83- அல் முத்தஃப்பிபீன்


அதிகாரம்: அல் முத்தஃப்பிபீன்
அருளப்பெற்ற இடம்: மக்கா | வசனங்கள்: 37
பிரிவுகள்: 1

  1. அளவற்ற அருளாளனும், மேன்மேலும் கருணைகாட்டுபவனுமாகிய அல்லாஹ்வின் பெயரால் (ஓதுகின்றேன்).
  2. குறைவாக அளந்து கொடுப்பவர்களுக்கு அழிவு தான்:
  3. அவர்கள் மற்றவர்களிடமிருந்து அளந்து வாங்கும் போது, அதனை முழுமையாக வாங்குகின்றனர்:
  4. ஆனால் அவர்கள் மற்றவர்களுக்கு அளந்து கொடுக்கும் போது அல்லது அவர்களுக்கு நிறுத்துக் கொடுக்கும் போது குறைவாகக் கொடுக்கின்றனர்.
  5. அவர்கள் மீண்டும் (உயிர்ப்பித்து) எழுப்பப்படுவார்கள் என்பதை அத்தகையவர்கள் அறிவதில்லையா?
  6. அந்த மகத்துவமிக்க நாளி(ன் தீர்ப்பி)ற்காக.
  7. அந்நாளில் எல்லா மக்களும், எல்லா உலகங்களின் இறைவன் முன் நிற்பார்கள்.
  8. (அவர்கள் நினைப்பது போன்று) அன்று. நிச்சயமாக தீயவர்களின் குறிப்பு ஸிஜ்ஜீனில்1 உள்ளது.
  9. ஸிஜ்ஜீன் என்றால் என்னவென்று உம்மை அறியச் செய்தது எது?
  10. (அது விரிவாகப்) பதிவு செய்யப்பட்ட ஒரு நூலாகும்.
  11. பொய்ப்படுத்துபவர்களுக்கு அந்நாளில் அழிவுதான்;
  12. தீர்ப்பு நாளைப் பொய்ப்படுத்தும் அவர்களுக்கு (அழிவுதான்).
  13. வரம்பு மீறிய கொடும்பாவிகளைத் தவிர வேறெவரும் அதனை நிராகரிப்பதில்லை.
  14. அத்தகையவர்கள் முன் எம் வசனங்கள் ஓதிக் காட்டப்படும் போது, இவை முன்னோர்களின் கட்டுக்கதைகளேயாகும் என்று கூறுகின்றனர்.
  15. (அவ்வாறு) அன்று, மாறாக, அவர்கள் சம்பாதித்திருப்பது, அவர்களின் உள்ளங்களை துருப்பிடிக்கச் செய்து விட்டது. (அதனாலேயே அவ்வாறு கூறுகின்றனர்).
  16. அது மட்டுமன்று. நிச்சயமாக அவர்கள் அந்நாளில் தங்கள் இறைவனை(ப் பார்ப்பதை) விட்டுத் தடை செய்யப்படுவார்கள்.
  17. பின்னர் நிச்சயமாக அவர்கள் நரகத்தில் நுழைவார்கள்.
  18. பிறகு (அவர்களிடம்) நீங்கள் பொய்ப்படுத்திக் கொண்டிருந்தது இது தான் என்று கூறப்படும்.
  19. (நீங்கள் நினைப்பது போல்) அன்று. நிச்சயமாக நன்மை மிக்கோரின் குறிப்பு இல்லிய்யீனில்2 உள்ளது.
  20. இல்லிய்யீன் என்றால் என்னவென்று உம்மை அறியச் செய்தது எது?
  21. (அது விரிவாகப்) பதிவு செய்யப்பட்ட ஒரு நூலாகும்.
  22. (இறைவனை) நெருங்கியவர்கள் அதனைப் பார்ப்பார்கள்.
  23. நிச்சயமாக நன்மையில் முன்னேறியவர்கள் பேரின்பத்தில் இருப்பார்கள்.
  24. அவர்கள் மஞ்சங்களில் அமர்ந்து (எல்லா நிலைமைகளையும்) பார்த்துக் கொண்டிருப்பார்கள்.
  25. நீர் அவர்களின் முகங்களில் பேரின்பச் செழிப்பைக் காண்பீர்.
  26. முத்திரையிடப்பட்ட தூய்மையான பானம் அவர்களுக்கு அருந்தக் கொடுக்கப்படும்.
  27. அது கஸ்தூரியால் முத்திரையிடப்பட்டிருக்கும். ஆசை கொள்பவர் இதற்காக ஆசை கொள்ள வேண்டும்.
  28. அது தஸ்னீமி்3 (நீரி) னால் பதப்படுத்தப்பட்டிருக்கும்;
  29. அது ஒரு நீரூற்றாகும். (இறைவனுக்கு) நெருங்கியவர்கள் அதிலிருந்து அருந்துவர்.
  30. நிச்சயமாகக் குற்றவாளிகளாக இருந்தவர்கள், நம்பிக்கை கொண்டிருந்தவர்களைப் பார்த்து (ஏளனமாக)ச் சிரித்துக் கொண்டிருந்தனர்.
  31. அவர்கள், இவர்களைக் கடந்து சென்ற போது, அவர்கள் ஒருவருக்கொருவர் கண்ணால் சைகை செய்தனர்.
  32. அவர்கள் தங்கள் குடும்பத்தினரிடம் திரும்பிச் சென்ற போது (நம்பிக்கை கொண்டவர்களுக்கு எதிராக) செய்திகளை இட்டுக்கட்டுபவர்களாகவே திரும்பிச் சென்றனர்.
  33. அவர்கள் இவர்களைக் காணும் போது, நிச்சயமாக இவர்கள் முற்றிலும் வழி தவறியவர்களேயாவர் எனக் கூறுவர்.
  34. ஆனால் அவர்கள் இவர்களுக்குப் பாதுகாவலர்களாக அனுப்பப்படவில்லை.
  35. எனவே இன்று, நம்பிக்கை கொண்டவர்களே நிராகரிப்பவர்களைப் பார்த்துச் சிரிப்பார்கள்.
  36. அவர்கள் மஞ்சங்களில் அமர்ந்து (எல்லா நிலைமைகளையும்) பார்த்துக் கொண்டிருப்பார்கள்.
  37. நிராகரிப்பவர்களுக்கு, அவர்கள் செய்தவற்றிற்குத் தகுந்த பிரதிபலன் கொடுக்கப்பட்டு விட்டதா?(இல்லையா என்று அவர்கள் தங்களுக்குள் பேசிக் கொள்வர்). ரு1
Powered by Blogger.