71- நூஹ்


அதிகாரம்: நூஹ்

அருளப்பெற்ற இடம்: மக்கா. | வசனங்கள்: 29

பிரிவுகள்: 2

  1. அளவற்ற அருளாளனும், மேன்மேலும் கருணைகாட்டுபவனுமாகிய அல்லாஹ்வின் பெயரால் (ஓதுகின்றேன்).
  2. உமது சமுதாயத்தினரிடம் வேதனையளிக்கக் கூடிய தண்டனை வருவதற்கு முன்னர், நீர் அவர்களை எச்சரிப்பீராக என்று கூறி நாம் நூஹை அவரது சமுதாயத்தினரிடம் அனுப்பினோம்.
  3. அவர் கூறினார்: என் சமுதாயத்தினரே! நிச்சயமாக நான் மிகத்தெளிவான எச்சரிக்கையாளனாக உங்களிடம் வந்துள்ளேன்.
  4. அதாவது நீங்கள் அல்லாஹ்வை மட்டும் வணங்க வேண்டும், அவனுக்கு அஞ்சி, எனக்குக் கட்டுப்பட்டு நடக்க வேண்டும் (என்று நான் உங்களிடம் கூறுகின்றேன்.)
  5. உங்கள் பாவங்களை அவன் உங்களுக்கு மன்னிப்பான். மேலும் ஒரு குறிப்பிட்ட காலம் வரை உங்களுக்குக் காலக்கெடு வழங்குவான்; நீங்கள் அறிந்திருப்பின், நிச்சயமாக அல்லாஹ்வால் குறிப்பிட்ட காலம் வந்து விடும் போது அது பிற்படுத்தப்படவே மாட்டாது.
  6. (பின்னர்) அவர் கூறினார்: என் இறைவா ! நான் என் சமுதாயத்தினரை இரவு, பகலாக அழைத்தேன்.
  7. ஆனால் எனது அழைப்பு, அவர்களை மேலும் அதிகமாக (என்னை விட்டு) ஓடவே செய்துள்ளது.
  8. நீ அவர்களை மன்னிப்பதற்காக நான் அவர்களை அழைத்த போதெல்லாம், அவர்கள் தங்கள் விரல்களைத் தங்கள் காதுகளில் புகுத்தி, தங்கள் ஆடைகளால் தங்களை மறைத்துக் கொண்டு1, (தங்கள் பாவச்செயல்களில்) பிடிவாதங் கொண்டு மிக வன்மையாகப் பெருமை பாராட்டினார்கள்.
  9. (இதற்குப்) பின்னர் நான் அவர்களை வெளிப்படையாக அழைத்தேன்.
  10. இதற்குப் பிறகு நான் அவர்களுக்குப் பகிரங்கமான அறிக்கையினை வெளியிட்டேன்; இரகசியமாகவும் அவர்களிடம் பேசினேன்.
  11. மேலும் நான் அவர்களிடம் கூறினேன்: நீங்கள் உங்கள் இறைவனிடம் மன்னிப்புக் கோருங்கள். அவன் மிக அதிகமாக மன்னிப்பவனாவான்.
  12. (நீங்கள் மன்னிப்புக் கோரினால்) அவன் உங்களுக்காக மிக அதிகமாக மழையை இறக்குவான்.
  13. மேலும் செல்வங்களையும், குழந்தைகளையும் கொண்டு அவன் உங்களுக்கு உதவி செய்வான்; உங்களுக்காகத் தோட்டங்களை முளைக்கச் செய்து, உங்களுக்காக ஆறுகளையும் ஓடச் செய்வான்.
  14. நீங்கள் அல்லாஹ்வுக்கு உண்மையான மதிப்பு ஏன் வழங்குவதில்லை?
  15. அவன் உங்களைப் பல நிலைகளில் படைத்துள்ளான்.
  16. அவன் ஏழு வானங்களையும் எவ்வாறு ஒன்றுக்கொன்று ஒத்து இருக்கும் முறையில் படைத்துள்ளான் என்பதனை நீர் காணவில்லையா?
  17. அவன் சந்திரனை அவற்றில் ஒளியாக அமைத்து, சூரியனை ஒரு விளக்காகவும் ஆக்கியுள்ளான்2.
  18. அல்லாஹ் உங்களைப் பூமியிலிருந்து நல்ல வளர்ச்சியாக வளரச் செய்துள்ளான்.
  19. பின்னர் அவன் உங்களை அதிலேயே திரும்பி விடச் செய்வான். பின்னர் உங்களை (அதிலிருந்தே) அவன் வெளியே கொண்டு வருவான்.
  20. பூமியை அல்லாஹ் உங்களுக்காக மிகப் பரந்ததாக ஆக்கியுள்ளான்.
  21. அதில் திறந்த வழியில் நீங்கள் செல்வதற்காகவே(அவ்வாறு ஆக்கினான்). ரு1
  22. நூஹ் கூறினார்: என் இறைவா! அவர்கள் எனக்கு மாறு செய்தனர். மேலும் எவனது செல்வமும் சந்ததிகளும், அவனது அழிவையே அதிகரித்துள்ளதோ அவனைப் பின்பற்றியுள்ளனர்.
  23. மேலும் (எனக்கெதிராக) அவர்கள் மாபெரும் திட்டம் தீட்டியுள்ளனர்.
  24. அவர்கள் (ஒருவருக்கொருவர்) நீங்கள் உங்கள் கடவுள்களை விட்டு விடாதீர்கள்; (உங்கள் கடவுள்களாகிய) வத்தையோ, ஸுவாவையோ, யகூஸையோ, யவூகையோ, நஸ்ரையோ விட்டு விடாதீர்கள் என்று கூறுகின்றனர்3.
  25. அவர்கள் அதிகமானவர்களை வழி தவறச் செய்து விட்டனர். எனவே, நீ,  அநீதியிழைப்பவர்களுக்கு வழிகேட்டையே அதிகரிப்பாயாக.
  26. அவர்கள் தங்கள் பாவங்களின் காரணமாக மூழ்கடிக்கப்பட்டனர். மேலும் நெருப்பில் புகுத்தப்பட்டனர். அல்லாஹ்வுக்கு எதிராகத் தங்களுக்கு உதவி செய்பவர்கள் எவரையும் அவர்கள் காணவில்லை.
  27. மேலும் நூஹ் கூறினார்: என் இறைவா! பூமியில் நிராகரிப்பவர்களின் எந்த வீட்டையும் நீ விட்டு வைக்காதிருப்பாயாக4.
  28. ஏனென்றால், நீ அவர்களை விட்டு வைத்தால், உனது மற்ற அடியார்களையும் அவர்கள் வழிதவறச் செய்து விடுவார்கள். மேலும் அவர்கள் நிராகரிக்கும் பாவியைத் தான் பெற்றெடுப்பார்கள்5.
  29. என் இறைவா! என்னையும், என் பெற்றோரையும், என் வீட்டில்6 நம்பிக்கை கொண்டவராக நுழைபவரையும், நம்பிக்கை கொண்ட ஆண்களையும், நம்பிக்கை கொண்ட பெண்களையும் மன்னிப்பாயாக; அநீதியிழைப்பவர்களுக்கு அழிவையே அதிகரிப்பாயாக. ரு2
Powered by Blogger.