அதிகாரம்: அல் இன்பித்தார்
அருளப்பெற்ற இடம்
: மக்கா | வசனங்கள்: 20
பிரிவுகள்: 1
- அளவற்ற அருளாளனும், மேன்மேலும் கருணைகாட்டுபவனுமாகிய அல்லாஹ்வின் பெயரால் (ஓதுகின்றேன்).
- வானம் வெடித்து விடும் பொழுது1,
- நட்சத்திரங்கள் சிதறி விடும் பொழுது2,
- கடல்கள் பிளக்கச் செய்யப்(பட்டு ஒன்று சேர்க்கப்)படும் பொழுது3,
- கல்லறைகள் திறந்து வைக்கப்படும் பொழுது4,
- அப்போது (பெருங் குற்றவாளியான) ஆன்மா5, தான் முன்னால் அனுப்பியிருப்பதையும், பின்னால் விட்டுச் சென்றதையும் அறிந்து கொள்ளும்6.
- மனிதனே, உன் கண்ணியத்திற்குரிய இறைவனைப் பற்றி உன்னை ஏமாற்றியது எது?
- அ(ந்த இறை)வனே உன்னைப் படைத்தான். பின்னர் முழுமைப்படுத்தினான். பின்னர் தகுந்த ஆற்றலை வழங்கினான்.
- அவன் விரும்பிய தோற்றத்தில் உன்னை வடிவமைக்கின்றான்.
- (நீங்கள் நினைப்பது போன்று) அன்று, மாறாக (மறுமை நாளில்) தீர்ப்பு வழங்கப்படவிருப்பதை நீங்கள் நிராகரிக்கின்றீர்கள்.
- நிச்சயமாக (இறைவன் புறமிருந்து) உங்கள் மீது கண்காணிப்பவர்கள் உள்ளனர்.
- (அவர்கள்) கண்ணியத்திற்குரிய பதிவாளர்கள் (ஆவர்).
- நீங்கள் செய்பவற்றை அவர்கள் அறிகின்றனர்.
- நிச்சயமாக நன்மையில் முன்னேறுபவர் (எப்போதும்) அருள்களில் இருப்பர்.
- மேலும் நிச்சயமாகத் தீயவர்கள் நரகத்தில் இருப்பர்;
- தீர்ப்பு (வழங்கப்படும்) நாளில் அவர்கள் அதில் நுழைவார்கள்;
- அவர்களால் அதை விட்டுத் தப்பியோடவே இயலாது.
- தீர்ப்பு நாள் என்றால் என்னவென்று உம்மை அறியச் செய்தது எது?
- மீண்டும் (நாம் கூறுகின்றோம்) தீர்ப்பு நாள் என்றால் என்னவென்று உமக்கு அறிவித்தது எது?
- அந்நாளில் எந்த உயிரும், மற்றெந்த உயிருக்கும் சிறிதளவாவது பயனளிக்க எந்த வலிமையையும் பெற்றிருக்காது. மேலும் அந்நாளில் கட்டளை அல்லாஹ்வுடையதாகவே இருக்கும்8. ரு1