85- அல் புரூஜ்


அதிகாரம்: அல் புரூஜ்
அருளப்பெற்ற இடம்: மக்கா | வசனங்கள்: 23
பிரிவுகள்: 1

  1. அளவற்ற அருளாளனும், மேன்மேலும் கருணைகாட்டுபவனுமாகிய அல்லாஹ்வின் பெயரால் (ஓதுகின்றேன்).
  2. கிரக நிலைகள் கொண்ட வானத்தை நான் சான்றாகக் காட்டுகிறேன்1.
  3. வாக்களிக்கப்பட்ட நாளையும்2,
  4. சாட்சி கூறுபவரையும், சாட்சி கூறப்பட்டவரையும்3 (நான் சான்றாகக் காட்டுகிறேன்).
  5. அகழ்களுக்குரியவர்கள் விபத்தில் அழிக்கப்பட்டனர்4.
  6. (அதாவது) எரிபொருள் ஊட்டப்பட்டுள்ள நெருப்பிற்குரியவர்கள்5,
  7. அவர்கள் அதன் அருகில் உட்கார்ந்திருந்த நேரத்தில்6,
  8. அவர்கள் நம்பிக்கை கொண்டவர்களுக்குச் செய்ததற்கு அவர்களே சாட்சிகளாக இருந்தனர்7.
  9. வல்லவனும், மிகுந்த புகழுக்குரியவனுமாகிய அல்லாஹ்விடம் அவர்கள் நம்பிக்கை கொண்ட ஒரே காரணத்திற்காகவே, அவர்களிடம் அவர்கள் வெறுப்புக் கொண்டனர்8.
  10. வானங்கள், பூமி ஆகியவற்றின் ஆட்சி அவனுக்கே உரியதாகும். அல்லாஹ் எல்லாவற்றிற்கும் சாட்சியாவான்9.
  11. நம்பிக்கை கொண்ட ஆண்களையும், நம்பிக்கை கொண்ட பெண்களையும் துன்புறுத்திப் பின்னர் கழிவிரக்கம் கொள்ளாதவர்களுக்கு, நிச்சயமாக நரகத் தண்டனையுமுண்டு; எரிக்கக் கூடிய தண்டனையும் அவர்களுக்கு உண்டு.
  12. ஆனால் நம்பிக்கை கொண்டு, நற்செயல்கள் செய்பவர்களுக்கு நிச்சயமாக தோட்டங்கள் உண்டு; அவற்றிற்கிடையே ஆறுகள் ஓடும். இதுவே மாபெரும் வெற்றியாகும்.
  13. நிச்சயமாக உமது இறைவனின் பிடி கடினமானதாகும்.
  14. நிச்சயமாக (முதலில்) தோற்றுவிப்பவனும், திரும்பவும் செய்பவனும் அவனே!
  15. மேலும் அவன் மிக்க மன்னிப்பவனும், மிக்க அன்பு காட்டுபவனுமாவான்.
  16. மேலும் அவன் அரியணைக்குரியவனும், மிக்க மேன்மைக்குரியவனுமாவான்10.
  17. தான் நினைப்பதைச் செய்பவன் ஆவான்.
  18. படைகளின் செய்தி உம்மிடம் வரவில்லையா?
  19. ஃபிர்அவ்ன், ஸமூது ஆகியவர்களது (படைகளின் செய்தி உம்மிடம் வரவில்லையா?)
  20. உண்மையிலேயே நிராகரிப்பவர்கள் (உண்மையினைப்) பொய்ப்படுத்துவதிலேயே (பிடிவாதமாக) இருக்கின்றனர்.
  21. ஆனால், அல்லாஹ் அவர்களை எல்லாப் பக்கங்களிலிருந்தும் சூழ்ந்து கொள்கிறான்.
  22. (அது மட்டுமன்று) உண்மையிலேயே இது மிக்க மேன்மைக்குரிய(தும், எங்கும் எப்பொழுதும் ஓதப்படுவதுமாகிய) குர்ஆனாகும்.
  23. எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட, நன்கு பாதுகாக்கப்பட்ட பலகையில் இது உள்ளது11. ரு1
Powered by Blogger.