96- அல் அலக்

அதிகாரம்: அல் அலக்
அருளப்பெற்ற இடம்: மக்கா | வசனங்கள்: 20
பிரிவுகள்: 1
  1. அளவற்ற அருளாளனும், மேன்மேலும் கருணைகாட்டுபவனுமாகிய அல்லாஹ்வின் பெயரால் (ஓதுகின்றேன்).
  2. (எல்லாவற்றையும்) படைத்த உமது இறைவன் பெயரால் ஓதுவீராக!
  3. அவன் மனிதனை உறைந்த திரவத்திலிருந்து படைத்தான்.
  4. ஓதுவீராக! உமது இறைவன் மாபெரும் கண்ணியத்திற்குரியவனாவான்1.
  5. அவன் எழுதுகோலைக் கொண்டு கற்றுக் கொடுத்தான்.
  6. அவன் மனிதனுக்கு, அவன் அறியாததைக் கற்றுக் கொடுத்தான்.
  7. (அவர்கள் நினைப்பது போன்று) அன்று! மாறாக, நிச்சயமாக மனிதன் வரம்பு மீறுகின்றான்,
  8. ஏனெனில், அவன் தன்னைத் (இறையருளின்) தேவையற்றவன் எனக் கருதுகின்றான்.
  9. நிச்சயமாக உமது இறைவனிடமே திரும்பிச் செல்ல வேண்டியதிருக்கிறது.
  10. (செவியேற்பவரே!) தடுப்பவனை நீர் பார்த்தீரா?2
  11. ஓர் அடியாரை, அவர் தொழும் போது (தடுப்பவனை நீர் பார்த்தீரா?)
  12. எனக்குச் சொல்வீராக. அவர் நேர்வழியில் இருந்தார் என்றால்,
  13. அல்லது நன்மையை ஏவினார் (என்றால், தடுப்பவனின் நிலை என்ன ஆகும்?).
  14. (தடுக்கின்ற) அவன் நிராகரித்துப் புறக்கணித்தான் என்றால், (அவனது முடிவு என்னவாகும் என்பதை ) நீர் எனக்குச் சொல்வீராக.
  15. அல்லாஹ் கவனித்துக் கொண்டிருக்கிறான் என்பதை அவன் அறிவதில்லையா?
  16. (அவன் விரும்புவது போன்று) அன்று; மாறாக அவன் (அச் செயலிலிருந்து) விலகிக் கொள்ளவில்லையாயின், நாம் அவனுடைய முன் உச்சி முடியை பிடித்து வேகமாக இழுப்போம்.
  17. பொய்யுரைத்துப் பாவம் செய்யக்கூடிய முன் உச்சி முடியை3
  18. எனவே அவன் தனது குழுவினரை அழைக்கட்டும்.
  19. நாமும் எம்முடைய காவலர்களை அழைப்போம்4.
  20. (பகைவன் விரும்புவது போன்று) அன்று. நீர் அவனுக்கு இணங்காமல், சிரம் பணிந்து வணங்கி, (இறைவனை) நெருங்கிக் கொண்டிருப்பீராக. ரு1
Powered by Blogger.