அதிகாரம்: அல்கியாமத்
அருளப்பெற்ற இடம்:
மக்கா | வசனங்கள்: 41
பிரிவுகள்: 2
- அளவற்ற அருளாளனும், மேன்மேலும் கருணைகாட்டுபவனுமாகிய அல்லாஹ்வின் பெயரால் (ஓதுகின்றேன்).
- (அவர்கள் நினைப்பது போல்) அல்ல. நான் உயிர் பெற்றெழும் (மறுமை) நாளைச் சான்றாகக் காட்டுகிறேன்.
- சுயமாகப் பெறப்படுகின்ற திறமையை நான் சான்றாகக் காட்டுகிறேன்.
- மனிதன் நினைக்கின்றானா நாம் அவனது எலும்புகளை ஒன்று சேர்க்க மாட்டோம் என்று?
- ஆம்! அவனுடைய ஒவ்வொரு விரல் நுனிகளையும் மீண்டும் அமைப்பதற்கு நாம் வலிமை பெற்றுள்ளோம்.
- ஆனால் மனிதன் தீமையைப் பற்றி முற்றிலும் தெரிந்திருந்தும், அதனைப் பின்பற்றிச் செல்லவே விரும்புகின்றான்.
- எழுப்பப்படும் நாள் எப்போது வரும் என்று அவன் கேட்கின்றான்.
- கண்(பார்வை) கூசும் போது,
- சந்திரனுக்கு கிரகணம் ஏற்பட்டு,
- சூரியனும், சந்திரனும் ஒன்று சேர்க்கப்படும் போதும்1,
- எங்கு தப்பியோடுவது என்று அந்நாளில் மனிதன் கூறுவான்.
- கவனமாகக் கேளுங்கள்! (இன்று தண்டனையிலிருந்து தப்புவதற்கு) எந்தப் புகலிடமும் இல்லை!
- அந்நாளில் உமது இறைவனிடமே தங்குமிடமுள்ளது.
- மனிதன் முன்னால் அனுப்பியதையும், பின்னால் விட்டுச் சென்றதையும் பற்றி அந்நாளில் அவனுக்குத் தெரிவிக்கப்படும்2.
- உண்மையிலேயே மனிதன், தன்னைப் பற்றி நன்கு தெரிந்தவனாக இருக்கின்றான்;
- அவன் தனது சாக்குப்போக்குகளை எடுத்துரைத்தாலும் சரியே.
- இ(க்குர்ஆனான)து விரைவில் இறங்க நீர் இத்துடன் நாவை அசைக்க வேண்டாம்3.
- நிச்சயமாக இதனைத் தொகுப்பதும், இதனை ஓதிக் காட்டுவதும் எமது பொறுப்பாகும்.
- எனவே நாம் இதனை ஓதி விட்டால், நீரும் இதனைப் பின் தொடர்ந்து ஓதுவீராக.
- பின்னர் அதனை விளக்கிக் கூறுவதும் எமது பொறுப்பேயாகும்.
- கவனமாகக் கேளுங்கள்! நீங்கள் நிலைத்திராததை விரும்புகின்றீர்கள்.
- மறுமையைப் புறக்கணித்து விடுகிறீர்கள்.
- அந்நாளில் சில முகங்கள் ஒளிமிகுந்தவையாக இருக்கும்.
- (அவை ஆர்வத்துடன்) தங்கள் இறைவனை நோக்கிப் பார்த்தவாறிருக்கும்.
- மேலும் சில முகங்கள் அந்நாளில் (துக்கத்தால்) வாடியவையாக இருக்கும்.
- ஏனென்றால், முதுகை முறித்து விடும் பெருந்துன்பம் தமக்கு நேரிடவிருக்கிறது என்று அவை நினைக்கும்.
- கவனமாகக் கேளுங்கள்! (மரணமடையவிருக்கும் ஒருவனுடைய உயிர்) தொண்டையை வந்தடையும் போதும்,
- (அவனைக் காப்பாற்ற) மந்திரிப்பவன் எவன் என்று கூறப்படும் போதும்,
- இதுவே பிரிந்து செல்லும் நேரம் என்று அவன் உறுதி கொள்ளும் போதும்,
- (மரண வேதனையில்) காலோடு கால் உராயும் போதும்,
- அந்நாளில் உமது இறைவனிடமே கொண்டு செல்லப்படும். ரு1
- ஏனென்றால் அவன் (உண்மையை) ஒப்புக் கொள்ளவுமில்லை; தொழுகைகளை நிறைவேற்றவுமில்லை.
- மாறாக, அவன் (உண்மையை) ஏற்க மறுத்தும், புறக்கணித்தும் விட்டான்.
- பின்னர், அவன் கர்வம் கொண்டு பெருமையாகத் தன் குடும்பத்தினரிடம் சென்றான்.
- உனக்கு அழிவு தான்! மீண்டும் அழிவு தான்!
- மீண்டும் உனக்கு அழிவு தான்! மீண்டும் அழிவு தான்!
- (அவன் படைக்கப்பட்டவாறு) தன்னிச்சையாக விட்டு விடப்படுவான் என்று மனிதன் நினைக்கின்றானா?
- (கர்ப்பத்தில்) செலுத்தப்பட்ட திரவத்தின் ஒரு துளியாக அவன் இருந்ததில்லையா?
- பின்னர் அவன் ஓர் பற்றிப்பிடிக்கும் இரத்தக் கட்டியாக ஆனான். இதன் பிறகு அல்லாஹ் (அவனுக்கு) உருவம் கொடுத்து, (அவனை) முழுமையாக ஆக்கினான்.
- பின்னர் அவன், அவனிடமிருந்து ஆண், பெண் இணையை உண்டு பண்ணினான்.
- இத்தகைய ஒரு (இறை)வன், மரணமடைந்தவர்களை உயிர் பெற்றெழச் செய்வதற்கு ஆற்றல் பெற்றவன் இல்லையா? ரு2