91- அஷ் ஷம்ஸ்


அதிகாரம்: அஷ் ஷம்ஸ்
அருளப்பெற்ற இடம்: மக்கா | வசனங்கள்: 16
பிரிவுகள்: 1

  1. அளவற்ற அருளாளனும், மேன்மேலும் கருணைகாட்டுபவனுமாகிய அல்லாஹ்வின் பெயரால் (ஓதுகின்றேன்).
  2. சூரியனையும், (அது தோன்றி, உயர்ந்து செல்கையில்) அதன் ஒளியையும் சான்றாகக் காட்டுகிறேன்1.
  3. அதனைப் பின் தொடர்ந்து வரும் சந்திரனையும்2,
  4. அதனை வெளிப்படுத்தும் பகலையும்3,
  5. அதனைத் திரையிடும் இரவையும்4,
  6. வானையும், அது உருவாக்கப்பட்டிருப்பதையும்5,
  7. பூமியையும், அது விரிவுபடுத்தப்பட்டிருப்பதையும்,
  8. மனித ஆன்மாவையும், அது குறையின்றி முழுமையாக்கப்பட்டிருப்பதையும் (சான்றாகக் காட்டுகிறேன்) 6.
  9. அவன் (அல்லாஹ்) அதற்கு எது தவறானதென்பதையும், எது சரியானதென்பதையும் தெளிவாகத் தெரிவித்து விட்டான்.
  10. எனவே அதனை (ஆன்மாவினை)த் தூய்மைப்படுத்துபவன் நிச்சயமாக வெற்றி பெறுகின்றான்;
  11. அதனை (பாவத்தில்) அமுக்கி விடுபவன் முற்றிலும் அழிந்து விடுகின்றான்.
  12. ஸமூது இனத்தினர் தங்களுடைய வரம்பு மீறுதலின் காரணமாக (இறைத் தூதரை)ப் பொய்ப்படுத்தினர்.
  13. அவர்களுள் மிகப் பேறிழந்த ஒருவன் (அந்தக் காலத்தின் தூதரை எதிர்க்க) எழுந்த போது,
  14. அல்லாஹ்வின் தூதர் (ஸாலிஹ் ஸமூது இனத்தவரை நோக்கி:) நீங்கள் அல்லாஹ்வின் பெண் ஒட்டகத்தைத் தனியாக விட்டு விடுங்கள்; அது தண்ணீர் அருந்துவதற்கு அனுமதி அளியுங்கள் என்று அவர்களிடம் கூறினார்.
  15. ஆனால் அவர்கள் அவரைப் பொய்யாக்கி, அதன் காலைத் துண்டித்து விட்டனர். எனவே அவர்களின் இறைவன், அவர்களது பாவத்தின் காரணமாக அவர்களை முற்றாக அழித்து, அவர்களைத் தரைமட்டமாக்கி விட்டான்.
  16. அவன் அவர்களின் முடிவிற்காகக் கவலைப்படவில்லை. ரு1
Powered by Blogger.