்கப்பட்ட ஒரு நோக்கத்திற்காக ஒன்றிணைந்தது. 
  14. நாம் அவரை மரப்பலகைகளையும், ஆணிகளையும் கொண்ட ஒன்றில் (கப்பலில்) எடுத்துச் சென்றோம்.  
  15. மறுக்கப்பட்டவருக்குக் கூலியாக, அது எமது கண்களுக்கு முன்னால் (எமது பார்வையில்) மிதந்து சென்றது. 
  16. நாம் அதனை (பின்னர் வரும் சமுதாயங்களுக்கு) ஓர் அடையாளமாக விட்டு வைத்தோம்4. எனவே அறிவுரையினைப் பெறுபவர் எவரும் உண்டா? 
  17. எனது தண்டனையும், எனது எச்சரிக்கைகளும் எவ்வாறு (பயங்கரமானவையாக) இருந்தன! 
  18. நிச்சயமாக நாம் குர்ஆனை (நீங்கள் அறிந்து) நினைவுகூர்ந்து, அறிவுரை பெறும் பொருட்டு எளிதாக ஆக்கியுள்ளோம். எனவே அறிவுரையினைப் பெறுபவர் எவரேனும் உண்டா? 
  19. ஆது ( சமுதாயத்தினர் தூதரைப்) பொய்யாக்கினர். எனவே எனது தண்டனையும், எனது எச்சரிக்கைகளும் எவ்வாறு (பயங்கரமானவையாக) இருந்தன. 
  20. முடிவற்ற ஒரு துரதிர்ஷ்டமான நாளில்5 மிக வேகமான புயல் காற்றை அவர்களுக்கு எதிராக நாம் அனுப்பினோம்.
  21. அது மக்களைப் பிடுங்கி எறிந்தது; அவர்கள் வேருடன் பிடுங்கி எறியப்பட்ட பேரீச்ச மரங்களின் மூடுகள் போல் ஆகி விட்டனர். 
  22. எனது தண்டனையும், எனது எச்சரிக்கைகளும் எவ்வாறு (பயங்கரமானவையாக) இருந்தன! 
  23. நிச்சயமாக நாம் குர்ஆனை (நீங்கள் அறிந்து) நினைவுகூர்ந்து அறிவுரை பெறும் பொருட்டு எளிதாக ஆக்கியுள்ளோம். எனவே அறிவுரையினைப் பெறுபவர் எவரேனும் உண்டா? ரு1 
  24. ஸமூது சமுதாயத்தினரும், எச்சரிப்பாளர்களைப் பொய்யாக்கினர்6. 
  25. அவர்கள் கூறினர்: என்ன? நம்மைச் சேர்ந்த ஒரு மனிதனை, ஒரு தனி நபரையா நாம் பின்பற்ற வேண்டும்? அவ்வாறாயின் நிச்சயமாக நாம் வெளிப்படையான வழிகேட்டிலும், பைத்தியத்திலும் இருப்பவர்களாவோம். 
  26. நம்முள் அவருக்கு (மட்டும்) தானா நினைவூட்டல் (வஹி) அருளப்பட்டுள்ளது? அவ்வாறன்று; மாறாக, அவர் மிகவும் பெருமையடிக்கும் பொய்யராவார். 
  27. (நாம் கூறினோம்): மிகவும் பெருமையடிக்கும் பொய்யர் யார் என்று அவர்கள் நாளை தெரிந்து கொள்வார்கள். 
  28. அவர்களுக்கு ஒரு சோதனையாக பெண் ஒட்டகம் ஒன்றை நாம் அனுப்பவிருக்கின்றோம். எனவே (ஸாலிஹே!) நீர் (அவர்களது முடிவை) எதிர்பார்த்துப் பொறுமையாக இருப்பீராக. 
  29. அவர்களுக்கிடையே தண்ணீர் பங்கிடப்பட்டுள்ளது; எனவே அருந்துவதற்கென்று ஒதுக்கப்பட்ட ஒவ்வொரு நேரமும் பகிர்ந்து கொள்ளப்பட வேண்டும் என்று நீர் அவர்களுக்குத் தெரிவிப்பீராக. 
  30. ஆனால் அவர்கள் தங்கள் தலைவனை அழைத்தனர். அவன் அதனைப் பிடித்து (அதன்) கால்களைத் துண்டித்து விட்டான்.
  31. எனது தண்டனையும், எனது எச்சரிக்கைகளும் எவ்வாறு (பயங்கரமானதாக) இருந்தன! 
  32. நாம் அவர்களுக்கு எதிராக ஒரே ஒரு தண்டனையைத் தான் அனுப்பினோம். அவர்கள் வேலி அமைப்பவனால் (வெட்டி) வீழ்த்தப்பட்ட, உலர்ந்த மரத்தூள்களைப் போல் ஆகி விட்டனர். 
  33. நிச்சயமாக நாம் குர்ஆனை (நீங்கள் அறிந்து) நினைவுகூர்ந்து, அறிவுரை பெறும் பொருட்டு எளிதாக ஆக்கியுள்ளோம். எனவே அறிவுரையினைப் பெறுபவர் எவரேனும் உண்டா? 
  34. லூத்தின் சமுதாயத்தினரும் எச்சரிப்பாளர்களைப் பொய்யாக்கினர். 
  35. லூத்தின் குடும்பத்தினரைத் தவிர, மற்றவர்களுக்கு கற்கள் நிரம்பிய புயல் காற்றை நாம் அனுப்பினோம். அதிகாலையில் அவ(ருடைய குடும்பத்தின)ர்களை நாம் காப்பாற்றினோம். 
  36. இது எம்மிடமிருந்து (வந்து)ள்ள ஓர் அருளாக இருந்தது. நன்றி பாராட்டுபவருக்கு நாம் இவ்வாறே கூலியளிக்கின்றோம். 
  37. நிச்சயமாக அவர் எமது தண்டனையைப் பற்றி அவர்களை எச்சரித்தார். ஆனால் அவர்கள் அந்த எச்சரிக்கைகள் குறித்து ஐயம் கொண்டனர். 
  38. அவர்கள், அவரது விருந்தினர்களிடமிருந்து அவரைத் திருப்ப நாடினர்7. எனவே நாம் அவர்களது கண்களைத் திரையிட்டு விட்டு, இப்பொழுது எனது தண்டனையையும், எனது எச்சரிக்கைகளையும் சுவைத்துப் பாருங்கள் என்றோம். 
  39. அதிகாலையில் நிலையான தண்டனை அவர்களை வந்தடைந்தது. 
  40. இப்பொழுது எனது தண்டனையையும், எனது எச்சரிக்கைகளையும் சுவைத்துப் பாருங்கள் (என்று நாம் கூறினோம்).
  41. நிச்சயமாக நாம் குர்ஆனை (நீங்கள் அறிந்து) நினைவுகூர்ந்து, அறிவுரை பெறும் பொருட்டு எளிதாக ஆக்கியுள்ளோம். எனவே அறிவுரையைப் பெறுபவர் எவரேனும் உண்டா? ரு2 
  42. நிச்சயமாக ஃபிர்அவ்னின் சமுதாயத்தினரிட(மு)ம் எச்சரிப்பாளர்கள் வந்தனர். 
  43. ஆனால் அவர்கள் எம் அடையாளங்கள் எல்லாவற்றையும் பொய்யாக்கினர். எனவே நாம் அவர்களை வல்லமையும், அதிகாரமும் உள்ளவன் பிடிப்பது போன்று பிடித்து விட்டோம். 
  44. உங்களைச் சேர்ந்த நிராகரிப்பவர்கள் அவர்களை விடச் சிறந்தவர்களா? அல்லது வேதங்களில் (தண்டனையிலிருந்து) உங்களுக்கு விதிவிலக்கு உள்ளதா? 
  45. நாங்கள் வெற்றி பெறக்கூடிய படையினராக இருக்கின்றோம் என்று அவர்கள் கூறுகின்றனரா? 
  46. அந்தப் படைகள் விரைவில் தோற்கடிக்கப்படும். அவர்கள் புறமுதுகு காட்டி வெருண்டோடுவர்8. 
  47. அதுமட்டுமன்று; அந்த நேரம், அவர்களு(டைய அழிவு)க்குக் குறிப்பிடப்பட்ட நேரமாகும். மேலும் அந்த நேரம் மிகுந்த பேராபத்தானதும், மிக்க கசப்பானதுமாகும். 
  48. நிச்சயமாக குற்றவாளிகள் (பகிரங்கமான) வழிகேட்டிலும், பைத்தியத்திலும் இருக்கின்றனர். 
  49. அவர்கள் முகங்குப்புற நெருப்பிற்கு இழுத்துச் செல்லப்படும் நாளில், (அவர்களிடம்) நீங்கள் நரகத் தண்டனையைச் சுவைத்துப் பாருங்கள் (எனக் கூறப்படும்). 
  50. நிச்சயமாக நாம் ஒவ்வொரு பொருளையும் (சரியான) அளவில் படைத்துள்ளோம்.
  51. எமது கட்டளை, கண்மூடிக்  கண்திறப்பது போல் (ஒரு நொடியில் நிறைவேற்றப்பட்டு விடும்) ஒன்றாகும். 
  52. நிச்சயமாக நாம் (இதற்கு முன்னரும்) உங்களைப் போன்றவர்களை அழித்துள்ளோம். எனவே அறிவுரையினைப் பெறுபவர் எவரேனும் உண்டா? 
  53. மேலும் அவர்கள் செய்த ஒவ்வொரு செயலும் ஏடுகளில் (பதிவு செய்யப்பட்டு) உள்ளது. 
  54. ஒவ்வொரு சிறிய, பெரிய செயலும் பதிவு செய்யப்பட்டுள்ளது9. 
  55. நிச்சயமாக இறையச்சமுடையவர்கள், தோட்டங்களிலும், ஆறுகளிலும் இருப்பர். 
  56. எல்லாம் வல்ல அரசனிடத்திலுள்ள நிலையான கண்ணியம் மிக்க இருப்பிடத்தில் இருப்பர். ரு3
Powered by Blogger.