89- அல் ஃபஜ்ர்


அதிகாரம்: அல் ஃபஜ்ர்
அருளப்பெற்ற இடம்: மக்கா | வசனங்கள்: 31
பிரிவுகள்: 1

  1. அளவற்ற அருளாளனும், மேன்மேலும் கருணைகாட்டுபவனுமாகிய அல்லாஹ்வின் பெயரால் (ஓதுகின்றேன்).
  2. (நான்) விடியற்காலையைச் சான்றாகக் காட்டுகிறேன்1.
  3. பத்து இரவுகளையும்2,
  4. இரட்டை(ப் படையை)யும், ஒற்றை(ப் படையை)யும்2அ,
  5. (மேற்கூறப்பட்ட பத்து இரவுகளுக்குப் பிறகு) சென்று விடுகின்ற இரவையும், (சான்றாகக் காட்டுகிறேன்.)3
  6. அறிவுடையவருக்கு இதில் உறுதியான சான்று இல்லையா?
  7. ஆது  (இனத்தவரு)டன் உமது இறைவன் எவ்வாறு நடந்து கொண்டான் என்பதை நீர் பார்க்கவில்லையா?
  8. உயர்ந்த கட்டடங்களை உடையவர்களாகிய இரம் எனு(இனத்தவருடனு)ம் (உமது இறைவன் எவ்வாறு நடந்து கொண்டான் என்பதை நீர் பார்க்கவில்லையா?)
  9. அவற்றைப் போன்று அந்த நாடுகளில் உருவாக்கப்பட்டிருக்கவில்லை.
  10. பள்ளத்தாக்கில் கற்பாறைகளைக் குடைந்து (தங்கள் வீடுகளை) அமைத்த ஸமூது இனத்தவருடனும், (இறைவன் எவ்வாறு நடந்து கொண்டான் என்பது உமக்குத் தெரியாதா?).
  11. ஏராளமான பாசறைகளுக்குரிய ஃபிர்அவ்னுடனும் (உமது இறைவன் எவ்வாறு நடந்து கொண்டான் என்பதனை நீர் பார்க்கவில்லையா?)
  12. அவர்கள் நகரங்களில் வரம்பு மீறிச் செயல்பட்டனர்.
  13. அவர்கள் அவற்றில் குழப்பம் விளைவிப்பதில் மிக மிஞ்சி விட்டனர்.
  14. எனவே உமது இறைவன் அவர்கள் மீது தண்டனையின் சாட்டையை விழச் செய்தான்.
  15. நிச்சயமாக உமது இறைவன் கவனமாகப் பார்த்துக் கொண்டிருக்கிறான்.
  16. மனிதனைப் பொருத்தவரை, அவனுடைய இறைவன் அவனைச் சோதித்து, அவனுக்குக் கண்ணியமளித்து, அவனுக்கு அருள் செய்யும் போது, என் இறைவன் என்னைக் கண்ணியப்படுத்தியுள்ளான் என்று அவன் கூறுகின்றான்.
  17. ஆனால், அவன் அவனைச் சோதித்து, அவனது வாழ்விற்குரியவற்றை அவனுக்குக் குறைவாகக் கொடுக்கும் போது, என் இறைவன் என்னை இழிவுபடுத்தியுள்ளான் என்று அவன் கூறுகின்றான்.
  18. அவ்வாறன்று; மாறாக, (தவறு உங்களுடையது தான்) நீங்கள் அனாதைகளைக் கண்ணியப்படுத்தவில்லை.
  19. மேலும், ஏழைக்கு உணவளிக்குமாறு நீங்கள் ஒருவரையொருவர் தூண்டுவதுமில்லை;
  20. மேலும், (மற்றவர்களின்) பரம்பரைச் சொத்தை முழுவதுமாக விழுங்குகின்றீர்கள்;
  21. மேலும், நீங்கள் செல்வத்தை மிக அதிகமாக நேசிக்கின்றீர்கள்.
  22. கவனமாகக் கேளுங்கள்! பூமி பல துண்டுகளாக முற்றிலும் தகர்க்கப்பட்டு4,
  23. வானவர்கள் அணியணியாக நிற்கும் நிலையில், உமது இறைவன் வருகை தருவான்5.
  24. அந்நாளில் நரகம் (அருகில்) கொண்டு வரப்படும்6. அந்நாளில் மனிதன் போதனையைப் பெற விரும்புவான். ஆனால் அப்பொழுது போதனையைப் பெற்று அவனுக்கு என்ன பயன் கிடைக்கப் போகிறது? 7
  25. (இங்குள்ள) என் வாழ்விற்காக(ச் சில நற்செயல்களை) நான் அனுப்பியிருக்க வேண்டியதிருந்ததே என்று அவன் கூறுவான்8.
  26. எனவே, அந்நாளில் அவனுடைய (இறைவனுடைய) தண்டனையைப் போன்று வேறெவராலும் தண்டனை கொடுக்க இயலாது.
  27. அவனது பிடியைப் போன்று வேறெவராலும் பிடிக்க இயலாது.
  28. நிம்மதியடைந்த ஆன்மாவே!
  29. நீ உன் இறைவனிடம் திருப்தியடைந்தவாறும், அவன் (உன்னிடம்) திருப்தியடைந்தவாறும் (அவனிடம்) திரும்பி வருக9.
  30. தேர்ந்தெடுக்கப்பட்ட என் அடியார்களுக்கிடையே நுழைந்து விடுக10. (என உன் இறைவன் உன்னிடம் கூறுகின்றான்).
  31. மேலும் நீ என் தோட்டத்தில் நுழைந்து விடுக. ரு1
Powered by Blogger.