76- அத் தஹ்ர்


அதிகாரம்: அத்தஹ்ர்
அருளப்பெற்ற இடம்: மக்கா | வசனங்கள்: 32
பிரிவுகள்: 2

  1. அளவற்ற அருளாளனும், மேன்மேலும் கருணைகாட்டுபவனுமாகிய அல்லாஹ்வின் பெயரால் (ஓதுகின்றேன்).
  2. பேசப்படத்தக்க ஒரு பொருளாக மனிதன் இல்லாதிருந்த ஒரு காலக்கட்டம் அவனுக்கு வந்ததில்லையா?
  3. நாம் மனிதனைச் சோதிப்பதற்காக (ப் பல்வேறு ஆற்றல்களின்) கலவையான ஒரு விந்துத் துளியிலிருந்து அவனைப் படைத்தோம். நாம் அவனை நன்கு கேட்கின்றவனாகவும், பார்க்கின்றவனாகவும் மாற்றினோம்.
  4. நாம் அவனுக்கு வழியைக் காட்டியுள்ளோம். அவன் நன்றி செலுத்துபவனாகவோ அல்லது நன்றி கொன்றவனாகவோ இருக்கட்டும்.
  5. நிச்சயமாக, நாம் நிராகரிப்பாளர்களுக்காக (இரும்புச்) சங்கிலிகளையும், கழுத்து விலங்குகளையும், சுடர் விட்டெரியும் நெருப்பையும் ஆயத்தப்படுத்தி வைத்துள்ளோம்.
  6. ஆனால் சீரிய பண்புள்ளவர்கள் கற்பூரத்தால் பக்குவப்பட்ட கிண்ணத்திலிருந்து அருந்துவர்.
  7. அ(ந்தக் கற்பூரமான)து ஒரு நீரூற்றாகும்1. அதிலிருந்து அல்லாஹ்வின் அடியார்கள் அருந்துகின்றனர். அவர்கள் அதனை மிக வேகமாகப் பாயச் செய்கின்றனர்.
  8. அவர்கள் தங்கள் நேர்த்திக் கடன்களை நிறைவேற்றுகின்றனர். மேலும் அவர்கள் தீமை மிகவும் பரவியிருக்கும் ஒரு நாளிற்கு அஞ்சுகின்றனர்.
  9. அவர்கள் அ(ந்த இறை)வன் மீது கொண்ட அன்பின் காரணமாக ஏழை, அனாதை, கைதி ஆகியவர்களுக்கு உணவளிக்கின்றனர்.
  10. அல்லாஹ்வின் விருப்பத்திற்காகவே நாங்கள் உங்களுக்கு உணவளிக்கின்றோம்; உங்களிடமிருந்து எந்தக் கூலியையோ, (நீங்கள்) நன்றி செலுத்துவதையோ நாங்கள் விரும்புவதில்லை (என்றும்,)
  11. நிச்சயமாக, நாங்கள் எங்கள் இறைவனிடமிருந்து கோபம் நிறைந்த, புருவத்தைச் சுளித்துக் கொண்டிருக்கும் ஒரு நாளிற்கு அஞ்சுகின்றோம் (என்றும் அவர்கள் கூறுகின்றனர்).
  12. எனவே அல்லாஹ் அந்த நாளின் தீங்கிலிருந்து அவர்களைக் காப்பாற்றி, அவர்களுக்குப் புத்துணர்ச்சியையும், மகிழ்ச்சியையும் வழங்குவான்.
  13. அவர்கள் (நன்மையில் நிலைத்து நின்று) பொறுமையை மேற்கொண்டதால்,  அவன் அவர்களுக்குத் தோட்டத்தையும், பட்டாடையையும் பரிசாக வழங்குவான்.
  14. அவர்கள் அதிலுள்ள மஞ்சங்களில் தலையணைகளில் சாய்ந்து அமர்ந்திருப்பார்கள். அவர்கள் அதில் கடினமான வெப்பத்தையோ, கடினமான குளிரையோ காண மாட்டார்கள்.
  15. அதன் நிழல்கள் அவர்களுக்கு மிக மிக நெருங்கியவையாக இருக்கும். அதன் பழக்குலைகள் எளிதில் எட்டக் கூடியவையாக கொண்டு வரப்படும்.
  16. வெள்ளிப்பாத்திரங்களும், கண்ணாடிக் கோப்பைகளும் அவர்களிடம் மீண்டும், மீண்டும் கொண்டு வரப்படும்.
  17. கண்ணாடியைப் போன்றிருக்கும் அந்த வெள்ளிக் கோப்பைகளை அவர்கள் முழுத் திறமையினால் உருவாக்கினர்.
  18. அவர்களுக்கு அதில் இஞ்சியினால் பதப்படுத்தப்பட்ட ஒரு கிண்ணம் அருந்துவதற்குக் கொடுக்கப்படும்.
  19. அதில் ஸல்ஸபீல் என்னும் பெயர் பெற்ற ஒரு நீரூற்று இருக்கும்2. (அதனை நம்பிக்கையாளர்கள் அருந்துவார்கள்).
  20. முதுமையடையாத இளைஞர்கள் அவர்களுக்குப் பணி செய்ய எப்பொழுதும் வந்து கொண்டிருப்பார்கள். நீர் அவர்களைக் காணும் போது அவர்கள் சிதறிய முத்துக்கள் என்று நீர் நினைப்பீர்.
  21. மேலும் நீர் காணும் போது, ஒரு பேரின்பத்தையும், மகத்தான ஆட்சியையும் நீர் அங்குக் காண்பீர்.
  22. அவர்கள் மீது பச்சை நிறமானதும், சித்திர வேலைப்பாடு செய்யப்பட்டதுமான அழகிய பட்டாடைகள் இருக்கும். அவர்களுக்கு வெள்ளிக் காப்புகள் அணிவிக்கப்படும். அவர்களின் இறைவன் அவர்களுக்குத் தூய பானத்தை அருந்தக் கொடுப்பான்.
  23. இது உங்களுக்குரிய நற்பலனாகும். உங்கள் முயற்சிக்கு மதிப்பளிக்கப்பட்டுள்ளது. (என்று அவர்களிடம் கூறப்படும்). ரு1
  24. நிச்சயமாக, நாமே இந்தக் குர்ஆனைச் சிறிது சிறிதாக உமக்கு இறக்கியுள்ளோம்.
  25. எனவே நீர் உமது இறைவனின் தீர்ப்பிற்காகப் பொறுமையுடன் காத்திருப்பீராக; அவர்களுள் பாவியாகவோ, நன்றி கொன்றவனாகவோ இருக்கும் எவனுக்கும் நீர் இணங்கி விட வேண்டாம்.
  26. நீர் உமது இறைவனின் பெயரைக் காலையிலும், மாலையிலும் நினைவு கூர்வீராக.
  27. இரவு வேளையிலும் அவன் முன் சிரம் பணிந்து வணங்கி, இரவில் நீண்ட நேரம் வரை அவனது மகிமையை மிக அதிகமாகப் புகழ்வீராக.
  28. நிச்சயமாக, இவர்கள் தற்போதைய வாழ்வை விரும்பி, தங்களுக்கு முன்னாலுள்ள கடினமான ஒரு நாளை புறக்கணித்து விடுகின்றனர்.
  29. நாமே இவர்களைப் படைத்து, இவர்களின் உடலமைப்பை வலிமையுள்ளதாக ஆக்கியுள்ளோம். நாம் விரும்பினால், இவர்களுக்குப் பதிலாக இவர்களைப் போன்ற மற்றவர்களை எம்மால் கொண்டு வர முடியும்.
  30. நிச்சயமாக, இது (நினைவூட்டக்கூடிய) ஒரு நற்போதனையாகும். எனவே, விரும்புபவர் தமது இறைவனிடம் செல்லும் ஒரு வழியைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளட்டும்.
  31. ஆனால் அல்லாஹ் விரும்பினாலன்றி, உங்களால் உங்கள் விருப்பத்தைச் செயல்படுத்த முடியாது. நிச்சயமாக, அல்லாஹ் நன்கு அறிபவனும், நுண்ணறிவுடையவனுமாவான்3.
  32. தான் விரும்புபவரைத் தன் அருளில் நுழையுமாறு அவன் செய்கின்றான். அநீதியிழைப்பவர்களுக்கு வேதனையளிக்கக்கூடிய தண்டனையை அவன் ஆயத்தப்படுத்தி வைத்துள்ளான். ரு2
Powered by Blogger.