அதிகாரம்: அல் காஷியா
அருளப்பெற்ற இடம்:
மக்கா | வசனங்கள்: 27
பிரிவுகள்: 1
- அளவற்ற அருளாளனும், மேன்மேலும் கருணைகாட்டுபவனுமாகிய அல்லாஹ்வின் பெயரால் (ஓதுகின்றேன்).
- சூழ்ந்து கொள்ளக்கூடிய (பேராபத்)தைப் பற்றிய செய்தி உம்மிடம் வந்துள்ளதா?
- அந்நாளில் சில முகங்கள் வருத்தத்தால் வாடியவையாக இருக்கும்1.
- (அவர்கள்) கடினமாக வேலை செய்து, களைத்துச் சோர்வடைந்து கொண்டிருப்பர்.
- (ஆனால் அவர்களின் முயற்சிக்கு எப்பயனும் கிடைக்காது) அவர்கள் சுடர் விட்டெரியும் நெருப்பில் நுழைவர்.
- கொதிக்கும் நீரூற்றிலிருந்து அவர்கள் அருந்துமாறு கொடுக்கப்படும்.
- கசப்பானதும், முட்கள் நிறைந்ததுமான உலர்ந்த புற்பூண்டைத் தவிர, வேறெந்த உணவும் அவர்களுக்குக் கிடைக்காது.
- அது (அவர்களை) வளர்க்காது; பசியையும் தீர்க்காது.
- அந்நாளில் சில முகங்கள் மிக்க மகிழ்ச்சியடைந்தவையாக இருக்கும்;
- தங்களுடைய (சென்ற காலக்) கடினமான முயற்சியினால் மிகவும் திருப்தியடைந்திருப்பர்.
- உயர்வான தோட்டத்தில் (தங்கி) இருப்பர்.
- நீர் அதில் எந்த வீண் பேச்சையும் கேட்க மாட்டீர்.
- அதில் ஓடிக் கொண்டிருக்கும் ஒரு நீரூற்று இருக்கும்.
- அதில் உயர்வான மஞ்சங்களும் இருக்கும்.
- கோப்பைகள் சரியாக வைக்கப்பட்டிருக்கும்.
- சாய்ந்து கொள்வதற்காகத் தலையணைகள் வரிசையாக(வும், அழகாகவும்) வைக்கப்பட்டிருக்கும்.
- விரிப்புகள் (நேர்த்தியாக) விரிக்கப்பட்டிருக்கும்.
- அவர்கள் மேகங்களை2, அவை எவ்வாறு படைக்கப்பட்டுள்ளனவென்றும் பார்ப்பதில்லையா?
- வானத்தை, அது எவ்வாறு உயர்த்தப்பட்டுள்ளதென்றும்3,
- மலைகளை, அவை எவ்வாறு நாட்டப்பட்டுள்ளனவென்றும்4,
- பூமியையும், அது எவ்வாறு விரிவுபடுத்தப்பட்டுள்ளதென்பதையும்5 (அவர்கள் பார்ப்பதில்லையா?)
- எனவே நீர் அறிவுரை கூறுவீராக; ஏனென்றால், நீர் அறிவுரை கூறுபவரேயாவீர்;
- நீர் அவர்களின் காவலராக நியமிக்கப்பட்டவர் அல்ல.
- ஆனால் எவர் புறக்கணித்து, நிராகரிக்கின்றாரோ,
- அவருக்கு அல்லாஹ் மாபெரும் தண்டனையை வழங்குவான்.
- நிச்சயமாக, அவர்கள் எம்மிடமே திரும்பி வர வேண்டியதிருக்கிறது.
- பின்னர் அவர்களிடம் கேள்வி, கணக்குக் கேட்பதும் நிச்சயமாக எம்முடைய வேலையேயாகும். ரு1