70- அல் மஆரிஜ்

அதிகாரம்: அல் மஆரிஜ்
அருளப்பெற்ற இடம்: மக்கா  | வசனங்கள்: 45
பிரிவுகள்: 2

  1. அளவற்ற அருளாளனும், மேன்மேலும் கருணைகாட்டுபவனுமாகிய அல்லாஹ்வின் பெயரால் (ஓதுகின்றேன்).
  2. (நிராகரிப்பவர்களுக்கு) நிகழவிருக்கின்ற தண்டனையைப் பற்றி விசாரிப்பவன் விசாரிக்கின்றான்.
  3. நிராகரிப்பவர்களை அதிலிருந்து காப்பாற்றுபவன் எவனும் இல்லை. (எனவே அது குறித்து விசாரிப்பது பொருத்தமற்றதும், பயன்ற்றதுமாகும்).
  4. என்றும் உயர்ந்த நிலையையுடைய அல்லாஹ்விடமிருந்து அது வரும்.
  5. வானவர்களும், ஜிப்ரீலும் ஒரு நாளில் அவனிடம் உயர்கின்றனர். அ(ந்)த(நாளி)ன் அளவு ஐம்பது ஆயிரம் ஆண்டுகளாகும்1.
  6. எனவே, நீர் மிகச்சிறந்த முறையில் பொறுமையை மேற்கொள்வீராக.
  7. அவர்கள் அதனை மிகத் தொலைவிலானதாகக் காண்கின்றனர்.
  8. ஆனால், நாம் அதனை மிக அருகிலானதாகக் காண்கின்றோம்.
  9. வானம் உருகிய செம்பைப் போன்றதாகி விடும். (அந்) நாளில்;
  10. மலைகள் (காற்றில் மிதந்து அலைபடும்) பஞ்சுத் துணுக்குகளைப் போன்று ஆகி விடும்2.
  11. எந்த நண்பனும், எந்த நண்பனைப் பற்றியும் விசாரிக்க மாட்டான்.
  12. (ஏனெனில்) அவர்கள் ஒருவருக்கொருவர் (அதாவது அவர்களின் நிலைகளை) காண்பிக்கப்படுவர். குற்றவாளி அந்நாளின் தண்டனைக்கு, தன் மகனைத் தனக்கீடாகக் கொடுக்க விரும்புவான்.
  13. தன் மனைவியையும், தன் உடன்பிறப்பையும்,
  14. தனக்கு அடைக்கலம் தந்த உறவினர்களையும்,
  15. மேலும் பூமியிலுள்ள அனைத்தையும் கொடுத்தும் தன்னைக் காப்பாற்றலாம் (என ஏங்குவான்).
  16. கவனமாகக் கேளுங்கள்! (அவ்வாறில்லை) நிச்சயமாக அது தீச்சுடராகும்.
  17. (உடலின்) நுனிகள் வரையிலுமுள்ள தோலை உரித்து விடக்கூடியதாகும்.
  18. புறமுதுகு காட்டி ஓடி விட முயல்பவனையும் அது அழைக்கும்;
  19. (பொருளைப்) பதுக்கி, முடக்கி வைத்திருப்பவனையும் (அழைக்கும்).
  20. நிச்சயமாக, மனிதன் பொறுமையற்றவனாகவும், கருமித்தனமுள்ளவனாகவும் பிறந்துள்ளான்.
  21. அவனுக்கு ஏதேனும் தீங்கு ஏற்பட்டால் பதற்றமடைகின்றான்.
  22. அவனுக்கு ஏதேனும் நன்மை கிடைத்தால், கருமித்தனமுள்ளவனாகி விடுகின்றான்.
  23. தொழுகையை நிறைவேற்றுபவர்களைத் தவிர;
  24. அவர்கள் தங்கள் தொழுகைகளில் எப்போதும் நிலைத்திருப்பார்கள்.
  25. அவர்களின் செல்வங்களில் உறுதிப்படுத்தப்பட்ட ஒரு பங்கு உண்டு;
  26. கேட்பவருக்கும், (கேட்காத) ஆதரவற்றவருக்கும்;
  27. அவர்கள் தீர்ப்பு நாளை உண்மையானதென்று நம்புவார்கள்.
  28. அவர்கள் தங்கள் இறைவனின் தண்டனைக்கு அஞ்சுபவர்களாயிருப்பார்கள்.
  29. நிச்சயமாக, அவர்களது இறைவனின் தண்டனைக்கு எதிரில் எந்தத் தற்காப்புமில்லை.
  30. மேலும் அவர்கள் தங்கள் மறைவானப் பகுதிகளைப் பாதுகாத்துக் கொள்வார்கள்.
  31. தங்கள் மனைவியர்களிடமிருந்தும், தங்கள் வலக்கரம் சொந்தமாக்கிக் கொண்டதிலிருந்தும் தவிர; நிச்சயமாக அவர்களுக்கு எக் குற்றமுமில்லை.
  32. ஆனால் இதற்கப்பால் செல்ல விரும்புபவர்கள் வரம்பு மீறுபவர்களேயாவர்.
  33. அவர்கள் தங்களிடம் (நம்பி) ஒப்படைக்கப்பட்ட பொருட்களையும், தங்கள் உடன்படிக்கைகளையும் குறித்து விழிப்புடன் இருப்பார்கள்.
  34. அவர்கள் தங்கள் சாட்சியங்களில் (நேர்மையாளராக) நிலைத்திருப்பார்கள்.
  35. அவர்கள் தங்கள் தொழுகைகளை நிறைவேற்றுவதில் கண்டிப்புடன் இருப்பவருமாவர்.
  36. இத்தகையவர்களே (தகுந்த) கண்ணியத்துடன் தோட்டங்களில் இருப்பார்கள். ரு1
  37. நிராகரிப்பவர்களுக்கு என்ன நேர்ந்து விட்டது? அவர் கோபத்தால் தலை தூக்கியவர்களாக உம்மிடம் விரைகின்றனர்.
  38. வலப்பக்கத்திலிருந்தும், இடப்பக்கத்திலிருந்தும் பல பிரிவுகளாக (வருகின்றனர்).
  39. அவர்களுள் ஒவ்வொருவனும் பேரின்பத் தோட்டத்திற்குள் செலுத்தப்படலாமென்று எதிர்பார்க்கின்றானா?
  40. அது ஒருபோதும் நடக்காது! அவர்கள் அறியும் ஒன்றிலிருந்து நாம் அவர்களைப் படைத்துள்ளோம்.
  41. கிழக்குகள், மேற்குகள் ஆகியவற்றின் இறைவன் மேல் நான் ஆணையி(ட்)டு(கூறு)கிறேன். நிச்சயமாக, நாம் ஆற்றல் பெற்றவராவோம்.
  42. அவர்களின் இடத்தில் அவர்களை விடச் சிறந்த (மற்ற) வர்களை நாம் கொண்டு வருவதற்கு (ஆற்றல் பெற்றுள்ளோம்). மேலும் நாம் தோற்கடிக்கப்படுபவர்கள் அல்ல.
  43. எனவே, அவர்களுக்கு வாக்களிக்கப்பட்ட அவர்களது நாளை அவர்கள் சந்திக்கும் வரை அவர்கள் வீண் பேச்சிலும், விளையாட்டிலும் மூழ்கி இருக்குமாறு நீர் அவர்களைத் தனியே விட்டு விடுவீராக.
  44. அந்நாளில் அவர்கள் ஓர் இலக்கை நோக்கி ஓடுபவர்கள் போன்று, தங்கள் கல்லறைகளிலிருந்து விரைவாக வெளியேறுவார்கள்3.
  45. அவர்களின் கண்கள் (வெட்கத்தால்) கீழ் நோக்கியவாறு இருக்கும். அவர்களை இழிவு சூழ்ந்து கொண்டிருக்கும். இதுவே அவர்களுக்கு வாக்களிக்கப்பட்ட நாளாகும். ரு2




Powered by Blogger.