72- அல் ஜின்னு


அதிகாரம்: அல்ஜின்னு
அருளப்பெற்ற இடம்: மக்கா | வசனங்கள்: 29
பிரிவுகள்: 6
  1. அளவற்ற அருளாளனும், மேன்மேலும் கருணைகாட்டுபவனுமாகிய அல்லாஹ்வின் பெயரால் (ஓதுகின்றேன்).
  2. நீர் கூறுவீராக! ஜின்களுள் ஒரு குழுவினர் (உம்மிடமிருந்து குர்ஆனைக்) கவனமாகக் கேட்டனர் என்று இறையறிவிப்பின் வாயிலாக எனக்கு அறிவிக்கப்பட்டுள்ளது1; அவர்கள் கூறினர்: நிச்சயமாக நாங்கள் வியப்பிற்குரிய ஒரு குர்ஆனைச் செவியேற்றோம்.
  3. அது நேர்வழியின்பால் வழி நடத்துகிறது; எனவே நாங்கள் அதன் மீது நம்பிக்கை கொண்டுள்ளோம். இனிமேல் நாங்கள் எங்கள் இறைவனுக்கு எவரையும் இணையாக ஆக்க மாட்டோம்.
  4. உண்மையிலேயே எங்கள் இறைவனின் மகிமை மிகவும் உயர்ந்ததாகும். அவன் தனக்காக மனைவியையோ, மகனையோ எடுத்துக் கொள்ளவில்லை2.
  5. மேலும் உண்மையிலேயே நம்மில் அறிவற்றவர்கள் அல்லாஹ்வைக் குறித்து தகாத, மாபெரும் பொய்களைக் கூறி வருகின்றனர்.
  6. மேலும், மனிதர்களும், ஜின்களும் அல்லாஹ்வைக் குறித்து அறவே பொய்யுரைக்க மாட்டார்கள் என்று நாம் எண்ணிக் கொண்டிருந்தோம்.
  7. மேலும் உண்மையிலேயே பொதுமக்களுள் சில மக்கள் ஜின்களுள் சில மக்களிடம் பாதுகாப்புக் கோரிக் கொண்டிருந்தனர்; (இவ்வாறு செய்த) அவர்கள் இவர்களுக்கு, இவர்களின் தற்பெருமையினை மேலும் அதிகமாக்கி விட்டனர்.
  8. மேலும் அல்லாஹ் ஒருபோதும் எவரையும் (நபியாக) அனுப்ப மாட்டான் என்று நீங்கள் நம்புவது போல அவர்களும் நம்பி வந்தனர்3.
  9. மேலும் நாங்கள் வானத்தைத் தொட்டோம்4. ஆனால் அது வலிமை வாய்ந்த காவலர்களாலும், கொழுந்து விட்டெரியும் நட்சத்திரங்களாலும் நிரப்பப்பட்டிருப்பதை நாங்கள் கண்டோம்.
  10. நாங்கள் செவியேற்பதற்காக அதன் இருப்பிடங்களுள் சிலவற்றில் அமர்ந்திருந்தோம். ஆனால் இப்பொழுது எவர் செவியேற்கின்றாரோ அவர், கொழுந்து விட்டெரியும் ஒரு நட்சத்திரம், தன்னைத் தாக்குவதற்கான பதுங்குமிடத்தில் காத்திருப்பதைக் காண்கின்றார்5.
  11. பூமியிலுள்ளவர்களுக்கு ஏதேனும் தீங்கு நாடப்பட்டுள்ளதா அல்லது அவர்களின் இறைவன் அவர்களை நேரா(னவர்களா)க ஆக்க திட்டமிட்டுள்ளானா என்பதை நாம் அறியமாட்டோம்.
  12. நம்முள் சிலர் நல்லவர்களாகவும், மற்றுஞ்சிலர் அதற்கு மாற்றமானவர்களாகவும் உள்ளனர். நாம் மாறுபட்ட பல வழிகளைப் பின்பற்றினோம்.
  13. பூமியில் அல்லாஹ்வின் திட்டத்தினை நம்மால் முறியடிக்கவும் இயலாது. ஓடிச் சென்று அவனிடமிருந்து தப்பித்துக் கொள்ளவும் இயலாது என்பதை நாம் அறிவோம்.
  14. நேர்வழியி(ற்கான அழைப்பி)னை நாங்கள் செவியேற்ற போது, அதில் நம்பிக்கை கொண்டோம். தமது இறைவனிடம் நம்பிக்கை கொள்பவர், எந்த இழப்பிற்கும் எந்த அநீதிக்கும் அஞ்சுவதில்லை.
  15. நம்முள் சிலர் (இறைவனுக்குக்) கட்டுப்பட்டு நடப்பவர்களாகவும், மற்றுஞ்சிலர் அநீதியிழைப்பவர்களாகவும் உள்ளனர். (இறைவனுக்குக்) கட்டுப்பட்டு நடப்பவர்களே நேர்வழி தேடுபவர்களாவர்.
  16. மேலும் அநீதியிழைப்பவர்களோ நரகத்தின் எரிபொருள்களாவர்.
  17. அவர்கள் (நேரான) வழியில் நிலைத்திருந்தால், நிச்சயமாக நாம் தண்ணீரை அவர்களுக்கு அருந்துவதற்காக தாராளமாக வழங்கியிருப்போம்.
  18. அதன்மூலம் நாம் அவர்களைச் சோதிப்பதற்காகவே (அவ்வாறு செய்வோம்.) எவன் தன் இறைவனை நினைப்பதைப் புறக்கணிக்கின்றானோ அவனை, அடக்கி விடக்கூடிய கடினமான தண்டனையில் அவன் தள்ளுவான்.
  19. வணங்குமிடங்கள் (எல்லாம்) அல்லாஹ்விற்கே உரியவையாகும். எனவே நீங்கள் அல்லாஹ்வையன்றி வேறெவரையும் அழைக்காதீர்கள்.
  20. அல்லாஹ்வின் அடியார் (ஆகிய முஹம்மத் நபி) அவனை வேண்டிக் கொண்டு நிற்கும் போது, அநேகமாக அவர்கள் அவரைத் திணறடிக்கும் வகையில் அவர் மேல் விழுகின்றனர். ரு1
  21. நீர் கூறுவீராக: நான் எனது இறைவனிடம் மட்டுமே வேண்டுகின்றேன். அவனுக்கு எவரையும் நான் இணையாக ஆக்குவதில்லை.
  22. உங்களுக்குத் தீங்கோ, நன்மையோ செய்ய எனக்கு வலிமையில்லை என்றும் கூறுவீராக.
  23. (மேலும்) நீர் கூறுவீராக: நிச்சயமாக, அல்லாஹ்வுக்கெதிராக என்னை எவராலும் காப்பாற்ற இயலாது. நிச்சயமாக அவனையன்றி எந்தப் புகலிடத்தையும் நான் காணவும் இல்லை.
  24. (எனது பொறுப்பு) அல்லாஹ்விடமிருந்து (வரும்) வெளிப்பாட்டையும், அவனது தூதுச்செய்திகளையும் எடுத்துரைப்பதேயாகும். அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் கீழ்ப்படியாதவர்களுக்காக நரக நெருப்பு உள்ளது. அவர்கள் அதில் நீண்ட நெடுங்காலம் இருப்பார்கள்.
  25. ஆம்; அவர்களுக்கு வாக்களிக்கப்பட்ட (தண்டனையான) அதனை அவர்கள் காணும் போது உதவியாளர்களைப் பொருத்த வரை மிகவும் பலவீனமானவர் யார்? , மேலும் எண்ணிக்கையைப் பொருத்த வரை மிகக் குறைவானவர் யார் என்பதை அவர்கள் அறிந்து கொள்வர்6.
  26. உங்களுக்கு வாக்களிக்கப்பட்ட நேரம் நெருங்கி விட்டதா அல்லது என் இறைவன் அதற்கு நீண்டதொரு காலக்கெடுவை நியமித்துள்ளானா என்பதை நான் அறியேன் என்று நீர் கூறுவீராக.
  27. அவன் மறைவானதை அறிபவனாவான். மேலும் அவன் தனது மறைவான ஞானத்தை எவருக்கும் வெளிப்படுத்துவதில்லை.
  28. அவன் தேர்ந்தெடுத்த தூதரைத் தவிர7; பின்னர் அவன் (பாதுகாப்பளிக்கும் வானவர்களின்) காவற்படை ஒன்றினை அவருக்கு முன்னாலும், அவருக்குப் பின்னாலும் செல்லுமாறு செய்கிறான்.
  29. (இறைத்தூதர்களாகிய) அவர்கள், தங்கள் இறைவனின் தூதுச் செய்திகளை (மக்களுக்கு) த் தெரிவித்து விட்டனரா என்பதை அவன் அறிவதற்காக (அவ்வாறு செய்கின்றான்). அவர்களிடமுள்ளவற்றை (எல்லாம்) அவன் சூழ்ந்து கொண்டு, எல்லாவற்றையும் அவன் கணித்து வைத்துள்ளான். ரு2


Powered by Blogger.